search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94543"

    சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்க நேரிட்டால் வெறும் காலில் செல்ல வேண்டாம். வீடுகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ள ஆட்டு உரல், சிரட்டை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்ற வேண்டும்.
    சென்னை

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    * குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து பருக வேண்டும்.

    * வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும்.

    * கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

    * சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

    * திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * கொசுப்புழு உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறத்தில் நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.

    மழைநீரில் தெர்மாகோல் சீட் மூலம் மிதவை அமைத்து அதில் பயணம் செய்யும் மக்கள்.

    மேலும், மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருப்பின் உடனடியாக தங்கள் அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சியின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆவடி மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மழை காலமாக இருப்பதால், பொது மக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும். சூடான உணவு பொருட்களை சாப்பிடுங்கள். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செல்லவும். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்க நேரிட்டால் வெறும் காலில் செல்ல வேண்டாம். வீடுகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ள ஆட்டு உரல், சிரட்டை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப்பு பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்வோம்.
    இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். இரண்டு சுவைகளுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தவை. புற்றுநோய், முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.

    `மெலடானின்' எனும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோய்த் தடுப்பு பணியை செய்கிறது.

    பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளன. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடல் செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும்.

    புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் வழங்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியவை.

    மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் ‘அசெரோலா’ வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களை விட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லி கிராம் ‘வைட்டமின் சி’யும், குறிப்பிட்ட அளவில் ‘வைட்டமின் ஏ’யும் உள்ளது.
    நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது.
    உடல் உபாதைகளுக்கு டாக்டர் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பெரிதாக இருந்தால் அதனை இரண்டாக உடைத்து விழுங்குவதை பார்த்திருப்போம்.

    இது மிகவும் தவறான செயலாகும். மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஏனெனில் மாத்திரைகளை இரண்டாக உடைப்பதனால், சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடக் கூடும்.

    மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது. இதனை உட்கொள்வதனால் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ரத்த அழுத்தம், கை, கால் நடுக்கம் உள்ளவர்கள், ஆர்த்ரைட்டீஸ், இதயநோயாளிகள் ஆகியோர் மாத்திரைகளை உட்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும்.

    நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும்.

    மாத்திரைகளை 2-ஆக உடைத்து உட்கொண்டால், வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நமது உள்ளுறுப்புகளில் செல்லும். இதனால் நமது உடலில் வேறு சில உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.

    சில மாத்திரைகளில் ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை 2-ஆக உடைக்கிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைப்பதனாலோ மாத்திரையின் முக்கியத்தன்மை இழந்து சிதைந்துவிடும். இதையெல்லாம் நினைவில் கொள்வது நல்லது.
    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
    இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எந்த செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டால் இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்புக்குக் கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாகச் செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ‘நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளையே சாப்பிட விரும்புகிறார்கள்.

    ‘உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்துவருகிறார்கள்.. இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப்பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    இதயத்தின் முக்கிய எதிரி புகை. எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.

    தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தை பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
    உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
    ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு முக்கியமானது. இரவில் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவு ஆரோக்கியமானதாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

    முளைகட்டிய தானியங்கள், பாசிப்பயறு, நிலக்கடலை, பழங்கள் அல்லது பழச்சாறு, ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி, தோசை, சிறுதானிய பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.

    காலை உணவைத் தவிர்ப்பதால் வரும் பிரச்சினைகள்

    உடல் சோர்வு அடையும். நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல், நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால், அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும்.

    இந்த நேரத்தில் காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.

    காலை உணவின் முக்கியத்துவம்  

    உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

    குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும்போது பெரிய வித்தியாசம் தெரியாது. நாளடைவில் இது உடல்நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.

    சில உணவு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன. இது ஆரோக்கியமானதா? என மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும். காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி உள்ளது. அரசன் போன்று அனைத்து ஊட்டச்சத்துகள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும்.
    எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
    தற்போதைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் பல்வேறு காரணங்களால் மன அமைதி சீர்குலைந்து மன அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வாக இருப்பவை நார்ச்சத்து உள்ள உணவுகள். இவற்றை தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும்.

    எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    உடல் ஆரோக்கியத்திற்கு எல்லா வகையான சத்துக்களும் அவசியம். உள் உறுப்புகள் சீராக செயல்பட வேண்டுமானால், அதற்கு தேவையான சக்தியை உணவு மூலமாக பெற வேண்டும். அந்த வகையில் நார்ச்சத்து உள் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது; மலச்சிக்கலை அகற்றுகிறது.

    நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் பெறப்படுகிறது. இது முழுமையாக செரிமானம் ஆவது இல்லை. மாறாக, செரிமானத்தை துரிதப்படுத்தி உடலின் கழிவுகள் எளிதாக வெளியேற உதவுகிறது.

    பெண்களுக்கு சராசரியாக ஒரு நாளுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவைப்படும். இது கரையும் தன்மை கொண்டது மற்றும் கரையாத தன்மை கொண்டது என இரண்டு வகைப்படும். ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு ஆகிய உணவு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

    கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியவை அடங்கிய உணவுகளில் உள்ளது. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்கள், ஆப்பிள், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிபிளவர், கேரட் ஆகியவற்றில் உள்ளது. இது உணவை நல்ல முறையில் ஜீரணிக்க உதவுவதுடன், மலச்சிக்கலையும் தடுக்கிறது.

    கரையாத தன்மை கொண்ட நார்ச்சத்து வயிறு நிரம்பிய திருப்தியை உண்டாக்குகிறது. உணவை 4 முதல் 6 மணி நேரம் வரை வயிற்றில் இருக்கச் செய்வதால், பசியை தூண்டும் இன்சுலின் சுரப்பியை கட்டுப்படுத்தி, பசி உணர்வைத் தடுக்கிறது. இதன் மூலம் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க முடியும்; உடல் எடையைச் சீராக பராமரிக்க முடியும்.

    கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உப்பு, கொழுப்பு ஆகியவற்றை உறிஞ்சி, மலத்துடன் வெளியேற்றுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும். மேலும், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவதால் உடலும், மனமும் சீராக செயல்பட ஏதுவாக அமைகிறது.
    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும்.
    குழந்தைகள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களிலும், காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து உடலில் சேருவதால் எலும்புகள் வலுப்பெறும்.

    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும். பொதுவாக ஒன்று முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

    இதேபோல் 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 கிராமும், 19 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கு 1000 கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 1,300 கிராமும் கால்சியம் சத்தும் தேவையாக உள்ளது.
    வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம்.
    உடல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்காகவே பல விதமான உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ‘வீகன்' உணவு முறையும் ஒன்று.

    ‘வீகன்' என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றது போல அமையும்.

    வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.

    இந்த உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களைக் கூட தவிர்த்து விடுவார்கள். பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள்.

    ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையைக் குறைக்க  வேண்டும்? என்ன காரணத்தினால் எடை அதிகமாகி இருக்கிறது? ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருக்கிறதா? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையைப் பின்பற்றலாம்.

    ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள்,  சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது.

    சாப்பிடும் உணவில் ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவை உடல் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமானதாகும்.

    வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். அப்போது தான் உடல் எடை எளிதாக குறையும். மேலும், அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சோடா போன்றவற்றை தவிர்க்க
    வேண்டும்

    உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கொழுப்பை கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும் இந்த பழம் நிச்சயம் கைக்கொடுக்கும்.
    உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளிகொடுக்கிறது மாதுளை. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கொழுப்பை கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும் இந்த பழம் நிச்சயம் கைக்கொடுக்கும்.

    கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம். 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் பயனுள்ளது.

    வைட்டமின் சி சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும். தொடர்ந்து இந்த பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, புற்றுநோய், புராஸ்டேட் பெரிதாகுதல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் போலிக் அமிலம் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.
    பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது.
    பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக அருந்துவதால் நார்ச்சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

    மற்றும் பழரசமாக பருகும் போது கூடுதலாக சேர்க்கப்படும் சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் போன்றவை மேலும் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவை. பழரசம் பருகுவதை தவறு என்பதற்கு இது போன்ற சில தான் காரணமாக அமைகின்றன...

    கடைகளில் விற்கப்படும் பழரசங்கள் அல்லது பானங்கள், உங்களது உடலியக்கத்தை சீர்குலைக்கும் பண்புடையதாக இருக்கிறது. எனவே, கடைகளில் விற்கப்படும் பானங்கள் அல்லது செயற்கை பழரசங்களை வாங்கி பருகுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, பழங்களை அப்படியே சாப்பிடும் முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

    பெரும்பாலும் நீங்கள் கடைகளில் பழரசம் வாங்கி பருகும் போது, நீர் கலந்து தான் தருகிறார்கள். இதன் மூலம் உங்களுக்கு அந்த பழத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமலே போகும் நிலை உருவாகிறது.



    பழமாக சாப்பிடுவதை ஜீரணிக்க சிறிது நேரம் ஆகும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால், நீங்கள் பழரசமாக பருகும் போது, அது உடனடியாக உடலின் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது.

    பழமாக உட்கொள்ளாமல், பழரசமாக பருகுவதால், நார்ச்சத்து, மினரல்ஸ், வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உட்பட பல சத்துகள் உடலுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.

    அதிலும், நீங்கள் கடைகளில் வாங்கி பருகும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழரசங்கள், உண்மையில் ஃபிளேவர் சேர்க்கப்பட்ட இரசாயன நீர் தான். அதில் வேறு எந்த சத்துகளும் இருப்பது கிடையாது. எனவே, முடிந்த வரை பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. 41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

    இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.

    பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.

    * வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

    * உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.



    * ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

    * உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

    * கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.

    * உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.
    அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம்.
    என் குழந்தை பிறந்தது முதல் உடல் வளர்ச்சி சரியாக இல்லை. எங்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இல்லை. என் மகள் பூப்பெய்வது தள்ளிப் போகிறது. என்ன செய்வது? என்று பொதுமக்கள் கூறி திகைத்து நிற்கிறார்கள். சில குடும்பத் தலைவிகளோ எனக்கு உடம்பு சோர்வாக உள்ளது. எடை கூடிக்கொண்டே போகிறது. குளிர் தாங்க முடியவில்லை, பேச்சு குளறுகிறது, மாதவிடாய் தள்ளிப் போகிறது என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார்கள்.

    இன்னும் சில ஆண்களும், பெண்களும் எனக்கு சமீபத்தில் குரல் மாறிவிட்டது. பேச்சு சரியாக வரவில்லை. படுத்தால் மூச்சு திணறுகிறது. முன் கழுத்தில் கட்டி உள்ளது. அது வளர்ந்து வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல பெண்கள் எனக்கு அடிக்கடி வியர்க்கிறது. நெஞ்சு துடிப்பு அதிகமாக உள்ளது. அடிக்கடி கோபப்படுகிறேன். கோபத்தை அடக்க முடியவில்லை. வயிற்றுப்போக்கு போகிறது, உடல் எடை குறைந்துவிட்டது இதற்கு தீர்வு என்ன? என்று கவலையுடன் கூறினர்.

    இந்தக் குரல் உலகின் எல்லா நாடுகளிலும் சாதி, மத, இனம் கடந்து பல நூறு ஆண்டுகளாக ஒலித்து வந்தது. மருத்துவ உலகம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற பல்வேறு விதமான நோய்கள் இருக்கின்றன என கண்டறிந்து கூறியது. தைராய்டு சுரப்பி நோய்களால் உலகளவில் 150 மில்லியன் மக்களும் இந்திய அளவில் 13 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவரை அணுகுவதில் அதிகமான கால தாமதம் ஏற்பட்டு நோய் பாதிப்பும் கடுமையாக உள்ளது என தெரிவித்தது.

    மேலும் பிறவியிலேயே தைராய்டு செயல்பாடு குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை பாதிக்கப்படும் என தெரிவித்தது. தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரப்பிகள் வகையைச் சேர்ந்தது பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி கணையத்தில் உள்ள வீட்டா லாங்கர்ஹன் சுரப்பி முதலியவை இந்த வகைகளை சேர்ந்தவை. இவற்றின் சுரப்புகள் ஒரு நாளத்தின் துணையில்லாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து தங்கள் பணியைச் செய்வதால் இவற்றிக்கு நாளமில்லா சுரப்பிகள் என பெயர் வந்தது.

    பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பி சரியாக இயங்குகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் தாயின் முகம் பார்க்க வேண்டும். 5 முதல் 6-வது மாதத்தில் தலை ஆட்டம் நிற்க வேண்டும். 8-வது மாதத்தில் தவழ்ந்து, 1 வயதில் நடை பயில தொடங்கி, சின்ன சின்ன வார்த்தைகள் பேசத் தொடங்கினால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்கிறது எனலாம். இதில் காலதாமதம் ஏற்பட்டால் தைராய்டு சுரப்பியில் கோளாறு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

    தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் கீழ்ப்பகுதியில் சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சி வடிவில் உள்ளது. இதில் சுரக்கும் தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உணவில் உள்ள சத்துகளை சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரித்து நாம் வேலை செய்ய தேவையான சக்தியை வழங்குகிறது. இந்த தைராக்ஸின் ஹார்மோன் தயாரிக்க அயோடின் சத்து மிக மிக அவசியமானது. இது நாம் வசிக்கும் மண்ணிலிருந்து நாம் உண்ணும் உணவு, காய்கறிகள், பால், மீன், தண்ணீர் மூலம் அயோடின் உப்பாக உடம்பிற்கு கிடைக்கிறது.



    தைராய்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் 5 வகைப்படும். அவை, தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தல் முன்கழுத்து கழலை தைராய்டைட்டிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் வியாதி தைராய்டு கேன்சர்.

    இதில் முன் கழுத்து கழலை அதிகமாக பூப்பெய்தும் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளைப் பாதிக்கிறது. காரணம் அந்த வயதில் அதிகமாக தேவைப்படும் அளவு அயோடின் சத்து உடலுக்கு கிடைக்காமல் போவதாகும். தைராய்டு நோய்களில் இது தான் அதிகமானவர்களை பாதிக்கிறது. தைராய்டைட்டிஸ் நோய் தைராய்டு திசுக்களுக்கு எதிராக நமது உடம்பில் சில சுரப்புகள் சுரந்து அவற்றை அழிப்பதால் ஏற்படுகிறது.

    தைராய்டு வேலைத்திறன் குறைவு நோய் அயோடின் சத்து குறைவு மற்றும் தைராக்ஸினுக்கு எதிரான ஆன்டிபாடிஸ் நம் ரத்தத்தில் இருப்பதால் ஏற்படுகிறது. பிறவியிலேயே அயோடின் சத்து குறைவான தாயாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இவை தவிர தைராய்டு சுரப்பியில் புற்று நோய்களும் ஏற்படுகின்றன. அது மனிதனுக்கு ஏற்படும் மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதம் அளவில் உள்ளது.

    இவை அனைத்திலும் முன் கழுத்து கழலை நோயின் தாக்கம் தான் இந்தியாவில் அதிகம். எனவே அதை தடுக்கும் நோக்கில் இந்திய அரசு சமையல் உணவில் அயோடின் உப்புகளை குறிப்பிட்ட அளவில் கலந்து மக்களுக்கு வழங்க சட்டமியற்றியுள்ளது. இதனால் இந்தியாவில் முன் கழுத்து கழலை அதிகமாக இருந்த உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன் கழுத்து கழலை 1,000 பேருக்கு 100 பேர் என்கின்ற நிலை மாறி ஆயிரத்திற்கு 18 பேர் என்ற நிலையை அடைந்துள்ளது.

    மழை மறைவு பிரதேசம் மற்றும் மலை அடிவாரங்களில் வாழும் மக்களுக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் அயோடின் கலந்த உப்பு மிக மிக அவசியம். தைராய்டு வியாதியை தடுக்க உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் வாரம் மூன்று முறை உணவில் கடல் மீன்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அயோடின் சத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திரவ வடிவில் இருக்கும் அயோடின் உப்பை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் தைராய்டு நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

    அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம். எனவே பொதுமக்களிடம் தைராய்டு நோய்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கருதி அமெரிக்க தைராய்டு சங்கம் மற்றும் ஐரோப்பிய தைராய்டு அசோசியேஷன் இரண்டும் இணைந்து 2008-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முதல் ஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் எல்லா நாடுகளிலும் விழிப்புணர்வு நாளாக கொண்டாட அறிவுறுத்தியது. நமது நாட்டிலும் உலக தைராய்டு தினம் மே 25-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் தைராய்டு நோய்கள் தடுப்பு முறைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி நோயற்ற வாழ்வு வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது தலையாய கடமை.

    டாக்டர் வி.எஸ்.சுரேந்திரன்,
    உதவி தலைவர்,
    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.
    ×