search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென பேசியிருந்தார்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

    தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், நந்தகோபால், கிரிராஜ், சேகர், மணி, சிவராமன், சந்தோஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-

    கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

    விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.

    நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.

    ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.

    அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.

    சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.

    அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.

    எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.

    இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதிய வரலாற்று ஆசிரியர் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என்று கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
    சென்னை:

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    அவரின் கருத்து இந்திய அரசியலில் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் கமல் தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

    ‘இந்து’ என்ற சொல் முகலாயர் காலத்திற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை ஆங்கிலேயர் வழிமொழிந்ததாகவும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் மதமாக பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளன. வரலாற்று உண்மையைத் தான் கமல் கூறியுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கமல் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-


    ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

    மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கும்பகோணத்தில் கமல்ஹாசன் உருவப்பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசினார். இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், இந்து ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட பலர் கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த கும்பகோணம் உதவி கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் பாலா தலைமையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திரண்ட இந்து மக்கள் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் கமல்ஹாசனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் உடனே இந்து மக்கள் கட்சி பிரமுகர் பாலா உள்பட அக்கட்சியை சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



    குமரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது மேலும் 2 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசினார்.

    இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசனுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகிறது. போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் இரணியல், வடசேரி போலீஸ் நிலையங்களில் கமல்ஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 2 போலீஸ் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    தக்கலை போலீஸ் நிலையத்தில் அகில பாரத இந்து மகாசபையின் இளைஞரணி செயலாளர் துரைராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை ஒருமையாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து வருகிறார். ஜனநாயக நாடு என்றால் எல்ல சமூகத்தினரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும். ஆனால் கமல்ஹாசன் இந்துக்களை மட்டும் தாக்கி பேசி இருப்பது இந்துக்கள் மனதை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    இதேபோல் குலசேகரம் போலீஸ் நிலையத்திலும் கமல்ஹாசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுவரை குமரி மாவட்டத்தில் 4 போலீஸ் நிலையங்களில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் அளித்துள்ளனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.
    மதுரை:

    ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.

    இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



    இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    மேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.

    எனவே அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை மறுநாள் தெரியவரும்.

    கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    சென்னை:

    கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழையப்போகிறார் என்ற வதந்தி 2013-ம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்ட போதே பரவியது.

    அப்போது பாரதிராஜாவிடம் கமல் அரசியலுக்குள் நுழைவது பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில், “கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுதாக கற்றுக்கொண்டு வருவான். தாங்கமாட்டீர்கள்...’ என்றார்.  அவர் சொன்னது இப்போது பலித்துக்கொண்டு இருக்கிறது.

    கமலின் கோட்சே பற்றிய கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் வரை சென்றும்கூட பிடிவாதமாக தான் சொன்னதை மறுக்காமல் தீவிரம் காட்டி வருகிறார்.

    நேற்று வெளியிட்ட வீடியோவிலும் கமலின் உறுதி தெரிகிறது. கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? இன்னமும் அவரை தொடரும் பா.ஜனதாவின் பி டீம் என்ற சர்ச்சை... ஆகியவற்றை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-

    ‘இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல் முறை அல்ல. அதை பல தடவை பேசியிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார்.

    வழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்சனைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.


    அரவக்குறிச்சி பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி எறிந்து விட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். வி‌ஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    கமல் பின்வாங்கும் மனிதர் கிடையாது. அவர் பேசியது தமிழ்நாட்டில் விவாதிக்க கூடிய ஒரு வி‌ஷயம் தான். கோட்சேவை திட்டிவிட்டாரே என்ற கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் இந்துக்களை சொல்லிவிட்டார் என்று இந்து பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

    எங்கள் கட்சியில் மதம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. பொதுச்செயலாளர் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி கும்பிடுபவர் தான். கமல் தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையை எங்களிடம் கூட திணித்தது இல்லை. கமல் மாற்றத்துக்கான தலைவராக உருவாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.

    கமல் கேட்கும் மற்ற கேள்விகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகள் அவர்களை உறுத்துவதால் இதை பெரிதாக்குகிறார்கள். கமல் கோட்சே பற்றி பேசிய இடத்தில் தான் ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்சனை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்சனைகளை பற்றியும் பேசினார். ஆனால் அவைகளை பற்றி யாரும் பேசவில்லை.

    கமல் மீது வன்முறையை ஏவ தூண்டுபவர்கள் அந்தந்த கட்சியில் கண் துடைப்புக்காக கண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு வருவார்கள்.

    பி டீம் என்பது எங்களால் பாதிக்கப்படும் இன்னொரு அணியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எல்லோருக்குமே எதிரானவர்கள் தான் நாங்கள். அது இந்த சர்ச்சை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

    இதுவரை வேறு எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத துணிச்சலும் நேர்மையும் எங்கள் தலைவரிடம் இருக்கிறது. எனவே எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தலும், கமலை முதல் அமைச்சர் பதவியில் அமர வைப்பதும் தான்.

    விரைவில் தமிழக ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். கமல் எப்போதும் இதே மாதிரி தான் இருப்பார். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பூசி மெழுகவோ கண்ணை மூடி சிலரை ஆதரிப்பதோ செய்ய மாட்டார்.’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ‘இந்து’ என்ற சொல் மாற்றான் கொடுத்தது என கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.



    இந்த பரபரப்புக்கு இடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...’ என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் பதிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதில் ஆக்ரோஷமாக பேசிய கமல்ஹாசன், நிறைவாக ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று கூறுகிறார்.

    இதனிடையே தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று மாலை மீண்டும் ஒரு பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை.

    நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாக பிழையான தேர்வாகும்.

    ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.



    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி பதிவு செய்து உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தார். அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை?.



    கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல். ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி கட்ட பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் ‘உங்கள் கோபத்தால் மாற்றவேண்டியதை மாற்றிக் காட்டுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ‘நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது.  இதையடுத்து என் பரப்புரை தமிழ்நாடு காணுவதற்கு விஞ்ஞானத்திற்கு நன்றி .

    என்னை நீங்கள் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கும், என்னை நீங்கள் வரவேற்ற விதத்திற்குமான நன்றி ’ என கூறும் கமல் தொடர்ந்து பேசுவதை வீடியோவில் காண...,


    கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்டு கம்யூ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    கமல்ஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு.

    ஆனால், கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும். இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கமல்ஹாசன் யாருடன் இருக்கிறார், அவர் நம்மவரா இல்லை வேறு ஒருவரா என்று சொல்ல வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன்னார்குடி ஜீயர் அளித்துள்ள பேட்டியில் காந்தியும், கோட்சேவும் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்று கூறியிருக்கிறார்.

    அவர் கூறிய இந்த செய்தியைப் படிக்கும் பொழுது என் கண்களை நானே பிடுங்கி போட நினைத்தேன். ஜீயர் காந்தியையும் கோட்சேவையும் நேர்கோட்டில் கொண்டுவந்துள்ளார். இது சரியானதல்ல. தர்மனும் துரியோதனனும் ஒன்றா? கிருஷ்ணனும் நரகாசுரனும் ஒன்றா? இவர்கள் எல்லோரும் இந்துதான். எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

    ஆனால் நல்லதையும் தீயதையும் ஒன்றாக சொல்ல முடியுமா? ஜீயரை கேள்வி கேட்கின்ற தகுதி எனக்கு கிடையாது, ஆனால் இந்த கருத்தை ஒரு அரசியல் கட்சியோ, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சபை போன்ற அமைப்புகள் சொல்லியிருக்கலாம், மன்னார்குடி ஜீயர் சொல்லி இருப்பது காலத்தின் கொடுமை. இது மிகப் பெரிய பாவம். இதை குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

    ஒரு கருத்து சொல்வதற்கு மற்றொருவர் மாற்றுக் கருத்து சொல்லலாம். ஆனால் அதற்காக வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறை யார் செய்தாலும் அது தவறுதான். காங்கிரஸ் கட்சி வன்முறைக்கு எப்போதும் துணை போகாது.

    அ.தி.மு.க.விற்கு விதிமீறல் என்பது கைவந்த கலை. விதிமீறல் அ.தி.மு.க.வின் தாரக மந்திரம். வேறு எந்த கட்சியாவது விதிமீறி செய்தால் அதுதான் ஆச்சரியம். அ.தி.மு.க. விதிமீறல் செய்வது ஆச்சரியம் ஒன்றுமில்லை.



    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பா.ஜனதா அல்லாத பிற கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள் ஓரளவு எங்களுடன் சேர்ந்து செயல்படுகிறவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம்.

    ஆனால் கமல்ஹாசன் தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர் யாருடன் இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும். அவர் நம்மவரா இல்லை வேறு ஒருவரா என்று சொல்லவேண்டும்.

    மத்திய அரசு நடத்தும் தேர்வு முறைகளால் மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், பொது நிறுவனங்கள், ஐஐடி, ஆசிரியர் பணியிடங்கள் போன்ற காலியிடங்களுக்கு சுமார் 10,500 இடங்ளுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் தமிழகத்தில் வெறும் 600 பேர் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு மொழி தெரிந்தவர்களாக தான் இருக்கின்றனர்.

    தென் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஐ.ஐ.டி.யில் நடத்தப்பட்ட தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மூன்று மொழியில் மட்டும் தான் தேர்வு நடைபெற்று உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

    இந்த தேசம் பன்மொழி கொண்ட தேசம், மூன்று மொழியில் தேர்வு நடத்தினால் மீதமுள்ள 30 மொழியில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள். இது நம் நாட்டிற்கு ஆபத்து. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும். பிரதமர் மோடியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.

    இது வருங்கால மாணவர்களை வெகுவாக பாதிக்கும். இதை எங்களுடைய தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு எடுத்து சென்று இப்பிரச்சினைக்கு தீர்வு காணுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×