search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
    • சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து கமல்ஹாசன் தங்கினார்.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார்.

    இதே போல் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். பின்னர் அவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து தங்கினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் கமல்ஹாசன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    • தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது.
    • உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் 'ஐபேக்' நிறுவனம் பணியை முடித்துக்கொண்டு வெளியேறியது.

    இப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்து வருகிறது. இது தி.மு.க. தலைமையே உருவாக்கிய நிறுவனமாகும். ஐபேக் டீமில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டதோ? அதே வகையில் பென் டீம் சற்று வித்தியாசமாக தி.மு.க.வுக்கு ஆலோசனைகளை வழங்கி பணியாற்றுகிறது.

    இந்த நிறுவனம் இப்போது தேர்தல் பிரசார பாடல்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

    தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பிரசார பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமான நிலையில் இப்போது 2-வது பிரசார பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

    அந்த பாடல் வரிகளில் ஆஜாகா, ஐஜாகா, ஊஜாகா வேணாமே வீணான பூஜாகா, ஏஜாகா ஐஜாகா ஓஜாகா நாமளா? அவங்களா? பார்ப்போம் வா...

    உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த பிரசார பாடல் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    • கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
    • விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பேசத் தொடங்கும்போது "வணக்கம்" என்று தமிழில் கூறியே பிரசாரம் செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

    தனது பேச்சின் இடையே திருக்குறளை கூறுவது, தனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது என பிரதமர் மோடியின் தமிழ் பாசம் தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், "தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லையே" என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.

    இதற்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எங்கும் இந்தி, எதிலும் இந்தி என இந்தியை திணித்துவிட்டு பிரதமர் மோடி கண்ணீர் வடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    நேற்று மாலைச் செய்தி:

    தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

    நேற்று காலைச் செய்தி:

    அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

    மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

    கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

    ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

    கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

     பிரதமர் மோடி அவர்களே...

    கருப்புப் பணம் மீட்பு,

    மீனவர்கள் பாதுகாப்பு,

    2 கோடி வேலைவாய்ப்பு,

    ஊழல் ஒழிப்பு போல்

    காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,

    அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

    விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

    "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

    தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று தெரிவித்துள்ளார்.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
    • அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.


    • பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றார்.
    • வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க. என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    தர்மபுரி:

    தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

    மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர, சென்சஸ் எடுக்கமுடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க.

    ஒருமுறையாவது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

    தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தரமுடியாது என பாஜக கூறிவிட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார் என தெரிவித்தார்.

    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.
    • வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.

    4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    அதற்கான செயல் திட்டங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது.


    வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 39 தொகுதிகளிலும் பரவலாக கவனம் செலுத்துவதைவிட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டமும் வகுக்கப்பட்டது.

    பலம் வாய்ந்த, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கி மோத வைத்துள்ளது. கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து டாக்டர் தமிழிசையை தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது தவிர அண்ணாமலை, ராதிகா சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் என்று பல பிரபலங்களை பல தொகுதியில் போட்டியிட வைத்து உள்ளது.

    மக்களிடம் அறிமுகமான முகங்களை போட்டியிட வைப்பதன் மூலம்தான் அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தது.

    களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் அந்த வியூகத்தையும் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளில் பா.ஜனதா 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


    இந்த தகவலை திமு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பென் நிறுவனம் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறது.

    அந்த அறிக்கையை பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து விட்டு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் 2-ம் இடத்தை பா.ஜனதா பிடித்து விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே போன்ற தகவல் சென்றுள்ளது.

    அவரும் அசந்து போனது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலளர்களை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரிந்து நிற்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற மிதப்பில் தி.மு.க.வினரிடம் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்பது உண்மை. இதனால் கூட தலைவர் இப்படி உசுப்பி விட்டிருக்கலாம் என்றார்கள்.

    • முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர்.

    சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில் அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர்
    • அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது

    தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

    ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க இருக்கிறார். அண்மையில் கோலாகலமாக நடந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

    விரைவில் இவர்களது திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 2022-ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கத்தினர் தங்களது ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு தெரிவித்தனர்.

    திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், புதிய திராவிட கழக தலைவர் ராஜ் கவுண்டர், சமூகநீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான், பேரவை தலைவர் வடிவேல் ராமன், தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில தலைவர் செங்குட்டுவன், கோவில் பூசாரி நல சங்க தலைவர் வாசு, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்க தலைவர் பரிமளம்.

    தென்னிந்திய விஸ்வ கர்மா முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் சரவணன், தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்.கே.டி. பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூகநீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

    மேலும் பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களை தவிர 16 விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து அவர் கடந்த 22-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நாளை (29-ந் தேதி) மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பிஎம்பி சல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டப் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.

    அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

    அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

    பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

    ×