என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி"
வங்க கடலில் உருவான கஜா புயல் 15-ந்தேதி வட தமிழகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
புயல் பாதிப்பு பகுதிகளை துல்லியமாக கணித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் கூறியதாவது:-
கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை மற்றும் கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பயிற்சி பெற்ற போலீசார் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல் நிலை மீட்பாளர்கள் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.
மழை பாதிப்பு குறித்து அறிந்து விரைந்து செயல்பட ‘டி.என்.ஸ்மார்ட்’ என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன் 2016-ல் வர்தா புயல் தாக்கிய போது கடலூர் மாவட்டத்தில் அதிகம் சேதம் ஏற்பட்டது. எனவே இந்த முறை கடலூர் மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீட்பு படையினர் தயாராக வைக்கப்படுகிறார்கள்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:-
கஜா புயல் நெருங்கி வருவதையொட்டி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் மீட்பு படையினர் 1400 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒன்றியம், நகராட்சிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவர்.
அவர்களுக்கு தேவையான உணவு சமைத்து வழங்க சத்துணவு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மின்சாரம் தடைப்பட்டால் கூட்டுகுடிநீர் வழங்க ஜெனரேட்டர், டீசல் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்கள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மரங்கள் விழும் போது அதை அப்புறப்படுத்த எந்திர வாள், பொக்லைன் எந்திரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் முன்எச்சரிக்கை பணிகளை கவனிக்க கடலூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சப்-கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம வளர்ச்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் அந்தந்த கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் சப்-கலெக்டர்கள் மேற்பார்வையிடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
ரெட்டியார்குப்பம், அனுமந்தை குப்பம், கீழ்குத்துபட்டு குப்பம், உள்பட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை .
மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அத்துடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த மீன்பிடிக்க தடை தொடரும். புயல் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடலில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மற்றும் வட தமிழகத்தில் 14-ந்தேதியில் இருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பிறகு உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman
புதுவை மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் கண்ணன்.
காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி. என பதவிகள் வகித்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் முரண்பாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி அவ்வப்போது புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை கண்ணன் எதிர்கொள்வார்.
கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அப்போது கண்ணன் புதுவையில் த.மா.கா.வை தொடங்கி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.
1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக இருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இணைந்து போது புதுவையிலும் கண்ணனும் காங்கிரசில் இணைந்தார்.
தொடர்ந்து 2001-ம் ஆண்டு 2-வது முறையாக மீண்டும் காங்கிரசில் இருந்து, வெளியேறி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
2006-ம் ஆண்டு மீண்டும் கண்ணன் காங்கிரசில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், ஆட்சியை அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்த கண்ணனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கண்ணன் மீண்டும் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
2016-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் பிறகு கடந்த 2 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் கண்ணன் ஒதுங்கி இருந்தார்.
தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை கண்ணன் வெளியிட்டுள்ளார் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் டெல்லியில் தேர்தல் கமிஷனில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்ணன் வெளியிட உள்ளார்.
புதிய கட்சி தொடங்குவதற்கான காரணம் குறித்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில அரசியல் சூழலில் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளேன். நான் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். அந்த கட்சியின் பெயர், அமைப்பு, சின்னம், எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னர் கட்சியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிப்பேன்.
சில காலம் நான் அமைதியாக இருந்தேன். இதற்கு காரணம் எதுவும் இல்லை. அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டதால் அமைதியாக இருந்தேன். எந்த முடிவையும், அவசரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
மக்களின் பிரச்சினைகள், கஷ்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்த்தால் அதிகமாக உள்ளது. இதனால் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் தான். எனவே எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலை உருவானது. அதனால் தான் புதிதாக கட்சி தொடங்கி உள்ளேன்.
எங்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த கட்சியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பக்கம் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன். அல்லது நல்ல வேட்பாளர் யாராவது போட்டியிட்டால் அவருக்கு ஆதுரவு கொடுப்பேன். தேர்தல் வரும் போது அதனை அறிவிப்பேன்.
இவ்வாறு கண்ணன் கூறினார். #FormerMinister #Kannan
புதுவைக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, பெங்களூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று கண்டுகளிப்பது வழக்கம். மேலும் ஓட்டல்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
அதுபோல் நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது ஆண் நண்பர்களுடன் புதுவை கடற்கரையையொட்டி உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டு இருந்தார்.
அப்போது சில வாலிபர்கள் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக்கேட்ட போது அவர்களை அந்த வாலிபர்கள் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதுபற்றி அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ நடந்த ஓட்டலுக்கு விரைந்து செல்வதற்குள் அந்த வாலிபர்கள் ஓட்டலில் இருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதையடுத்து போலீசார் ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் அடையாளம் தெரிந்தது. அதில் புதுவையில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது25) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எழிலரசு (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து புதுவையில் மற்றொரு ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு 50 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுவையில் தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கியது. புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கும், புதுவையில் இருந்து பெங்களூருக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 விமானங்களும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பெங்களூருவுக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் விமான சேவையை விரிவு படுத்தும் வகையில் புதுவையில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சின் நகரங்களுக்கு விமான சேவை இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக சென்னை, சேலம் நகரங்களுக்கு கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் விமானங்களை இயக்க ஏர் ஒடிசா நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது. ஆனால், திடீரென இந்த விமான சேவை கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ஐதராபாத்துக்கு செல்லும் விமான சேவையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை விமான நிலையத்தின் ஓடு தளம் விஸ்தாரமாக இல்லாததால் நேரடியாக வெளி நாடுகளுக்கு விமானத்தை இயக்க முடியாது.
இதனால் புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.
இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி உள்ளது. காலை 11.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் ஐதராபாத் விமானம் அங்கு பேங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பேங்காங் சென்று அடையும்.
அதே போல் இரவு 10.40 மணிக்கு பேங்காங்கில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுவை வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு விட்டு, விட்டு மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலம், வால்பாறை, சேந்தமங்கலத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. சின்னக்கல்லார், செங்கோட்டை, மற்றும் தேவலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம், திருவாரூர், கொல்லிமலை, பாபநாசம், பெருந்துறை, கூடலூர், தொண்டி, தென்காசி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், உத்தமபாளையம், சென்னை வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiRain
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை தொடங்கி முதல் 2 மாதம் முடிந்துள்ளது. பருவமழை தொடங்கிய ஜூன் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி (நேற்று) வரை தமிழகம், புதுச்சேரியில் 11.2 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவு என்றாலும், இயல்பை ஒட்டியே மழை பெய்து இருக்கிறது.
அதே நேரத்தில் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை, தேனி, நெல்லை ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து இருக்கிறது.
தென் இந்திய பகுதி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதிவரை இதுபோல் வெப்பசலனம் கார ணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் அவ்வப்போது மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், மதுரை விமானநிலையம் 6 செ.மீ., திருபுவனம், காட்டுமன்னார்கோவில், அணைக்காரன் சத்திரம், செங்கல்பட்டு தலா 5 செ.மீ., மாமல்லபுரம், திருமயம் தலா 4 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் தலா 3 செ.மீ. உள்பட மேலும் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. #TamilNadu #Rain #WeatherResearchCenter
புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஒரு உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர்.
புதுவை கவர்னர் சட்டப்பேரவையின் சுதந்திரத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் நீண்ட நாட்களாக பேசி வருகிறார்.
மத்திய அரசு தன்னிச்சையாக 3 உறுப்பினர்களை நியமித்ததையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், அந்த 3 பேரையும் நியமன உறுப்பினர்களாக அங்கீகரித்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கலையும், பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என சட்டப்பேரவைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும்பட்சத்தில்தான் நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதித்துள்ளேன் என நிபந்தனையும் விதித்திருப்பது சட்டப்பேரவையின் தனித்தன்மையை, சுதந்திர தன்மையை கேலிக்குரியதாக்கி தரம் தாழ்த்துவதாக உள்ளது.
அதோடு சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுபவர்கள் என்று பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தையும் உருவாக்கியுள்ளார்.
இது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பையும், உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக சபையின் கண்ணியத்தையும், மாண்பையும் வேண்டுமென்றே தாழ்த்தி அவதூறாக பேசியும் சபையை அவமதித்தும் வருகிறார்.
நிலுவையில் உள்ள ஒரு வழக்கு பற்றி இடைக்கால உத்தரவில் தன் இஷ்டம்போல விளக்கம் அளிக்கிறார். சட்டசபையை தன் ஆளுகைக்கு கீழ் செயல்படும் ஒரு துறையை போல கருதி உத்தரவிடுவது சபையை அவமதிக்கும் செயலாகும்.
எனவே உறுப்பினர்களின் புகாரை ஏற்று கவர்னர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்