என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.
ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-
நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.
நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.
நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.
பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-
ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.
* 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.
* விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.
* விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
* சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.
* உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.
* ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.
* கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
* நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
* பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.
* பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
* மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.
* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.
* பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.
* குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
* அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.
* 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.
* நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
* நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.
* மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.
* நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.
* அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
* பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி தற்போது பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது சுவாமி ஐயப்பன் பெயரையோ அல்லது வழி பாட்டுத்தலங்களை குறிப்பிட்டோ பிரசாரம் செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சுரேஷ்கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.
தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எனக்கு கலெக்டர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 74 சிறப்பு அம்சங்கள் உள்ளன.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும்.
கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #BJPManifesto
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். #LokSabhaElections2019 #BJPManifesto
நெல்லை:
தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து கீழப்பாவூர், ஆலங்குளம், பேட்டை, நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி பகுதியில் பிரசாரம் செய்தார்.
நெல்லை டவுனில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசும் போது கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கோபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது. மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை ஏற்றியது.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்த ஒரே காரணத்தால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்தது. அந்த அரசுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது.
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால் தான் நாங்கள் அதை துரோகிகள் கூட்டணி என்று சொல்கிறோம். இந்த தேர்தலில் துரோகிகளின் கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய முற்போக்கு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் நாங்கள் அந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இதேபோல் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? அவர் சொல்லமாட்டார். ஏனென்றால், தி.மு.க. பதவி, ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.
பா.ஜ.க. மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள நினைக்கிறார்கள். அமைதி பூங்காவான நமது நாட்டுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #BJP #TTVDhinakaran
மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.
இவ்வாறு கமல்நாத் கூறினார்.
இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.
‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்