search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் புறக்கணிப்பு"

    • வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர்.
    • மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள கொட்டக்குடி மலைகிராமத்தில் அதிக அளவு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் புகார் வைத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை அந்த இடம் எங்கு உள்ளது என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள மலை கிராமம் தேர்தல் புறக்கணிப்பு செய்யபோவதாக வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர். தற்போது மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
    • வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் நெல்லை மாநகராட்சி வார்டு 18-க்கு உட்பட்ட பகுதிகளும் எம்.ஜி.ஆர்.நகரில் வருகிறது. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவில் கடந்த 56 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், இருப்பினும் தங்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் தங்கம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் கொரோனா காலத்தில் அயராது அச்சமின்றி பணியாற்றினர். அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பது என்ன நியாயம் என கூறி பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இதனை தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடந்த 14-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி திறந்தவெளியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.

    தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் மீண்டும் ஒரு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர். அதில் வருகிற 4-ந்தேதி முதல் வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும், தீர்வு கிடைக்கும் வரை அரசியல் வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
    • தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    தாராபுரம்:

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.

    இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

    20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது.
    • இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெற்றிடத்தை அப்பகுதி பொதுமக்கள் இதுநாள் வரை பயன்படுத்தி வந்தனர்.

    சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வழிபாட்டு இடத்தை மறைமுகமாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    எனவே அலுவலகத்திற்கு கையகப்படுத்தியதில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பதாக கூறி அதனை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சடையப்பபுரம் ஊர் பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அந்த இடத்தை கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை அருகே எஸ்.பாறைப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடம் தோறும் இங்குள்ள காளியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி மற்றும் முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி, தனபால், முருகன். ஆகிய 3 பேர் தூண்டுதலின் பேரில் ஊர் திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

    மேலும் இந்த நிலையில் ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதன் வரிசையில் பாறைப்பட்டி கிராமமும் இணைந்துள்ளது.

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    ×