search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாயான புத்தர் கோவில்"

    • மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
    • ஜாவானியர்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள மகேலாங் ரீஜென்சி பகுதியில் போரோபுதூர் என்ற இடம் உள்ளது. இங்கே கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாயான புத்தர் கோவில் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய புத்தர் கோவிலாகும்.

    மேலும் மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த புத்தர் கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள, யோக்யகர்த்தா நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடமேற்கில் இருக்கிறது போரோபுதூர் என்ற பகுதி.

    இங்கே சுண்டோரோ-சம்பிங் மற்றும் மெர்பாபு-மெராபி என்ற இரட்டை எரிமலைகள், புரோகோ மற்றும் எலோ ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு உயரமான பகுதியில் புத்தர் கோவில் அமைந்திருக்கிறது.

    உள்ளூர் புராணங்களின் படி ஜாவானியர்களின் புனித இடமாக கருதப்படும் இது, 'ஜாவானின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்த புத்தக் கோவிலானது, அடுக்கடுக்காக ஒன்பது தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


    கீழ் இருந்து முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும், மேலே உள்ள மூன்று அடுக்குகள் வட்டமாகவும், அதன் மேல் பகுதியில் மையக் குவிமாடமும் இருக்கிறது.

    இந்த கோவிலானது சுமார் 2 மில்லியன் கன அடி கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஒன்பது தளங்களின் வழியாகவும் சென்று மேல் பகுதியைக் கண்டுகளிக்க, சுமார் 4 கிலோமீட்டர் வரை நாம் நடக்க வேண்டியதிருக்கும்.


    இந்த கோவிலில் சுமார் 2 ஆயிரத்து 700 புடைப்புச் சிற்பங்களும், 504 புத்தர் சிலைகளும் இருக்கின்றன.

    1975 முதல் 1982-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசிய அரசும், யுனெஸ்கோவும் இந்த புத்த நினைவுச் சின்னத்தை ஆய்வு செய்து, இதனை உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளன.

    மறுசீரமைப்பு பணியின் போது, இந்த பகுதியில் உள்ள மூன்று புத்தக்கோவில்கள், அதாவது போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டுட் ஆகியவை நேர்கோட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதோடு அந்த காலத்தில் போரோபுதூரில் இருந்து மெண்டுட் வரை இரு புறமும் சுவர்கள் கொண்ட செங்கல் சாலை இருந்துள்ளது. மூன்று கோவில்களும் ஒரே மாதிரியான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன.

    ×