என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95081"
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
வாக்கு என்ற கூர்மையான ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். ஊழல் நிறைந்த சூழலை சுத்தப்படுத்துங்கள். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். நாங்களும் வராவிட்டால் குப்பை கூடிவிடும். தெருவானது குப்பைத் தொட்டியாக மாறிவிடும்.
நான் தாமதமாக வந்தாலும் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்காகவே வாழ்வேன். என் பணம் புகழ் அனைத்துக்கும் நீங்கள்தான் பங்காளிகள். உங்கள் பணத்தில்தான் கஜானா நிரம்புகிறது என்பதை மறவாதீர்கள். பெருமுதலாளிகள் கோடீஸ்வரர்கள் வரி கட்டுவது கிடையாது.
அவர்கள் கஜானாவை காலி செய்வதும், அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது. உங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுக்க நான் வரவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன்.
நான் தமிழகத்தை சொர்க்கமாக மாற்ற வழி தேடுகிறேன். இது நான் சாவதுக்கு முன் நடக்க வேண்டும்.
பதவி நிரந்தரம் இல்லை. அதே போல உயிரும் நிரந்தரம் இல்லை. அனைவரும் ஓட்டு போட வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் எனக்கான கூட்டம் என நம்புகிறேன். இந்த கூட்டம் தமிழகத்தை சீர்திருத்த போதாது. இன்னும் பெருமளவு கூட வேண்டும்.
ஓட்டுக்காக பணம் வாங்காதீர்கள். நேர்மையாக இருந்தால் ஓட்டு போடுங்கள். உங்கள் உதவி இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கழிவு நீர் சாக்கடை கலந்துள்ளது. நாம் சாப்பிடும் தட்டில் சாக்கடை உள்ளது. அதை சுத்தப்படுத்த அரசு தவறிவிட்டது. அதில் நமது தவறு உள்ளது. ஆறு ஓட வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். செய்யாமல் விட்டதை பட்டியலிட்டு செய்து விட்டாலே நாடு முன்னேறும்.
ஆறும், நீரும் பெருக வேண்டும். தாகம், பஞ்சம் பெருகக்கூடாது. அதனால்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஓட்டுக்கு கொடுக்கும் பணம் உங்கள் பணம். உங்கள் பையில் இருந்து எடுத்துதான் கொடுக்கிறார்கள்.
நான் தமிழகம் முழுவதும் ‘சேஞ்ச்’ வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதனை சில்லறை என நினைத்து விடாதீர்கள். தலைவரை தேடாதீர்கள். நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும். மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவது நான் என்பதை விட நாம் என்பதை நம்புங்கள்.
மாற்றத்தை உரு வாக்க நினைக்கும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குங்கள். நான் சினிமாவில் சுமாராக நடிப்பேன். எனக்கு ஏதேனும் வேலை கிடைக்கும். ஆனால் நான் உங்களுக்காக வந்துள்ளேன். உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய என்னால் ஆனதை செய்கிறேன். நான் உயிரை தரவில்லை. உழைப்பையும், என் உணர்வையும், எனது நேர்மையையும் தருகிறேன். அதுவே எனது கடமை. உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் பலத்தை காட்டுங்கள். அவ்வாறு செய்தால் எந்த கோட்டையிலும் ஏறிவிடலாம்.
பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு சட்டம் கொண்டு வந்தது. அதனை நாம்தான் செயல்படுத்தி உள்ளோம். அதனால் விழிப்புடன் இருங்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள். நாங்கள் உங்களுக்கு பிடித்தது போல மாறுவது எங்களது கடமை ஆகும்.
தமிழ் நாட்டில் முன்பு ஊழல் என்பது அதிக அளவுக்கு கிடையாது. வடமாநிலத்தவர்களை நாம் பார்த்து கேலி செய்தோம். ஆனால் இன்று பீகாரில் இருப்பவர்கள் நம்மை பார்த்து கேலி செய்கிறார்கள். அதனால் தமிழகத்தை மீண்டும் சொர்க்கமாக மாற்ற வேண்டும். உங்கள் நலன்தான் கொள்கை. அதனை கூறமுடியாது. செய்து காட்டினால்தான் புரியும். நம் கொள்கையை சொல்லுங்கள் எனக் கூறுகிறார்கள். சொல்லி விட்டால் காப்பி அடித்து விடுகிறார்கள்.
கிராமசபை கூட்டம் தான் நம் பலம் என கூறினேன். ஆனால் அதனையும் காப்பி அடித்து விட்டார்கள். காப்பியடித்து என் வாலில் நெருப்பு வைக்காதீர்கள். அது உங்கள் கோட்டையை எரித்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan #makkalneethimaiyam
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வைஷ்ணவ கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியதன் விபரம்:
நான் இங்கு வந்தது பொது நலத்திற்காக. நாளைய தமிழகம் எங்கே இருக்கிறது என்று சிலர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் எனக்கு தெரிகிறது நாளைய தமிழகம் இங்கே என்று. புதிய அரசியலை உருவாக்கும் கூட்டம் இது என்று நம்புகிறேன். நான் உங்களை போன்ற வயதில் பேசி இருந்தால் கிராமங்கள் இந்நேரம் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறி இருக்கும். அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல. அது கடமை.
உங்கள் பிள்ளைகள் அற்புதமான தமிழ்நாட்டில் வலம் வர வேண்டும் அதற்கான விதையை நீங்கள் விதைக்க வேண்டும். பல்வேறு சாதனைகள் செய்ய முடியும் உங்களால் தமிழகத்திற்கு கை கொடுத்து தூக்கி விட முடியாதா? நாம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டால் கோழைகளின் ராணுவம் பயந்து நடுங்கும்.
அரசியல் என் கடமை என் வேலை அல்ல. நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல. அரசியலில் வந்து சேவை செய்ய வேண்டியது அல்ல. அது கடமை. சம்பளம் வாங்கிக்கொண்டு மேலும் சுரண்டினால் அது திருட்டு. திருடனுக்கு அளவுகோல் இல்லை.
இங்கிருந்து தான் அரசியல் தொடங்கவேண்டும். நேர்மையான அரசியல் வேண்டும் என்று நினைப் பவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாங்கள் தத்தெடுக்கும் கிராமத்தில் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க உள்ளோம். அந்த வேலை முடிந்தவுடன் நானே அதை சுத்தம் செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தவரை அரசியலுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
ஒரு கண்ணை அரசியலில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது இவ்வளவு அநியாயம் நடக்காது. சினிமாவிற்கு பின் என் கடமையை செய்யப்போகிறேன். சொன்னான் செய்தான் சென்றான் என்ற போது நான் எப்போதும் வாழ்ந்துக் கொண்டே இருப்பேன். திட்டம் கொள்கையை காப்பாற்றப்போராடுவது. அதை மாற்றினால் இலக்கை அடையலாம் என்றால் மாற்ற வேண்டும்.
பொய் சொல்லக்கூடாது என்பது தான் எங்கள் முதல் கொள்கை. ஊழலை பெருக்கி வெளியில் தள்ள வேண்டும். அதற்கு பெரிய ஆயுதம் வேண்டும். அந்த ஆயுதத்தை தேடித்தான் இங்கு வந்துள்ளேன். கல்லூரி மாணவர்கள் முழுவதுமாக வாக்காளர் அட்டை வைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவேண்டும். எந்த கல்லூரி முதலில் செய்து முடிக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள். ஓட்டின் முக்கியத்துவத்தை 100 பேரிடமாவது எடுத்துக்கூற வேண்டும். யாராக இருந்தாலும் யோசித்து வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. நோட்டாவில் வாக்களிப்பது பெருமை அல்ல.
நல்ல சாயல் தெரியும் போது உதவிக்கரம் நீட்டுங்கள். புதிய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் தான் என்னுடைய ஆயுதம். தமிழன் என்பது தகுதி அல்ல. முகவரி. இந்த அரங்கில் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கின்ற பல இளைஞர்களும் முதல் முறை வாக்காளர்களாக இருக்கக்கூடும். நீங்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்வதை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திட வேண்டும்.
நான் அரசியல் கட்சி துவங்கியதற்கு முக்கிய ஊக்கசக்தியே இளைஞர்கள் தான். வாக்குகளை பணம் கொடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு எதிரான ஆயுதமே இளைஞர்கள் நீங்கள் தான். இன்று வாக்காளர் தினத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு கல்லூரியில் இருக்கும் மாணவ மாணவியரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டும்.
அதை பிற கல்லூரிகளில் படிக்கும் உங்கள் சக மாணவியரிடம் பகிர்ந்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய வைத்திட வேண்டும். இதை ஒரு போட்டியாக செய்திட வேண்டுகிறேன். எந்த கல்லூரி முழுவதுமாக அனைத்து மாணவியரையும் வாக்காளர்களாக பதிவு செய்து முடித்திடுகிறார்களோ அவர்களை பாராட்டி மரியாதை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்திடும்.
இங்கு மாற்றுத் திறனாளிகள் பலர் இருக்கின்றனர். இவர்களை கருணையுடன் பார்க்க வேண்டும் என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நான் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். வியந்து தான் பார்க்கிறேன். இருப்பதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்கிறார்கள்.
இவர்களுக்கு நீங்கள் பரிதாபமோ கருணை காட்ட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்’.
இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneethimaiyam
நெல்லை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கொடநாடு பிரச்சினையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள காவல்துறையால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதன் முதலாக போராட்டம் நடத்தியது நாங்கள்தான்.
காங்கிரஸ் கட்சி குடும்ப சொத்து, இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை என கருதுகிறேன். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பொய் பேசி வருகின்றனர். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு ஓட்டுபோடுவோம் என்று யாரும் கூறவில்லை. கருத்துகளை உருவாக்குகிறார்கள்.
மாநில கட்சிகள்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமர் யார் என்று தீர்மானிப்பார்கள். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், கூட்டாட்சி தத்துவம் சிறப்படையும். ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கப்படும். மாநில கட்சிகள் அதிகாரம் பெற்று இந்தியாவை கூடி பேசி கூட்டாட்சி செய்தால்தான் சரியானதாக இருக்கும்.
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆட்சி முடிவடையும் போது நலத்திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டுகின்றனர். தேர்தல் முடிந்த உடன் ஒருமித்த கருத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.
கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வர வேற்கிறோம். ஆனால் அவர் முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். #seeman #Rajinikanth #pmmodi
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்துவ கல்லூரியில் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதன் விபரம்: -
‘நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். தமிழகம் ஒரு பெரிய சோதனையை சந்திக்க உள்ளது. அதை எதிர்கொள்ள மாணவ மாணவிகள் தயாராக இருக்க வேண்டும். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வாக்களிக்க தவறி விடக்கூடாது. மகிழ்ச்சியாக வாழ்வதில் மற்ற நாடுகளை விட நாம் பின்னோக்கி இருக்கிறோம்.
ஒரு முறை சரியாக வாக்களித்தால் மக்கள் துணிச்சலாக பேச தொடங்குவார்கள். தமிழகத்தை எந்த எந்த அரங்கில் முன்னேற்ற முடியுமோ, அங்கே எல்லாம் முன்னேற்றி செல்வேன். வாக்களிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்... அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களை வரவேற்கிறோம். நீங்கள் முன்னரே யோசித்து முடிவு செய்து வாக்களிக்க வேண்டும்...
அரசியலில் இருக்கும் குறைகளை சொல்ல இங்கே தரப்பட்டு இருக்கும் நேரம் போதாது. ஊழல் தான் பெரும் பிரச்சினை. அதற்கு மக்களும் ஒத்துழைக்கிறார்கள். அரசும், அரசாட்சியும் பக்கவாத்தியமாக தான் இருக்க வேண்டும். மக்கள் தான் முதலாளிகள்.
திருட்டை கட்டுப்படுத்த வேண்டும், தண்ணீரை அளவாக செலவழிக்க வேண்டும். வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது. வாக்குக்கு பணம் வாங்க மாட்டேன் என்று மாணவர்கள் உறுதிமொழி கூற வேண்டும். அரசு மக்கள் பணத்தை திருடுவதை நிறுத்தினால் உங்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் வந்து சேரும். இங்கே 60 சதவீதம் திருட்டு நடக்கிறது.
நல்லவர்கள் இருக்கும் அரசாங்கம் இருந்தால் நான் ஏன் வரவேண்டும்? யாரும் இல்லாததால் வருகிறேன். முன்பே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். ஏன் தாமதமாக வந்தேன் என்று தான் வருத்தப்படுகிறேன்.
வாக்குக்காக பணம் வாங்கி பயன் இல்லை. என்ன வாக்குறுதி அளிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதுபோன்ற வாக்குறுதியை மக்கள் நீதி மய்யம் அளிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். உங்கள் பணத்தை 100 மடங்காக்க மக்கள் நீதி மய்யம் செயல்படும். எங்கள் பாக்கெட்டை நிரப்பாமல் இருந்தால் தான் மக்களுக்காக செய்ய முடியும்.
என்னுடைய நோக்கம் தமிழகம் தான். டெல்லி சென்று ஜி என்கிற அடைமொழியுடன், சிலர் 2ஜியுடன் திரும்புகிறார்கள். எனக்கு 1ஜியோ, 2ஜியோ முக்கியம் இல்லை. தமிழக நலன் தான் முக்கியம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு நல்ல மாற்றம் ஏற்படும் என்றால் நிச்சயம் பங்குபெறுவேன். நாற்காலியில் சிலர் உட்கார்ந்ததும் அதை பிடித்துக்கொண்டு விடவில்லை. அதுபோல் இருக்கக்கூடாது.
கையாடல், ஊழல், பிக்பாக்கெட் அனைவருமே திருடர்கள் தான். காவேரிக்காக நிச்சயம் போராட வேண்டும். இயற்கைபடி தான் நதி ஓட வேண்டும் இது சட்டம். உலகம் நமக்காக உருவாக்கப்பட்டது என்பதை மறந்து நாம் அதில் ஒரு பங்கு என்று நினைக்க வேண்டும்.
ஓட்டிற்காக பணம் வாங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். இளைஞர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும். தமிழகம் முன்னேற இளைஞர்கள் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும். தமிழ்நாடு தக்கையாக உள்ளது. அதனை மீண்டும் முழு உருவம் பெற முதல் தலைமுறை வாக்களார்கள் இளைஞர்கள் கையில் உள்ளது’.
தனியார் கல்லூரியில் ஓவியம் வரைந்ததற்கு வந்த எதிர்ப்புகள் பற்றி மாணவி கேட்டதற்கு ‘ஓவியத்தில் என்ன வரைந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது. பேசக்கூடாதது பல உள்ளது’ என்றார்.
அதற்கு மாணவிகள் ‘நாங்கள் பேசக்கூடாததை தான் ஓவியத்தில் பேசியுள்ளோம்’ என்றனர். அதற்கு கமல் ‘எனக்கு மத நம்பிக்கை கிடையாது’ என்று பதில் அளித்தார்.
கமல் கலந்துரையாடலை முடித்த பின்னர் ஒரு மாணவி மேடையில் ஏறி கமலிடம் ‘நீங்கள் தான் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக வரவேண்டும். பாராளுமன்ற தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்’ என்றார்.
அதற்கு கமல் ‘நிச்சயமாக. எனக்கு நாட்டை விட தமிழ்நாடு தான் முக்கியம். அதற்கு நீங்கள் எல்லோரும் உறுதி அளிக்க வேண்டும்’ என்றதும் மாணவிகள் அனைவரும் உறுதியளிப்பதாக கூறினார்கள். #KamalHaasan #Parliamentelection
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி, கமல்ஹாசன் இன்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (26-ந் தேதி) கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அதிசயநத்தத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தேவனாம்பட்டினம், மந்தாரகுப்பம் மற்றும் விருத்தாசலத்தில் மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.
27-ந் தேதி கடலூர் அண்ணா நகரில் நடைபெறும் சான்றோன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிப்பாளையத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
இதில் கலந்து கொள்ள நடுப்புணி சாலையில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை ரேக்ளா மாட்டு வண்டியில் வந்தார்.
அங்கு நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பின்னர் புரவிப்பாளையம் பொது மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.
பானை பொங்கியபோது பெண்கள் குலவையிட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டார்.
விழாவில் அவர் பேசும் போது, தமிழை பயிற்றுவிப்பது ஆசிரியர்களாக இருந்தாலும் தமிழ் பேசி வாழ வைப்பது தமிழக மக்கள் தான். பறை, உருமிமேளம் ஆகியவை எனது உறவினர் போன்றது. அடுத்த பொங்கலின் போது தமிழகத்தில் மாற்றம் வரும் என்றார்.
முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சான்றோன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 பேருக்கு விருது வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-
இந்த சான்றோன் விருது கட்சி பொறுப்பாளர்கள் முன் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால், விருது பெற்ற அனைவருமே தன்னலம் இன்றி பல துறைகளில் சேவை புரிந்தவர்கள்.
எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் தன்னலம் இன்றி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் விருது பெற்றவர்களைப்போலவே பாடுபடவேண்டும் என்பதற்காகத்தான். எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போராளிகளாக இருக்கவேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி நாட்டுக்காக உழைக்கும் போராளிகளாக இருக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் வாரிசுகளாக அரசியலுக்கு வரமாட்டார்கள். பெயர் தெரியாதவர்கள்தான் கட்சியின் பொறுப்பில் வரவேண்டும் என நினைக்கிறேன்.
சாதனை என்பது சொல் அல்ல செயல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் பறக்கவேண்டும். நமது கட்சியை குறுக்கு வழியில் கொண்டு செல்லமாட்டேன்.
மக்கள் நீதி மய்யம் என்ற மரத்தை தொண்டர்கள் வளர்க்கவேண்டும். அணிலாக நாம் இவ்வளவு நாள் இருந்துவிட்டோம். வில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ளதால் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். தமிழகத்தில் சிறு, குறு தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.
அண்டை மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது. ஆகவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்