search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-


    மதிப்பிற்குரிய பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்தங்கியுள்ளது.
    ராஞ்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், மீண்டும் மோடி பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிய நிலவரப்படி, மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    ஹசாரிபாக் தொகுதியில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா 1,16,819 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சாகுவை விட முன்னிலை பெற்றிருந்தார்.



    லோகர்தகா தொகுதியில் மத்திய இணை மந்திரியும் பாஜக வேட்பாளருமான சுதர்சன் பகத், காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவ் பகத்தை விட 5852 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். முன்னாள் முதலமைச்சர்கள் சிபு சோரன், பாபுலால் மராண்டி ஆகியோர் தும்கா மற்றும் கோடர்மா தொகுதிகளில் பின்தங்கினர்.

    மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான அர்ஜுன் முண்டா, குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பின்தங்கினார். பாஜக எம்பியும் மாநில பாஜக தலைவருமான லட்சுமண் கிலுவா, சிங்பம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா கோடாவைவிட 44962 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.
    மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.



    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.

    கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பா.ஜனதா இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.

    42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டன.

    அந்த முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே 7 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 நிறுவனங்கள் சார்பில் கருத்து கணிப்புகள் வெளியானது. அவை அனைத்திலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த கருத்து கணிப்புகளை நம்ப இயலாது என்று கூறியிருந்தனர். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பேசி வந்தனர். எனவே கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியம் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கடந்தது.

    542 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தபோது பாரதிய ஜனதா கூட்டணி 328 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும், மாநில கட்சிகள் 108 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

    தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் இதே ரீதியில்தான் சரியாக இருந்தன.


    அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.
    புதுடெல்லி:

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.

    இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    அதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது. இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது.



    மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.

    இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.

    இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.

    அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

    நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.



    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.

    ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. பா.ஜனதா கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா பிடிக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார்கள்.

    சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே கவுதம் காம்பீர் முன்னிலை பெற்றார். இன்று மதியம் நிலவரப்படி கவுதம் காம்பீர் காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங்கைவிட 18 ஆயிரத்து 632 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி ஹர்‌ஷவர்தன் 8 ஆயிரத்து 764 வாக்குகள், புதுடெல்லியில் தற்போது எம்.பி.யான மீனாட்சிலேகி காங்கிரஸ் வேட்பாளர் அஜர் மக்கானைவிட 10 ஆயிரத்து 486 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் மனோஜ் திவாரி 29 ஆயிரத்து 797 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    தெற்கு டெல்லி தொகுதியில் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சதாவை விட 30 ஆயிரத்து 755 ஓட்டு பெற்று இருந்தார்.

    மேற்கு டெல்லியில் பர்வேஷ் வர்மா 87 ஆயிரத்து 297 ஓட்டும், வடமேற்கு டெல்லி தொகுதியில் ஹனஸ்ராஜ்ஹான்ஸ் 86 ஆயிரத்து 518 வாக்கும் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.



    முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலாதீட்சித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஷீலா தீட்சித்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் திவாரி 89 ஆயிரத்து 218 ஓட்டுகள் முன்னிலையில் வெற்றி முகத்தில் உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.

    இந்த தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியங்கா போட்டியிடவில்லை.

    காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டார். ஆனால் மோடிக்கு இவர்கள் யாரும் வலுவான சவாலை ஏற்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலின்போது சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தடவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டனர்.

    அதற்கேற்ப வாரணாசி தொகுதி முழுக்க பா.ஜனதா தீவிர பிரசாரம் நடத்தியது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

    மதியம் 12 மணி அளவில் சில சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தன. அப்போதே பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.

    எனவே அவர் இந்த தடவையும் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.

    7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.



    ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.

    ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

    2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.

    கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

    தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.

    அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.

    அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.

    எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.

    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.

    இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    ×