search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னக ரெயில்வே"

    • தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
    • தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தை பொருத்தவரை ரெயில் போக்குவரத்தை பெரும்பாலான பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு. அதேநேரத்தில் வசதிகள் அதிகம் உண்டு. எனவே நிம்மதியாக, பாதுகாப்பாக பயணம் செய்து திரும்ப முடியும்.

    அதுவும் தவிர பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. எனவே செல்ல வேண்டிய இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும். இதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஓடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது ரெயில் பயணத்தை விரும்பும் பயணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி சேலம் கோட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், சிக்னல் இயக்கம் ஆகியவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அங்கு இருந்து 20 பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கோவை ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் மிகவும் கவனமாக வேலை பார்த்து வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் பயணிகளுக்கான பாதுகாப்பான ரெயில் சேவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் அவசியமின்றி பயப்பட தேவை இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    • பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.

    மதுரை:

    ராமேசுவரம்-மண்டபம் இடையேயான பாம்பன் ரெயில் பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை, இதுதான் ராமேசுவரம்-மண்டபம் இடையேயான தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வந்தது. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் துரித ரெயில் போக்குவரத்துக்கு வசதியாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பாம்பன் கடலுக்கு நடுவே ரூ.535 கோடி செலவில் 2.05 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகளில் ரெயில்வே கட்டுமான துறையின் துணை அமைப்பான ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மும்முரமாக இயங்கி வருகிறது. அங்கு இதுவரை 84 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 99 இணைப்பு கர்டர்கள் அமைக்க வேண்டும். பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இதுவரை 76 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கர்டர் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு கர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் கப்பல் செல்வதற்காக, இருபுறமும் உயரும் கிரேன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது‌. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள், மேம்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
    • பயணிகள் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல தனி நடைபாதை உருவாக்கப்படுகின்றது.

    சென்னை:

    தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்னக ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரெயில் நிலையமும், கேரளாவில் 3 ரெயில் நிலையங்களும் சீரமைக்கப்பட உள்ளன.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். இதில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

    உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் விமான நிலையம் போன்று தனித்தனி வருகை மற்றும் புறப்பாடு நடைபாதைகள், பிரகாசமான வெளிச்சம் மற்றும் 'எஸ்கலேட்டர்கள்', 'லிப்ட்' மற்றும் ஸ்கை வாக்குகள் மறுசீரமைப்பு பணிகளின்போது மேற்கொள்ளப்படுகிறது.

    ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள், மேம்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள் வாகனங்களில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என பிரத்யேக பகுதிகள், பாதசாரிகள் தடையின்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

    நவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு டாக்சிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் போன்ற பல்வேறு போக்குவரத்து பார்க்கிங் வசதிகள் செய்யப்படுகிறது. பயணிகள் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல தனி நடைபாதை உருவாக்கப்படுகின்றது. இந்த பணி விரைவில் தொடங்கும்.

    அடுத்தகட்டமாக தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல், தாம்பரம், ஆவடி, கோவை, நெல்லை, கும்பகோணம், திருவனந்தபுரம், வர்கலா, கோழிக்கோடு, மங்களூரு செங்கனூர், திருச்சூர் ஆகிய ரெயில்நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவைதவிர, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 38 நிலையங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ரெயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்கு பின்பு சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும்.
    • டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து மீண்டும் டவுண் ரெயில் நிலையம் வழியாக கொல்லத்திற்கு புறப்பட்டு செல்கிறது. இதனால் கூடுதல் நேரம் ஏற்படுவதாகவும் இந்த ரெயிலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் வழியாக இயக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து தென்னக ரெயில்வே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.

    சென்னையிலிருந்து மாலை புறப்படும் இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து 9.15 மணிக்கு தான் ரெயில் புறப்பட்டு சென்றது. டவுண் ரெயில் வழியாக இந்த ரெயில் இயக்கப்படும்போது 45 நிமிடம் முன்னதாக கொல்லம் ரெயில் நிலையத்திற்கு சென்று சேரும். இதே போல் கொல்லத்தில் இருந்து தினமும் மாலை புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் 6.05 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

    டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும். டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் கிடையாது. எனவே பொதுமக்கள் வசதிக்காக டவுண் ரெயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    முதல் கட்டமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் வழியாக இயக்கப்படுவதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் ரெயிலையும் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். டவுண் ரெயில் நிலையம் வழியாக ரெயில்களை இயக்க ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பலதரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ×