என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது பீகாரில் நடைபெறுகிறது.
    • மகாத்மா காந்தி படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பாட்னா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்டத்தை கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

    பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, அதன்பின் மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து, தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், பீகாரில் இன்று 2-வது நாளாக யாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    பீகாரின் அராரியா பகுதியில் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடக்கும் பேரணியில் இன்று ராகுல் உரையாற்றுகிறார்.

    • 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
    • அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசு வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார். இதன்படி 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் நடைபயணத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நடை பயணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வோம். இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசாரின் கருத்துக்களை கேட்டுள்ளோம். அதன் பிறகே நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் 11-ந் தேதி மாலையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு மடிப்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. இவற்றில் ஏதா வது ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    அண்ணாமலையின் நடைபயணத்தை காலையில் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தை மாலையில் நடத்த முடிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள்.
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    லக்னோ:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது அவரது நடைபயணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இன்று (திங்கட்கிழமை) காலை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் ராகுல் நடைபயணம் சென்றார். அப்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அவர் பேசுகையில், "மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. அந்த பணம் பணக்காரர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது" என்று பேசினார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். உத்தரபிரதேசத்தில் 22-ந் தேதி முதல் 26-ந்தேதி அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

    தற்போது உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் 21-ந்தேதியுடன் ராகுல் நடைபயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.
    • ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதியாத்திரையை நடத்தி வருகிறார். இதில் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார்.

    தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    அமேதியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு சாலையில் கிடப்பதை பார்த்தேன். அங்கு இரவில் வாத்தியங்கள் முழங்குவதையும் மது அருந்திவிட்டு சாலையில் நடனமாடுவதையும் பார்த்தேன். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.

    மறுபுறம் ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் காணப்படுவார்கள். அங்கு நீங்கள் இந்தியாவின் அனைத்து கோடீஸ்வரர்களையும் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக் கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ராகுல் காந்தி பேசிய இடத்தை கங்கை நீரால் பா.ஜனதாவினர் சுத்தப்படுத்தினர்.


    இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறும் போது, உத்தரபிரதேசத்தின் மீது ராகுல் காந்தியின் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை அவரது கருத்து காட்டுகிறது. வயநாட்டில் உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். ராமர் கோவில் விழாவிற்கான அழைப்பை நிராகரித்தார். தற்போது வாரணாசி மற்றும் உத்தரபிரதேச இளைஞர்கள் குறித்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரசின் எதிர்காலம் இருளில் உள்ளது, ஆனால் உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சோனியா காந்தி தனது மகனை நல்ல முறையில் வளர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவரிடம் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

    ராகுல் காந்தி யாத்திரையை அசாம் முதல்-மந்திரியும் பா.ஜனதாவை சேர்ந்தவருமான ஹிமந்தா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் யாத்திரை எங்கு சென்றாலும் அங்கு காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கிறது. தற்போது உத்தரபிரதேசத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அகிலேஷ் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் இடமெல்லாம் காங்கிரசுக்கு சரிவு ஏற்படுகிறது.

    பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். மோடி கட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் ரோடு ஷோ நடத்துகிறார்கள். ராகுல் காந்தி, இந்த உலகில் பொய்யை தவிர எதுவும் கற்று கொள்ளவில்லை. அவர் பொய்யுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஹிமர்தா சர்மா கூறினார்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர்.
    • குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    சபரிமலைக்கு வெகு தூரம் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக், சம்பத்குமார் ஷெட்டி. சனத்குமார் நாயக் புகைப்பட கலைஞராகவும், சம்பத்குமார் குஷன் தொழிலாளியாகவும் வேலை பார்க்கின்றனர்.

    ஐயப்ப பக்தர்களான இவர்கள் ஆண்டுதோறும் காசர்கோட்டில் இருந்து சபரிமலைக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த முறை தங்களின் பாதயாத்திரை தூரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். பத்ரிநாத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கேரளாவில் இருந்து பத்ரிநாத்துக்கு சென்றனர்.

    பின்பு அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரையை தொடங்கினார்கள். அங்கிருந்து நடைபயணமாக அயோத்திக்கு சென்றார்கள். அவர்கள் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்றபடி தங்களின் பாத யாத்திரையை தொடருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர். இரவில் ஏதாவது ஒரு கோவிலில் தங்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து, அதன்படி பாத யாத்திரையை தொடர்கின்றனர். குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    அங்கிருந்து கேரளாவுக்கு பயணம் செய்கிறார்கள். மொத்தம் 7 மாதங்கள் நடைபயணத்தை தொடர உள்ளனர். மொத்தம் 8ஆயிரம் கிலோமீட்டரை கடந்து சபரிமலைக்கு வந்து சேருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக குட்லுவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து விரதம் இருந்து வந்த நிலையில் சனத்குமார், சம்பத்குமார் ஆகிய இருவரும் தற்போது பாதயாதத்திரையை தொடங்கியிருக்கின்றனர்.

    • 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் பாதயாத்திரை.
    • 28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அபிஷேக பாக்கம் அருகே தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் ஆலயம் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உலக நன்மைக்காக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் தீர்த்தம் வழிபாட்டு மன்றம் சார்பில் பாதயாத்திரை நடைபெறும்.

    28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை புதுவை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து இன்று காலை தொடங்கியது.

    யாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமனார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைத்தார்.

    வேதநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் யாத்திரை சென்றது. இதில் பெரியாழ்வார் திருத்தொண்டு சபை, வணிக வைசிய ஸ்ரீஹரிகர பஜனைக்குழு, பாண்டுரங்க ரகுமாயி ஆன்மிக கைங்கர்ய சபா, வேங்டாத்திரி பஜனை கூடம், பாண்டவதூதன் சங்கீர்த்தன சபா உட்பட பல்வேறு சபை குழுவினர் பங்கேற்றனர்.

    மேலும் யாத்திரையில் தமிழகம்-புதுவையை சேர்ந்த திருமாலடி யார்களும், 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்களும் சிங்கிரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். யாத்திரை கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுவை, கடலூர் சாலை வழியாக சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை யாத்திரை சென்றடைந்தது. புனித யாத்திரையையொட்டி வைசியாள் வீதி வாசவி மண்டபத்தில் முருகுமணியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    பாத யாத்திரையை யொட்டி புதுவையில் இருந்து சிங்கிரிகோவில் வரை பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தேனீர் வழங்கப்பட்டது.

    புனித பாத யாத்திரைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ மேற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
    • பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.

    • மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருமலை:

    ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபயணம் சென்றார். அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்புராவில் இருந்து ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்றார்.

    ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓபுலாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி ஆந்திர எல்லையில் நடைபயணத்தை முடித்தார்.

    மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றார். பெல்லாரியில் உள்ள ஹலகுண்டி மடம் அருகே இரவு தங்கினார்.

    மீண்டும் வருகிற 18-ந் தேதி காலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 22-ந் தேதி வரை ஆந்திராவில் 100 கிலோ மீட்டர் பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

    • வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
    • எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கர்நாடகாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.

    இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக நேற்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை, துமகூரு வழியாக மத்திய கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சென்றடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

    • மாண்டியாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார்.
    • ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய அவர் மொத்தம் 150 நாட்களில் 3,750 கி.மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதுவரை 350 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி கடந்துள்ளார். கேரள மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதாலும் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது.

    மாண்டியாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார். சோனியா காந்தி, நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது, தாயார் சோனியா காந்தியின் கையை பிடித்து நிறுத்திய ராகுல்... இவ்வளவு தூரம் நடந்து வந்ததே போதும் அம்மா... காரில் வாருங்கள் என்று வற்புறுத்தினார். சோனியா காந்தி தொடர்ந்து நடக்கவே ஆயத்தமாக இருந்தது போல தெரிந்தது. ஆனால், ராகுல் காந்தி விடாமல் காரில் வருமாறு அறிவுறுத்தினார். சோனியா காந்தியின் உடல்நலம் காரணமாக ராகுல் காந்தி அவரை நீண்ட தூரம் நடக்க விடாமல் காரில் வர அறிவுறுத்தினார். இதையடுத்து சோனியா காந்தி காரில் ஏறி சென்றார். அம்மாவின் மீதான ராகுல் காந்தியின் பாசத்தினை நேரில் பார்த்த அங்கிருந்த கட்சியினர் நெகிழ்ந்து போனார்கள்.

    இதனிடையே ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டியா மாவட்டத்தின் சில இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்களில், தலைவர்களின் படங்களுடன் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் அந்த பேனர்களை அப்புறப்படுத்தினர். நடைபயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர் அந்த பேனர்களை வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.
    • மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    பெங்களூரு :

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா சென்று நிறைவடைந்து தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

    மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி உள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார். அவரும் ரெசார்ட்டில் தான் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல், சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பின்னர் எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    ×