search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன"

    • திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டுபல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
    • அதன்படி அவர்களுக்கு கோழி பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டுபல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கி வருகின்றனர். பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதுமையான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அவர்களுக்கு கோழி பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள்.

    போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். கயிறின் மற்றொரு முனை கோழியின் ஒரு காலில் கட்டப்படும். வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியை பிடிக்க வேண்டும் என்பதே விதி. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியை பிடிக்க வேண்டும்.

    கோழியை பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியை பிடிக்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தை தாண்டாமல் கோழி பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இந்த போட்டியில் குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கோழியை பிடித்தனர்.

    இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கெடுபிடிகளால் இந்த போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் விளையாட்டு களைகட்ட தொடங்கியுள்ளது. 

    ×