என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94519"
சென்னை:
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியை விட்டு இறங்கியதும் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 18-ந் தேதி அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அப்போது 122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டனர்.
அதன்பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியும்- எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றானது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன்பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்த காரணங்களால் 4 தொகுதிகள் காலியானது.
இப்போதை நிலவரப்படி தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் (சபாநாயகர் நீங்கலாக).
தி.மு.க.வுக்கு 88 எம்.எல். ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் கடந்த ஒரு ஆண்டாக டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனுடன் இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் நம்ப முடியாத நிலை உள்ளதால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அ.தி.மு.க. அரசு தற்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
இதற்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுக்கும் விளக்கம் திருப்தி இல்லை என்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.
22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி நீடிக்கும்.
இந்த சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 231 ஆகும். அப்போது பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். இதை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயித்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. #dinakaran #edappadipalanisamy #3mlas
கள்ளக்குறிச்சி:
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று கொடுத்தனர்.
அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.
சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.
எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக தான் செயல்படுகிறேன்.
நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ.வாக நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.
கடந்த சட்டசபை தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளேன். எந்த காலகட்டத்திலும் தி.மு.க.வுடனோ மற்றவர்களுடனோ எந்தவித தொடர்பும் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்று சொன்னார்கள். அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.
ஜெயலலிதாவை பாதுகாத்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்று இயங்கிய போது கூட நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து பதிவு செய்துள்ளார்கள். அதிலே நான் உறுப்பினராக கூட இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கொறடா சபாநாயகரை சந்தித்து ஏதோ ஒரு கடிதம் அனுப்புவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன கடிதம் வருகிறது என்று தெரியவில்லை. வந்ததற்குப் பிறகு அதில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது, என தெரிந்துகொண்டு அதற்கான பதிலை சபாநாயகரை நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.
அ.தி.மு.க.விற்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலா தலைமையில் அம்மா அணி இயங்கிய போது எடுத்த போட்டோக்கள் அவர்களிடம் இருக்கலாம். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசலாம். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #kalaiselvanmla #admk #prabhumla
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. வுடன் தேர்தல் கூட்டணி அமைந்தது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில் 17-வது மக்களவை தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதால் வருகின்ற மே 19-ந் தேதி மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து சபாநாயகரை சந்தித்து இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிகழ்வு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் கவர்னரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரை பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர்களை எச்சரித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் முதல்-அமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் சபாநாயகர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
நாகர்கோவிலில் இன்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் ஜனநாயக கடமை ஆற்ற உரிமை உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஒரே இடத்தில் பலரது பெயர்கள் விடுபட்டதை த.மா.கா. ஏற்கவில்லை. இதுபற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது.
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிகாரி ஒருவர் சென்று வந்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு எதிர் கட்சிகளே காரணம். இப்போது உள்ளாட்சி தேர்தலை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. தொடரும்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் 39 பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்தேன். அப்போது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்.
வட இந்தியாவிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவர்களின் தேர்தல் அறிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரம் காங்கிரசின் தேர்தல் அறிக்கை செயற்கை தனமாக உள்ளது. எனவே அதனை மக்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும். மக்களின் குறைபாடுகளை எந்த கட்சியாலும் 100 சதவீதம் தீர்க்க முடியாது. ஆனால் இப்போது ஆட்சி செய்தவர்கள் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். அந்த பணிகள் காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. அவர் அமோக வெற்றி பெறுவார்.
பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம்.
குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்றி பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், நிர்வாகிகள் ராஜமகாலிங்கம், டாக்டர் சிவக்குமார், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #TamilMaanilacongress #GKVasan #ADMK #CivicPolls
திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க. சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினருக்கு பண பலம் மட்டுமே உள்ளது. மக்கள் ஆதரவு இல்லை.
பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது.
ஒரு தொகுதிக்கு அவர்கள் ரூ.500 கோடி செலவு செய்வதாக தெரிகிறது. ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலோடு அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.
முதல்வர் பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதிய தலைமையை மக்கள் தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. அதனால் தான் அந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டவில்லை.
தி.மு.க. தொண்டர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது.
நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
மே 1-ந் தேதி - சூலூர் தொகுதி. மே 5-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 6-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 7-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 11-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 12-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 13-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 14-ந் தேதி - சூலூர் தொகுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
இந்தநிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தபோது, பெரும்பான்மை என்னிடம் (சசிகலாவிடம்) இருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பெரும்பான்மையை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது. முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொண்டது.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளை சட்டவிரோதமாக மாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதனையும் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொண்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்த எங்கள் புகார்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை. டெல்லி ஐகோர்ட்டும் மேற்கண்ட அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தையும் தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.
எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala
மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. காட்பாடியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் பண விநியோகம் குறித்து பேசியுள்ளனர்.
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ கோவி. சம்பத்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். தனது பேச்சை மிமிக்ரி செய்து போட்டுள்ளனர். அ.தி.மு.க. சாதனைக்கு ஓட்டு கிடைக்கும். பணம் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
ராமநாதபுரம்:
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் ஊடகங்கள் தி.மு.க. கூட்டணி தான் அதிக இடத்தை கைப்பற்றும் என போலி கருத்து கணிப்புகள் நடத்தி அந்த கணிப்புகளை திணித்து மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என ஸ்டாலின் எண்ணினார்.
மக்களின் இதயங்களில் யாருக்கு இடமுண்டு என்பதை கருத்து கணிப்புகளால் கணித்துவிட முடியாது.
மக்களின் இதயங்களில் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போலி கருத்து கணிப்புகள் நடத்தினாலும் அம்மாவின் அன்பு பிள்ளைகளாக திகழும் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கணிப்புக்கும், திணிப்புக்கும் இங்கு வேலையில்லை.
முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து களப்பணி ஆற்றி அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனர்.
டி.டி.வி.தினகரனும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கூட்டு சேர்த்துக் கொண்டு போலி கருத்து கணிப்புகளை நடத்த சில ஊடகங்களை விலை பேசியுள்ளனர். இவர்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப தயாராகவில்லை. மே 23-ந்தேதி கருத்து திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ராமநாதபுரம் பாராளுமன்ற கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கும் வாக்களித்த மக்களுக்கும், என்னுடன் இரவு பகல் பாராமல் கண்விழித்து களப்பணியாற்றிய அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermanikandan #mkstalin #dinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்