search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெற்று ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கல்வி உதவி பெற்ற மாணவி கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருவள்ளூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்து உள்ளார். அந்த கிராமத்தை மேம்படுத்தி முன் மாதிரி கிராமமாக திகழ்வதற்கான அனைத்து பணிகளையும் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்தார். இவரது தந்தை முத்து கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். தாய் லட்சுமி மாதம் தோறும் கிடைக்கும் உதவித் தொகை மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வந்தார்.

    இதுபற்றி கமல்ஹாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மாணவி சுனிதாவின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து நெமிலிசேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டப்படிப்பு படிப்பதற்கான இடத்தை சுனிதாவுக்கு பெற்று கொடுத்தார்.

    இதையடுத்து மாணவி சுனிதாவையும், அவரது தாய் லட்சுமியையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்துக்கு கமல்ஹாசன் வரவழைத்தார். பின்னர் அவர்களிடம் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

    இது குறித்து மாணவி சுனிதாவிடம், கேட்டபோது கூறியதாவது:-

    எனது உயர் கல்விக்கு கமல்ஹாசன் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் உதவி செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கல்லூரி படிப்பை நல்ல முறையில் அதிக தேர்த்தியோடு முடிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். இதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் என்னைப்போல உள்ள ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைப்போல் அதிகத்தூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த 12 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை கமல்ஹாசன் வழங்கினார்.

    இந்த சிறுவனின் சகோதரிகள் 2 பேரும் உடலில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களது மருத்துவ செலவையும் ஏற்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

    அவர்களை வருகிற 18-ந் தேதி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதற்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    காவிரி டெல்டாவை பாதுகாக்க ஜூன் 12-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்புகள் வருகிற 12-ந் தேதி திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. இந்த போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்பூர்வமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கும். உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் இல்லை என்றாலும், உங்கள் (பி.ஆர்.பாண்டியன்) அமைப்பின் சார்பில் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வது எனது கடமை.

    ஜூன் 12-ந் தேதி தாங்கள் (பி.ஆர்.பாண்டியன்) மேற்கொண்டுள்ள நிகழ்வில், வேறு பணிகள் காரணமாக என்னால் நேரில் பங்கேற்க இயலாது. எனினும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.

    அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.

    ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும் என கவிஞர் சினேகன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் வந்த கவிஞர் சினேகன் நிருபர்களிடம் கூறியதாவது, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கர்நாடகா சென்றது இணக்கமான உறவை மேம்படுத்தவேண்டும் என்பதற்காகவே. இது மனிதாபிமானம் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சி.

    கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியலில் கொள்ளை ரீதியாக மாறுபட்டுள்ளனர். சினிமாவில் எப்போதும் போல் நட்புரீதியாக கைகோர்த்துள்ளனர். 2 பேருக்கும் விளம்பரம் தேட தேவையில்லை.

    எவ்வளவு எதிர்ப்புகள் வருகிறதோ அது விளம்பரமாக மாற்றப்படும். பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்புகளை மீறி சிலபேருக்கு மட்டும் தெரிந்த எங்களை உலகமறிய செய்துள்ளது. பா.ஜனதா கட்சிக்காக கமல் வேலை செய்யவில்லை. அவர் எப்போதும் கமலாகவே இருக்கிறார்.

    நாங்கள் மக்களின் ஆதரவாளர்களாக மட்டுமே உள்ளோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும். இதற்காக பல கிராம சபைகளுக்கு சென்றுவருகிறோம். மக்கள் கூட்டணியை விட பெரியது எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan

    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

    காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

    எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
    குமாரசாமியால் காவிரி தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை கமல்ஹாசன் உருவாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. சார்பில் பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் நடைபெற வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் நடைபெறவில்லை. நீட் தேர்வில் டீக்கடைகாரரின் மகள் வெற்றி பெற்று இருக்கிறார். இதை நாம் மறந்து விட்டோம்.

    நீட் தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். 1½ லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 4 ஆயிரம் சீட்டுகளுக்கு அரசு தயார் செய்வது போல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர ஊக்குவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட நீட்டுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தமிழக அரசியல்வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.


    கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முடிந்த பிறகு கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை அவர் உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவு படுத்துகிறார்.

    இது தன்னால்தான் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி என்றும் அதில் தவறு இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சனை தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    இதன் பிறகாவது கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் வீம்பு பிடிக்காமல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்று கூறி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இப்போது அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி நீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதன் பின்னர் குமாரசாமி, கமல் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவை விரும்புவதாகவும், தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார் என்றும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

    அவருடன் இணைந்து பேட்டி அளித்த கமலும் 2 மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி பிரச்சனையை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பேச்சு எனதுஇதயத்தை நிரப்பி விட்டது என்றும் தெரிவித்தார்.

    கமலின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


    விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனும் கமலின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு கமல் செயல்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் கமலின் இந்த முயற்சியை ரஜினி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி. அதில் தவறு இல்லை. பேச்சு தொடர வேண்டும். அவர்கள் ஒன்றும் எதிரி இல்லை. பெரிய பெரிய காரியங்கள் கூட பேசித்தான் தீர்க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்க்கிறார் என்று தமிழருவி மணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதை அவருடைய கருத்து தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்-அமைச்சர் கனவு கலைந்துவிடக்கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

    ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டத்துக்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதார போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினிகாந்த் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்த கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல்ல அடையாளம்.

    ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினிகாந்த் தன் சொந்த கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவர் இல்லை. ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்ப்பது வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயற்சிப்பதாக கமல்ஹாசன் மீது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார். #Rajini #Kamal
    காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை கமல்ஹாசன் உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.


    ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. 

    சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம். இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார். அடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார். 

    தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் "அறிவும் மானமுமே மனிதற்கு அழகு" என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார்.  ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை. 



    காந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார். கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார். கமல்ஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது. சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு, காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்- அமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்.

    காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #KamalHaasan
    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கி விட்டனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்க வைத்து அரசியலில் குதித்த ரஜினியும், என் பணி நடிப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்து திடீரென அரசியல் களம் கண்ட கமலும் தனித்தனி பாதையில் பயணித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை குறி வைத்தே வெற்றிக் கோட்டையை பிடிக்க இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக தங்களது ரசிகர் பலத்துடன் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினியோடு பல்வேறு வி‌ஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களையே கமல் கொண்டுள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியலில் தொடங்கி மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது வரையில் ரஜினியின் கருத்தோடு கமல் ஒத்துப்போகவே இல்லை. இருவரின் பார்வையும் வேறு மாதிரியே இருந்து வந்துள்ளது. மாணவர்கள் அரசியலில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்துக்கு நேர்மாறாக கமலின் எண்ணம் இருந்தது. மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுபோன்று பல்வேறு வி‌ஷயங்களில் இருவரின் கருத்துக்களும் முரண்பாடாகவே இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதே பிரச்சனைக்கு காரணம். போலீசாரை தாக்குவதை எதிர்ப்பேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்றும் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ரஜினியின் இந்த கருத்துக்கும் கமலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்று கூறிய கமல் தூத்துக்குடி போராட்டம் நல்ல பாதை என்றும், துப்பாக்கியே வந்தாலும் அதனை திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவத்தை தூத்துக்குடியில் பார்த்தோம்.

    தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினியின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அவர் கூறியது அவரது கருத்து. நான் மக்கள் பிரதிநிதியாகவே அவர்களது கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். மக்களிடம் கேட்டுதான் ஒட்டு மொத்த மக்களிடம் கருத்தாக நான் எதிரொலித்தேன். நானாக எந்த கருத்தையும் கூறவில்லை.

    போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது ரஜினியின் கருத்து. எனது கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததில்லை. அவர் இறந்த பிறகுதான் பிறந்தேன் போராட்டத்தின் தன்மை என்ன என்பதை காந்தியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து போராடுவது போராட்டம் அல்ல.

    போராட்டத்தில் வன்முறை இருந்தால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.

    இதன் மூலம் ரஜினிக்கு எதிரான அரசியல் பயணத்தை கமல் ஒருபடி மேலே சென்று எதிர்க்க திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. அரசியலில் எதிராளிகளை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான பலவீனங்களை தங்களது பலமாக மாற்றிக்கொள்வதே வலு சேர்க்கும். அந்த வழியைத் தான் கமலும் பின்பற்றுகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் களத்தில் ரஜினி, கமல் ஆகிய 2 குதிரைகளும் போட்டி போட்டு வேகம் காட்டி வருகின்றன. இதில் முந்தப் போகும் குதிரை எது? கால் இடறி விழப்போகும் குதிரை எது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். #KamalHaasan #Rajinikanth
    ×