search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • 11 லட்சத்து 86 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இதில் விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து செல்போனில் குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டிருந்தது.

    மேலும் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணைதளத் தையும் தமிழக அரசு தொடங்கி இருந்தது.

    இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணத்தை தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

    அதை அறிந்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். செப்டம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் பிறகு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

    தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைபேசி வாயிலாக விண்ணப்ப தாரரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனர். சில வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரித்து வந்த வண்ணம் உள்ளனர்.

    இதில் தகுதியானவர்களுக்கு செல்போனில் இப்போது குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே முதற்கட்டத்தில் மனு கொடுத்து அதில் விடுபட்டவர்களுக்கும் இப்போது தகுதி பார்த்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட திட்டத்தை விழாவாக நடத்தி தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    அதன்படி தகுதியான மகளிருக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்று ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெற்று பயனடைந்துள்ளனர்.
    • கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

    கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளுக்கு பணம் கிடைத்துவிட்டது.

    மகளிர் உரிமைத் தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கி இருந்தனர். மேலும் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணியார்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது.

    இந்தப் பட்டியலில் சிலருக்கு இன்னும் பணம் கிடைக்காமல் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

    அவ்வாறு பணம் போய் சேராமல விடுபட்டவர்களுக்கு 10-ம் தேதிக்குள் பணம் கிடைக்கும் வகையில் ரூ.1000 அனுப்பிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு விடுபட்டவர்களுக்கு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை மேல் முறையீட்டு மனுக்கள் 11 லட்சத்து 85 ஆயிரம் வந்திருந்தது. இதனால் கடந்த மாதம் 25-ம் தேதியுடன் மனு வாங்குவது நிறுத்தப்பட்டது. இந்த மனுக்கள் மீது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். வீடுகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தப் பணிகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு 25-ம் தேதியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அடுத்த மாதம் முதல் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது.
    • அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயதநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு மனு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சாத்தூர் தாலுகாவில் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்திருந்த பெண்ணிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது எந்த காரணத்திற்காக மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் அளித்தார். தொடர்ந்து உரிய தகுதிகள் இருந்தால் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும் என அமைச்சர் கூறினார்.

    ஆய்வு முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமூகத்தில் அவர்கள் சுய மரியாதையோடு வாழவும் தலா ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேற்கண்ட 2 கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 முதல் 20-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது. மேலும் அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர். இதனை தொடர்ந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 மகளிர் உரிமை தொகை செலுத்தப்பட்டது.

    கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகள் சரி பார்க்கப்படுகிறது. அரசாணையில் குறிப்பிட்டு உள்ளபடி தகுதிகள் பூர்த்தி செய்யபடாவிடில் நிராரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் நிலைமை குறித்து விண்ணப்பித்தவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. நிராரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான காலக்கெடு கடந்த 24-ந்தேதியோடு முடிவடைந்தது. நேற்று மாலையுடன் மேல்முறையீட்டு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 87 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து உரிய தகவல் தர அறிவுறுத்தப்பட்டது.

    இதில் ஏற்கனவே பெற்ற 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்படும்.

    மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தி தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை வேகப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அரசு மூலம் நமது முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்.

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். தி.மு.க. ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.
    • இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.வும் காங்கிரசும் கைதேர்ந்த கட்சிகள்.

    கடந்த தேர்தலில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள். வெற்றிபெற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.

    இப்போது கையில் அளவுகோலுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய போகிறார்களாம். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி இருந்தால் மட்டும் கொடுப்பார்களாம். இல்லாவிட்டால் கொடுத்ததை நிறுத்தி விடுவார்களாம். எப்படியெல்லாம் கதை கதையாய் பொய் சொல்லுகிறார்கள்.

    தேர்தல் நேரத்திலேயே இப்படி தகுதியை சொல்லி அவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறியிருக்கலாமே. பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக அளந்து விட்டார்கள். பெண்களும் ஏமாந்தார்கள்.

    இதே போலத்தான் கர்நாடகத்திலும் அனைத்து பெண்களுக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு என்கிறார்கள். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.

    ஒற்றை கட்சி ஆட்சிக்கு மோடி திட்டமிடுவதாக கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மறந்து விட்டதா? அல்லது அந்த கூட்டணியை பற்றி பேசவே பயமா?

    இந்தியா கூட்டணியில் மோடி போல் முடிவெடுக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஒருவராவது உண்டா? எல்லோருமே குடும்பத்துக்காக உழைப்பவர்கள். நாட்டை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது. காந்தி குடும்பம், கருணாநிதி குடும்பமும் வாழ வேண்டும். ஆள வேண்டும் இதுதான் கூட்டாட்சியா?

    இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். மோடிக்கு வாக்களித்ததும், இனி வாக்களிக்க போவதும் அனைத்து தரப்பு மக்களும் தான்.

    சனாதன வெறுப்பு பற்றி பேசும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனிகளான இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அதை ஒழிப்பதே எங்கள் வேலை என்று கூறி ஓட்டு கேட்கட்டும் பார்ப்போம். அப்படியானால் அவர்களை கொள்கை வாதிகள் என்று பாராட்டலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும்
    • காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை

    தமிழகத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

    அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 மாதங்கள் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பெற்று பயன் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் அதற்கான தகுதியை இழந்திருந்தால் அவர்களுக்கான உரிமைத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய தரவுகள், வருமான சான்று தொடர்பான தகவல்கள், 4 சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

    காலாண்டுக்கு ஒருமுறை பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை (பத்திரப்பதிவு) தொடர்பான தகவல்களை சரி பார்க்க வேண்டும்.

    அரையாண்டுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சாரப் பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

    வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரி பார்க்க வேண்டும்.

    மேற்குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத்துறைகள் தொழில் நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளைக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட இணைய தளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது.

    இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் பட்டியலை இணைய தளத்தில் தானாகப் புதுப்பிக்க வேண்டும்.

    தானாகப் புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணைய தளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

    சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலினை இணைய தளம் வழியாக ஒவ்வொரு மாதமும் 2-ந்தேதிக்குள் சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

    விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும்.
    • தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டசபையில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

    தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர் கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளை சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,000 வீதம் முதல் தவணை அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

    நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய 15-ந்தேதி, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும், அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகுதியான பயனாளி ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்ப தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

    நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது, திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் மத்தியில், குறிப்பாகக் குடும்பத் தலைவிகள் மத்தியில் சிறப்பான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே இத்திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.

    இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகை சென்று சேர்வதோடு, தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
    • மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த தளவாய்பாளையத்தில் இன்று கத்திரி நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்த மாதத்தில் தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் , பழுது அடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்தப் பணிகள் நடந்து வருகிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கூறினால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
    • விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த வாக்குறுதியும் மக்களின் பெரும் கோபத்திற்கும் ஏமாற்றத்திற்கும் இடையே பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்படுகிறது.

    பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத் தலைவிகளாகிவிட்ட 18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களை குடும்பத் தலைவிகளாக அங்கீகரிக்க இந்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சுற்றுப்பகுதிகளிலும் திறனற்ற தி.மு.க. அரசின் திடீர் தகுதி அறிவிப்பால் ஏமாற்றமடைந்த ஏழை கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பெருங்கோட்டப் பொறுப்பாளர் வினோத் பி.செல்வம், ஒருங்கிணைப்பில் திண்டிவனம், விழுப்புரம் பண்ருட்டி கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை.
    • தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மூலம் செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். மேலும் தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார். குறிப்பாக மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத பெண்களிடம் பேசி அவர்களது ஆதரவை பா.ஜனதா பக்கம் திருப்ப வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த 80லட்சம் பெண்களிடமும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதவிர வரும் நாட்களில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக அதிக அளவு குற்றச்சாட்டுக்களை வெளியிடவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாக அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

    • மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
    • உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 7 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைத்தது. தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.

    உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர். சென்னையில் 2 வாரத்தில் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    ஏற்கனவே 30 ஆயிரம் பெண்களின் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 60 ஆயிரம் பெண்களின் மனுக்கள் கள ஆய்வு செய்து தகுதியாக இருப்பின் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்துள்ள இவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி தகுதி இருப்பின் உடனே வழங்கப்படும் என்றார்.

    • ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும்.
    • அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ 1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத பலர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதற்கிடையே திருநங்கைகள் பலரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் திருநங்கைகள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியான துர்கா ஸ்ரீ இதுதொடர்பாக கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும். திருநங்கைகள் பலர் தற்போது பலரிடமும் கையேந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் திருநங்கைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 4000 திருநங்கைகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    சென்னை தண்டையார்பேட்டையில் 688 திருநங்கைகள் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 13 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 21 வயதுக்கும் குறைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    திருநங்கைகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் துர்க்கா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது திருநங்கைகள் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலேயே பொது இடங்களில் கையேந்துவது. பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இன்று திருநங்கைகள் பலர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் மூலம் அனைத்து திருநங்கைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அதற்காகவே எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் கூறும்போது, இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என்கிற பகுதி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு எங்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது மூன்றாம் பாலினத்தவர் என்ற பகுதியும் இருப்பதாக கூறியுள்ளனர்.

    • பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க.
    • அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:

    பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் வாழ்க்கை மாற்றத்திற்கு துருப்பு சீட்டாக உள்ளது.

    கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களிலும் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என ஆராய்ந்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரி திட்டம். பெண்களின் கனவு திட்டம், கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சரால் பெண்கள் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    பெண்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் தி.மு.க., பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க., இந்த சட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க. தான். தற்போது பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் பெண்களுக்கு மகுடம் சூட்டிய திட்டம். இந்தத் திட்டத்தால் சகோதரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும். பொதுமக்கள் அரசியல் குறித்து பேச வேண்டும். உள்ளாட்சியில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சாதனையை செய்தது தி.மு.க. தான், மகளிர் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    ×