search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 கோழிகளை"

    • தெருவில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால் தெருநாய்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் சமீபகாலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    தெருவில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் முறை இல்லாததால் தெருநாய்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரம் செல்லும் பெண்களை தெரு நாய்கள் கடிக்க துரத்துகின்றன.

    இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி 10 -வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாகவே தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    200-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக அந்த பகுதியில் சுற்றி வருகின்றன. இந்த தெரு நாய்கள் கால்நடைகளை குறிவைத்து கடித்துக் குதறி வருகின்றன. வீட்டில் வளர்க்கும் ஆடுகள், கன்று குட்டிகளை கடித்து வருகின்றன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரின் 4 ஆடுகள், ஒரு கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்து கொன்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வில்லரசம்பட்டி பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

    வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (36). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். வீட்டின் பின்னால் கால்நடைகளை கட்டி வைப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வீட்டின் பின் பகுதியில் கால்நடைகளை கட்டியிருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்குப் பின்னால் இருந்து ஆடு, மாடுகள் அலறும் சத்தம் கேட்டது.

    இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த சரவணன் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் வளர்த்த ஆடுகள், கோழிகளை தெருநாய்கள் கூட்டமாக கடித்து குதறி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    பின்னர் கதவை திறந்து வெளியே சென்று பார்த்த போது 4 ஆடுகள், 4 கோழிகளை தெரு நாய்கள் கடித்து கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த பத்து நாட்களில் இது மூன்றாவது சம்பவம் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர்.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வில்லரசம்பட்டி பகுதி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் எங்கள் பகுதியில் சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவது தொடர்கதையாகி வருகிறது.

    மேலும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளை குறி வைத்து நாய்கள் தாக்கி கடித்துக் கொன்று வருகின்றன.

    இதனால் நாங்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளோம். அடுத்ததாக இந்த தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் முன்பு தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×