search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி"

    • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது
    • காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்

    சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிப்பு 

    அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 ,அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்திருந்தார். கடந்த முறை அரியானாவிற்கும் மகாராஷ்டிராவிற்கும் ஒரே சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிர தேர்தல் தாமதமாகியுள்ளது. நவம்பர் மாதமே அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இது அரசியல் களத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா தேர்தலுக்கு என்னதான் ஆச்சு? - ஆணையம் சொல்வது என்ன? 

    'சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளதாலும் , அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளதாலும் மகாராஷ்டிராவில் அதே நேரத்தில் கவனம் செலுத்த முடியாது. கடந்த முறை நிலைமை வேறு. அப்போது காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. ஆனால் இப்போது காஷ்மீருக்கு அதிக பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள். அது மட்டுமின்றி தற்போது மகாராஷ்டிராவில் கனமழை காலமாக உள்ளது. [விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி] என வரிசையாக விழாக்களும் வர உள்ளது. எனவேதான் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தாமதமாகிறது' என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

    அரசியலாகும் தேர்தல் தாமதம் 

    ஆனால் இந்தியா கூட்டணி மகா விகாஸ் தலைவர்கள் இந்த தாமதத்தைச் சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா அணியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேர்தல் ஆணையம் பாஜவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பாஜக அரசு மனசாட்சியின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கான்டிராக்டர்கள் மூலம் மாநிலத்தை பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் கொள்ளையடிக்கத் தேர்தல் ஆணையம் வழி செய்து கொடுத்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்காமல் இருப்பதற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தின் எஜமான் பாஜக தலைமையிலிருந்து உத்தரவு வரததே காரணம். தேர்தல் தாமதத்துக்கு காஷ்மீரை காரணமாக கூறுகின்றனர். எனவே சமீப காலமாக அங்கு அதிகரிக்கத்தொடங்கியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடுமையாக சாடியுள்ளார். 

    • முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கூட்டணியின் பெண்கள் மவுனம் காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தலைமறைவான இண்டி கூட்டணியின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி ஆகியோருக்கு,

    உங்கள் இண்டிக் கூட்டணியின் ஒரு பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?

    அப்பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மேற்குவங்கமே கொழுந்துவிட்டெறிய, திராவிடத்தின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய நீங்கள் இன்னும் அமைதி காப்பது ஏன்? அதுதான் உங்கள் இண்டி கூட்டணியின் ஒப்பந்தமா?

    இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் முழுக்க காயங்களுடன், அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

    இது தற்கொலை என்று கூறி, அவசரமாக இவ்வழக்கை முடிக்க முயற்சித்த கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக, உங்கள் எதிர்ப்பை எப்போதுதான் தெரிவிப்பீர்கள்? 

    "செமினார் அரங்கிற்கு இரவில் தனியாக அவள் எதற்கு சென்றாள்?" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி சொல்லெறியும், மேற்குவங்க அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு எதிராக, பெண்ணியப் போராளிகளான நீங்கள் சிறு கண்டனங்கள் கூட தெரிவிக்காதது ஏன்?

    "பெண்களுக்கான சமூக நீதி வேண்டும்" என்று நீங்களெல்லாம் நரம்பு புடைக்க பேசுவது வெறும் நாடாளுமன்றத்தில் மட்டும்தானா?

    அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலம் என்பதால், உங்கள் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டீர்களா?

    குற்றம் நடந்த இடத்தில் திடீர் கட்டுமானப் பணிகளைத் துவங்குதல், குற்றம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு அவசரமாக இடமாற்றம் செய்தல் முதலிய தடயங்களை அழித்து, இக்கொலையை மூடி மறைக்க நினைக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியின் முதல்வருக்கு எதிராக நீங்கள் எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்?

    ஒருவேளை இக்கொலையில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்தவில்லையா ?

    இன்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற நீங்கள் காக்கும் இந்த கனத்த மௌனமானது, நாளை பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 'பாராளுமன்ற குழு முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன்'
    • 'கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்'

    மகாராஷ்டிர அரசியலும் மகா கூட்டணிகளும் 

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மாராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்சனை , அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை என மொத்த அரசியல் சூழல் குழப்பத்தில் உள்ளது.

    சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் சென்ற அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் அணி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதும், அஜித் பவார் ஆதரவர்கள் சிலர் கொத்தாக மீண்டும் சரத் பவாரிடம் சென்றதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியவை காங்கிரசின் இந்தியா கூட்டணியோடு இணைந்து மகா விகாஸ் கூட்டணியை உருவாக்கி களமாடி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 31 இடங்களை வென்று பாஜக கூட்டணியின் நம்பிக்கையைச் சிதறடித்தது.

    ஒரே கட்சிகளை சேர்ந்த இருவேறு அணிகள் எதிரெதிர் கூட்டணியில் உள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலிலும் பிரதிபலிக்கவே செய்யும். மேலும் எப்போது யார் எந்த அணிக்கு தாவுவார்கள் என்ற நிச்சயத்தன்மை இல்லாத திரிசங்கு நிலைமையே தற்போதைய மகாராஷ்டிர அரசியல் சூழல்.

    அஜித் பவாரும் குடும்ப பாசமும் 

    இதற்கிடையே துணை முதல்வராக உள்ள அஜித் பவார், மக்களவைத் தேர்தலில் சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று கூறியுள்ள கருத்து பாஜக அலுவலகத்தின் பக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் தனது மனைவி சுனேத்திர பவாரை பாராமதி தொகுதியில் நிறுத்தினார்.

    ஆனால் ஏற்கனவே எம்,பியாக இருந்துவந்த சுப்ரியா சுலே இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். எனவே தோல்வியைத் தழுவிய சுனேத்திர பவாருக்கு ஆறுதல் பரிசாக மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக கூட்டணி வழங்கியது. இதற்கு கட்சி சார்பில் பல எதிர்ப்புகளும் கிளம்பின.

    இதற்கிடையில் தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவார், ''நான் அனைத்து சகோதரிகளையும் நேசிக்கிறேன். அரசியலை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. எனது சகோதரிக்கு எதிராக எனது மனைவியை தேர்தலில் நிறுத்தி தவறு செய்துவிட்டேன். இது நடந்திருக்க கூடாது. ஆனால் பாராளுமன்ற குழு   முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன். ஆனால் அது தவறு என்று இப்போது நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

     

    மேலும் அடுத்த வாரம் ரக்ஷாபந்தனுக்கு உங்களது சகோதரி வீட்டிற்குச் செல்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், `நான் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். நானும், எனது சகோதரியும் ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார். மேலும், சரத் பவார் மூத்த தலைவர். எங்களது குடும்பத் தலைவர். அவர் கூறும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இது குறித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    • இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்த முடிவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தார். நேற்றிரவு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், உடல் எடை அதிகரித்துள்ளதால் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    50 கிலோவை விட 100 கிராம் எடை கூட இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாரீஸ் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய அரசு இந்த முடிவுக்கு எதிராக போராட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

    தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருப்பதாக முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகார் த்வாரில் நின்றபடி குரல் எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்குள்ளும் எதிரொலித்தது.

    வினேஷ் போகத் காலிறுதியில் 82 முறை தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
    • எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.

    பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.

    மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.

    கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.

    அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.

    திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.

    மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.

    மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.

    கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    • ஜெயிலுக்குள் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி.
    • அவரது உடலில் 26 முறை சர்க்கரை அளவு குறைந்துள்ளது.

    டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமடைந்துள்ளதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி இந்தியா கூட்டணி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்துகிறது.

    ஜெயிலில் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது. ஜெயிலில் ஜூலை 3-ந்தேதியில் இருந்து ஜூலை 7-ந்தேதி வரை 26 முறை அவரது சர்க்கரை அளவு 26 முறை குறைந்ததாக மெடிக்கல் ரிப்போர்ட் சொல்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும் என்பது பாஜகவுக்கு தெரியும். இதனால் அவர்கள் சிபிஐ மூலம் கைது செய்தனர். கெஜ்ரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

    காவலில் இருக்கும்போது அவருடைய உடல் எடை 8.5 கிலோ குறைந்தது. அவரது சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுடன் பகிரப்பட்டது. கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது அவர்களுக்குத் தெரியும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    • பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    • இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

    ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.

    இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
    • நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
    • இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது

    அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

     

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

    ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின்  முனை போட்டி  இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது. 

    • பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.
    • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியின் [VIP] தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.

     

    கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இருந்த சஹானி அங்கு ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு வந்தார்.

    தற்போது முகேஷ் சஹானி மும்பை சென்றுள்ளார். அவரது தந்தை ஜிதன் சஹானி பீகாரின் தார்பங்கா மாவட்டத்தில் சுபால் பஜார் பகுதியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜிதன் சஹானியை கட்டிலில் வைத்து கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

     

    அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த போலீசார் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதன் சஹானியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல்  காரணங்களால் இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்விரோதம் காரணமாகவா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன'

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி தேர்தலை சந்தித்த பாஜக, கூட்டணி வெற்றியை சேர்க்காமல் தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றது.

    இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு ஆட்சியமைதுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் உத்தரப் பிரதேசம் உள்ள மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் தற்போதைய பாஜக அரசில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் தோற்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடே காரணம் என்று பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    இன்று ராஜஸ்தானில் நடந்த சுமார் 88,000 உறுப்பினர்கள் பாஜக கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவுகான், 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன. அந்த வெளிநாட்டு சக்திகள் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை' என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் சுமார் 16 ஆண்டுகள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 'இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது'
    • 'பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்'

    தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி உட்பட மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா கூட்டணி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மற்றும் எதிரிகட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,'7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது. நாட்டின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சர்வாதிகாரத்தை அளித்து நியாயத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்புக்காக இந்தியா கூட்டணியின் பக்கம் நிற்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

    இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், 'இடைத்தேர்தல் முடிவுகள் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நிரூபிக்கும் தக்க சான்றாகும். இந்த வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி, கடுமையாக சூழல்களையும் முறியடித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், 'இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மறக்க முடியாத படத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பாஜக ஏற்படுத்திய வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, 'நிகழ்காலத்தையும் மூலம் வருங்காலத்துக்கான தீர்க்கமான பார்வையையும் கொண்டுள்ள நேர்மறை அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இளைய இந்தியாவின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் உழைப்பவர்களாக நாங்கள் இருப்போம்' என்று தெரிவித்துள்ளார். 

    ×