என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"
திருச்சி:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கொளவான் கரை செல்லிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக, தனது சித்தி வீடான திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள பாண்டிதுரை மனைவி வெள்ளையம்மாள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
சம்பவத்தன்று உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிரேமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை வெங்கடாசலபுரம் கிராம சுகாதார செவிலியரின் உதவியாளர் சுசீலாதேவி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காலனி அமுதசுரபி நகரை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோருக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றதும், சுப்பிரமணியும், சகுந்தலாவும் குழந்தையை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட சுசீலாதேவி, வெள்ளையம்மாள், சுப்பிரமணி, சகுந்தலா மற்றும் சுரேஷ், பிரேமா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தியாகராஜன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீத்தாராமன், திருச்சி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்து மாணிக்கம், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் துறையூர் அருகேயுள்ள கீரம்பூர் காலனி அமுதசுரபி நகருக்கு சென்று, சகுந்தலாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.
மேலும் சகுந்தலா, சுசீலாதேவி, வெள்ளையம்மாள் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த 3 பேருக்கும் குழந்தையை விற்றதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராயபுரம்:
சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.
அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.
இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 25-ந்தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் சீனிவாஸ் என்பது தெரிந்தது.
காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியபோது தொண்டர்களை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே கத்தியால் குத்திய சீனிவாஸ் பணிபுரியும் ஓட்டலின் உரிமையாளர் அர்ஷவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல அரசு சதி செய்கிறது என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கத்திகுத்து சம்பவம் ஒரு நாடகம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி மீது நடந்த கொலை முயற்சி குறித்து ஆந்திர மாநில அரசு நடத்தும் விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் மூன்றாவது நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.
மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய். வி.சுப்பாரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள் அனில் குமார், அமர்நாத் ரெட்டி மனுவை தாக்கல் செய்தனர். #JaganmohanReddy
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சடகோபன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் பாலமுருகபாரதி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் சென்னையில் வசிக்கும் தனது அத்தை மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக பேசி வந்தனர். இதற்கிடையே திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அத்தை மகள், கடந்த 19-ந்தேதி சென்னையில் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்த சம்பவத்தால் பாலமுருகபாரதி மிகவும் மனமுடைந்து இருந்து வந்தார்.
இதையடுத்து நேற்று மாலை மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் மீது அவர் ஏறினார். பின்னர் திடீரென மாடியில் இருந்து குதித்தார்.
இதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாலமுருக பாரதியை அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பன்றிகளால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் விதிகளை மீறி பன்றி வளர்த்து வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பறையப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பகுதியில் சிலர் வீடுகளில் அடைத்து அதிக அளவு பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மர்ம காய்ச்சல் பரவுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை வேப்ப மூட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் அனிட்டா (வயது 16), இவர், நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அனிட்டா, விடுதி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது தந்தை ஜெயதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இன்று காலை வந்து மகளை அழைத்துச் செல்வதாக விடுதி காப்பாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அனிட்டாவிற்கு இன்று அதிகாலை காய்ச்சல் அதிகமானது. திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அனிட்டாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனிட்டா இறந்தது குறித்த தகவல் அவரது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அனிட்டா, பலியானது பற்றிய தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அனிட்டா பலியானது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணிகண்டன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதையடுத்து விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.
இதே போல் விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
அமெரிக்காவில் முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காக 4 மாதத்தில் செல்ல உள்ளார். வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறி இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுக்கும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். #Vijayakanth #DMDK
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital
ஆரணி நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பாலாஜி (27). திருமணமாகாத இவர், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். நேற்று, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரே பைக்கில் சென்றார். அப்போது பைக் விபத்தில் சிக்கியது.
இதில் நண்பர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக, வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பாலாஜிக்கு காயம் ஏற்படவில்லை. ஆனாலும் நண்பர்கள் காயமடைந்ததால் விபத்துக்கு பாலாஜி தான் காரணம் என்று உறவினர்கள் கடுமையாக திட்டினர்.
இதனால் மனமுடைந்த பாலாஜி இன்று அதிகாலை தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பணிநேர டாக்டர் இல்லை.
நர்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளரான பாண்டியன் ஆகியோர் பாலாஜி உடலை பரிசோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். உறவினர்களில் ஒரு வாலிபர் மருத்துவப்படிப்பு படித்தவர். அவர், நாடியை பிடித்து பார்த்து நாடிதுடிப்பு உள்ளது. உடனடியாக டாக்டரை வர சொல்லுங்கள் என்றார்.
டாக்டர் இல்லை என நர்ஸ் மற்றும் உதவியாளர் கூறியதால் உறவினர்கள் ஆத்திரமடைந்து ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், நர்ஸ் மற்றும் உதவியாளரை தாக்க முயன்றனர். இதுப்பற்றி, ஆஸ்பத்திரி தரப்பில் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதற்குள், வாலிபரின் உடலை வேறு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு வாலிபர் இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 400-க்கு மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
புறநோயாளிகள் பிரிவு முன்பு இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தம் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் பெரும்பாலானோர் அவதிபட்டனர்.
ஆஸ்பத்திரிக்கு பிரசவம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். உள் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வழக்கம்போல் செயல்பட்டது. புறநோயாளிகள் கூட்டம் வழக்கம்போல் இருந்தது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவு எந்த ஒரு பாதிப்பும் இன்றி செயல்பட்டது. #IndianMedicalAssociation #Doctorsstrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்