search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாராதனை​"

    • பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
    • பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

    இறைவனை தீபமேற்றி வணங்குவதுதான் நமது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றுவதும், தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்குகளில் ஒன்றாக உள்ளது.

    பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்படுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவிதமான சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுனம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    ×