search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயில் பத்திரம்"

    • ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு உள்ளது

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா [86] உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி காலமானார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் ரத்தன் டாடா தனது சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் உள்ளன.

    உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை 'டிட்டோ' என்ற வளர்ப்பு நாய்க்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

     

    அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தவிர, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா கூறியுள்ளார். அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

    • உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
    • உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2000-ம் ஆண்டு முதல் போலி ஆவணம் மூலம் சொத்துக்களை அபகரிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அதிகளவில் அபகரிக்கப்பட்டது. இது சர்வதேச அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது.

    இதன்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நில அபகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது புகார்கள் எழுந்து முறைகேடுகள் தொடர்ந்தது.

    சமீபத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் பதிவான உயில் சொத்துக்களில் ஆவணங்களை மாற்றி நூதன மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    உயில் பத்திர பதிவு புத்தகத்தில் ஆவணங்களை மாற்றி வேறு ஆவணங்களை இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். இதனிடையே மாவட்ட பதிவாளர் கந்தசாமி, உயில் பத்திரங்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இதில் 8 உயில் பத்திரங்களில் உள்ள விரல் ரேகை பதிவு பொருந்தாமல் முரண்பாடாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருவாய்த்துறை மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுபோல மோசடிகளில் பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் துணையின்றி செய்திருக்க முடியாது. இதனால் பத்திரப்பதிவு துறை ஊழியர்களிடம் முழுமையான விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும், உயில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்துக்களின் ஆவணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்யுமாறு துணை பதிவாளர்களுக்கு மாவட்டப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல் துணை பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளின் விவரங்களை சேகரிக்கும் பணியையும் பதிவுத்துறை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வெளிவரும் மோசடி சம்பவங்கள் சொத்துக்கள் வைத்திருப்போரை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

    ×