என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நீதிபதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர்ராஜூ ஆலோசனைகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இதனை எதிர்க்கட்சிகள் பார்த்து அச்சம் கொள்கிறது. இன்னும் சில கட்சிகள் நம் அணிக்கு வர உள்ளது. நாம்தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.
மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள். எனவே வெற்றியுடன் பிறந்த இயக்கம் அ.தி.மு.க.வுக்கு இனி ஒருபோதும் தோல்வி கிடையாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைப்பதில் அம்மாவின் செயல்பாட்டை காண்பித்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே தோல்வி பயம் வந்து விட்டது. நாம் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற உழைக்க வேண்டும். நமது தேர்தல் பணி மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் எப்படியாவது பொய்யை கூறி இந்த அரசை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நிறைவேறாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அம்மாவின் ஆட்சியை, கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே அம்மாவின் இலட்சிய பணி இன்னும் 100 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நிரந்தர சேவை செய்யும்.
அந்த வகையில் தான் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. நம்பி வந்தவர்களை வாழ வைக்கும் இயக்கம். இந்த இயக்கம் நம்பியவர்களை கைவிட்டது இல்லை. ம.தி.மு.க., தே.மு. தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஜெயலலிதா. அதனை மறந்து விடக்கூடாது.
எனவே அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், மதுரை புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்திரநாத் குமார், நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் தவசி, பூமாராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #Peacenotpossible #ifterrorismcontinues #Peaceintheworld #Modi
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பி துரை, ரத்தினவேல் எம்.பி., மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் கன்னிவடுகப்பட்டியில் மு.தம்பிதுரை எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் இந்த கூட்டணி அமைத்ததற்கு காரணம் தி.மு.க.-காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது.
2004-ல் பா.ஜ.க., 2009ல்பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தோம். அதுபோலத்தான் காலத்திற்கேற்ப கூட்டணி மாறும். நம் இனத்தையே அழித்த காங்கிரஸ்- தி.மு.க. வரக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்.
தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது. மீண்டும் மோடி ஆட்சி தான் வர இருக்கின்றது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #Thambidurai #DMK #Congress
சென்னை:
மத்திய அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.
ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது.
மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார்.
மாங்கா சேகர், தரமணி கோபி, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர், விருகை ராமசந்திரன், சைதை முத்தமிழ், கிண்டி லோகநாதன், கோபால் சுந்தரம், ஆதிநாராயணன், இஸ்மாயில்
அடையார் துரை, சாந்தி, மலர்கொடி, மகேஷ்வரி, மயிலை நாராயணன், திருவான்மியூர் சீத்தாராமன், காலனி சரவணன், ராயப்பேட்டை ஆரிப், சைதை கோகுல், சைதை சசிகுமார், பி.டி.சி. ஏழுமலை, நொச்சிக்குப்பம் பாண்டியன், மயிலை தாமஸ், அப்பு ஜெயபால், சீனிவாசபுரம் ரகுகுமார், வக்கீல்கள் சித்தார்த்தன், மயிலை பாலு, மீனா வெங் கட்ராமன், சுசீலா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, கோட்டூர் ஜான்சன், விக் னேஷ்வரன்,
திருவான்மியூர் கதிரேசன், பழனி, சீத்தாராமன், தரமணி சீனு,, அடையார் மாதவன், தங்கராஜ், பட்டினபாக்கம் பன்னீர் செல்வம், கவுரிசங்கர், தங்கம், விஜி, சிவகுமார், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #PChidambaram #pmk #admk #congress
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து இருப்பதை தலைவர்கள் விரும்பலாம். மக்கள் விரும்ப மாட்டார்கள். மோடி அரசு சரி இல்லை என்று 4 நாட்களுக்கு முன்பு வரை தம்பித்துரை விமர்சனம் செய்து வந்தார்.
நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அ.தி.மு.க. அரசை பா.ஜனதா தான் இயக்குகிறது என்று. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க. வெறும் சிப்பாய் தான். மத்தியில் என்ன சொன்னார்களோ அதைத் தான் எடப்பாடி அரசு செய்து வந்தது.
இப்போது எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வுக்கு பூஜியத்துக்கு கீழ்தான் மதிப்பு கொடுக்க முடியும் என்றார். சூடு, சொரணை இல்லாதவர்கள் தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பார்கள் என்று அன்புமணி சொன்னார். இப்போது எதுவும் இல்லாமல் கூட்டணி வைத்து, விருந்தும் வைக்கிறார்கள்.
முரண்பட்ட இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது. அதனால் தான் பா.ம.க.வை விட குறைவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.
கோட்டா கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. எப்படியாவது தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.
முன்பு தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்றேன். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் எங்குமே தாமரை மலரப் போவதில்லை.
தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது பற்றி தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு தலைவர் இந்த மாதிரி சூழலில் இருக்கும் போது தலைவர்கள் போய் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்க்க கூடாது.
எந்த கூட்டணியில் சேருவது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.
தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நான் போட்டியிட போவதாக இப்படித்தான் தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல் தான் இப்போதும் கிளப்பி விட்டுள்ளார்கள்.
நான் எப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதில்லை. ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.
எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார். #kushboo #vijayakanth #mkstalin #bjp
தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு பின்னால் திராவிடர் கழக தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம், 6 ஆயிரம் கொடுக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.
40க்கு 40 என அ.தி.மு.க. கூறிவருகிறது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது. ஆனால் யார் வரவேண்டும் என வெளிச்சம்போட்டு காட்டுவோம். இந்த மாநாடு சாதி, மத ஓழிப்பு குறித்த மாநாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #KVeeramani #KaliPoongundran
திருவான்மியூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. எல்லாம் நல்லது நடக்கும். கூட்டணி முடியும் நேரம் முடியும்.
தற்போது அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்து வருகிறது. இது வெற்றி கூட்டணியாக மாறும். கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே’ என்பதே எங்கள் கோஷம் ஆகும்.
விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான்.
எங்களை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
எங்களது அணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் பா.ஜனதா கட்சியை மட்டும் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.
மாநிலம் வாரியாக சென்று அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
கடந்த மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி அப்போது தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசினார். இதைத் தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) தமிழ்நாட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த 10-ந்தேதி பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அன்று அவர் திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார். அன்றைய தினம் புதிய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ந்தேதி மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து பிரதமர் பிரசாரம் செய்வார் என்று தகவல்கள் வெளியானது. பிறகு கன்னியாகுமரி கூட்டம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.
மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விடுவதாக பயண திட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பொறுப்பேற்று செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மோடி பேசும் கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.
அதுமட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எந்தெந்த கட்சி சார்பில் யார்-யார் பேசுவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 1-ந்தேதிக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அதற்குள் முடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் அதில் முடிவு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் தெரிய வரும்.
இதையடுத்து அ.தி.மு.க- பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த வேட்பாளர்களையும் காஞ்சிபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் மேடை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதமர் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. #PMModi #ADMK #BJP
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று மதுரையில் 18 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அவரிடம் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவிடம் அளிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் போட்டியிட அதிகம் வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே அவர் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவது உறுதி என்று மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று மதுரை வந்த அமித்ஷாவுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
கனிமொழியை எதிர்த்து மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை போட்டியிட வைக்க பா.ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழிசை தென் சென்னையில் போட்டியிட விரும்பினார். அவருக்கு வட சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. முன்வந்தது.
இதை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதா தொகுதி பட்டியலில் வடசென்னைக்கு பதில் மதுரை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு ஆர்.சீனிவாசனை போட்டியிட வைக்க திட்டமிட்டு தொகுதியை மாற்றித் தருமாறு அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. #kanimozhi #tamilisai #parliamentelection
தூத்துக்குடி:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை மாவட்ட தலைவர் முரளிதரன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. உடனான அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. பா.ஜ.க. பலமுறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜெயலலிதா அவர்களை தூக்கி எறிந்தார். மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றார். ஆனால் தற்போதுள்ள அ.தி.மு.க. இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
தமிழகத்தை மட்டும் அல்லாமல் புதுச்சேரியையும் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்வு கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டுக்கு தடை செய்தது, மீனவர் பிரச்சனைகள் தீர்க்காதது, தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய கஜாபுயல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு கிடைக்க கூடிய நிதியை தடுத்து நிறுத்தியது. எனவே அ.தி.மு.க. அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி.
அ.தி.மு.க.வினர் மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடியை கொண்டு வருவோம் என்று தெரிவிக்கின்றனர். அதை தான் நாங்களும் விரும்புகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும். இதன் மூலம் அ.தி.மு.க.வும் அவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்றுவிடுவார்கள்
இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் முரளிதரன், சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். #CMNarayanasamy #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்