என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94493"
சிதம்பரம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு கோவையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை செயலாளர் சுப்பராயன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி. மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறர்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் பட்டதாரிகளே. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Mutharasan
பெங்களூரு:
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை எதிர்த்து டுவிட்டரில் அடிக்கடி கருத்து வெளியிட்டு வந்தார்.
தனது நெருங்கிய தோழியான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா அரசை மிக கடுமையாக சாடினார்.
பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல தனிக் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. அப்போது எல்லாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறி வந்தார்.
ஆனால் திடீரென்று கடந்த 1-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், விரைவில் தொகுதி பற்றி அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார். அடுத்த சில தினங்களில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அவர், முடிவு செய்துள்ளார்.
அதில், பொதுமக்களின் பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு அதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என்பதை தெரிவிக்க அவர், திட்டமிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதியிலும் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிய பிரகாஷ் ராஜ் முடிவு செய்தார்.
ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க அவர் முடிவு செய்தார். அதன்படி, 8 தொகுதிகளுக்கும், 8 ஆட்டோக்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிய திட்டமிட்டார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி பெங்களூரு எம்.ஜி.ரோடு, மகாத்மா காந்தி சிலை அருகே நடைபெற்றது. அப்போது இதுபற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-
அரசியல்வாதிகளை விட நிபுணர்களை விட சாதாரண மக்களுக்குதான் நாட்டின் பிரச்சினைகள் பற்றி தெளிவாக தெரியும். எனவே அவர்களை நேரில் சந்திப்பதன் மூலம் பிரச்சினைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
அதன் மூலம் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும். அதற்காகவே பொது மக்களை சந்திக்க இந்த ஆட்டோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் இந்த சுற்றுப் பயணம் நடைபெறும். அதன் மூலம் பொது மக்களிடமிருந்து அவர்களது பிரச்சினைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு சி.வி. ராமன் நகர் பகுதியில் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜ், ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க பயணமானார். அவரது ஆட்டோவை பெண் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.
பெங்களூரு மத்திய தொகுதி கன்னடர்களை விட தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. கணிசமாக தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர். முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.
இந்த தொகுதிக்குள் காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், சி.வி.ராமன் நகர், சர்வக்ஞ நகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், மகாதேவபுரா ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் முதல் 5 தொகுதிகள் தமிழர்கள் நிறைந்து இருக்கும் தொகுதிகள்.
சிவாஜிநகர் மற்றும் சர்வக்ஞநகர் தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். இதில் பல சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். டுவிட்டரில் அரசியல் பேசி வந்த பிரகாஷ்ராஜ் இந்த தொகுதியில் வெல்வது சவால் தான்.
இதுபற்றி பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில் விளக்கி உள்ளார். “பெங்களூரு மத்திய தொகுதியை ஒரு மினி இந்தியா என கூற முடியும். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இந்துக்கள், கன்னட மொழியினர், தமிழர்கள், மலையாளி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.
அவர்கள் என்னை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சமூக பிரச்சினைகளில் எனது நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 21-வது கிறிஸ்துமஸ் விழா அருமனையில் நேற்று நடந்தது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விழாவில் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அவர், விழாவில் பேசியதாவது:-
அருமனை கிறிஸ்துமஸ் விழா, மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு இங்கு நடந்த விழாவில் பங்கேற்றபோது ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடந்தது. அப்போது அம்மாவின் உண்மையான தொண்டர்கள், எனக்கு ஆதரவு தருவார்கள் என்றும், இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன் என்றும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். அது உண்மையில் நடந்தது.
இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்ற என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செய்யும்.
கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். மாற்றம் இங்கிருந்து வரவேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன் வர வேண்டும்.
மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. இங்கு மதசகிப்புத்தன்மை, சகோதரத்துவம் உள்ளது. இதனை துண்டாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சிலர் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வருகிற புத்தாண்டில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என்று கூறுகிறார்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தின் நலனில் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் இதனை நாம் கண் கூடாக பார்க்கிறோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அண்ணா கூறினார். அதனை செயல்படுத்தினால் தமிழகம் முன்னேறும். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
கரூர் அருகே தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த, பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் இதுவரை சந்தித்திராத புயலாக கஜா புயல் இருக்கிறது. சுனாமி வந்தபோது உயிர்சேதம் அதிகமாக இருந்தது. ஆனால் கஜா புயலால் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நாங்கள் குழுவிடம் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும் கஜா புயலை ஒரு பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
வருகிற 11-ந்தேதி கூட இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க.வை சேர்ந்த 50 எம்.பி.க்களும் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது போல கஜா புயலுக்கும் நிவாரணம் கேட்டு குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Thambithurai
பாட்னா:
உலகில் பல நாடுகளில் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.
அதேபோல் இந்தியாவிலும் பாராளுமன்றத்துடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதோடு சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக மத்திய தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் ஏற்கனவே ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் கூறியதாவது:-
ஒரே நேரத்தில் பாராளுமன்றம்- சட்டசபை தேர்தல் நடத்துவது சிறப்பான ஒன்று. ஆனால், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை.
ஏனென்றால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக விரிவாக ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அதற்கு போதிய காலம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பீகாரில் முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் நடத்தினால் மாநில கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டு விடும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கூறியுள்ளது.
பீகாரில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
ஆனால், தொகுதி பங்கீடு சம்பந்தமாக இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்குவதாக பாரதிய ஜனதா கூறுவதால் ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, கூட்டணியில் சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழக வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆலோசனை வழங்கினார். சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
எப்போதும் நான் சாதாரண பழனிசாமி தான். இதே நிலையில் தான் இருப்பேன். குழந்தைகளுக்கு ஊட்ட சத்து கொடுப்பது போல நலிவுற்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
ஆனால் இந்த திட்டத்தை தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று அறிவுரை கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?.
ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சியை உடைக்க ஆட்சியை கலைக்க எத்தனையோ? போராட்டங்களை நடத்தினர். இனி இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தி.மு.க.வினரே பேச தொடங்கி விட்டனர்.
நான் மட்டுமென்ன நிம்மதியாகவா? இருக்கிறேன்.முதல்வர் பதவியை விட்டு எப்போது வேண்டுமானாலும் விலக தயார். முதல்வர் கனவு காண்பவர்கள் முறையாக மக்களை சந்தித்து தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் பதவிக்கு வரட்டும். அதிக இளைஞர்கள் கொண்ட அ.தி.மு.க. வலிமையாக உள்ளது.
வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு 625 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 60 வார்டுகளிலும் கூட்டம் நடத்தி வளர்ச்சி பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
என் சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுத்து நெடுஞ்சாலையில் முறைகேடு நடந்ததாக கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் ராமலிங்கம் அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒரே நாளில் 8 ஒப்பந்தம் வழங்கப்பட்டது. துரைமுருகன், கருணாநிதி ஆகியோர் சேர்ந்து சிங்கிள் சிஸ்டம் முறையில் 294 ஒப்பந்தங்களை வழங்கினர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்.
மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது.
நிறைய விஷயம் தி.மு.க. பற்றி சொல்ல வேண்டியுள்ளது. சூழ்நிலை சரியில்லை என்பதால் தி.மு.க.வை விமர்சிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வினர் மனிதாபிமானம் கொண்டவர்கள்.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 முதல் 4 மணி மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.
தமிழகம் முழுவதும் 40 சாலைகளை 4 வழிச்சாலைகளாக அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.
சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பின்னர் முதல் முறையாகவும், தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு 2-வது முறையாகவும் மாநகர் மாவட்ட அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., சக்திவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலையில் இரு புறங்களிலும் நின்று நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மேலும் தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்