search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை 385-வது பிறந்த நாள்"

    • இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
    • 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

    தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 385-வது பிறந்த நாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.

    இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். அவர்கள் மசூலிப்பட்டினத்தில் முதலில் கம்பெனியை தொடங்கி வணிகம் செய்தனர்.

    ஆங்கிலேயர்கள் போலவே டச்சுக்காரர்கள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிகம் செய்தனர்.

    அவர்களுக்குள் போட்டிகள் அதிகரிக்கவே ஆங்கிலேயர்கள் புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    அப்போது டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரது சகோதரர் அய்யப்ப நாயக்கர் என்ற உள்ளூர் நாயக் மன்னர்களிடம் இருந்து கூவம் ஆற்றின் அருகில் மதராசப்பட்டினம் என்ற பகுதி அடங்கிய ஒரு பெரிய இடம் ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது.

    1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆங்கிலேயர்கள் வாங்கிய அந்த நிலத்தில் 1640-ம் ஆண்டு ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர். அப்போது முதல் அந்த பகுதி நகரமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.

    கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.


    கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர்.

    அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.

    இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

    அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார்.

    இதனால் புதிதாக விரிவடைந்த நகரத்திற்கு பெயர் மதராசப்பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற சந்தேகம் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றிள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.


    நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர், பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்த சாந்தோம், நெசவாளிகள் வாழ்ந்த சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர்.

    திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.

    அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.

    இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் மிகபெரிய இடத்தை பெற்றது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரெயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.

    மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. காவல்துறையும் ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றமும் கட்டப்பட்டது. ஐகோர்ட்டு, சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவை அப்போதுதான் உருவாக்கப்பட்டன.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.

    அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.

    அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன.


    அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.

    பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

    சென்னையில் தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, உணவு என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

    தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.

    மேலும் சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டிலேயே அதிக கார்கள் உற்பத்தியாகும் நகரமாகவும் சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் தொழில் நுட்பத்திலும் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது.


    வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.

    இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தலைநகராக, பேரும் புகழோடும் விளங்கும் சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவருமே கொண்டாடி மகிழ்வோம்.

    ×