search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * 88.6 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பிறந்துள்ளன. முந்தைய சர்வேயில் இது 78.9 சதவீதமாக இருந்தது. இது இந்தியா ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பதை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.

    * இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது.

    * பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளன.

    * குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்தது.

    * ஐந்தில் நான்கு தாய்மார்கள் அதாவது 78 சதவீத தாய்மார்கள் பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பை பிரசவித்த 2 நாட்கள் வரையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மூலம் பெற்றுள்ளனர். முந்தைய சர்வேயில் இது 62.4 சதவீதமாக இருந்துள்ளது. இது பிரசவத்தின்போதும், அதற்கு பின்னரும் குழந்தைகள் இறப்பை தடுக்கும்.

    கர்ப்பிணி பெண்

    * மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது. முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.

    * குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதம் ஆகும்.

    * 41 சதவீத குடும்பங்களில் குறைந்தது ஒருவராது சுகாதார காப்பீடு செய்துள்ளனர். முந்தைய சர்வேயில் இது 28.7 சதவீதமாக இருந்துள்ளது.

    * தற்போது திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை (கருத்தடை முறைகள்) பயன்படுத்துகின்றனர்.

    * நாட்டில் தற்போது திருமணமான 15-49 வயது பெண்களின் குடும்ப கட்டுப்பாட்டு தேவை 9.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2015-16-ல் 12.9 சதவீதமாக இருந்துள்ளது.

    * 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கடந்த சர்வேயில் இருந்து இந்த சர்வேயில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

    இவ்வாறு குடும்ப சுகாதார சர்வே முடிவுகள் காட்டுகின்றன.


    பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.
    பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒரு வேளை பெண் வாரிசுகள் அவர்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலையில், மற்ற வாரிசுகள் அதை பகிர்ந்து கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம்.

    2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் அவர்களது தந்தையின் காலத்திற்குப் பிறகு, அவருடைய பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க முடியும். ஆனால், 25.3.1989-க்கு முன்னதாக திருமணம் செய்து கொண்ட ஓரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கேட்க இயலாது. அந்த காலகட்டத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் அவர்களது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாடலாம். ஆனால், அந்த சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை அல்லது விற்பனை செய்யப்பட்டிருந்தால், அதன் மீது உரிமை கொண்டாட முடியாது.

    பொதுவாக, ஒரு குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்படும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளும் சம்மதம் தெரிவிப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு செய்யப்படும் பாகப்பிரிவினை சட்டப்படி செல்லாது.
    குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.
    இன்றைய இளந்தலைமுறையினர் நல்ல தங்காளின் கதையை அறிந்திருக்கமாட்டார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பல கிராமங்களில் இரவு நேரங்களில் நல்ல தங்காளின் கதையை உடுக்கை அடித்து பாட்டு பாடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதேபோன்று கிராமங்களில் விடிய விடிய நல்ல தங்காள் நாடகம் நடைபெறுவதும், பொழுது விடியும் நேரத்தில் வறுமையின் காரணமாக தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் அழுது புலம்பியவாறு அவரவர் வீட்டை நோக்கிச் செல்லும் காட்சி அந்த கிராமத்தையே சில மணிநேரங்கள் சோகத்தில் மூழ்கடித்து விடும்.

    தான்பெற்ற ஏழு குழந்தைகளையும் தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொலை செய்தவள் அல்ல நல்லதங்காள். வறுமை அவளது குழந்தைகளை வதைக்க, அவளது அண்ணியால் அவளுக்கு ஏற்பட்ட அவமானம் ஒருபுறம் அவளைச் சுட்டெரிக்க, இனி உயிர்வாழக் கூடாது எனக்கருதி தான் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளையும் கொலை செய்யும் முடிவுக்கு அவள் தள்ளப்பட்டதாக நல்லதங்காளின் கதை நகர்கிறது.

    கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சம்பவம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது மகனை தோசைக் கரண்டியால் தாய் அடித்துக் கொலை செய்து உள்ளார். திருச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு தாய் தன்னுடைய 5 வயது மகளை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்து உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையும், 7 வயதில் சுட்டிப் பையன் ஒருவனும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் கணவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். மகிழ்ச்சிகரமான அந்த குடும்பம் வசித்துவந்த பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் அவர்கள் அவ்வப்பொழுது சாப்பிடச் செல்வதுண்டு. நாளடைவில் அந்த கடையில் வேலை செய்து வந்த இளைஞன் ஒருவனுடன் இரு குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண்ணுக்குக் காதல் ஏற்பட்டது.

    குழந்தைகள் இருவரையும், கணவனையும் கொலை செய்துவிட்டு வெளியூர் சென்று மறுமணம் செய்துகொள்வதென அவர்கள் இருவரும் திட்டம் தீட்டினர். அதைத் தொடர்ந்து ஒரு நாள் இரவு நேரத்தில் தான் பெற்றெடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனையும் தீர்த்துக்கட்ட அவள் காத்திருந்தாள். அலுவலக வேலையை முடித்துவிட்டு கணவன் அதிகாலையில்தான் வீடு திரும்பினான். அதுவரை காத்திருக்க முடியாத அவள் காதலனுடன் மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க இரவோடு இரவாக சென்னையை விட்டு வெளியேறிவிட்டாள்.

    அவளது வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. ஓரிரு நாட்களில் அவளும் அவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் தென்மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் பல கொலை சம்பவங்களில் பெண்களுக்கு மிகுந்த பங்களிப்பு உண்டு. குறிப்பாக கணவனைப் பறிகொடுத்த பெண்கள் பலர் கொலையாளிகளைப் பழி வாங்கும்வரை கணவன் கட்டிய தாலியை அகற்ற மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு. காலப்போக்கில் இம்மாதிரியான நடைமுறைகள் தென்மாவட்டங்களில் மறையத் தொடங்கின. ஆனால் சென்னையை அடுத்துள்ள பகுதிகளில் தாதாக்கள் போன்று பெண்களே முன்நின்று நிகழ்த்திய கொலை சம்பவங்களைச் சமீப காலங்களில் காணமுடிகிறது.

    சென்னையின் மையப் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வந்த நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரவுடி தலைமையிலான கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையிலேயே பட்டப்பகலில் கடந்த ஆண்டு கொலை செய்தது. அக்கொலைக்குப் பழி வாங்கும் செயலில் கொலையானவரின் மனைவி ஈடுபட்டாள். திட்டமிட்டபடி தன் கணவனைக் கொலை செய்தவர்களில் முக்கியமான ரவுடியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் கொலை செய்ததும், அதைத் தொடர்ந்து அவளைப் போலீசார் கைது செய்த செய்தியும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சமுதாயத்தில் நிகழும் குற்றங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின்படி 31,036 பெண்கள் 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 296 பேர் கொலை குற்றத்திற்காகவும், 298 பேர் கொலை முயற்சி செய்த குற்றத்திற்காகவும், 132 பேர் ஆட்களை கடத்திய சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும், வழிப்பறி வழக்குகளில் 37 பேரும், மோசடி வழக்குகளில் 326 பேரும், போதைப் பொருட்கள் கடத்திய மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 625 பேரும், திருட்டு வழக்குகளில் 890 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் குற்ற வழக்குகளில் பெண்கள் தண்டனை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்கூட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. இதற்கான காரணம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

    அதிக அளவில் பெண்கள் கல்வி கற்று வரும் தமிழ் சமூகத்தில் குற்ற வழக்குகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கக் காரணம் என்ன?கல்வி கற்பது வாழ்க்கை முறையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காகத்தான் என்ற புரிதல் இல்லாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. முறையற்ற வகையில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில் தவறில்லை என்ற உணர்வு சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டது. வருமானம் கிடைக்கிறது என்பதற்காக முறையற்ற வகையில் செயல்பட்டால் ஒரு நாள் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்பதைப் பலர் பொருட்படுத்துவதில்லை.

    ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரின் வீட்டு வரவேற்பறைகளில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் செய்தி எத்தகையது? பெண்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றில் வரும் பெண் கதாப்பாத்திரம் தன்னுடைய பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களைப் பழிவாங்க பெண் குற்றவாளி ஒருவரைத் தேர்வு செய்து அவள் மூலம் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குற்ற நிகழ்வுகளை மையப்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

    குற்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதைக் கதைக்களமாக கொண்டு தொலைக்காட்சிகள் நாடக சீரியல்களை வர்த்தக ரீதியாக தயாரித்து ஒளிபரப்புவதால் நிகழும் சமூகக் குற்றங்களை நம் சமூகம் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. குற்றம் புரிந்ததற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது அவளது குடும்பத்தை மட்டுமின்றி அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி அவர்களைச் சமூகத்திற்குப் பாரமாக்கிவிடுகிறது.

    பொருளாதார பாதுகாப்பு இன்மை, குடும்ப வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தம், ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், கூடா நட்பு, எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் நகர சூழலை அனுசரித்துக்கொள்ள இயலாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.

    பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.,

    காவல்துறை தலைவர்(ஓய்வு) சென்னை.
    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.

    கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

    ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

    ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

    பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.

    அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது.

    * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

    * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

    * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள்.

    * ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்.

    * மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள். அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

    * நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்.

    * சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

    * பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.

    * எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

    * உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள்….
    போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
    உலக நாடுகளில் இந்தியா மிகவும் விசித்திரம் ஆனது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ‘சிக்னல்’ விளக்கு வைத்து, அதன் கீழே காவலரையும் பணியில் அமர்த்துகிற நாடு உலகிலேயே அநேகமாக இந்தியா மட்டுமாகத்தான் இருக்கும். சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் மெத்தனம், அலட்சியம் மிகவும் அலாதியானது. விதி மீறல், ஒழுங்கீனம் ஆகியன நாடு முழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில், எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கு இல்லை தமிழகம் உள்பட.

    இது தொடர்பாக சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணித்தால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்து விடுவதாகத் தனது கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறது உயர் நீதி மன்றம்.

    இதேபோன்று, இந்தப் பிரச்சினையின் மறு பக்கத்தையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுத் தெருக்களில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

    சென்னை உள்பட பல நகரங்களில், சாலையைக் கடப்பது, மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறி விட்டது. சிறுவர், முதியோர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் படும் இன்னல்கள் சொல்லி முடியாது. தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் செல்வதற்குள் உயிர் போய் வந்து விடுகிறது.

    ஒருவர் சாலையைக் கடக்க யத்தனிக்கிறார் என்றால் அவருக்கு முதலில் வழி விட்டுத்தான், வாகன ஓட்டி செல்ல வேண்டும். ஆனால், சீறிப் பாய்கிற வாகனங்கள் எதுவும் சாலையைக் கடக்கிற ஒருவருக்காக வேகத்தைக் குறைத்துக் கொள்வது கூட இல்லை. மித மிஞ்சிப் போனால், காதைத் துளைக்கிற அளவுக்கு, ‘ஹாரன்’ அடிப்பது மட்டுமே நடக்கிறது.

    இரவு நேரங்களில் கண்களில் ஊடுருவிச் செல்லும் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளைப் போடுவது;

    அல்லது, முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு வண்டி ஓட்டுவது, எதிர்த் திசையில் வேகமாக வருவது;

    மூன்று, நான்கு பேர் ஒரே வண்டியில் குழுவாக சவாரி செய்வது; வலது, இடது இரண்டு பக்கமும் ‘ஓவர்டேக்’ செய்வது;

    குறுக்கும் நெடுக்குமாக வண்டி ஓட்டுவது... என்று எல்லா வகை சாகசங்களையும் சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

    ஒரு வாசகம் உண்டு ‘உண்பது நமக்கு; உடுத்துவது பிறருக்கு’. அதாவது, நம் உடல் நலனுக்கு எது ஏற்றதோ அதைத்தான் சாப்பிட வேண்டும்; அதேபோல, மற்றவர்கள் எதை ஏற்கிறார்களோ அந்த உடையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளுக்கும் இது பொருந்தும்.

    நமக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அந்த வாகனம்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கு எது இடையூறு தராமல் இருக்கிறதோ, அதுதான் ஓட்டுகிற ‘ஸ்டைல்’ஆக இருத்தல் வேண்டும். அளவுக்கு அதிகமான வேகம், நம்மை மட்டுமன்று; பிறரையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்பதை உணர வேண்டும்.

    ஒருவரின் அஜாக்கிரதைக்கு வேறு யாரோ ஒருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்...? ஒருவரை அச்சுறுத்துகிற வகையில் வண்டி ஓட்டுவதால் பிறரைக் ‘கவர்ந்து’ விடலாம் என்கிற சினிமாத் தனமான கற்பனை மாற வேண்டும். பேச்சில், செயலில், நடத்தையில் காட்டுகிற கண்ணியம்தான் நிரந்தரமாக எவரையும் கவரக் கூடிய ஆற்றல் படைத்தது.

    சாலையில் நாம் காணும் ஒழுங்கீனத்துக்கு, இளைஞர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. எட்டு, ஏழு, ஆறு வயதுள்ள சிறுவர்கள்,

    இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது இல்லையா...? நெருக்கடி நிறைந்த சாலைகளில், நண்பர்களை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்வது இல்லையா...? இவை எல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல்தான் நடக்கின்றனவா...? வேதனையான உண்மை பெற்றோரே தம் கண்ணெதிரில் இதனை அனுமதிக்கிறார்கள். இது தவறு; குற்றம்; ஆபத்து. யார் சொல்லிப் புரிய வைப்பது...?

    தம் பிள்ளைகளுக்கு நல்லனவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது, பெற்றோரின் தலையாய கடமை. அவர்களே தவறான வழியைக் காண்பித்து விட்டுப் பிறகு மற்றவரைக் குறை சொல்லலாமா...? கடைக்குச் செல்ல, நண்பர்களைப் பார்த்து வர, பொழுதுபோக்காக ஊர் சுற்றி வர, இயன்றவரை பிள்ளைகளை நடந்தே செல்ல அறிவுறுத்த வேண்டும். செலவும் குறையும்; ஆரோக்கியமும் கூட. சற்றே தொலைவில் செல்வதானால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

    சாலைப் போக்குவரத்தில் நாம் காணும் ஒழுங்கீனம், விதிமீறல்கள், நமது கலாசாரம், பண்பாட்டு அடையாளமாக மாறி விடுகிற அபாயமும் இருக்கிறது. நாளை, இதுதான் தமிழரின் வாழ்க்கை முறை என்று சொல்கிற நிலைக்கு நாம் வந்து விடாமல் தடுத்தாக வேண்டும்.

    “பெயத் தக்க நஞ்சுண்டு அமைகிற நயத் தக்க நாகரிகம்” தமிழ் மறை காட்டுகிற பழம் பெரும் பண்பாடு. இது மட்டுமல்ல; ‘இன்னா செய்தார்க்கும், அவர் நாண நன்னயம் செய்து விடுகிற’, சமுதாயமாக நாம் இருந்து இருக்கிறோம்.

    இன்று நாம் காணும் சாலை சாகசங்கள், இவற்றுக்கு எல்லாம் முற்றிலும் மாறானவை; நம் இனத்துக்கே களங்கம் விளைவிப்பவை.

    ‘இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என்று சொல்லவோ, ‘நீ யார் என்னைக் கேட்க..?’ என்று வினவவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் ஊறு விளைவிக்காமல் வண்டி ஓட்டுதல் நமது கடமை; அதனைப் பிறரிடம் எதிர்பார்த்தல் நமது உரிமை.

    சாலை விதிமீறல்கள் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்; அதே போன்று, பெற்றோரும் பொறுப்பு உணர்ந்து செயல் படட்டும். இனியொரு சாலை விபத்தில் யாரும் உயிர் இழப்பதோ, காயம் உறுவதோ கூடாது.

    ‘பாதுகாப்பான போக்குவரத்து’ தமிழ்நாட்டின் தனி அடையாளமாகத் திகழட்டும்!

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அலுவலர்
    உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது. திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    உலக அளவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் 12 சதவீதம் குறைந்துள்ளது. சமூக பொருளாதார காரணிகளில் மாற்றம் நிகழும்போது பெண்களின் பங்களிப்பு மீண்டும் உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

    பொருத்தமற்ற வேலை, குடும்ப பொறுப்புகள், வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் சராசரி அளவை விட 22 புள்ளிகள் குறைவாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெண்கள் இடம் பெயர்வது முக்கிய காரணமாக இருக்கிறது. உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது.

    திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 3.1 ஒரு சதவீத ஆண்களே திருமணத்திற்கு பிறகு இடம் பெயர்கிறார்கள். ஆனால் திருமணத்தால் இடம் பெயரும் பெண்களின் எண்ணிக்கையோ 71.2 சதவீதமாக இருக்கிறது. அதிலும் ஆண்கள் பணி சார்ந்து இடம் மாறும்போது மனைவியும் கட்டாயம் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அங்கு சென்றபிறகு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தேவை சார்ந்து இடம்பெயரும்போது கடும் எதிர்ப்பு எழுகிறது. அதேவேளையில் திருமணமான பெண்கள் சொந்த வீட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயரும்போது எதிர்ப்பு எழுவதில்லை.

    சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.
    எல்லாரும் மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்புகிறார்கள்... ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியவில்லை.!

    மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒரு  பெரிய விஷயம் நடக்க வேண்டும் என்பதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தரவேண்டியதில்லை. அதை தேடி நீங்களும் போக வேண்டியதில்லை. ஏன் என்றால் அது உங்களிடமேதான் எப்போதும் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.
    மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். முகத்தில் புன்னகை மலர்ந்தால் அகத்தில் மகிழ்ச்சி மலரும். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. மெல்லியதாக ஒரு புன்னகை பூத்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி மலரும். உங்கள் மனத்திற்குள் மகிழ்ச்சியை சுரக்க செய்வது ஒரு ஹார்மோன்தான். அந்த மாமருந்துக்கு பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ். இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது.

    “நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிற்கு மூளை கட்டளையிடும். அடுத்த சில நெடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும் உடலில் புத்துணர்ச்சியும் தோன்றும். இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா? நீங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும் போது, உடலை நேராக நிமிர்த்தி யோகா செய்யும் போது, எந்தவொரு செயலையும் விரும்பி செய்யும் போது ஆகிய தருணங்களில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும்.

    அப்படியானால் இதற்கு எப்போதும்  இதுபோன்ற ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். அவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால் முடியாத பட்சத்தில் இந்த எளிதான விசயத்தை செய்யலாம். அது என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பாசாங்கு அதாவது பாவனை செய்வதுதான்.

    பாசாங்கு செய்வதால் பலன் கிடைக்குமா?

    மகிழ்ச்சி குறித்து பாசாங்கு செய்யும் போது உங்கள் மனம் அதை நிஜம் என்பது நம்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தயார் என உங்கள் மூளைக்கு தகவல் வரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.

    சோகத்தின் போது நம்மில் பலர் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விடுவார்கள். பிரச்சினைகளால் மனம் சங்கடப்படும் போது அல்லது கடந்த கால சோக சம்பவங்கள் எதையாவது நினைக்கும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு கையால் கன்னத்தில் தாங்கி கொள்வீர்கள். இது எதனால் என்றால் துன்பத்தில் இருக்கும் தன்னை, தன் பிரச்சினைகளை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா? என்ற ஏக்கத்தின் வெளிபாடுதான் அது.

    அத்தகைய சமயங்களில் “கன்னத்தில் கை வைக்காதே... கப்பலா மூழ்கி விட்டது?” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஏன் தெரியுமா?நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது. பிறர் தீர்த்து வைப்பார் என்று எண்ணினால் துன்பத்தில் நாம் மூழ்கி போவோம்.

    நம்முடைய உடல் அசைவுகள் மற்றும்  மனநிலைகளை  மூளை உற்று கவனித்து அதற்குரிய சுரபிகளை சுரக்க செய்கிறது. கன்னத்தில் கை வைத்தபடியே கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள். கண்களில் டன் டனாக சோகம் வழியுமே தவிர உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. கன்னத்தை தாங்கி கொண்டிருக்கும் கையை சட்டென எடுத்து விட்டு உங்கள் உதட்டை புன்னகைப்பது போல் செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் சோகம் காணாமல் போய் விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும். மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோனை சுரக்க செய்யும். உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக்கொள்ளும்.

    சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.

    Email:fajila@hotmil.com
    தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம்.
    தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம். அதை எளிதாக்கும் குறிப்புகளை பார்க்கலாம்.

    உங்கள் உடல் இந்த நிலையை அடைய 9 மாதங்கள் ஆனது. எனவே அது  பழைய நிலைக்கு வர பொறுமை அவசியம். உங்களுக்கான புதிய ஆடைகளை வாங்கி உடுத்திக்கொள்ளவும். பாதங்களின் அளவு மாறியிருக்கலாம். புதிய ஷூக்கள் வாங்கவும். பணிக்கு செல்வதற்கு தயாராக தேவையான அவகாசம் அவசியம்.

    வேலைக்குச் செல்வது உங்களை மோசமான அம்மாவாக ஆக்காது என்பதை நினைவில். வேலைக்குச் செல்லும் முன்பு தினமும் கொஞ்சம் வெளியே சென்று வருவது குழந்தையை மிஸ் செய்வதன் வலியைக் குறைக்கும்.

    குழந்தையிடமிருந்து பிரிந்திருப்பது உங்களுக்கும் குழந்தைக்கும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதால் பணிக்கு திரும்பும் நாளை வாரத்தின் மத்தியில் தேர்வு செய்யுங்கள்.

    பணிக்கு திரும்பும் போது அலுவலக சூழல் மாறியிருக்கலாம். புதியவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். எனவே மீண்டும் பணிக்கு சேரும் முன் மேலதிகாரியை சந்தித்து பணியாற்றக்கூடிய திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    பணிக்கு செல்லும் முன்பு ட்ரையல் பார்க்கவும். குழந்தைக்கு பாலூட்ட 20 நிமிடம் அல்லாமல் 10 நிமிடமே போதுமானதாக இருக்கலாம். முன்னதாக செய்து பார்ப்பது முதல் நாள் பதற்றத்தை குறைக்கும்.

    பாலூட்டுவதில் உள்ள சிக்கலை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அலுவலக  மேஜையில் நர்சிங் பேட் வைக்கவும். குழந்தைக்கு போதிய பால் கிடைக்கும் வகையில் முந்தைய இரவு அல்லது காலையில் பாலை பிழிந்து வைக்கவும். தேவை எனில் பணி இடத்தில் மாற்று உடை வைத்திருக்கவும். பணிக்கு செல்லும் வழியில் இமெயில், மளிகை போன்றவற்றை கவனிக்கவும். பில்களை ஆன்லைனில் செலுத்தவும். இதன் மூலம் குழந்தைக்கு போதிய நேரம் ஒதுக்கலாம்.  

    பசியுடன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டாம். உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை சாப்பிட்டு உடம்பை தெம்பாக வைக்கவும்.

    பணியில் இருந்து திரும்பும் வரை குழந்தையை பாதுகாப்பானவர்களிடம் ஒப்படையுங்கள். பல குழந்தை மையங்களில் 18 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளையே அனுமதிக்கின்றனர்.

    குழந்தையை பார்த்துக்கொள்பவரை மரியாதையுடன் நடத்தவும். அவசர கால தொடர்பு எண்களை தரவும். பணம் கொடுத்து வைக்கவும்.
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.

    அனில் அம்பானிக்கும், சாதாரண மக்களுக்கும் இடையேயான போர். 5 வருட அநியாயங்களுக்கும், காங்கிரசின் ‘நியாய்’ (குறைந்தபட்ச வருமானம்) திட்டத்துக்கும் இடையேயான போட்டி. திருடர்களுக்கும், கவுரவமான மக்களுக்கும் இடையேயான போட்டி.

    விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.

    நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று ஏன் எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனை மோடிகள் வருவார்களோ நமக்கு தெரியாது. ரபேல் விவகாரத்தில் காவலாளி நிச்சயம் திருடர் தான். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறியதை, அமித்‌ஷா சும்மா தேர்தலுக்காக சொன்னது என்று சொல்கிறார்.



    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
    இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.

    அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.

    வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
    பொன்றும் துணையும் புகழ்”

    என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.

    “ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை”

    என்பது நாலடியார் கூறும் கருத்து.

    மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.

    கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.

    சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.

    டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
    மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #WomenPollingBooth
    மும்பை:

    மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.

    பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 288 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று நேற்று மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த தேர்தலில் மராட்டியத்தில் பெண்கள் ஓட்டு 57 சதவீதம் மட்டுமே பதிவானது. சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட 80 சதவீதம் பெண்கள் ஓட்டு பதிவான நிலையில் மராட்டியம் அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்தது.

    இதையடுத்து மராட்டியத்தில் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்படுகிறது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் தலைமை அதிகாரி, வாக்குப்பதிவு பணியாளர்கள் மட்டும் அல்லாமல் போலீசாரும் பெண்களாகவே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே பணியாற்றினாலும் ஆண் வாக்காளர்களும் அங்கு ஓட்டுபோட முடியும்.

    பெண் பணியாளர்கள் வழிநடத்தும் வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குப்பதிவு மையங்கள் பெரும்பாலும் தாசில்தார் அலுவலகம் அல்லது போலீஸ் நிலையங்கள் அருகிலேயே அமைக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×