search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக உள்ளாட்சி தேர்தல்"

    • 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்கு பெட்டிகள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையினை ஆராய வேண்டும்.

    அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்.
    • சத்யபிரத சாகுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் இந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

    இதையடுத்து பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

    இதன் முதற்கட்டமாக சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை தருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் எழுதி உள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைவில் நடத்த உள்ளது.

    தற்போதுள்ள சட்டப் பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டி உள்ளது.

    எனவே கடந்த மார்ச் 28-ந் தேதி சட்டப் பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விவரங்கள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

    மாநில தேர்தல் ஆணையம் உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிர மாட்டோம். எனவே தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×