search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • எடப்பாடி தரப்பில் இருந்து கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதுவரை இல்லாத அளவுக்கு திணறலை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பல மைல் தொலைவுக்கு பின்னோக்கி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சாதகமாக வந்தபோது ஓ.பி.எஸ். அணி தலைவர்கள் அடுத்தகட்ட நட வடிக்கையை தீவிரப்படுத்தினார்கள். எடப்பாடி தரப்பில் இருந்து கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

    குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் ஆயிரம் பேரை வலைவீசி பிடித்து விட முயற்சிகள் நடந்தது. இதற்கிடையே 36 எம்.எல்.ஏ.க்கள், 15 மாவட்ட செயலாளர்கள் தங்கள் பக்கம் வர தயார் நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திட்டமிட்டு பரப்பினார்கள். இவை அனைத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

    ஓ.பி.எஸ். அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் பக்கம் செல்ல, சிலர் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் முதல் அவர்கள் அனைவரும் செல்போன் தொடர்புகளை துண்டித்து விட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர்.

    இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதுவரை இல்லாத அளவுக்கு திணறலை சந்திக்க தொடங்கி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டை அடுத்து அவர்கள் நம்பி இருக்கிறார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை, உரிய ஆதாரங்களுடன் முன் வைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்போதோ தயாராகி விட்டதாக சொல்கிறார்கள்.

    • டெல்லி சட்ட நிபுணர்களிடமும் கருத்துகள் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
    • நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை தயாரிக்க உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கும் பலப்பரீட்சை அடுத்த கட்டமாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு நகர உள்ளது.

    பதவி விஷயத்தில் சமரசமாக செல்லலாம் என்று முதலில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அதை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் சட்டத்தை நாடி சென்றார்.

    தற்போது தனக்கு பெரும்பாலான ஆதரவு இல்லை என்று தெரிந்ததும், பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ். தயாராகிறார். ஆனால் இதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி சட்டத்தை நாடி சென்று கொண்டிருக்கிறார். இதனால் டெல்லி சுப்ரீம் கோர்ட்டு எத்தகைய முடிவு எடுக்கும் என்பதில் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஏற்கனவே டெல்லி சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. எனவே பழைய பாணியில் மீண்டும் ஆவணங்கள் அனைத்தையும் சமர்பிக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். அந்த ஆவணங்கள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில் புதிய பாணியில் வாதாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நேற்று மாலை முதல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கினார்கள். நீண்ட நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அப்போது பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

    இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது எத்தகைய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    டெல்லி சட்ட நிபுணர்களிடமும் கருத்துகள் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை தயாரிக்க உள்ளனர். அடுத்த வாரமே மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

    டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு எப்படி வந்தாலும், தற்போது ஓ. பன்னீர்செல்வம் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவோ எதிர்க்கட்சி துணைத் தலைவராகவோ இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்கூட கிடையாது. எனவே கட்சி தேர்தலில் கூட அவர் போட்டியிட முடியாது.

    அ.தி.மு.க.வில் செய்யப்பட்டுள்ள சட்ட விதிகள் திருத்தத்தின்படி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழியவேண்டும். இதனால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையே உள்ளது.

    கோர்ட்டு தீர்ப்புகளுக்கு பிறகு தேர்தல் ஆணையம் மட்டுமே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்திட்டு இருப்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் வாதங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியானதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிகொண்டாடினார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலும் நேற்று இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான மனநிலை இருப்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    • என்னோடு துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 1.5 கோடி தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன்.

    நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.

    பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அறிவிப்புகள், முடிவுகளும் செல்லும் என்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான்.
    • அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    கோவை:

    கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியதாவது:-

    நமக்குள் இருக்கிற பிரச்சினைகளை பேசி தீர்க்கவே நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் சொல்வது தான் இறுதி தீர்ப்பு. தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    இன்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 4½ ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துவதற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஆதரவு அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    மேலும் சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உங்களை தேர்ந்தெடுத்தாரே அதற்கு நீங்கள் கொடுக்கும் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    அ.தி.மு.க.வில் 28 ஆண்டுகள் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவர் இருந்த இடத்தில் வேறு யாரும் இனி இருக்க கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    6 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டுவிட்டு, இப்பொழுது திடீரென 2 மாதத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறீர்களே இது நியாயம் தானா?

    ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் அமரமாட்டோம் என்று சொல்லியதன் காரணமாகவே சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினோம்.

    அப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்து விட்டு, நீங்கள் ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம். இது ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ்.பக்கம் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைக்கிள் வழங்கும் விழாவிற்கு வாணியம்பாடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
    • பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜி வந்து மேடைக்கு சென்று விழா நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வாணியம்பாடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். விழாவிற்கு அவர் சென்றார். அப்போது அதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜி வந்து மேடைக்கு சென்று விழா நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார் மேடை அருகே சென்றார். அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி அவசர அவசரமாக விழாவை தொடங்க சொன்னதால் செந்தில்குமார் எம்.எல்.ஏ. வெளியிலேயே நின்றிருந்தார்.

    பின்னர் மேடைக்குச் சென்று அங்கிருந்து தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் ஆகியோரிடம், தனது தொகுதியில் தேவையில்லாமல் மற்ற தொகுதி எம்.எல்.ஏ. வந்து எப்படி கலந்து கொள்ளலாம் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ. வந்து சைக்கிள் கொடுப்பது சரியா என கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சமாதானம் செய்ய முற்பட்டார்.

    இருப்பினும் அரசு நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்கு பிரச்சனை இன்றி நடப்பதற்காக நான் இங்கு இருந்து வெளியேறுகிறேன் என கூறிவிட்டு, நேரடியாக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அங்கு அமர்ந்தார்.

    அதன் பின்னர் 5 நிமிடத்தில் 111 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜி வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    தொடர்ந்து தலைமை ஆசிரியரிடமும், செந்தில்குமார் எம்.எல்.ஏ. தன்னுடைய தொகுதியில் எப்படி இதுபோன்று விழா வேறுதொகுதி எம்.எல்.ஏ. வைத்து நடத்தலாம், நான் வந்த பிறகும் வேண்டும் என்றே விழாவை தொடங்கியது சரியா என்று அதிகாரிகளிடம் கேட்டார்.

    மேலும் அதே அறையில் கிராம நிர்வாக அலுவலருக்கும் தலைமை ஆசிரியருக்கும் விழா குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அங்கு இருந்தவர்கள் சமரசம் செய்தனர்.

    சைக்கிள் வழங்கும் விழா மேடையில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதை சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
    • இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

    இதனால் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதை சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீர்ப்பை கேட்டதுமே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.

    அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார்.
    • கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்ற எடுத்துக்காட்டுதான் தற்போது வந்த நீதிமன்ற தீர்ப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இதுதான் அ.தி.மு.க.வின் அத்தியாயம்.

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். அ.தி.மு.க.வை ஜெயலலிதா. 3-வது மக்கள் இயக்கமாக மாற்றினார். எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மக்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றியாக இந்த தீர்ப்பு உள்ளது. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் மனம் குளிர கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.

    ஒரு இயக்கம் ஒரு தலைவரை தன்னிச்சையாக தருகிற ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உண்டு. எல்லாம் தெரிந்து கொண்டு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் சிலர் உள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது.
    • அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

    அதிகார போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மீண்டும் மோடி அவர்களை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமான அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது.
    • அதேநேரம், சிறப்பு பொதுக்குழுவுக்கும், வழக்கமான பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    128 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    வழக்கமான அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கட்சி விதி கூறுகிறது. அதேநேரம், சிறப்பு பொதுக்குழுவுக்கும், வழக்கமான பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுதொடர்பாக விதியிலும் கூறப்பட்டுள்ளது. அதனால், சிறப்பு பொதுக்குழு கூட்டும் போது, தனித்தனியாக நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொதுக்குழு, சிறப்பு பொதுக்குழுவானாலும் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்று விதியில் கூறவில்லை.

    அதனால், ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடப்பது குறித்து, ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவிலேயே அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பையே முறையான அறிவிப்பாக கருதிக் கொள்ளலாம். நோட்டீஸ் என்பது குறிப்பிட்ட தகவலை தெரிவிப்பது தான். அதை எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று கூற முடியாது.

    நோட்டீசுக்கு பல வடிவங்கள் உள்ளன. அப்படியே நடைமுறை முறைகேடு இருப்பதாக கருதினாலும், அதை பொதுக்குழுவில் சரி செய்து கொள்ளலாம்.

    சிறப்பு பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்கும்போது கருதி இருந்தால், அப்படி ஒரு விதியை முன்பே கொண்டு வந்து இருப்பார்கள். இந்த சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக் கையின் படி கூட்டப் பட்டதால், மீண்டும் நோட்டீஸ் கொடுக்க வேண் டிய அவசியம் இல்லை.

    சிறப்பு பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல் குறித்த விளக்கத்தை ஜூலை 1-ந்தேதியே அறிவித்துள்ளது. சிறப்பு பொதுக்குழுவை கூட்ட 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள், கையெழுத்திட்டு அவை தலைவரிடம் கொடுத்துள்ளனர்.

    பொதுக்குழு கூட்டுவதற்கு அவை தலைவர் கண்டிப்பாக வேண்டும். அவை தலைவர் இல்லாமல் கூட்டத்தை கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே விரிசல் இருந்ததால், சிறப்பு பொதுக்குழு கூட்டும்படி 2,190 உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் வெளியிட்ட அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் இருக்கும்போது, தான் 2,500 உறுப்பினர்கள் இருக்கும்போதுதான் வெளியிடப்பட்டது. அதனால், பொதுக்குழு அறிவிப்பு எங்களுக்கு தெரியாது என்று கூறமுடியாது. 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    ஆனால், இந்த இருவருக்கு இடையே உள்ள சர்ச்சையால் இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்ட முடியாத நிலை இருந்தது. அப்படி ஒரு நிலை இருக்கும்போது, இருவரும் சேர்ந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

    எனவே இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட உத்தரவிட முடியாது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அ.தி.மு.க.வின் செயல்பாட்டை முடக்கி விடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தார்.

    எனவே ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதா என்பதை பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர்.

    சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    • தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
    • நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை காலை 10.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

    • கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தினுள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 47 பேர் காயம் அடைந்தனர்.

    பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ந்தேதி 'சீல்' அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அ.தி.மு.க. அலுவலகத்தில் காணாமல் போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தார்.

    இதையடுத்து சி.வி. சண்முகம் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கணினிகள், கட்சியின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று ஆதாரங்களை வழங்கினார்.

    இந்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் ஆகஸ்டு 13-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன.

    இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. தொடங்கி உள்ளது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    மேலும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்த குமார் ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வழக்கில் அனைவருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள். அதேபோல கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மோதலில் ஈடுபட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை போட்டு பார்த்து போலீசார் ஆட்களை அடையாளம் கண்டு வருகிறார்கள்.

    எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கும் அ.தி.மு.க.வினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×