search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
    • அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது.

    இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும் தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் "தேர்தல் பணிக்குழு" பின்வருமாறு நியமிக்கப்படுகிறது.

    அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நாளை மாலை விக்கிரவாண்டியில் உள்ள "ஜெயராம் திருமண மண்டபத்தில்" நடைபெறவுள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என கூறப்பட்டுள்ளது.


    • காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

    உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

    இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

    வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

    • அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவு.

    குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது.

    அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தொடர்பு எண்கள்: +91 1800 309 3793,

    +91 80 6900 9900, +91 80 6900 9901

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
    • வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    ரூ.206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம், ரூ.25 கோடி மதிப்பீட்டில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்கள் வழங்குதல் மற்றும் ஒரு கோடி மதிப்பீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி என மொத்தம் ரூ.232 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2024-25-ம் ஆண்டில் ரூ.206 கோடியில், 22 இனங்களுடன் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, விவசாயிகளுக்கு "பசுந்தாளுர விதைகளை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.

    வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றினை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிராக்டர்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர். எஸ். ராஜகண்ணப்பன், அரசு முதன்மைச்செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன்.
    • கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.

    செப்டம்பர் மாதத்தில்தானே முப்பெரும் விழா நடைபெறும் என்று தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் கேட்பது உங்களில் ஒருவனான எனக்கும் கேட்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தீரர்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்தி, கழகம் காக்கும் பணியில் அயராது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் நம் உயிரனையத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட விழாவாக ஜூன் 15-ஆம் நாள் கோவை கொடீசியா அரங்கில் இந்த முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.

    இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு - ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கட்டளை கேட்டதும் பாய்கின்ற கணை போல, அறிவிப்பு வெளியானதுமே கழக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அவரது நினைவாகப் பயனுள்ள திட்டங்கள், அவரது பெயரிலான பயன்மிகு கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் அவரது உடன்பிறப்புகளாகிய நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய காணிக்கை என்பது, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்தேன். கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைக் கவனித்து வந்தேன். உடன்பிறப்புகளாம் உங்களுடைய பணிகள் என் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்தன. எங்கேனும் சில இடங்களில் சற்று சுணக்கமோ சோர்வோ தெரிந்தாலும் உடனடியாக அதனைக் கவனிக்கின்ற இடத்தில் நானும், விரைவாக அதனை சரிசெய்து வெற்றியை உறுதிசெய்கிற பணியில் நீங்களும் இருந்ததால்தான் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதனை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறோம்.

    தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகத்தினருடனான சந்திப்பின்போது அவர்கள் என்னிடம், "நாற்பதுக்கு நாற்பது என்ற முழுமையான வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை" என்றனர். "நான் எதிர்பார்த்திருந்தேன்" என்று அவர்களிடம் தெரிவித்தேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததற்குக் காரணம், கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையினால்தான். அதற்கேற்ற உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது கழக உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா.

    பாராட்டுக்குரியவர்கள் உடன்பிறப்புகள். நன்றிக்குரியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஓர் இலட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

    வெற்றி பெற்ற கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே செயலாற்றிவரும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, உடன்பிறப்புகளாம் உங்களின் அயராத உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்தக் கையொலி என்பது இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் கழகக் குரல்களுக்கான அடிநாதம்!

    'மக்களிடம் செல்' என்ற பேரறிஞர் அண்ணாவின் சொல்லுக்கேற்ப கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினருடன் இணைந்து மக்களைச் சந்தித்து, கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதையும், கடந்த மூன்றாண்டுகளில் திராவிட மாடல் அரசினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன் தரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி, மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கிடவும், அவரவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கவனித்து நிறைவேற்றிடவும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.

    ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.

    1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான், இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றுத் தந்தது. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழிதான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

    1962-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், 'நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்' என்று பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத்தான் இன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.

    தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் இலாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் எதுவாக இருந்தாலும் அது வெறும் கூடிக் கலைவதற்கான நிகழ்வல்ல. ஒவ்வொரு நிகழ்வும் உடன்பிறப்புகளுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்!

    மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.

    நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
    • சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும்.

    ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இருமாநில வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் எதிர்நோக்குகிறேன் என கூறியுள்ளார். 

    • சபாநாயகர் அப்பாவு அறையில் பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சென்னை:

    விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.

    இன்று அவர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சபாநாயகர் அப்பாவு அறையில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஸ் தாஷ், ரூபி மனோகரன், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


    • உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் மாரியப்பன் தங்கம் வென்றார்.
    • மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

    சென்னை:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

    உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உலக பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    • ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.
    • இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    கல்வி, விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தை பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், ஊறுவிளைவிக்க கூடியதாகும்.

    பெற்றோர்களுக்கு போதிய வருமானம் இல்லாமையினாலும் குடும்ப சூழ்நிலைகளினாலும் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி அளித்திடவும், பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடவும், அரசு பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.

    குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநில மாக திகழ்கிறது.

    குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குழந்தைத் தொழிலா ளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது, பொதுமக்களும் வேலை அளிப்போரும் இப்பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்களும் அரசு அலுவலர்களும் தங்களது மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்க ஒன்றாக மாற்றுவோம் என சூளுரைப்போம். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன.
    • இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன. இதனிடையே, இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அன்னியூர் சிவா தி.மு.க.வின் விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.
    • பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் பிரச்சனைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதை கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன் திட்டம்' விரைவில் தொடங்கப்படும்.

    * திட்டங்களை கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இருக்கிறது.

    * தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

    * போதைப்பொருள் நடமாட்டம் என்பது சட்டசம்-ஒழுங்குப்பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்குப் பிரச்சனை.

    * போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், இதற்காக பெரும் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    * போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    * போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    * 'மக்களுடன் முதலமைச்சர்' திட்டத்தை ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் செல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" மற்றும் "நீங்கள் நலமா?" போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.

    * பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் பிரச்சனைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
    • ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    ×