search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு"

    • புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.
    • புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.

    திருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாசித் திருவிழா, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவதே கொள்ளை அழகுதான். புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

    புரட்டாசிக்கு மேலும் மகிமை சேர்ப்பது, நவராத்திரி விரதம். புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.

    விக்ரக ரூபமாக எல்லோருக்கும் அருள் புரிய நாராயணன் திருமலையில் கோவில் கொண்டான். ஆதிசேஷனை மலையாக வளரும்படி செய்து, அதில் சேஷகிரி வாசனாக ஸ்ரீனிவாசனாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறான். நின்ற கோலம் ஏன் என்றால், அடி முதல் முடி வரை நாம் தரிசித்து மகிழத்தான் நம் பாவம் போக்கும் தரிசனம் அது. அப்படிப்பட்ட திருவேங்கடவன் பூமிக்கு வந்து உதித்த மாதம் புரட்டாசி.

    நவராத்திரி செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 5ம் தேதி சரஸ்வதி பூஜையும் [ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்], 6ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.இந்த பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

    நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான்.

    தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

    சுண்டல் குறிப்பு:

    தேவையானப்பொருட்கள்:

    *பச்சை அல்லது வெள்ளை பட்டாணி - ஒரு கப்

    *இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - குறிப்பில் உள்ளவாறு

    *கடுகு - ஒரு தேக்கரண்டி

    *கறிவேப்பிலை - ஒரு கொத்து

    *பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

    *உப்பு - தேவைக்கேற்ப

    *மாங்காய் (பொடியாக நறுக்கினது) - 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    பச்சை பட்டாணியை குறிப்பில் உள்ள முறையில் ஊற வைத்து எடுத்து, ப்ரஷர் பானில் ஒரு விசில் வரை வேக வைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.பயறில் இஞ்சி பச்சை மிளகாய் விழுதைச் சிறிது நேரம் பிசறி வைக்கவும்.வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி போட்டுத் தாளித்து, பிசறி வைத்திருக்கும் பயறையும், உப்பையும் போட்டு கிளறி இறக்கவும்.இறக்கினவுடன் மாங்காயையும், கொத்தமல்லியையும் சேர்த்துக் கலக்கவும்.

    குறிப்பு:

    கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் வேகவிடவும். ஒரு அங்குல இஞ்சித்துண்டு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பயற்றில் சிறிது நேரம் பிசறி வைத்து விட்டுத் தாளித்துக் கிளறினால், வாயு உபத்திரவம் இருக்காது. ருசியாகவும் இருக்கும்.

    • 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
    • 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

    பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். "மாலைமலர்" வாசகர்களுக்காகவே நவராத்திரி 9 நாட்கள் வழிபாட்டை தொகுத்து கொடுத்துள்ளோம். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

    1-வது நாள்

    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    2-வது நாள்

    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

    திதி : துவிதியை

    பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

    பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

    3-வது நாள்

    வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)

    பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

    திதி : திருதியை

    கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.

    ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.

    பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

    4-வது நாள்

    வடிவம் : மகாலட்சுமி (சிங் காசனத்தில் வெற்றி திருக் கோலம்)

    பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : சதுர்த்தி

    கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

    பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக் களால் அர்ச்சிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

    ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.

    மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

    பலன் : கடன் தொல்லை தீரும்.

    5-வது நாள்

    வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : பஞ்சமி

    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

    பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    6-வது நாள்

    வடிவம் : சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்) பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண் டும்.

    திதி : சஷ்டி.

    கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.

    பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

    நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

    ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

    பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

    7-வது நாள்

    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற்பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

    பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

    திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

    பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.

    நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    8-வது நாள்

    வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி : அஷ்டமி

    கோலம் : பத்ம கோலம்

    பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

    நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    9-வது நாள்

    வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

    திதி : நவமி

    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.

    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

    பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

    10-வது நாள்

    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)

    திதி : தசமி

    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

    நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.

    பூக்கள் : வாசனைப் பூக்கள். 

    • கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
    • நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் தேவியை பூஜை செய்து வழிபடும் நவராத்திரி கொண்டாட்டங்கள் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் தொடங்கியது.

    வட மாநிலங்களில் துர்கா பூஜையாகவும், தமிழகத்தில் சரஸ்வதி பூஜையாகவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    நவராத்திரியின் போது, வீரத்தை அளிக்கும் பார்வதியையும், தனத்தை அளிக்கும் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்கள் கல்வியை வழங்கும் சரஸ்வதியையும் விரதமிருந்து வழிபடுவதே இந்த பண்டிகையின் சிறப்பாகும்.

    கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

    துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

    நவராத்திரி பண்டிகை தொடங்கியதையொட்டி, தமிழகத்தில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்கினர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

    தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள்.

    நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருகிறார்கள்.

    ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் உள்ள பிரஜேஸ்வரி கோயிலில் நடைபெற்ற நவராத்திரி தொடக்கவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    • பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.
    • அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    கொலுவின் கடைசி நாளான விஜயதசமியன்று இரவு பாலை நைவேதனம் செய்து பாலை ஏதாவது ஒரு படியில் வைத்து விட வேண்டும்.

    பின்னர் பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.

    மறுநாள் காலையில் பொம்மைகளை எடுத்து வைத்து விடலாம்.

    கொலு வீற்றிருக்கும் அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    • நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம்.
    • உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

    நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு அம்பிகைக்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும்.

    அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    முதல் நாள்:

    மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாசுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

    இரண்டாம் நாள்:

    இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

    மூன்றாம் நாள்:

    துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

    நான்காம் நாள்:

    ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா மந்திரம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி மந்திரம் பாராயணம் செய்யலாம். எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

    ஐந்தாம் நாள்:

    லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா மந்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

    ஆறாம் நாள்:

    லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

    ஏழாம் நாள்:

    ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ சாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

    எட்டாம் நாள்:

    சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

    ஓன்பதாம் நாள்:

    சரஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

    கன்னிகா பூஜை

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள். 

    • அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.
    • நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி.

    கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே காணலாம்.

    தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார்.

    குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான்.

    அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.

    ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி

    இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.

    • மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
    • ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    ஆன்ம ரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

    * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

    மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    • 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம்.
    • ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு.

    நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.

    இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.

    ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை. 

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

    தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

    மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

    மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

    • தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    • பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்திரோட்டில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் கைதேர்ந்த நெசவாளர்களை கொண்டு தரமான ஜரிகை வேலைப்பாடுகளுடன் பட்டு சேலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்தை தேடி வந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இந்த பட்டு கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி கொலுவை தீபாராதனை காட்டி சங்க தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான விஸ்வநாதன் தொடங்கி வைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். இதில் தமிழக கைத்தறி துறை இணை இயக்குனர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதன்முறையாக கவர்னர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் கவர்னரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோரால் கடந்த 26-ந் தேதி அன்று திறந்து வைக்கப்பட்ட 'நவராத்திரி கொலு', பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள 'நவராத்திரி கொலு', தற்போது 5-ந் தேதி வரை நாள்தோறும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் உட்பட பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச்சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முதன்முறையாக, தற்போது கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு' ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்கள் முதலில் பார்வையிடலாம்' என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம். பார்வையிடும் நேரம் 4 கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கட்டத்திற்கு 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2-வது நுழைவுவாயிலுக்கு வர வேண்டும்.

    இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் பாஸ்வேர்டை காண்பிக்க வேண்டும். இந்த அடையாளச்சான்று மின்னஞ்சலில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சான்றாக இருக்கவேண்டும். பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்திற்குள் அலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    • நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ப‌ரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்த அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி அங்காளம்மன் பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள்.
    • கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

    1. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

    2. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

    3. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடை உடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

    4. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

    5. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

    6. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

    7. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    8. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    9. நவராத்திரிஒன்பது நாட்களும் வாசல் படியைத் துடைத்து கோலமிட்டு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ தூவி, பூஜை செய்வது நல்லது. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது மங்களகரமாக இருக்கும்.

    10.கொலுவில் வைத்திருக்கும் பழைய பொம்மைகளின் மாலைகள், வளையல்களின் மீது பளபளப்பான ஸ்டிக்கர் பொட்டுக்களை வைத்தால், அவை விளக்குவெளிச்சத்தில்புதுப்பொலிவுடன் மின்னும்.

    11. கொலு படிகளில் நாம் துணியை மடித்து, அதன் மேல்தான் பொம்மைகளை வைப்போம். அந்தந்த படிகளில் இருக்கும் துணி மீது சிறு ஆணி அடித்தால், சிறு குழந்தைகள் துணியைப் பிடித்து இழுத்தாலும், பொம்மைகள் கீழே விழாது.

    12.கொலு படிகளின் ஓரங்களில், பேப்பர் காபி கப்களை வாய் பாகத்தில் பசை தடவி கவிழ்த்து வரிசையாக அடுக்கி வைத்தால், கோட்டை மதில் போல் அழகாக இருக்கும்.

    13.கொலுப் படிகளில்அகல பார்டர் போட்ட புடவைகளைப் போட்டு அதன்பின் பொம்மைகளை வைத்தால், படிகள் பார்டர் வைத்தது போல் அழகாக இருக்கும்.

    14.கொலுப் படிகளின் இரு பக்கங்களிலும் மாலை நேரங்களில் சிறு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தால், தெய்வீகமாகக் காட்சித் தரும்.

    15.காய்கறி கடைகளில் முளைவிட்ட பயிர்கள் இருக்கும். அவற்றை கொலுப்படிகளில் வளர, வளர நன்றாக இருக்கும்.

    16.பழைய ஷட்டில்காக் பந்துகளின் அழகான தலைகளையும், ஆடைகள் போல அமைந்துள்ள இறகுகளையும் கொண்டு வித விதமாக அலங்கரிக்கப்பட்ட ராஜா- ராணி, ஆண்-பெண், கோமாளிகள் மற்றும் கற்பனைக்கேற்ப வேறு பொம்மைகள் செய்து கொலுவில் வைக்கலாம். வித்தியாசமாக அனைவரின் கவனத்தையும் கவரும்.

    17.கொலு வைக்கும் போது, இயற்கைக் காட்சி உள்ள படத்தையோ அல்லது அழகிய பூக்கள் உள்ள காட்சிகளையோ பின்புறத்தில் வைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.

    18. மரத்தூளில் பச்சைக் கலர் சாயம் கலந்து ஊற வைத்து உலர்த்தி விட்டால், பாசி படிந்த பாறைகள் போல் தெரியும். இதை கொலு பொம்மைகளுக்கு இடையே மலை, காடு போன்ற இடங்களுக்குப் பயன்படுத்தினால் அழகாகவும் இருக்கும். பசுமையாகவும் காட்சி தரும்.

    19. கொலு படிகளில் களிமண்ணில் வளர்ந்த புற்களை மொத்தமாக பெயர்த்து, மலை போன்று செய்தால் பத்து நாட்கள் ஆனாலும் இயற்கை காட்சிகள் பச்சையாகஇருக்கும்.

    20.கடந்த ஆண்டுகளில் கொலு வைத்தபோது பயன்படுத்திய பழைய மர பொம்மைகளின் மீதுபசைகள், தூள்கள் அழுக்கு போல படிந்திருந்தால், சிறு துணியில் மண் எண்ணையை தொட்டுத் தடவி, ஒரு நிமிடம் ஊற விட்டு வேறு துணி கொண்டு துடைக்கவும். அழுக்கு மறைந்து பொம்மைகள் பளிச்சென்று மின்னும்.

    21.கொலுவில் வைக்கும் கலசக் குடத்தைச் சுற்றி பார்டர் ஒட்டவும். ஆங் காங்கே சமிக்கி மற்றும் குந்தன் கற்களால் அலங்க ரித்தால் தங்கக் கலசம் போல் ஜொலி ஜொலிக்கும்.

    22.கொலு படிகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட பொம்மைகளை வைத்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

    23.கொலுவில் பொம்மைகளை அடுக்கி வைக்கும்போது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்னும் வரிசையில் வைப்பது நல்லது.

    24.போன வருடத்து பழைய பொம்மைகள், சிறு சிறு விளையாட்டுப் பொருள்கள், பந்துகள் போன்றவற்றைத் தனியாக வைத்திருங்கள். கொலு பார்க்க வரும் சிறு குழந்தைகள் திடீரென்று கொலுவில் உள்ள பொம்மையைக் கேட்டு அடம் பிடித்து அழுதால், அதிலிருந்து எதையாவது கொடுத்து சமாதானப்படுத்தலாம்.

    25.கொலு அலங்காரம் அருகில் நவராத்திரி கலசத் தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீ சக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் எழுதி வைக்கலாம்.

    26.கொலுவில் வைக்கும் முன்பு சிறிய பொம்மைகளை மிக எளிதாகதூசி துடைக்க, ஒரு வழி உள்ளது. நாம் காது குடையப் பயன்படுத்தும் காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாம். இதனால் பொம்மை களின் இண்டு இடுக்கு களைக்கூட சுத்தமாகத் துடைக்க முடியும்.

    27.வீட்டில் வைத்திருக்கும் கொலு பகுதியில் அம்பாள் அல்லது தெய்வங்களின் திருநாமங்களை உச்சரிக்கும் பாடல்களைநாள் முழுவதும் ஒலிக்க செய்வதுமங்களம் தரும்.அழுகை, அலறல், அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொண்ட தொலைக்காட்சி தொடர்களை இந்த நாட்களில் பார்க்காமல்டி.வி.யை அணைத்து விடுவது நல்லது.

    29.நவராத்திரி நாட்களில் பரிசுப் பொருள்களை, கொலுவில் வைத்து, சரஸ்வதிப் பூஜையன்று நன்றாகப் பாடும் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு சிறிய பரிசாவது கொடுத்தால் குழந்தைகள் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

    30.கொலுவில் வைக்க பொம்மைகள்வாங்க செல்பவர்கள் ஒருநடை புத்தக கடைக்குச் சென்று பாருங்கள்.பல பல குட்டிப் புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஐம்பது ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் அதே திருப்தி, இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். எனவே பரிசாக புத்தகங்களும் கொடுக்கலாம்.

    31.நவராத்திரி பூஜை நாட்களில் சுண்டல் மீந்து விட்டதா? அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, பெருங்காயம் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான பக்கோடாகிடைத்து விடும். அந்த பக்கோடாவை கொலுவுக்கு வருபவர்களுக்குகொடுக்கலாம்.

    32.கொலுவின் போது வெறும் பக்திப் பாடல்கள், கர்நாடகக் கீர்த்தனைகளை மட்டுமே பாடாமல் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தால், இல்லத்தில் துர்சக்திகள் விலகும். தாம்பத்யம் சிறக்கும். பகைமை, வறுமை விலகும்.

    33.கொலுவுக்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பொருட்களைப் போட்டு கொடுக்க 'ஜிப் லாக்' பைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.

    34.அவல், பொட்டுக்கடலை, நிலக்கடலை, முந்திரி இவற்றை ஒன்றிரண்டாகப் பொடித்து சர்க்கரை, வெல்லத்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் திடீரென்று சுண்டல் தீர்ந்து விட்டால், இந்தப் பொடியைப் பாக்கெட்டில் போட்டுக் கொடுத்து விடலாம்.

    35.நவராத்திரியில் பிளவுஸ் பிட் கொடுத்தால் விசேஷம். ஆனால் அது அதிகம்பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்குடலை இது போல் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். பயன் உள்ளதாக இருக்கும்.

    36.சுண்டலுக்குச் சுவையைக் கூட்டுவது மாங்காய்தான். கைவசம் மாங்காய் இல்லாவிட்டால் ரெடி புளியோதரைப் பொடியை சிறிதளவு தூவி விடவும். புளிப்புச் சுவையோடு வித்தியாசமான ருசியாக இருக்கும்.

    37.நம்மை கொலுவுக்கு அழைத்தவர்கள் வீட்டுக்குப் போகும்போது, நம்மால் முடிந்த அளவில் சிறிய பொம்மைகளை வாங்கி அவர்களுக்குப் பரிசாக கொடுக்கலாம். இதனால் நமக்கும் அம்பிகையின் அருள் கிடைத்தாற்போல் ஓர் உணர்வு உண்டாகும்.

    38.கொலுவுக்கு தாம்பூலத்தில் பிளாஸ்டிக் தட்டு, எவர்சில்வர் கிண்ணி என வைத்துக் கொடுப்பதை விட நல்ல மஞ்சளில் செய்யப்பட்ட அரக்கு நிற குங்குமப் பாக்கெட்டை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். அனைவரும் பயன்படுத்துவார்கள்.

    39. வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம். பழைய சிலைகளை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

    40.ஒரு நாளும், எந்தக் கொலுவையும், மற்றவர் வீட்டுக் கொலுவோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள். மகிழ்ச்சி அடைவார்கள்.

    ×