search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94446"

    ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர்.
    நாம் பிறக்கையில் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. அதுபோல் போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்களே. அவர்கள் உறவு முக்கியமானது, முதன்மையானது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.

    இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.

    மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.

    நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

    மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது.
    2019-ம் ஆண்டின் சுட்டெரிக்கும் கோடை மெதுவாக விலக ஆரம்பிக்க, புதுக் கல்வியாண்டும் நெருங்கிவிட்டது. பல ஆயிரம் பெற்றோர்கள் தம் அரும்புக் குழந்தைகளின் கைப்பிடித்து கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மிரட்சி கலந்து அவரவர்கள் வசதிக்கேற்ப கூட்டிச் செல்வதும் நம் கண்ணில் விரிகிறது. அந்தக் காட்சிகளில் தம் குழந்தைகள் மேல் அவர்கள் ஏற்றிய கனவுகளும் தெரிகின்றன. அந்தக் கனவுகளின் பாதை அவர்களை இட்டுச் செல்வது அவர்களின் இன்றைய கனவுப் பள்ளிகள்.

    உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.

    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.

    சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.

    நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.

    அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.

    நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.

    இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.

    நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,

    இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.

    ‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்’

    என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.

    அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.

    “நானோவை” சாலையில் ஓட்டும்போது தன்னைத்தானே ஏழை என்று பறைசாற்றுவதாய் இருக்கும் எனவே அந்தக் காரை ஒதுக்கினார்களாம். இதை மனதில் வைத்து மேலே படியுங்கள், போன தலைமுறைப் பெற்றோர்களுக்கு, அதிகமான குழந்தைகள் இருந்தன. அப்போதைய கல்வி வளாகங்களுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கவில்லை. எனவே தமது குழந்தைகளை வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் இப்போது, வர்த்தக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட போட்டிகள் விளையாட்டு மைதானங்களைத் தாண்டி வகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்தன.



    பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.

    இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.

    அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.

    இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.

    எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
    நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.
    கல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.

    உணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.

    சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

    உண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.

    இன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.

    இதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள்? பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.

    மிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.

    குறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி நில் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே!!

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்
    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.
    கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.

    வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்.
    இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதுபற்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி முறை பற்றி விரிவாக கூறியிருக்கிறது.

    இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

    ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.

    இதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும், 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.

    மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

    இந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.

    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.
    இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
    என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பார் அப்பர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.

    ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.

    மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.

    தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.

    செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.

    நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.

    இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும். 
    கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
    நடப்பு ஆண்டு எல்லோருக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் குறைவு இருக்காது. அவர்களுக்கு எது குறித்தும் கவலை கொள்ள அவசியம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டும் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தங்களிடம் உள்ள குறைகளை அறிந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாணவர்கள் மீதும் யாரும் எதையும் திணித்து விட முடியாது. அவர்களாக விரும்பினால் மட்டுமே எந்த செயலையும் செய்ய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.

    ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.

    குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும். 
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மற்ற நேரங்களிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்ல பண்பாடு. மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உணவு சாப்பிடாமல் இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதிகமாக சாப்பிட்டாலும் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடியது உணவு. மாணவர்களின் உடலுக்கும், கல்விக்கும் பாதிப்பில்லாமல் உணவுப் பழக்க வழக்கம் அமைய வேண்டும் அதற்கான சில டிப்ஸ்...

    காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?

    காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.

    ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.

    சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.

    இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.

    செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.

    ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

    காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.

    ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.

    புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். தங்களது மேஜை, நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதுதல் கூடாது. தேர்வு எழுதும்போது விடைகளை உத்தேசமாக போட்டு பார்ப்பதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் வண்ண பென்சில்களை பயன்படுத்தி எழுதுதலோ, அடிக்கோடிடுதலோ கூடாது. விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவோ, தனியாக பிரித்து எடுத்துச்செல்வதோ கூடாது. கூடுதல் விடைத்தாட்கள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே அதுகுறித்து அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஒருசில விடைகளைக் கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். தேர்வர்கள் எக்காரணங்கொண்டும் தாம் எழுதிய விடைகளை அடித்தல் கூடாது. அது ஒழுங்கீனச்செயல் என கருதப்படும். இதனை மேற்கொண்டால் தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கும் தேர்வினை எழுத முடியாது.

    நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக்கெடிகாரத்தை மட்டுமே அணிந்து வரலாம். பறக்கும்படை உறுப்பினர்கள் பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. அவர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமை ஆற்ற வேண்டும். 
    தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...
    மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் தேதியிலேயே தேர்வு தொடங்குகிறது. 6-ந் தேதியில் பிளஸ்-1 வகுப்புக்கும், இரண்டாவது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிவாய்ப்பை எளிமையாக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...

    ‘தேர்வு’ பற்றிய பயத்தை கைவிடுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன. இதில் பயம் கொள்ள என்ன இருக்கிறது? நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் இனி புதிய பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே படித்த பாடங்களையும், முக்கியமானவற்றை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பழகுங்கள்.

    நீண்ட நேரம் தொடர்ந்து படிக்காமல் போதிய இடைவெளியுடன் படியுங்கள்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனை கெடுக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக நீண்ட நேரம் கண்விழித்து படிப்பது, சாப்பிடாமல் படிப்பது வேண்டாம். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். காயங்கள் உண்டாக்கும் சாகச செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.

    எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.

    நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், பேனா முதல் தேர்வு அட்டை வரை அனைத்தும் இருக்கிறதா? என்பதை வீட்டைவிட்டு கிளம்பும் முன் பரிசோதனை செய்யுங்கள். எதையும் தவற விடாமல் இருக்க ஒரே இடத்தில் வைத்து பராமரியுங்கள். சிறிய பொருட்களை ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.



    தேர்வுக்கு கிளம்பும் முன், காலை உணவை தவிர்க்கக்கூடாது.

    தேர்வுக்கு முந்தைய இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்க வேண்டாம். அது தேர்வை திருப்தியாக எழுத முடியாமல் செய்துவிடும்.

    தேர்வு அறைக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை படிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே புத்தகங்களை மூடிவிட்டு, மனதை தேர்வுக்கு தயாராக்குங்கள். முக்கிய பகுதிகளை மனதில் நினைவூட்டிப் பாருங்கள்.

    தேர்வுக்கு நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா, பென்சில்களையே பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. அப்படி புதிதாக வாங்கியிருந்தால் நன்கு எழுதி பயிற்சி செய்து பழக்கப்படுத்திவிடுங்கள்.

    தேர்வு தொடங்கும்போது முதலில் கேள்வித்தாளை நன்கு படித்துப்பாருங்கள். எந்தெந் வினாக்களுக்கு விடையெழுத வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். யோசித்து விடையளிக்க வேண்டிய வினாக்களை ஒதுக்கிவைத்துவிட்டு தெரிந்தவற்றை வேகமாக எழுதி முடியுங்கள்.

    ஒவ்வொரு வினாவுக்கும் குறித்த நேரத்தில் விடையளியுங்கள். இறுதியில் எல்லாவற்றுக்கும் விடையளித்திருக்கிறீர்களா? முக்கியமான விஷயங்கள், வாய்ப்பாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்பதை திருப்பிப் பாருங்கள். அதற்கெனவும் சில நிமிடங்களை ஒதுக்கி வையுங்கள்.

    ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். எதை தவறவிட்டால் மதிப்பெண் குறையும் என்பதையும் அறிவுறுத்தியிருப்பார்கள். அதைப் பின்பற்றி தேர்ச்சி பெறவும், முழு மதிப்பெண் பெறவும் முயற்சி செய்யுங்கள்.

    பதில்களை ஸ்கெட்ச், ஜிகினா பேனாக்களால் அலங்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரம் கிடைத்தால் மட்டும் அனுமதிக்கப்பட்ட பேனாக்களைக் கொண்டு அழகுபடுத்தலாம்.

    அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். தேர்வாளரின் நேர அறிவுறுத்தலை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வேகமாக பதிலளியுங்கள்.

    தேர்வு எழுதி முடித்தபின், அதைப் பற்றி ஆராய வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள்!
    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

    இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள். இதை பல பெற்றோர் உணர்வதில்லை. கண்டித்தால் மட்டுமே பிள்ளைகள் சரியான இலக்கை அடைவார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுக்கும்போது, தங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் ஆசியர்கள் வசம் விஷயத்தை கொண்டு போய் விடுகிறார்கள். இது பிள்ளைகளின் தன்மானத்தை உசுப்பி விட்டு விடுகிறது. இதனால் பெற்றோரை எப்படி பழி வாங்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். இந்த களத்தில் ஓடத்தொடங்கியிருக்கும் தங்கள் வீட்டுக்குழந்தைகள் சரியான இலக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்கும்விதமாக அவ்வப்போது பெற்றோர் மூக்கை நீட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

    இந்த மாதிரியான ஏமாற்றம் பெற்றோருக்கு ஏற்படாதிருக்க அவர்கள் செய்யவேண்டியது என்ன?

    பிள்ளைகளை தட்டிக்கொடுங்கள். அதுவரை சரியாகப் படித்தவர்களை `இந்த வகுப்பிலும் நீ உன்திறமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கொடுங்கள். ஒருபோதும் `இந்த வருஷம் மட்டும் கோட்டை விட்டுட்டா படிப்பு சாம்ராஜ்யமே சரிந்து விடும்’ என்கிற மாதிரி பயமுறுத்தாதீர்கள். ரொம்பவும் கடினப்படுத்தும் பாடத்துக்கு அவசியப்பட்டால் திறமையான ஆசிரியர் வைத்து சிறப்புப்பயிற்சி கொடுங்கள்.

    பிள்ளைகளுக்கு படிப்பு விஷயத்தில் எல்லாமே செய்து விட்டோம். இனி படிப்பது அவர்கள் கடமை என்று எண்ணி நீங்கள் சீரியல் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. முக்கிய பரீட்சை நாட்களிலாவது உங்கள் நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டும். பாடத்தில் பிள்ளைகள் கேட்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் அளவுக்கு நீங்கள் கற்ற கல்வி உதவும் என்றால், அதையும் தயங்காமல் செய்யுங்கள்.

    நம் கல்வி முயற்சியில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் என்று பிள்ளைகள்உணர்ந்தாலே அவர்கள் படிப்பில் இன்னும் அதிக அக்கறையாகி விடுவார்கள். `நம்மை நேசிக்கும் பெற்றோருக்காவது நாம் சிறப்பான வெற்றியை பெற்றாக வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களிடம் நிலைவரப் பெற்று எப்படியாவது சாதிக்கத் தூண்டும். இந்த நிலை நீடிக்கும்போது ஆண்டுத் தேர்வு அவர்களை கல்வியில் சாதித்தவர்களாகவும் வெளிப்படுத்தும்.

    அன்பான அணுகுமுறைக்கு எப்போதுமே பலன் நிச்சயம்.
    ×