search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். #Thirunavukkarasar #BJP

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.

    நேரடியாக நடக்காத வி‌ஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP

    அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைப்பதாக தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #BJP #ADMK
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் நகரச் செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணா பிறந்த ஊரில் அவர் பல்வேறு கட்டுரைகள் எழுதி தி.மு.க. வினை வளர்த்த இடத்தில் அவருடைய சிலையும், அவரது அன்பிற்கு என்றும் பாத்திரமாக இருந்து கழகத்தினை கட்டிக் காத்த கலைஞர் சிலையையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று வருகின்றது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வரும் அவர்களுடைய சதியினை தகர்த்தெறிய வேண்டும். நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தினை மீட்டு அனைவரது கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார் மோடி. ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. மோடியின் அனைத்து வாக்குறுதியும் பொய்.

    ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். வெளிநாட்டு பெரு நிறுவனம் தனியார் துறைகளிடம் அத்திட்டம் தாரை வார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் 21 சதவீதம் உலக முதலீடு குறைந்துள்ளது என மத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. ஜி.எஸ்.டி. வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை.

    பாராளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலையும் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்துங்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். நீதி மன்றம் எச்சரித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 21 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டும் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பின் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நான் அதனை உதவாக்கரை பட்ஜெட் என சொன்னேன். அந்த வார்த்தையினை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

    ஆனால் ஓ.பி.எஸ். பதில் அளித்து பேசும்போது எதிர்கட்சித் தலைவர் பட்ஜெட்டினை உதவாக்கரை பட்ஜெட் எனக் கூறுகிறார் என பேசி அந்த வார்த்தையினை அவைக் குறிப்பிலே ஏறுவதற்கு வழி செய்து விட்டு மேலும் எதிர்கட்சித் தலைவர் கருப்புக் கண்ணாடி அணிந்து வெறுப்புக் கண்ணோடு பார்க்கின்றார் எனத் தெரிவிக்கின்றார்.

    நானாவது சில சமயங்களில் கருப்புக் கண்ணாடி மட்டுமே அணிகின்றேன். ஆனால் ஓ.பி.எஸ். கருப்பு உள்ளத்தோடு உள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறி அவரின் சமாதியில் சபதம் செய்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மர்மம் கண்டு பிடிக்கப்படும்.

    தமிழகத்தை ஆள்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். சிறிய கட்சிகள் கூட பா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.க்கள், சி.வி.எம்.பி. எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மற்றும் சி.வி.எம்.அ.சேகரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், தசரதன், சுகுமார், ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #BJP #ADMK
    அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று இன்றுடன் 2-ம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி தலைமை செயலகத்தில் சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பதவி ஏற்று இன்றுடன் 2-ம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி தலைமை செயலகத்தில் சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அம்மா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.2000.

    தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத் தொகை.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்தது, புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடி நிவாரணப் பணிகள், 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் என எண்ணற்ற மக்கள் நலத்திட்டப்பணிகளை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

    இதில் ஒட்டுமொத்த செயல்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு இந்தியா டுடே பத்திரிகையின் நான்கு விருதுகள், நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்தமைக்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள்.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, பெங்களூரைச் சேர்ந்த பொது விவகார மையம் என்ற அமைப்பு சார்பில் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆளுமையில் இரண்டாமிடம்.

    பொது விநியோகத்திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கியதற்காக விருது, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள்.



    “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது என பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ள அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையிலான அரசு பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் “சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு” என்ற இரண்டாண்டு சாதனை மலர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, முதல்- அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், முதல்-அமைச்சரின் பொன் மொழிகள் ஆகியவற்றினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்பட குறுந்தகட்டினை வெளியிட, அதை செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார்.

    காலப்பேழை புத்தகத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அனைவரும் இரண்டாண்டு சாதனைகளின் குறும்படத்தினை பார்வையிட்டார்கள்.

    நிகழ்ச்சியில், செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நன்றி கூறினார்.

    செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்கள் எஸ்.பி.எழிலழகன் ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. #ParliamentElection #ADMK #BJP
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி அமைகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா நெருக்கம் காட்டி வந்தது. அ.தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்டபோது அரசுக்கு பல்வேறு வகையில் பா.ஜனதா பக்க பலமாக செயல்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா ஆயத்தமான போது தமிழக மூத்த அமைச்சர்கள் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து ரகசியமாக பேச்சு நடத்தினார்கள்.

    அவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி ஏற்படும் என தகவல் வெளியானது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வந்தனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா அதிக இடங்களை கேட்டது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா 12 தொகுதிகள் கேட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இதற்கும் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

    ஒற்றை இலக்க எண்ணில்தான் சீட் தர முடியும். அதுவும் நாங்கள் தரும் தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்வதற்காக பா.ஜனதா மேலிட பிரதிநிதியான மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று இரவு 8.40மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்தது.



    பின்னர் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பியூஷ் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாகவும், எங்கள் கூட்டணி வலிமையானதாக இருக்கும், இங்கு பெறும் வெற்றி மோடி அரசாங்கத்துக்கு வலு சேர்க்க கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    அதன் பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயல் காரில் புறப்பட்டு நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் மகாலிங்கம் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவர் முன்னிலையில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே அதிகாரப்பூர்வமான முறையில் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 1 மணி வரை 3 மணி நேரம் நீடித்தது.

    இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் 1 மணி நேரம் நடந்தது. அ.தி.மு.க.வின் கருத்துக்களும், விருப்பங்களும் மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதை கவனமாக கேட்டார். பின்னர் அவர் பா.ஜனதாவின் விருப்பத்தையும், பிரதமர் மோடி சொன்ன தகவல்களையும் அ.தி.மு.க.வினரிடம் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா தரப்பில் முதலில் 12 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்னர் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது. இறுதியாக 8 தொகுதிகள் வரை கொடுக்க அ.தி.மு.க. முன் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா தரப்பில் தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய 10 தொகுதிகளை பா.ஜனதா கேட்டதாகவும், இதில் தென்சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய தொகுதிகளை தர அ.தி.மு.க. மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை. தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் நேற்றைய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.



    இதனால் இறுதியாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு நடத்தி விரைவில் தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னை வருகிறார். அவரும் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்துகிறார்.

    அதன்பிறகு நாளை மத்திய மந்திரி பியூஷ்கோயல் மீண்டும் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார்.

    இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. குழுவுடன் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

    தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி உடன்பாடு மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரி பியூஷ்கோயல் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேசி முடிவு செய்வோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இதற்காக பல கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையே புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, “அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #ParliamentElection #ADMK #BJP 
    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 4-ந்தேதி முதல் தலைமை கழகத்தில் பெறப்பட்டு வந்தது. இதில் 10-ந்தேதி வரை 1200-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் செய்வதற்கு அதிகம் பேர் முன்வந்ததால் விருப்ப மனுபெறும் தேதி 14-ந் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஏராளமான கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை 5 மணி வரை மனுக்களை பெற்றுபூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கினார்கள். மொத்தம் 1,737 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மத்திய சென்னை தொகுதியில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    இவர் மத்திய சென்னைக்கு உட்பட்ட அண்ணாநகரில் வசித்து வருவதால் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
    இதேபோல் தம்பிதுரையும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    கரூர் தொகுதியில் இப்போது எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. பாராளுமன்ற துணை சபாநாயகரான இவர் பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பா.ஜனதா கட்சியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    எனவே அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஏற்பட்டால் தம்பிதுரைக்கு கரூர் தொகுதி மீண்டும் கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ராஜேந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

    மைத்ரேயன் எம்.பி. தென்சென்னை, மத்திய சென்னைக்கும், டி.ஜி.வெங்கடேஷ்பாபு வட சென்னையிலும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் 4500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு வாங்கி இருந்தனர். இதில் பலர் ஜெயலலிதா பெயரில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    அவர் மறைந்த பிறகு நடைபெறும் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை 1,737 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இது ஜெயலலிதா இருந்தபோது வாங்கிய விண்ணப்பங்களை விட 3 மடங்கு குறைவாகும். #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அந்தியூரில் நடந்த மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    அந்தியூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    அந்தியூரில் திறந்த வேனில் நின்றபடி டி.டி.வி.தினகரன் பேசியபோது எடுத்த படம்.

    தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் நாம் கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் தங்களுடைய குறைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை அழைத்து பேசாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மிரட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை அரசு கண்டு கொள்வதில்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தையில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #MinisterVijayaBhaskar
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கட்சி 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனு வாங்கி வந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.

    மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அத்துடன் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். #ADMK #MinisterVijayaBhaskar
    வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தேர்தலுக்காக என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
    பழனி:

    நடிகர் மன்சூர் அலிகான் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல, ராணுவ ஆட்சி. மக்களின் குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கான உதவி அல்ல. வருகிற தேர்தலில் ஓட்டுக்கான பணம். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக்குற்றச்சாட்டு உள்ளது.

    அம்பானி, அதானிக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்கள், ஆனால் விவசாயக்கடன் தள்ளுபடி இல்லை. தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் தற்போது கூட்டணி குறித்து பேசி வருகின்றன. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அது தேர்தல் வரைக்கும் மட்டுமே.

    அதன்பின்னர் தேனிலவு போன்று கூட்டணியை கலைத்து விடுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் ஏன் தனியாக நிற்க கூடாது?. நாங்கள் வருகிற தேர்தலை தனியாக நின்று சந்திப்போம். தில்லு இருந்தால் அவர்கள் தனியாக நிற்கட்டும். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் ஆண்ட கட்சிகள் என கூறுபவர்களிடம் உள்ள மக்கள் பணத்தை பிடுங்கி, தமிழக அரசின் கடனை அடைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார். #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பேசிய வைகோ கூறியதாவது:-

    தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தேர்தல் பணிக்குழு நியமனம் நடைபெற்று வருகிறது. 70 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தி.மு.க., அ.தி.மு.க. வை அடுத்து ராணுவ கட்டுப் பாட்டுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாராளுமன்றத்திற்கு முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.

    கூட்டாட்சி தத்துவத்தை மோடி மதிப்பதில்லை. பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விதி விலக்காக கூட்டாட்சி தத்துவத்தையும், மதசார்பற்ற தன்மையும் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவர் வாஜ்பாய். மோடி அப்படி செயல்படவில்லை. அவர் தமிழர்களுக்கு ஏராளமான கெடுதல் செய்துள்ளார். பதவி ஏற்ற போதே ராஜபக்சையை அழைத்து முதுகில் குத்தினார்.

    காவிரி பிரச்சினையில் மேகதாது அணை கட்ட மறைமுக ஆதரவு அளித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தஞ்சை பகுதி விவசாய நிலங்களை பாலை வனமாக்க முயன்றார்.

    கஜா புயலின் போது நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை பூங்கா ஆகிய வற்றின் மூலம் தமிழர்களுக்கு கெடுதல்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே தான் மோடி வரும் போது கருப்புக் கொடி காட்டுகிறோம்.

    என்னை அடிப்பதோ, கொல்வதோ கஷ்டமல்ல. இந்த ஆட்சியில் எத்தனையோ கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே அரசு நிகழ்ச்சிக்கு வரும் போது மட்டுமே மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். இப்போது நாங்கள் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். கலைஞர் நினைவோடு இருக்கும் போதே அவரிடம் வாக்கு கொடுத்து விட்டேன்.

    அதன்படி மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன். ஸ்டெர்லைட் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இது மக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வர வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் கூலிப்படையாக இந்த அரசு செயல்படுகிறது.

    மத்திய அரசின் கைப் பாவையாக செயல்பட்டு மக்கள் நலனை புறம் தள்ளும் அ.தி.மு.க. தோற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும்.

    இந்த ஜனநாயக விரோத குற்றத்தை தேர்தல் ஆணையம் செய்யாது என கருதுகிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசு பணம் கொடுத்து விட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அ.தி.மு.க., பா.ஜனதாவை தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். 2004-ல் நடந்தது போன்று 2019-ல் நடைபெறும்.


    காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா வந்திருப்பதன் மூலம் வட மாநிலங்களில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுகிறது. எனவே வட மாநிலங்களிலும் பா.ஜனதா படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு 125 இடங்களுக்கு மேல் கிடைக்காது. காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்.

    புதுவையில் கவர்னருக்கு எதிரான முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நியாயமானது. கவர்னர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என்று தினகரன் கூறியுள்ளார். #dinakaran #parliamentelection #admk #mkstalin

    சத்தியமங்கலம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?

    விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம்.

    பட்ஜெட்டில் தூர்வார 300 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். மேட்டூர் அணை நீர் கடலில் கலந்ததுதான் மிச்சம். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ..அதையெல்லாம் இந்த அரசு ஆதரிக்கிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம்.. கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர்.


    திருவாரூர் சட்டசபை தொகுதி இடை தேர்தலில் ஒன்றிய செயலாளரை தான் அவர் போட்டியிட முடிவு செய்தார். இதனால் அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #dinakaran #parliamentelection #admk #mkstalin

    ×