search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்காகவும் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்காகவும் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை அறிவித்து குடும்ப தலைவிகளுக்கு நேற்று முதல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் ஏராளமான ஏழை பெண்கள், பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முதல்வர் அவர்கள் நிலத்தரகர் தொழிலையும் அங்கீகாரம் செய்து தந்து நிலத்தரகர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.
    • வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால் பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அதைவிட அதிகமாக வங்கிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

    சிறு சிறு கடன்கள் வாங்கியது, நகை கடன்களுக்கு வட்டி கட்டாமல் இருப்பது, விவசாய கடன், கல்வி கடன், வாகன கடன் என்று பல வகையான கடன் பெற்றிருப்பார்கள். அவர்களில் பலர் கடன்களை திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள்.

    கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.

    இப்போது அந்த மாதிரி பட்டவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 வந்து விழுவதை அறிந்ததும் வங்கி மேலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    நிலுவை வைத்திருப்பவர்களின் கடன்களில் பிடித்தம் செய்யும்படி கூறி இருக்கிறார்கள். வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    அதே போல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்த கணக்குகளிலும் பிடித்து கொள்கிறார்கள். இதனால் பலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏமாந்து போனார்கள்.

    கடன் நிலுவை இருந்தால் கண்டிப்பாக அதில்தான் கழிப்போம் என்று வங்கி அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
    • விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர்.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இது குறித்து இத்திட்டத்தின் செயலாக்க அதிகாரி இளம்பகவத் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதனை அதிகாரிகள் கள ஆய்வு செய்து இத்திட்டத்தில் சேர்ப்பார்கள்.

    இது தவிர தகுதி இருந்தும் முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும். மேலும் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அனைவருக்கும் படிப்படியாக இவை வழங்கப்படும். ஏற்கனவே வங்கி ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதலாக இந்த கார்டு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.
    • அனைத்து அரசுத்துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

    இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நியாய விலைக்கடைப் பணியாளர்கள், நகராட்சி-மாநகராட்சிப் பணியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

    களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை.
    • கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா?

    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை சாதனையான திட்டம் என்றோ? மக்களுக்கான சேவை என்றோ? கூற முடியாது. ½ நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி 2 திராவிட கட்சிகளும் தான் ஆட்சி செய்கிறது. மிகவும் அற்பமான, சொற்பத்தொகையான ஆயிரம் ரூபாய்க்கு கூட மக்களை கையேந்தும் வகையில்தான் இந்த ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

    ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.12 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்கிறார்கள்? மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை. சாலையை சரியாக கொடுங்கள். தூய குடிநீரை கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதுதான் வளர்ச்சியா? ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் மக்கள் நாளை 5 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவார்களா? என் மக்களை இத்தனை ஆண்டுகளாக இலவசத்துக்கு கையேந்துபவர்களாக, பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறீர்களே தவிர வளர்ச்சி அடைய வைக்கவில்லை.

    இந்த ஆயிரம் ரூபாயை பெறுகிற பெண்கள் என்ன வளர்ச்சியை கண்டுவிடுவார்கள். மின்கட்டணம் என்ன விலைக்கு உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்ன? அரிசி, பருப்பு, பால், நெய் விலை எவ்வளவு? இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவாகிறது என்றால் இந்த பணம் யாரிடமிருந்து எடுத்தீர்கள்? கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா? இதற்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 கோடி 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பதே உண்மை.
    • பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சமஉரிமை ஆகியவற்றில் தமிழ் நாடு என்றுமே எடுத்து காட்டாக விளங்கி உள்ளது.

    பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை என தமிழக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பெயரே மிக சிறப்பானது. இது மகளிர் உதவி தொகை அல்ல. இது அவர்களின் உரிமை தொகை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சம் பெண்கள் இதனால் பயனடைய போகிறார்கள் என்பது கணக்கு. 1 கோடி 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்பதே உண்மை.

    பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை ஆகியவற்றில் தமிழ் நாடு என்றுமே எடுத்து காட்டாக விளங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் உரிமைகளும் வழங்கி உள்ளது. இந்த தொகை மகளிர் கையில் இருந்தால் பெண்கள் தங்கள் தேவைகளுக்கு கணவனையோ பிள்ளைகளையோ நாட தேவையில்லை.

    தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்து அதை இன்று நிறைவேற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றி. சட்டமன்ற தேர்தலுடன் நானும் தேர்தலை சந்தித்தேன். ஆதலால் இந்த வாக்குறுதி எனக்கும் பொருந்தும்.

    இந்த உரிமை தொகை வாயிலாக பயன் பெறும் அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் செழிக்க வாழ்த்துவதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • கருணைமிகு தாய்-தூணாக விளங்கும் மனைவி-தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது.
    • உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், தலைவர் கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். நான் சென்று பார்க்கின்ற போது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.

    அதேபோலதான் என்னுடைய மனைவி துர்காவும். என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்! எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருப்பது என்னுடைய மனைவி துர்கா தான்.

    அடுத்து, என்னோட மகள் செந்தாமரை. அவரை அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.

    கருணைமிகு தாய்-தூணாக விளங்கும் மனைவி-தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதே மாதிரியான பேரூள்ளம் கொண்டவர்கள்தான் நீங்கள் எல்லோரும்! மகளிர் அனைவரும்! இத்தகைய மகளிரின் நலம் காத்த மாண்பாளர் என்றால் நம்முடைய தலைவர் கலைஞர்தான்.

    * பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார்.

    * தலைவர் கலைஞர் அளித்த பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை, இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.

    * உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

    இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இப்போது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    * ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

    * ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி கல்வி வரை இலவசக் கல்வியும் வழங்கினார்.

    * ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தார்.

    * டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்.

    * மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் நினைவு திருமண உதவித் திட்டம்.

    * டாக்டர் தருமாம்பாள் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்.

    * அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்.

    *ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம் பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர்தான் நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய பெயரில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது என்பது மிக, மிக, மிகப் பொருத்தமானது. அதுவும் அவருடைய நூற்றாண்டில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

    தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் வகுத்துத் தந்த பாதையில் செயல்படுகின்ற அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மகளிருக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

    விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல்நிதி கடனுதவிகள் என்று மகளிருக்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

    இது எல்லாவற்றிக்கும் மகுடம் சூட்டக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை! மீண்டும், மீண்டும் சொல்லுகிறேன். இது உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை!

    உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் ஏற்கனவே பயன்பெற்று வரும் 39 லட்சத்து 14 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பெற்று வந்த மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறேன். இதற்காக, கூடுதலாக 940 கோடி ரூபாய் நிதியை நமது அரசு ஒதுக்கியிருக்கிறது. மொத்தத்தில் பார்த்தால், இன்று மகளிர் உரிமைத் தொகையை பெறும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அல்லாமல், உயர்த்தி வழங்கப்படும் ஓய்வூதியம் பெறும் 39 லட்சம் பேரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் தமிழ்நாடு அரசினுடைய மாத ஓய்வூதியத் திட்டங்களால் பயன் பெற்று வருகிறார்கள்.

    நாம் கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும் போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் சந்திக்கின்ற போது நம்முடைய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு நினைக்கிறார்கள்.

    கடந்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு சிறப்பு விருந்து கொடுத்தார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் ஏதோ எனக்கு தனிப்பட்ட கிடைத்திருக்கக் கூடிய பாராட்டுக்களாக நான் கருதவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், நம்முடைய மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகளாகத்தான் நான் கருதுகிறேன்!

    பசிப்பிணியும் போக்கி வருகிறோம் அறிவுப்பசியையும் தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, இன்னார் உயரவேண்டும், இன்னார் உயரக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்கின்ற திராவிட மாடல் ஆட்சி, கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் பெயரில் உரிமைத் தொகை மூலமாக வழங்கிக் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு சமூக- பொருளாதார- அரசியல் வலிமையை வழங்குவது.

    உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் குதூகலம் அடைந்தனர்.
    • தி.மு.க.வினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்கும்போது 1 கோடியே 6½ லட்சம் குடும்பத்தலைவிகள் வங்கிக்கணக்கிலும் ரூ.1000 பணம் வரவு வைக்கும் விதமாக நேற்றே அவரவர் கணக்கிற்கு பணம் சென்றடைந்தது.

    இதனால் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் குதூகலம் அடைந்தனர். பல வீடுகளில் இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோலம் போட்டிருந்தனர்.

    தி.மு.க.வினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    சென்னையில் வீதிக்கு வீதி நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள். பஸ் பயணிகள் ஆட்டோ பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

    • அமைச்சர் சேகர்பாபு 2 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கினார்
    • கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் உரிமைத் தொகை வழங்கினார்கள்.

    ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கி தலைமை பொது மேலாளர் சுதாகர் ராவ், சிறப்பு திட்டச் செயலாக்க அதிகாரி தாரேஸ் அகமது, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டலக் குழு தலைவர் மதன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சைதாப்பேட்டை ரங்க பாஸ்யம் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மண்டலத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொளத்தூர் வீனஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு 2 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்”
    • 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் விழாவில் பேசியதாவது:

    சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்.

    "காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்" என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

    இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், "தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா... காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்" என்று சொன்னார்கள்.

    இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

    "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்" என்று அவர் சொன்னார். அதாவது, "சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்" என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

    இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!

    "இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள். இவர்களால் தர முடியாது" என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல-தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.

    நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

    மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்!

    இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

    உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

    பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்" என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.

    இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது-வேலைக்கு போகக்கூடாது-வீட்டுப்படியை தாண்டக்கூடாது அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்!

    8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்... ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி-கல்லூரிக்கு வந்து விட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்!

    இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்!

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்!

    "எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை" என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கின்றோம்.

    ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் 'ஹவுஸ் ஒய்ஃப்' என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.

    'உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?' என்று கேட்டால், "இல்லை" என்று மட்டும் சொல்லாமல் "வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்" என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

    தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • மகளிர் உரிமைத் தொகை திட்ட தகவல்களை தெரிந்து கொள்ள உதவி மையங்கள் செயல்படுகின்றன.
    • கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 78451 45001 என்ற எண்ணிலும், சிவ கங்கை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் 78457 38002 என்ற எண்ணி லும், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் 7845014004 என்ற எண்ணிலும், சிவ கங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8438856008 என்ற எண்ணிலும், மானா மதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925786003 என்ற எண்ணிலும், காளை யார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 84389 57006 என்ற எண்ணிலும், திருப்பு வனம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 8925664001 என்ற எண்ணிலும், இளையான் குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் 9042317001 என்ற எண்ணிலும், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925078921 என்ற எண்ணிலும், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8807378005 என்ற எண்ணிலும், தேவகோட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தில் 88703 62101 என்ற எண்ணிலும், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8122576001 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாகவும், உதவி மையங்களை தொடர்பு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்தது.

    சென்னை :

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

    தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இனிமேல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 15-ந்தேதி வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்தது. வங்கிகளில் 1-ந்தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாத வண்ணம் 15-ந்தேதி வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    ×