search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசிக"

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு.
    • சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக Vs அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம். அதற்கு முரணாகவே நடக்கிறது அதிமுக.

    பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பளித்து இன்றும் களத்தை இழக்கிறது. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
    • நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

    மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.

    புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

    அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.

    மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும்.
    • இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார்.

    எம்.பி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    விருது விழாவில் பேசிய அவர், "உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.

    கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார். இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.

    மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தது.

    மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி.

    அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறான் அல்லவா. நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார்.. அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும் போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா.

    இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர் தான் இவரும். ஆனால் இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் போகும் போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா. அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.

    • முதல்கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் 10 நாட்களுக்கு பிறகே வெளியானது; ஆணையம் தாமதம் செய்தது ஏன்?
    • வாக்குப்பதிவு முடிவுகளை சிலமணி நேரங்களில் வெளியாகும் சூழலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏன் தாமதமாகிறது?

    வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அசாதாரணமான அணுகுமுறை குறித்து பின்வரும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமர்ப்பிக்கிறோம்:

    1. இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாயின. இது சம்பந்தமாக, தேர்தல் ஆணையத்திடம் எங்களின் முதல் கேள்வி : வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்?

    2. முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டது. இப்போது ஏன் இந்த மாற்றம்? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?

    3. 19.04.2024 அன்று மாலை 7 மணி நிலவரப்படி முதல் கட்ட வாக்குப் பதிவில் (102 இடங்கள்) பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60% என்று ஆணையம் கூறியது, அதேபோல இரண்டாம் கட்டத்தில் (88 இடங்கள்) மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96%. ஆக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. 20.04.2024 அன்று, ஆணையத்தின் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், 27.04.2024 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 66.7% ஆகவும் இல்லாதது ஏன்?

    இறுதியாக, 30.04.2024 அன்று, புள்ளிவிவரங்கள் முதல் கட்டத்திற்கு 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என உறுதிப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு வெளியானபோதும் அது சதவீதத்தில்தான் கொடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டுகிறதா என்ற அச்சம். இந்தத் தாமதம் மற்றும் அறிக்கையிடல் வடிவத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

    4. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்பது இதுதான்: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (19.04.2024 அன்று மாலை 7 மணிக்கு) வாக்குப்பதிவு தாமதமாக வெளியிடப்பட்டதில் இருந்து ஏன் 5.5% அதிகரித்தது? இரண்டாம் கட்டமாக, வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (26.04.2024 )தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதற்குள் (30.04.2024 ) இறுதி வாக்காளர் எண்ணிக்கை எப்படி 5.74% அதிகரித்துள்ளது?

    5. இவ்வாறு தாமதம் செய்யப்பட்டது மட்டுமின்றி , தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள் , ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற முக்கியமான, இத்துடன் தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் முக்கியப் புள்ளி விவரங்களுடன் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு அதிகரிப்பு (5%) அனைத்துத் தொகுதிகளிலும் நடந்ததா அல்லது ஆளும் கட்சி 2019 இல் சரியாக வாக்கு வாங்காத தொகுதிகளில் மட்டுமே இந்த வாக்கு அதிகரிப்பு காணப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    6. பொது வெளியில் எழுந்துள்ள இந்த சந்தேகங்களைப் போக்க, தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதி (மற்றும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகள்) தரவுகளை வெளியிடுவதோடு, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களையும் வெளியிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குச் சாவடியிலும் அரசியல் கட்சிகளால் ஏதேனும் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் குறிப்பிட வேண்டும். (நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில், வாக்குச் சாவடி மட்டத்தில் இப்படி புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    7. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தலைமை அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சரியான வாக்காளர் எண்ணிக்கையைப் படிவம் 17C இல் பதிவு செய்கிறார். இதன் பொருள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்களித்தோரின் எண்ணிக்கையின் தேவையான தரவுகள் ஆணையத்திடம் உள்ளன என்பதாகும். இப்போது தேர்தல் ஆணையத்திடம் நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால், வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களிடமும் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் இருப்பதாகக் கூறி பொறுப்பை வேட்பாளர்களிடம் மாற்றுவதற்குப் பதிலாக, மக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அதை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை ?

    8. ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், வாக்களித்தவர்களின் சரியான எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக பிரிப்பது போன்ற தகவல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தவிர்த்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இணையதளத்தில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான விவரங்கள் தொகுக்கப்படவில்லை.

    இந்த சூழலில், இந்த வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

    எஞ்சிய கட்டங்களில் நடக்கும் தேர்தல்களின் வாக்குப்பதிவு விவரங்களை வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் படிவம் 17C இல் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

    தேர்தல் ஆணையம் தனது கடமையை நியாயமான முறையில் நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதாக வாக்குவாதம்
    • தாக்குதலில் விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயம்

    சென்னை விருகம்பாக்கத்தில் புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதால் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மொதல்ல விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதனையடுத்து இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
    • தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
    • அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்தியாயினி.

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க செய்யவேண்டும். அதனால்தான் நாம் எல்லோரும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

    யாராக இருந்தாலும் தனது அதிகார பலத்தை வைத்து முடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடிய தொல். திருமாவளவனை சிதம்பரம் தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை தோற்கடித்து பாடம் புகட்டவேண்டும்.

    விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அது விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று.

    திருமாவளவன் அதிக தொகுதிகளை கேட்டாரு. பொது தொகுதியை கேட்டாரு. கூட்டணி மாறிவிடலாம் என்றுகூட யோசிச்சாரு. ஆனால் தி.மு.க. தலைமை இறங்கி வரவில்லை. திருமாவளவன் மீது திமுக வைத்திருக்கும் மரியாதை அவ்வளவுதான்.

    பா.ஜ.க. வேட்பாளர் அக்கா கார்த்தியாயினியை வெற்றிபெற செய்யவேண்டும். அக்கா கார்த்தியாயினி அரசியல் தெரிந்தவர். நிர்வாகத் திறன் மிக்கவர். மேயராக பணியாற்றியவர். அடித்தட்டில் இருந்து மேலே வந்த கார்த்தியாயினி, அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என் தெரிவித்தார்.

    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.

    • சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன
    • நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் அவர்கள் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். அதற்கெனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது.

    அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பைத் தம்முடைய கைப் பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அருண் கோயல் அவர்கள் கடந்த 2022 நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்று 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையராக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரித்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.

    பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் நோக்கில் மோடி அரசு, அவசர அவசரமாக சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதாவது, பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று அந்த சட்டம் சொல்கிறது.

    இது ஆளுங்கட்சியின் கைப் பாவையாகத் தேர்தல் ஆணையத்தை மாற்றும் நடவடிக்கையே தவிர வேறல்ல. இந்த சட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். அதையும் மீறி மோடி அரசால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேர்தல் ஆணையத்தைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

    மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பின்னணியில் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றைத் தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாகத் தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது.

    'வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்' என்று ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

    அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களது ஆதரவு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்து இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

    பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

    எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

    இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்துக் காலியாகவுள்ள இரண்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து ' அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும்' என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ×