search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    ராமேசுவரம்– ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என சாயல்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறினார். #premalatha #admk #dmdk
    சாயல்குடி:

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாயல்குடி மும்முனை சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

    நமது கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றி உறுதியாகிவிட்டது. வெற்றியினை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். ராமேசுவரம்–ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும். கடற்கரை சாலை வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். தி.மு.க. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் சேர விடாமல் செய்தவற்கு பல வழிகளை கையாண்டது.

    முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது. 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் தான் இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு தே.மு.தி.க. உறுதுணையாக நிற்கும். வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் பெறப்போவது உறுதி.

    தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான் தமிழகத்தினை மின் மிகை மாநிலமாக மாற்றியது. இலங்கை படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்த தி.மு.க. வை அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் புறக்கணித்து அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். #premalatha #admk #dmdk
    கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #edappadipalaniswami
    குன்னூர்:

    நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் நிரந்தர பிரதமராக மோடி வர வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போதே தி.மு.க. அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

    அம்மா ஆட்சி தான் உங்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. பெண்களுக்கு மிகவும் முக்கியமாக பாதுகாப்பு அளிக்கும் ஆட்சியாக உள்ளது.

    இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஆ. ராசா நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் 2ஜி வழக்கில் சிறை சென்றவர். கடந்த 2009-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட போது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. வழக்கு சம்பந்தமாக அவர் கோர்ட்டுக்கு செல்லவே நேரம் சரியாக இருந்தது. அவர் ஊழல் பெருச்சாளி. அவர் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் மீது இன்னும் வழக்கு உள்ளது. அவர் மீண்டும் சிறைக்கு செல்வார். அவருக்கு ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள். அவர் இங்கு நின்று என்ன செய்ய போகிறார். மக்களை காக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. கருணாநிதி இருக்கும் வரை மு.க. ஸ்டாலின் செயல் தலைவராகதான் இருந்தார். அவரால் தலைவராக முடியவில்லை. கருணாநிதி உயிர் பிரிந்த பிறகுதான் மு.க. ஸ்டாலின் தலைவராகி உள்ளார்.

    2ஆண்டு காலமாக கருணாநிதியை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே சிறைவைத்து விட்டு அதன் பின் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

    கொடநாடு கொலையாளிகளுக்கு உதவி செய்தவர் மு.க. ஸ்டாலின். சிறைக்கு சென்று வந்த கொலையாளிகளுக்கு உதவியவர் மு.க. ஸ்டாலின். அவர் எங்களை பார்த்து தவறாக சொல்லி வருகிறார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

    கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்.

    குன்னூர் மக்களின் தேவைக்காக 3-ம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு மக்கள் தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. குன்னூர் டேன்டீ தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    குன்னூர் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அம்மா உயிருடன் இருந்த போது நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனித்து தன்னுடைய சொந்த தொகுதி போல் கருதி பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்து அனைத்து திட்டங்களையும் செய்து முடிக்க உத்தரவிட்டார். தற்போது அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து நீலகிரி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நானும் ஆணையிட்டு உள்ளேன்.

    குன்னூர் பஸ்நிலையம் பகுதியில் லெவல் கிராஸ் மேம்பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. செக்‌ஷன் 17-ல் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதாக தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனை நம்ப வேண்டாம். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் இந்த பகுதியை சேர்ந்தவர். அவரிடம் குறைகளை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். இதற்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #edappadipalaniswami
    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், பூந்தமல்லி பெரிய ஏரி சீரமைக்கப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் க பாண்டியராஜன், இரா.மணிமாறன்,ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித்அகமத், கே.எஸ்.ரவிசந்திரன், பூவை.எம்.ஞானம்,டி.தேவேந்திரன், கே.ஹரிகுமார், சி.சார்லஸ், அந்தமான் முருகன், பூவை.எஸ்.கோபிநாத், பூவை.எச்.சாபி, சல்மான் ஜாவித் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்குசேகரித்தனர். #LokSabhaElections2019

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார். #LokSabhaElections2019

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

    பி.வி.களத்தூர், ஆனூர், காட்டூர், கருமாரப்பாக்கம் கிராமங்களில் வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பொது மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் விஜயரங்கன், ஒன்றிய பொருளாளர் அரிதாஸ், பா.ம.க மாவட்டசெயலாளர் காரணை ராதா, தேமுதிக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    சிவகங்கை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா, மானாமதுரை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் நீங்கள் தான் எஜமானர்கள். யார் நல்லது செய்தார்கள் என்று எண்ணிப்பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. 10 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். தமிழகத்துக்கு ஏதாவது செய்தது உண்டா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. நல்ல திட்டங்களை கொண்டு வந்தது உண்டா? மத்தியில் 9 தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்படி இருந்தும் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்? தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரியாக சென்றது. அதில் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தது உண்டா?

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது.

    ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி 40 ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை. இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா கூறினார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் அதனை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.



    அம்மா தான் சட்ட போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றி தந்தார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த தேர்தலுடன் அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த இயக்கத்தை 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இது தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 27 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்து அம்மா கொடுத்த இயக்கத்தை வழி நடத்தி 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக உயர்த்தினார். இது யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டை. எப்படி காணாமல் போகும். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக இருந்து தாங்கி பிடித்திருக்கிறார்கள். புயல், பூகம்பம், சுனாமி என எது வந்தாலும் அசைக்க முடியாது. தி.மு.க. என்றாலே வன்முறை தான். கடைக்கு போய் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கணுமா, இல்லையா? தி.மு.க.வினர் பிரியாணி கடையில் போய் சாப்பிட்டு விட்டு பணமும் கொடுக்காமல், ஊழியர்களையும் உரிமையாளரையும் தாக்கி அடித்து உதைக்கிறார்கள். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை தாக்கி இருக்கிறார்கள். செல்போன் கடைக்கு சென்று தாக்கி இருக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதே இப்படி ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

    எனவே மக்களுக்கு நல்லது செய்ய தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், மத்தியில் நாட்டை பாதுகாப்பாக வைக்க பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகவும், அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று வடசேரியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #admk #opanneerselvam #mkstalin

    நாகர்கோவில்:

    துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

    நாகர்கோவில் வடசேரியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் யாரும் இதுவரை செய்யாத பல வளர்ச்சித்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர். பின்னர் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அதனை அரசிதழில் வெளியிட மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை அரசிதழில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதா.

    இதேபோல் அவரது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, பெண்களுக்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தேவையை அறிந்து சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவாக பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். அவரை நீங்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மேலும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவார்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தரமாக பேச வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் தரமில்லாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. தேர்தலுக்கு பின்னர் காணாமல் போகும் என்று கூறுகிறார். யார் காணாமல் போவார்கள் என்பதை பார்க்கலாம்.

    அ.தி.மு.க. ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய ஆலமரம். இது தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. இந்த ஆலமரத்தை சுனாமியோ, புயலோ, பூகம்பமோ அழிக்க முடியாது. உங்கள் தந்தையாலே (கருணாநிதி) அழிக்க முடியவில்லை. நீங்களா அ.தி.மு.க.வை அழிக்கப் போகிறீர்கள்? ஒரு போதும் முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வரை மின்வெட்டு இல்லை. மாறாக மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மத்திய மந்திரியாகி மேலும் பல நல்லதிட்டங்களை செயல்படுத்த உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். #admk #opanneerselvam #mkstalin

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் பேசியுள்ளார். #premalatha #admk #parliamentelection

    களக்காடு:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு களக்காடு, பாளை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். களக்காட்டில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    ‘எங்கள் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. இளைஞர்கள் கூட்டணி, தொழிலாளர்கள் கூட்டணி, நான் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து விட்டு தற்போது களக்காடு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு தாருங்கள்.

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வகையில் அமோக வெற்றியை தர வேண்டும். நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நச்சு நீர் கலக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் தாமிரபரணியை மீட்டெடுப்போம். களக்காட்டில் மூடப்பட்டுள்ள பொது மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்துவோம். பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி வரியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம். 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    பிரேமலதா பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் விஜயகாந்த் எப்படி உள்ளார்? என்று நலம் விசாரித்தார். அதற்கு பிரேமலதா கேப்டன் நலமுடன் உள்ளார். சூப்பராக உள்ளார். உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார் என்று மைக்கிலேயே பதில் அளித்தார்.

    பிரேமலதா வருகையை முன்னிட்டு மாலை 6.30 மணி முதலே பொதுமக்கள் களக்காடு அண்ணாசாலையில் குவிய தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சிலை பழைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் திரும்பி சென்றன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

    இதன்பிறகு நெல்லை வந்த பிரேமலதா பாளையங்கோட்டை மார்க்கெட் திடல் ஆகிய பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இந்த கூட்டணியை அமைக்க விடாமல் தி.மு.க. எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தது. ஆனால் முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நமது கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வருவார். நலத் திட்ட பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #premalatha #admk #parliamentelection 

    எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். #LoksabhaElections2019 #EdappadiPalaniswami

    திண்டுக்கல்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பி துரையை ஆதரித்து வேடசந்தூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பதவியில் இருக்கும் போது விவசாயிகளைப் பற்றி நினைத்தது கிடையாது. காவிரி நதி நீர் பங்கீட்டிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழக உரிமையை நிலை நாட்டினார்.

    தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் சிதம்பரம் பதவியில் இருந்தபோது நமது மாநிலத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தே வந்தார்.

    தேர்தல் சமயங்களில் மட்டும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு கேட்க வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் நின்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு தொகுதியில் நிற்கின்றனர்.


     

    பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு அருகதை கிடையாது. இவர்களாலேயே பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பிரியாணி உள்பட அனைத்து கடைகளுக்குள்ளும் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளர்களை தாக்குகின்றனர்.

    மறுநாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு நீர் மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் குரலாக கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். அதன் பின்னர் வறட்சி மாவட்டங்கள், ஏரி-குளங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் தி.மு.க. இந்த ரூபாயை கொடுப்பதற்கு தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோதும் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை கேட்டுப் பெறவில்லை.

    ஆனால் தம்பிதுரை அனுபவம் வாய்ந்தவர். மீண்டும் உங்களிடம் குறைகளை கேட்க வந்துள்ளார். குஜிலியம்பாறை தனி தாலுகாவாக மாற்றப்பட்டது. அங்கு தீயணைப்பு நிலையம் செயல்பட உள்ளது. வேடசந்தூர், வடமதுரையில் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LoksabhaElections2019 #edappadipalanisamy

    சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. - பா.ஜனதாவும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #bjp #admk

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் பாராளு மன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பா.ஜனதா வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

    அதற்கு காரணம் நான் பா.ஜனதா, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.

    திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.

    அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார்.

    விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?

    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.  #thirumavalavan #bjp #admk

    விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #ADMK #TNFarmers
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இன்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அம்மாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதுபோல இப்போது நாங்களும் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம்.

    உலக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது அ.தி.மு.க. அரசு. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். நானும் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். விவசாயிகள் வாழ்வு செழிக்க இந்த அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். சாத்தையாறு அணை மராமத்து பணிக்கு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்.


    முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகிறது. அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. 2 படகுகளில் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஒரு படகுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளனர்.

    அணைக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #ADMK #TNFarmers
    முதலமைச்சர் பற்றி தவறாக விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது. #ADMK #DMK #MKStalin
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேச்சையாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு பிரசாரம் செய்துவரும் டி.டி.வி.தினகரனை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நட்சத்திர பேச்சாளராக கருத முடியாது. ஆனால் அவர்கள் அ.ம.மு.க. கட்சியாக தங்களை விளம்பரப்படுத்தி துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் செய்தும், கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். இதற்கான செலவுகளை அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதுபற்றிய விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், 3-ந் தேதி திருப்பூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மீது பொய் குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இது இந்த இரண்டு துறைகளையும் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும். எனவே மு.க.ஸ்டாலின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வங்கிகளில் 5 பவுன் வரை விவசாயிகள் அடமானம் வைத்து பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைத்து வேளாண்மை கடன் பெற தமிழகத்தில் சட்டம் இல்லை. இது தெரிந்தும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதால், அவர் தவறான வாக்குறுதிகளை அளித்ததாக கருதி அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதத்திலும் சமூக வலைத்தளங்களில் பொய்பிரசாரம் செய்கிறது. உரிய நடவடிக்கை எடுப்பதோடு அந்த பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    கோடநாடு கொலை வழக்கோடு முதல்-அமைச்சரையும் சம்பந்தப்படுத்தி, அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் முடிந்துவிட்டதாக கூறி மீண்டும் அதுபற்றி பேசி வருகிறார். ஆனால் அந்த வழக்கின் சாட்சி விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. வக்கீல் எம்.வேணுகோபால் கொடுத்த புகாரில், “4-ந் தேதியன்று கோவையில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மிகக்கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். சென்னையில் வருமான வரித் துறையின் சோதனைக்கு உள்ளான சபேசன் என்பவருடன் அமைச்சரை இணைத்து பேசினார்.

    இதனால் வாக்காளர்கள் மத்தியில் அமைச்சரை பற்றிய தவறான எண்ணம் உருவாகக் கூடும். எனவே, தேர்தல் ஆணையம் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin
    சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #admk

    வாணியம்பாடி:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கருணாநிதியின் ஆட்சி காலத்திலேயே கர்நாடகாவில் 4 அணைகள் கட்டப்பட்டன. அதற்கு உரிய அனுமதியை அவர் அளித்ததால் தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து குறைந்துவிட்டது.

    அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சட்ட போராட்டம் மூலமாக காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்று தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்று அதை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார்.

    இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடினார். அப்போதைய மத்திய அரசிடம் பேசி போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. அதில் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்தனர். இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரில் 4 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதையெல்லாம் மறந்து விட்டு அப்போதைய மத்தியஅரசு குழுவுடன் இணைந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த குழுவினர் ராஜபக்சேவை சந்தித்து பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவித்தார்.

    ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், சேர்ந்து தமிழகத்தை தீவைத்து கொளுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையில் நாங்கள் தீ வைக்கவில்லை. மாமா, மச்சான் சண்டையில் பத்திரிகை அலுவலகத்தை தீவைத்து கொளுத்தியது அவர்கள்தான்.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு என நடத்தப்பட்ட அராஜகங்களை பொதுமக்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

    ஓட்டல்களில் சென்று சாப்பிட்டால் கூட பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் காசுகொடுக்காமல் அடித்து நொறுக்குவது அவர்களுடைய வழக்கம். இதற்காகவே பல ஓட்டல்களில் தற்போது சாப்பிடுவதற்கு முன்பு டோக்கன் வாங்கும் முறையை கொண்டு வந்துவிட்டனர்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா வளர்த்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூறும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க ஆட்சி தொடரும். இது பெரிய ஆலமரம். எந்த புயலுக்கும் அசையாது.தொண்டர்கள் இயக்கமான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    முதல் அமைச்சராக வர வேண்டுமென ஆசைப்படும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தபோது மணல் நகரும் தன்மை கொண்டது. அதனால் இந்த திட்டத்தால் பிரயோஜனம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டுவிட்டார்கள். கடலில் போட்டார்களா அல்லது வேறு யாரிடமாவது போட்டார்களா என்பது தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர். அது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது.

    சிறுபான்மை மக்களுக்கு பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ரம்ஜானுக்கு இலவச அரிசி, ஹஜ் பயனாளிக்கு சிறப்புநிதி , ஜெருசலேம் செல்பவர் களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் விட்டு கொடுப்பவன் கெட்டுபோவ தில்லை. என்று ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெறும். இந்த தொகுதியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் எம்.பி உடன் இருந்தவர் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×