search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூரம்"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    • 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. சிறு வயதில் பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடி இறைவனை கணவனாக அடைந்தார் என்பது வரலாறு.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை ஆண்டாள்-ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மற்றும் இரவு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என்ற கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

    முன்னதாக அமைச்ச ர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் அசைந்தாடி சென்றது.

    2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    • முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9-ம் திருநாள் அன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

    நேற்று காலை தீர்த்தவரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு பச்சை புடவை கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.
    • தேர் திருவிழா காலை 9.05 மணிக்கு தொடங்குகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து, கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர்.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் மதியம 1 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.
    • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும்.

    அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது ஸ்ரீஆண்டாள் பிறந்தாள். பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் களத்திரக்காரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர்.

    ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். அத்துடன் சுக்கிரன் இன்பம், அன்பு, பாசம், காதல் சுக, போகம், அழகு, ஆடம்பர வாழ்க்கை என அனைத்து லவுகீக இன்பங்களையும் வழங்குபவர்.

    இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் என்பதால் ஒருவர் ஜாதக கட்டத்தில் சுக்ரன் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

    சுக்கிரன் வலுவிழந்தால் அல்லது பாவிகள் தொடர்பு இருந்தால் திருமணம் தடைபடும். சுக போகங்கள் குறைவுபடும். அழகு மங்கும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை இருக்காது. பொருள் வரவில் தடை, தாமதம் இருக்கும்.

    ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்துர் செல்ல முடியாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் படம் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.

    அன்று அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    • மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் தொடக்கம்
    • வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.

    சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நாளை (31-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வசந்த மண்டபத்தில் வடிவுடையம்மன் எழுந்தருள்வாள்.

    அம்மனுக்கு முளை கட்டிய பயிர்கள், மற்றும் திண்பண்டங்களை வயிற்றில் கட்டி விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபிதத்துடன் விழா தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை வளர்த்து முதல் கால பூஜை ஆரம்பமாகிறது. நாளை காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடக்கிறது.

    ஆடிப்பூரமான வருகிற 1-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4-ம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா சங்கல்பம் நடைபெற உள்ளது. பின்னர் மகாபூர்ணா ஹுதியுடன் யாக சாலை பூஜை நிறைவு பெறும். அதன் பிறகு கலச புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்கார பல்லக்கில் காமாட்சி அம்மன் மாட வீதி உலா நடைபெறும்.

    • பக்தர்கள் விரதமிருந்து தலையில் கஞ்சி கலசத்தை சுமந்து திருக்கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டு வழிபாடு
    • ஏற்பாடுகளை சக்தி பீட பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் புத்தேரி மருதாச்சலம் காவு ஸ்ரீ தேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் ஆடிப்பூரம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி பூரத்தை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்று காலை பக்தர்கள் பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு கஞ்சி கலச வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    அப்போது பக்தர்கள் விரதமிருந்து தலையில் கஞ்சி கலசத்தை சுமந்து திருக்கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டு வழிபாடு செய்கின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வில்லு பாட்டு நிகழ்ச்சியும். பிற்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு கூட்டு வழிபாடு மாலை 4 மணிக்கு பால் அபிஷேகம் நிறைவு பெறுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மகா குங்கும அர்ச்சனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் நாளான செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு அபிஷேகம், தீபாரதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிற்பகல் 12 மணிக்கு உச்ச கால அலங்கார தீபாராதனை நடைபெறும். மதியம் 3 மணிக்கு ராகு கால துர்கா பூஜையும் மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அத்தாளபூஜை உடன் நிறைவடைகிறது. 3-ம் நாளான புதன்கிழமை ஆடி பெருக்கை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், தீபாராதனையும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 11 மணிக்கு சுமங்கலி பூஜையும் அதனை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும் பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை உடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி பீட பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் திருவிழாவான நேற்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆடிப்பூர மண்டபத்தை வந்து அடைந்தார். அதன் பிறகு பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், ரெங்கமன்னார், ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டாள் வீற்றிருக்க, பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு ஐந்து கருடசேவை நடந்தது. அப்போதுகருட வாகனத்தில் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், செண்பகத்தோப்பு சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் எழுந்தருளினர் கருட வாகனங்களில் மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக உற்சவம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஒயிலாட்ட குழுவினர் மற்றும் கோலாட்ட குழுவினர் கோலாட்டம் ஆடியபடியும், பஜனை குழுவினர் பஜனை பாடிய படியும், வந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆடிப்பூரத்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

    அதன்படி நேற்று இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. வீதி உலா கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள், ஓதுவார் மூர்த்திகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.
    • 31-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

    மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவில் வருகிற 31-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

    • வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    • 1-ந் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்றாகும். அட்ட வீரட்டான தலங்கள் ்என்பவை சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நடந்த 8 தலங்களாகும். காவிரி தென்கரை சிவத்தலங்களில் 47-வது தலமான இங்கு காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருகிறார். அமிர்தமே லிங்கமாக வீற்றிருப்பதால் இக்கோவில் இறைவனை அமிர்தலிங்கேஸ்வரர் என அழைக்கிறார்கள். இங்கு ஆயுள் விருத்திக்கான பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    1-ந் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர்அபிராமி உடனாகிய அமிர்தகடே ஸ்வரர் கோவிலில்ஆடிப்பூ ரத்தையொட்டி கொடி யேற்றம் நடைபெற்றது.

    தரங்ம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெ ற்றது. விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

    மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

    • ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஆண்டாள் பிறந்த தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று காலை ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதிகாலையில் கொடி பட்டம் மாடவீதி. 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது.

    பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். இன்று முதல் 31-ந் தேதி வரை தினமும் ஆண்டாள்-ரங்க மன்னார் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    தேரோட்ட நிகழ்ச்சிகள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், ஆணையாளர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×