search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்கார தீபங்கள்"

    • பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
    • பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

    இறைவனை தீபமேற்றி வணங்குவதுதான் நமது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றுவதும், தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்குகளில் ஒன்றாக உள்ளது.

    பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்படுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவிதமான சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுனம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    • பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
    • பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

    பூஜைகளின் போது கோவில்களில் கடவுளின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,

    "ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்

    ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்

    ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்

    ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே"

    என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

    பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீடத்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

    பூஜைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது. அது ஆணவ மலம் எனும் தடையாகும்.

    ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

    உலகத்தில் வெளிச்சம் வருதலும், இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

    `ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும்.

    இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்' என்ற பொருளில்;

    `விளக்கினை ஏற்றி வெளியை அறமின்

    விளக்கினின் முன்னை வேதனை மாறும்

    விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

    விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!"

    என்று திருமூலர் பாடியுள்ளார். `விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்' என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

    பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

    நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப்பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

    ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரஸ்வதியையும், சுவாகாதேவியையும் குறிக்கும்.

    ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

    1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

    கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.

    தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் 'ஓம்' என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

    தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.

    ×