search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    மனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    கருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.

    பொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.

    ‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல! அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்!’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.

    குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.

    கணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.

    கணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

    இப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    - படுக்கை அறை பிரச்சினைகள்.

    - தனிப்பட்ட பலகீனங்கள்.

    - கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.

    - இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.

    - மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.

    - பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.

    - மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.

    இப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.

    முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

    இந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

    வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.
    மனபலம் நிறைந்த பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். மனபலம் என்பது இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் விஷயம் அல்ல, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தானே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் என்பது பொருள் பொதிந்த வார்த்தையாகும், வாழ்க்கையில் ஒருவருக்கு வெற்றியை விட தோல்விகளே அதிக அனுபவத்தைத் தரும். வெற்றியில் கிடைக்கும் அனுபவம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல்வியில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லை இல்லாதது. அதனால் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.

    பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:

    நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.

    நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.

    குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.

    குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.

    பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.

    பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.

    உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
    தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.
    பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது.

    6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். மருத்துவர் அனுமதித்தால் 5-6 வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு தரலாம். 6 மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு தர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். நோய் தாக்காது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

    தாய்ப்பாலை நிறுத்துவதை எப்போதிலிருந்து தொடக்கலாம்?

    ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கட்டாயம். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவை அதிகப்படுத்துங்கள். திட உணவு என்றவுடன் எடுத்த உடனே சாம்பார் சாதம் தருவது இல்லை. கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது இப்படியெல்லாம் 6 வது மாதத்திலிருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

    ப்யூரி, கஞ்சி, கீர், கூழ், ஸ்மூத்தி, ஜூஸ், சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். களி உணவுகளைக் கொடுக்கலாம். குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவைத் தரலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி உணவுகள் தரலாம். பாயாசம், ஃபிங்கர் ஃபுட்ஸ், சப்பாத்தி, பராத்தா கொடுக்கலாம். படிப்படியாக உணவை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்தது.

    அதிக குளிர்ச்சியாகவோ அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் உணவைத் தர வேண்டும். சுவையானதாக உணவு இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் நிறுத்த என்ன செய்யலாம்?

    தாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்காத இடைவேளிகளில் திட உணவுகளையோ திரவ உணவுகளையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வருகையில், இறுதியில் தாய்ப்பால் நிறுத்த வேண்டும்.

    குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது?


    ஒரு வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒன்றரை வயதுக்கு மேல் இருமுறை கொடுத்தாலும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தையை விளையாட்டில் கவனம் செலுத்த வையுங்கள். 2 வயது முடியும் கட்டத்தில் ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். நீ வளர்ந்து விட்டாய் இனி தாய்ப்பால் உனக்கு தேவையில்லை என அடிக்கடி குழந்தைக்கு சொல்லலாம்.

    பின்னர் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுங்கள். பின்னர் அதையே 3 நாள் என மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுப்பது போல மாற்றுங்கள்.பின்னர் அதையும் நிறுத்திவிடுங்கள். இப்படி படிப்படியாக குறைப்பது நல்லது.
    எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். நம் எண்ணங்களில் எவையெல்லாம் நீந்துகின்றனவோ அவைகளே வாழ்க்கையில் நடக்கும்.
    நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென்.

    அது எப்படி நடக்கும். விளக்கமாக கூறுங்களேன்...

    ஒரு விஷயம் உண்மை என்பதோ பொய் என்பதோ நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை, காதால் கேட்பதில் இல்லை. தீர விசாரிப்பதில்தான் இருக்கிறது.
    விசாரணை என்றால் வேறு யாரிடமும் அல்ல. உங்களிடம்தான்... அதாவது உங்கள் ஆழ் மனதிடம். உங்கள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்துதான் நீங்கள் காணும் விசயம் அமைகிறது.

    என்ன குழப்பமாக இருக்கிறதா? உங்களை சுற்றிலும் இருந்து நீங்கள் அறிந்தும் அறியாத நிலையிலும் ஒரு நிமிடத்திற்கு 400 மில்லியன் தகவல் துணுக்குகள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பூலங்கள் மூலமாக உங்களை வந்தடைகிறது. இதில் வெறும் 2000 தகவல்களை மட்டுமே உங்கள் மனதால் கிரகிக்க முடியும். சுற்றிலும் இருந்து செய்திகள் வந்து விழுந்தாலும் உங்கள் மனதுக்குள் இருக்கும் தகவல் வடிகட்டி அவற்றை எல்லாம் பல வகைகளில் பிரித்து வடிகட்டி உங்களுக்குள் அனுப்புகிறது.

    உங்களுக்கு எதில் விருப்பமும் ஈடுபாடும் இருக்கிறதோ, உங்கள் கவனம் எதை நோக்கி செல்லுகிறதோ, உங்கள் மனம் எதை ஈர்க்கிறதோ என்பதை பொறுத்து அத்தகைய செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால்தான் ஒரு விஷயம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுகிறார்கள்.

    உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பலதரப்பட்ட மக்களும் வருகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பொருளை வாங்குவதில்லை. கணவன்-மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் சென்றாலும் ஒவ்வொருவருடைய தேவையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனமும் தன்னை சுற்றி வரும் செய்திகளில் தனக்கு பரிச்சயமானதை, விருப்பமானதை மட்டும் வடிகட்டி எடுக்குக்கொள்ளும்.

    இதில் மனம் எப்படி செயல்படுகிறது?

    நீக்குதல், விலக்குதல், பொதுமைப் படுத்துதல் ஆகிய மூன்று விதங்களில் மனம் தகவல்களை வடிகட்டுகிறது. முதலில் நீக்குதல் என்பதை பார்ப்போம். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால் உங்களை சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் நேர் மறையானவற்றை மட்டும் தனக்குள் ஈர்க்கும். உங்கள் சிந்தனை எதிர்மறையாக இருந்தால் அத்தகைய எதிர்மறையான செய்திகளை மட்டுமே கவரும்.

    உதாரணமாக ஒருவர் உங்களை புகழ்ந்து பாராட்டினால் உங்களுக்கு நேர்மறை எண்ணம் இருந்தால் அதை நினைத்து மகிழும். எதிர்மறை எண்ணம் இருந்தால் இவர் நம்மை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று நினைத்து மனம் அங்கலாய்க்கும். அடுத்து விலகுதல், இது உங் களை சுற்றி என்ன நடந் தாலும் இவர்கள் இப்படிதான் சொன்னார்கள், இது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கும் உங்கள் மனம் அதை தான் விரும்பவது போல் மாற்றி எடுத்துக்கொள்ளும்.

    நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மேல் அதிகாரியிடம் 2 நாட்கள் லீவு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் அவசியம் லீவு வேணுமா? என்று கேட்கிறார். அந்த சமயத்தில் நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் உங்கள் மனம் லீவு தருவார், ஆனால் விளக்கம் கேட்கிறாரே என்று எண்ண வைக்கும். எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் லீவு தரமாட்டார் என்று நினைத்து வருந்தச் செய்யும்.

    எனவே நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் எந்த சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் மனம் சாதகமான செய்திகளை மட்டுமே தனக்குள் எடுத்துக்கொள்ளும். அது எப்படி சொல்லப்பட்டாலும் தனக்கு ஏற்ப நேர்மறையாக மாற்றிக் கொள்ளும். நேர்மறையான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களையே தன்னிடம் ஈர்க்கும்.

    அதுவே எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நல்லதே நடந்தாலும் அதனை எதிர்மறை விஷயமாக எண்ண வைக்கும். எதிர்மறையான மனிதர்களையும் செயல்களையுமே தன்பால் ஈர்க்கும். அவர்கள் மனம் அவ்வாறே செயல்படும். அதனால்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். சூழ்நிலையை கையாளும் விதத் தில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தால் எதிலும் அதிருப்தியே நிலவும்.

    அடுத்து பொதுமைப்படுத்துதல் குறித்து பார்ப்போம். உங்கள் வாழ்க் கையில் எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து ஒரிரு முறை நிகழ்ந்து விட்டால் அதன் பிறகு உங்கள் மனம் இனி எப்போதும் அப்படியே தான் நடக்கும் என்று நினைத்து வருத்தப்படும். இதனால் அடுத்து எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டு செய்யும். உங்கள் மனம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பொதுமைப் படுத்தி பார்ப்பதால் உண்டாகும் பிரச்சினை இது.

    எனவே அடுத்த முறை உங்கள் மனம் “ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது-?” என வருந்தும் போது, நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து “எப்போதுமேவா இப்படி நடக்கிறது?” என்ற எதிர் கேள்வியை அதனிடம் கேளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்ற தருணங்களும் நினைவுக்கு வரும். எப்போதும் தோல்வியே தொடரவில்லை. பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது புரியும்.
    இப்படி பகுப்பாய்வு செய்தால் மனதுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்த முயற்சிக்கு உங்கள் மனம் தயாராகும். பிறகு என்ன? தொட்டக் காரியம் எல்லாம் வெற்றிதான்.

    பொதுவாக அனைவரது மனமும் பாராட்டை, தட்டிக்கொடுத்தலை விரும்பும். அதே சமயம் பிறரது குறைகளை கண்டுபிடிப்பதே பாராட்டை பெறுவதற்கான எளிய வழி என்று நினைப்பதால் மனம் குறைகளையே ஈர்க்கிறது. அதுவே மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் போது அவர்கள் மனம் மகிழும். அதோடு உங்கள் மனதும் அதனை ஈர்த்து உங்களை மகிழ் விக்கும்.

    உங்கள் மனம் நேர்மறை சிந்தனை உடையதாக இருந்தால் நீங்கள் எதை பார்த்தாலும் அதிலிருக்கும் நல்லவை மட்டுமே உங்கள் கண்களுக்கு தென்படும். நீங்கள் எதை கேட்டாலும் அதிலுள்ள நல்லவை மட்டுமே உங்கள் செவியில் நுழைந்து மனதில் புகும். எனவே நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்து இருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம்.

    Email:fajila@hotmil.com
    பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.
    “எப்படி இவ்வளவு மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.” இது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கவலை தோய்ந்த வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்தக் கடிதம் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடந்து முடிந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எழுதப்பட்டது. முதல் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 489. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க் களின் எண்ணிக்கை, வெறும் 22 தான். 62 ஆண்டுகள் ஆன நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்கள் 543. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 66. இது மொத்த இடங்களில் 12.15 சதவீதம். முக்கிய பதவிகளை அரசியலில் பெண்கள் அலங்கரித்தாலும், காலங்கள் மாறினாலும், நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் 190 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 153. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்கூட பெண்களுக்கு நடப்பு நாடாளுமன்றத்தில் 20 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தெற்கு சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாதான் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களை கொண்ட நாடு. இங்கு 61 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    உலகளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி எண்ணிக்கை 22.4 சதவீதம். அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் பங்களிப்பு ஒற்றை இலக்கத்தில் அமைந்திருக்கிறது என்பது இன்னும் வெட்கக்கேடானது. அது 9 சதவீதம். அதிலும், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே கிடையாது. இது இன்டர் பார்லிமென்டரி யூனியன் தருகிற புள்ளிவிவரம்.

    இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறபோது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விடுவோம் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கே அதை வழக்கம் போல மறந்து விடுகிறார்கள்.

    முதன்முதலாக 1996-ம் ஆண்டு, நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, அரசியல் சாசனத்தின் 108-வது திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒரு போதும் ஓட்டெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, மக்களவையில் இந்த மசோதா காலாவதியாகி விட்டது. அதன் பிறகு இன்றுவரை உயிரூட்டப்படவே இல்லை.

    இந்த மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிகள் கூறினாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆக 23 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற விடாமல் பல அரசியல்கட்சிகள் சீனப் பெருஞ்சுவராய் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

    சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது, “நாடாளுமன்ற, சட்டசபைக்கு வர பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மனம் உவந்து தர மாட்டோம், ஆனால் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று பல தேசிய கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி கணக்கு போடுகின்றன.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 16-ல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்று இந்திய தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் சொல்கிறது.

    இந்த நிலையில்தான் 17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனியாவது நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பரிதவிக்கிறது. ஆனால் இந்த மசோதா ஒரு பக்கம் கிடப்பில் போடப்பட்டாலும், அரசியல் கட்சிகள் நினைத்தால் குறைந்தபட்சம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடியும்.

    ஒடிசா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்து இருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அதை விட ஒரு படி மேலாக 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிறது.

    ஒவ்வொரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் 33 சதவீத அளவுக்கு பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தினாலே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ இப்போதைய நிலையை விட, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் வருவதற்கு வழி பிறக்கும்.எந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அந்த கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்ற ஒரு நிலைப்பாட்டை பெண்கள் எடுத்தால் அது மாற்றத்தை கொண்டு வரும். ஏற்றத்தைக் கொண்டு வரும். கெஞ்சியது போதும் பெண்களே, நிமிர்ந்து நின்று முடிவு எடுங்கள். அதுதான் உங்கள் முன்னேற்றத்தின் முதல்படி.

    - இலஞ்சியன்
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

    நேற்று பொள்ளாச்சி மற்றும் கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி ஸ்கீம் ரோட்டில் பெண்கள் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நூர் முகம்மது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியினர் கணபதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 14 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவள்ளூவர் திடலில் நாம் தமிழர் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 9 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் செயலாளர் முகம்மது ஷானவாஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 40 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 23 பெண்கள் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது வரை பொள்ளாச்சி பாலியல் விவகார போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #PollachiCase
    சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.
    இயலாமையில் வெளிப்படும் அந்த இளம் பெண்ணின் அபய குரல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வலுக்கட்டாயமாக நமது கண்களில் வந்து விழுந்துவிட்ட இந்த காணொலி காட்சியை கண்ட மனம் பதைபதைக்கிறது. அவள் கதறிக்கொண்டிருக்க ஒன்றுமே நடவாததுபோல் நின்று கொண்டு சாதாரணமாக பேசிக்கொள்ளும் மனித மிருகங்களைப் பார்க்கையில் ரத்தம் கொதிக்கிறது. தமிழ்த் தாய்மார்கள் பெற்ற ஆண் பிள்ளைகள் தானா இவர்கள்?

    பொள்ளாச்சி ‘சீ சீ’ என புளுத்து நாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்னும் நூற்றுக்கணக்கான பெண்களாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களாம். ஏழு ஆண்டுகளாகவே இது நடக்கிறதாம். இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கட்டுரை இப்படிச் சொல்கிறது. “போதை தரும் ஒரு விளையாட்டாக அந்த ஆண்கள் இதைச் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்”. போதையோடு அவர்களுக்கு பண மழையும் பொழிந்திருக்கிறது. இந்த அநியாயத்தை ஒரு தொழிலாகவே தொடர்ந்திருக்கிறார்கள். இப்போதாவது இது வெளியே வந்ததே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சில நூறு பெண்களின் வாழ்வு சிதைக்கப்படாமல் தடுக்கப்பட்டதே இனி சட்டம் வேகமாக தன் கடமையைச் செய்யட்டும்.

    பொள்ளாச்சியில் மட்டுமல்ல, நமது ஊரில், நமது பக்கத்திலேயே இதுபோன்று நடந்து கொண்டிருக்கலாமோ என்றதோர் அச்சம் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இந்த வேட்டை நாய்களின் கோரப் பற்களின் பிடியில் இருந்து நம் பெண் குழந்தைகளை காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டி இருக்கிறது.

    இந்த நிகழ்வில் கதறும் அந்தப் பெண் அங்கே எப்படிச் சென்றாள்?. அவள் சமூக ஊடகச் சாதனங்கள் அழைத்துச் சென்ற சக்கர வியூகப் பொறிக்குள் தானே வலிய சென்று மாட்டிக் கொண்டிருக்கிறாள். வெறி நாய்கள் சூழ்ந்து நிற்க செய்வதறியாது துடிக்கிறாள். இந்த சக்கர வியூகம் ஒரே நாளில் வகுக்கப்படுவதில்லை. சிறிது சிறிதாக பின்னப்பட்டு, நண்பன் என்ற பெயரில் நம்பிக்கை ஊட்டப்பட்டு, நாளாவட்டத்தில் இளம் பெண்கள் இந்த வியூகத்திற்குள் நகர்த்தப்படுகிறார்கள்.

    சமூக ஊடகங்களில் தங்கள் அந்தரங்கங்களைப் பந்தி வைக்க ஆரம்பிப்பதில் இருந்து தொடங்குகிறது வேட்கைப் பொறியை நோக்கிய நகர்வு. சுய முகங்களைக் காட்டிக்கொள்ளாமல் பெண் தோழிகளைப் போலவே பேசி உணர்வுகளின் வீச்சை அறிந்து கொண்டு அல்லது அவற்றைத் தூண்டி விட்டு ஏதோ ஒரு சொல்லில் தன்னிலை மறந்து தன் வலிமையின்மை வெளிப்படும்போது இந்த சக்கர வியூகத்திற்குள் இப்பெண்கள் ஏற்கனவே வந்து விட்டிருப்பார்கள், ஒரு கொடியவனிடம் மாட்டிக் கொள்வதே கொடுமை. ஆனால் கொடியதொரு ஓநாய் கூட்டத்திடம் அகப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த பொள்ளாச்சி இளம்பெண்கள்.

    ஒரு நாள் பொழுதைக் கடக்கையில் தான் செய்வது அனைத்தையும் செல்போன் கேமராவில் ஏற்றி, அதை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கும் பழக்கம் இளம் பெண்கள் இடையே ஒரு நோயாக தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இளம் பெண்களுக்கு இந்த நிகழ்வு ஒரு கண் திறப்பு இந்த சுய காட்சிப்படுத்தலானது கயவர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பெண்களால் அறிய முடிவதில்லை.

    வாட்ஸ் -அப்பில் முகம் தெரியாதவர்களுடன் கூட தேவையற்ற நட்பு பாராட்டுவது, கருத்துகளை வெளிப்படுத்துவது, படங்களைப் பகிர்ந்து கொள்வது, அக நூலாய் மாறிக்கொண்டுள்ள முக நூலில் அந்தரங்க ஆசைகளை வெளிப்படுத்துவது, நண்பர்கள் என்ற பெயரில் அறிமுகம் ஆகும் கயவர்களின் ஆசை வார்த்தைகளை அப்படியே நம்புவது, ஒரு கட்டத்தில் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உடன் செல்லத் துணிவது, தான் மட்டும் தனியே சென்று சிக்கிக்கொள்வது என இந்த வியூகப் பாதையின்படி நிலைகள் அதிகம்.

    அப்படி சிக்கிக் கொண்டு விட்டதை ஓநாய்கள் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியபோது பணம் கொடுத்து வந்ததும், பணம் கொடுக்க முடியாதவர்கள் உடலைக் கொடுத்து வந்ததும் இயலாமையின் உச்ச கட்டம். ஒரு முறை உடலைப் படம் எடுத்துக் கொண்டு விட்டான் என்பதற்காக அந்தப் படம் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் மீண்டும் மீண்டும் அவர்களிடமே சென்று வீழ்ந்து கொண்டிருந்த பெண்கள் உண்மையிலேயே கல்வியறிவு பெற்றவர்கள் தானா என ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.

    பெண்ணின் உடலில்தான் குடும்பத்தின் மானம் அடங்கியுள்ளது என்ற சமூக விழுமியத்தின் தலைவிதி இது. இக்கயவர்கள் கூட்டத்திடம் அகப்பட்டிருந்த முதல் பெண்ணானவள் நண்பன் என்று நம்பப்பட்டவன் தன் உடலைப் பொருளாக்கி வீழ்த்திய போதே அதை தன் குடும்பத்தினரிடம் கூறி வெளிக் கொணர்ந்து இருந்தால் இத்தனை பெண்கள் தங்கள் கண்ணியத்தை இழந்திருக்க வேண்டியதிருந்திருக்காது. ஆனால் அந்தப் பெண் இதை துணிவுடன் வெளியில் பேச அவளுக்கு நம் சமூகம் சொல்லித் தந்திருக்கவில்லை.

    பெண்களாக சென்று ஏன் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் என சிலர் பட்டிமன்றம் பேசலாம். இங்கே நடப்பது நம்பிக்கைத் துரோகம். நம்பி வந்தவன் கைவிடும் அவலம். வழக்கம்போல் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லி விட்டு இதனைக் கடந்து விட முடியாது. ஆண்கள் சரியான சமூக புரிதலுடன் வளர்க்கப்படுகிறார்களா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தன்னை நம்பி வரும் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துபவனே உண்மையான ஆண் மகன்.

    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண் குழந்தைகளை வளர்க்கும் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு சமூக விழுமியங்களைக் கற்றுத்தர மறப்பதும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. செல்போன், ஐபேட் போன்ற சாதனங்களின் மூலம் பரந்து விரியும் மாய உலகனுள் பரவிக் கிடக்கும் விரசத்திற்குள் நம் குழந்தைகள் மாட்டிக்கொள்ளாமல் அவர்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.

    பா.ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ்.
    பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும்.
    பெண்கள் அனைவரும் கலைத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய திறமை அவர்களது சிறுவயதிலே வெளிப்படுகிறது. ஆனால் அந்த திறமையை வளர்த்தெடுக்க எல்லா பெற்றோராலும் முடிவதில்லை. அதற்கு ஏழ்மை தடையாக இருக்கிறது. அன்றாட உணவுத்தேவையையும், அடிப்படையான கல்வியையும் வழங்கவே பெரும்பாலான பெற்றோர் படாதபாடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அத்தகைய குடும்பங்களில் வளரும் பெண்கள், தங்கள் கலைத்திறனையோ, விளையாட்டுத்திறனையோ வளர்த்தெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதை மீறி பல்வேறு தியாகங்களை செய்து, தங்கள் மகள்களை அவர்கள் விரும்பும் துறைகளில் வளர்த்தெடுக்கும் பெற்றோரும் உண்டு.

    அவர்கள் தங்கள் மகள்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். எத்தனையோ இன்னல்களை தாங்கிக்கொள்கிறார்கள். பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். அவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு சில பெண்கள் கலைத்துறைகளில் வளர்ந்து விடுகிறார்கள். ஆடல், பாடல், நடிப்பு போன்ற ஏதாவது ஒரு துறை அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துவிடுகிறது.

    அதை பயன்படுத்திக்கொண்டு பலருக்கும் தெரிந்த முகங்களாக அந்த பெண்கள் மாறும்போது, சில நேரங்களில் அவர்கள் செல்லும் பாதை மாறிவிடுகிறது. எளிய வாழ்க்கை வாழும் அவர்களது பெற்றோர், மகளிடம் ‘நீ செல்லும் பாதை சரியில்லையே!’ என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். பெற்றோரையே புறக்கணித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்கள். அதன் பின்பு தனிமையிலோ, பிரச்சினைக்குரிய வெளிநபர்களுடன் சேர்ந்தோ வாழ்ந்துவிட்டு பல்வேறு துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டு மீண்டும் தாயிடம் போய் சேருகிறார்கள். இது ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

    ஜூலி நடுத்தர குடும்பத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட செல்லப்பெண். அவளது அம்மா தனது மகள் ஆடல், பாடல், பேச்சு போன்ற கலைகளில் சிறக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார். பண கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், எப்படியோ பணத்தை புரட்டி மகளுக்கு தேவையான பணத்தை செலவிட்டார். அவள் கலைகளில் தேர்ச்சி பெற்ற பின்பு, பல்வேறு பிரபல மனிதர்களை சந்திக்க அழைத்துச்சென்றார். அப்போது பல்வேறு அவ மானங்களையும் மகளுக்காக தாங்கிக்கொண்டார்.

    ஒருசில வருடங்களுக்கு பின்பு அவளது வாழ்க்கையில் பிரகாசம் தென்பட்டது. கலைத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை பெற்றாள். பிரபலமானாள். பணம் குவிந்தது. அதன் பின்புதான் அவள் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினாள். அரைகுறை ஆடை அணிந்தாள். ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள். ஊர் சுற்றினாள்.

    பெற்றோரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர். மகளிடம், அவள் நடவடிக்கைகள் திசைமாறி செல்வதை எடுத்துரைத்தனர். அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப்படவில்லை. இதனால் மனம் வருந்திய பெற்றோரும் உறவினர்களும் ஜூலியை கண்டித்தனர். இது அவளுக்கு பிடிக்கவில்லை. வெளியுலக நண்பர்களின் புகழ்ச்சி போதையிலிருந்த அவளுக்கு பெற்றோரின் கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் பிடிக்கவில்லை. உறவினர், பெற்றோரை வெறுத்தாள்.



    ‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து பெற்றோராகிய உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை மற்றவர்கள் முன்னால்வைத்து குற்றவாளி போன்று விமர்சிக்கிறீர்கள். அதை எல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்ற அவள், பெற்றோரின் அழுகையையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். அவள் எங்கு சென்றாள், யாரோடு வசிக்கிறாள் என்று பெற்றோருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சிலர் தேடி அலைந்து, அவளது நண்பர்கள் வழியாக செல்போனில் தொடர்புகொண்டபோது, ‘வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், அங்கு கலை நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாகவும்’ புதுக்கதைவிட்டாள்!

    ஆனால் அவள் அந்த பெருநகரத்தின் இன்னொரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இஷ்டம்போல் வாழ்ந்தாள். தன்னை மறந்தாள். அவள் ஈடுபட்டிருந்த துறையில் அவளது வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பலவிதமான பிரச்சினைகளில் சிக்கிய பின்பு, தாய் மடி தேடி வந்தாள். அப்போது அவளது உடலும், மனதும் பாதிக்கப்பட்டிருந்தது.

    பெற்றோரை தவிக்கவிட்டு வெளியேறுவது, எவ்வளவு பெரிய தவறு என்பதை பல இழப்புகளுக்கு பிறகே ஜூலியால் புரிந்துகொள்ள முடிந்தது. திரும்பி வந்த அவளை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவளை திமிர்பிடித்தவள் என்றே கூறினார்கள்.

    அவளை முதலில் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று வர்ணித்து அவளது அறிமுகத்திற்கு ஏங்கியவர்கள்கூட பின்பு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளை திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்ட உறவுக்காரர்கள்கூட, அலட்சியப்படுத்தினார்கள். அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள். பணம் சமூக அந்தஸ்தையும், மகிழ்ச்சியையும் தருவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்டாள்.

    இன்று நிறைய இளம்பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பணத்தை பார்க்கும் அவர்கள் பின்பு குணத்திற்கு மரியாதைகொடுக்க தவறிவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கண்டிப்புகள், விவாதங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்.

    பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும். பெற்றோரை புறக்கணித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பற்ற நிராயுதபாணியாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களைத் தேடி அன்பு, பாசம், அனுசரணை போன்ற போலி முகமூடிகளைத் தரித்துக்கொண்டு சிலர் அணுகுகிறார்கள். அவர்களது வலைக்குள் பெண்கள் சிக்கிக்கொள்ளும்போது எல்லையற்ற இன்னல்களையும், அவமானங்களையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். அதுவே அவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் அதிலிருந்து பாடம் கற்று தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும்.
    பெண்கள் தனியாக டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒருசில பெண்கள் துணிந்து தனியே வாழ முனைகிறார்கள். தனியாகப் பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கையை அழகாக, ஆழமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெண்கள் சோலோ டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

    உலகம் முழுக்க தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு. ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்களாம். இதற்குச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு எனப் பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. குழுவாகப் பயணிப்பதில் இருக்கும் சுகத்தையும் தாண்டி, சோலோவாகப் பயணிப்பதில் அலாதி சுகம் கிடைப்பதாக பெரும்பாலான பெண்கள் உணர்கிறார்கள். தனியாக டிராவல் செய்ய நினைக்கும் பெண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்ளாமல் தயவுசெய்து தனியாக பயணம் செய்யாதீர்கள் என்பதே அவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

    முன்பெல்லாம் பயணம் செய்வது, காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால், இப்போது, பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்துக்கு வந்துவிட்டதால், மிகக் குறைந்த செலவிலேயே பல ஊர்களைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. அதற்குத் திட்டமிடல் ரொம்பவே முக்கியம். அதாவது, நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என அனைத்தையும் திட்டமிட வேண்டும். நீங்கள் சைக்ளிஸ்ட்டாக இருந்தால் சைக்கிளையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். சைக்கிளில் ஊர் சுற்றிப் பார்க்கும் சுகமே அலாதியானதுதான்.

    பெண்களைப் பொறுத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதைவிட, பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் பணம் என்ற மதிப்புள்ள காகிதத்தை நம்பாமல், பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தை அனுபவியுங்கள்.

    தனியாகப் பயணிக்கும்போது, நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்கள் அருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்புவைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயலுங்கள். அது ஒருவித பாதுகாப்பு உணர்வையும் உங்களுக்குள் ஏற்படுத்தும். `பயணத்துக்காகத் திட்டமிடும்போதே, ஆபத்து என்று அழைத்தால் உடனே வரும் நட்பையும் தேர்வுசெய்து, அவர்களிடம் பயண விவரங்களைத் தெரியப்படுத்திவிட்டு, அதன் பிறகு பயணிப்பது நல்லது. இது புலிகளின் காடல்ல, அன்பான இதயங்களும் அன்றாடம் பயணிக்கும் நாடு' என்பதை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் தைரியம் தானாக ஊற்றெடுக்கும்.

    செல்லும் இடங்களிலும் நல்ல நல்ல மனிதர்கள் நம் கண்களுக்கு அகப்படுவார்கள். அவர்களின் உதவியையும் கேட்டுப் பெறுவதில் தவறில்லை. சுற்றுலா செல்லும் இடத்தில் இருக்கும் நண்பர்களின் நண்பர்களையும் தொடர்புகொள்ளும் வகையில் திட்டமிட்டு வைத்திருங்கள். அவசர காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.

    யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாகக் கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை. பயணத்தில் பார்க்கும் மனிதர்களை முழுமையாக நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்களின் மீது சந்தேகம் இருந்தால்தான், உங்கள் பாதுகாப்பின் மீது உங்களுக்குக் கவனம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பெப்பர் ஸ்ப்ரே, விசில், பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவை தவிர எங்குச் செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது, இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

    சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.
    கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.

    ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?

    ஹாட் பேன்ட்:

    கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.

    பருத்தி சேலைகள்:

    பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

    நீளமான பாவாடைகள்:

    அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

    லூசான பேன்ட் :

    இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்

    பருத்தி ஆடைகள்:

    வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

    சல்வார் கமீஸ்:

    சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

    குட்டையான ஆடைகள்:

    கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.

    காதி:

    கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
    விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
    நாம் கற்பனைசெய்து பார்க்க இயலாத விசித்திரங்கள் மனித வாழ்க்கையில் நடக்கக் கூடும். அவைகளை விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்தால்தான், அதன் உண்மைத்தன்மைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். நம்மிடையே அன்றாடம் விசித்திர சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை பற்றி அலசுவோம்!

    இப்போது பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வாடகை வாகனங்களில்தான் செல்கிறார்கள். ஒரு ஆட்டோவில் பத்து குழந்தைகள்கூட ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நெருக்கடி நிறைந்த ஆட்டோ ஒன்றில் தினமும் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிக்கு 8 வயது. துறுதுறுப்பான அவள், படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என்று பள்ளியில் நடக்கும் அனைத்திலும் பங்குபெற்று, பரிசோடுதான் வீடு திரும்புவாள். திடீரென்று அவளிடம் அதிரடியான மாற்றங்கள். படிப்பில் பின்தங்கினாள். போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்த்து தனிமையை நாடினாள். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, அழத் தொடங்கினாள்.

    இரண்டு, மூன்று மாதங்களாக மகளிடம் இத்தகைய மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த தாயாரின் கவனத்தில் மகளின் புத்தகப்பை தென்பட்டிருக்கிறது. விடுமுறை நாள் ஒன்றில் அவளது புத்தகப்பை நோக்கி ஏராளமான எறும்புகள் படையெடுப்பதை பார்த்திருக்கிறார். என்னவென்று பார்ப்பதற்காக பையை திறந்திருக்கிறார். உள்ளே நிறைய சாக்லேட் இருந்திருக்கிறது.

    “நாங்கள் அவளுக்கு எல்லாவிதமான இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுப்போம். ஆனால் பற்கள் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சாக்லேட் மட்டும் வாங்கிக்கொடுக்க மாட்டோம். ஆனால் இவளுக்கு சாக்லேட் மீது ரொம்ப ஆசை இருந்தது..” என்றார் தாயார். முதலில் அவர் மட்டுமே கவுன்சலிங்குக்கு வந்திருந்தார்.

    “அப்படியானால் அதை புரிந்துகொண்டு யாரோ இவளுக்கு நிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதனை சாப்பிடாமல் வைத்திருக்கிறாளே ஏன்? அப்படியானால் இந்த சாக்லேட்டுடன்தான் இவளுக்கு ஏதோ பிரச்சினையும் சேர்ந்து வந்திருக்கிறது. அதை பற்றி விசாரியுங்கள்..” என்றேன்.

    தாயார் விசாரித்து சொன்ன சம்பவம் விசித்திரமாக இருந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 55 வயது. இந்த மாணவியின் வீட்டில் இருந்து பள்ளியை சென்றடைய, முக்கால் மணி நேரம் ஆட்டோவில் பயணிக்கவேண்டும். அதில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவள் மட்டுமே ஆட்டோவில் இருப்பாள். அப்போது பெரும்பகுதி நேரம் ஆள்அரவமற்ற பகுதியை ஆட்டோ கடந்து செல்லும். பள்ளியை நெருங்கும் நேரத்தில்தான் நிறைய மாணவிகள் ஏறுவார்களாம். தனியாக பயணிக்கும்போது அவளிடம் பேசிக்கொண்டே செல்லும் அவர், அவளது சாக்லேட் ஆசையை எப்படியோ தெரிந்துகொண்டு விலை உயர்ந்த சாக்லேட்களை நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். இவளும் ஆர்வமாக சாப்பிட்டிருக்கிறாள்.



    அதை வீட்டில் சொல்லக்கூடாது என்றிருக்கிறார். இவளும் சொல்லவில்லை. அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பிய பின்பு தனது விசித்திர சுபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ஆட்டோவில் இவள் மட்டும் இருக்கும் தனிமை நேரத்தில் அவர் தனது இடுப்புக்கு கீழ் பகுதி ஆடையை கீழே இறக்கிவிட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுவாராம். இது தொடர்ந்து நடந்திருக்கிறது. பின்பு நகரப் பகுதிக்குள் ஆட்டோ சென்றதும், தனது உடையை சரிசெய்துகொள்வாராம்.

    அவரது செயலை பார்த்த அவள் முதலில், ‘அவர் உடையை சரிசெய்ய மறந்துவிட்டார்’ என்று எளிதாக எடுத்திருக்கிறாள். பின்பு விளையாட்டுத்தனமாக கருதியிருக்கிறாள். தான் ஆட்டோவில் ஏறிய பின்பு, ஆட்கள் இல்லாத பகுதியில் அந்த செயலை செய்யத்தொடங்கியதும் அது தவறானதாகவும், பின்பு விபரீதமாகவும் அவளுக்கு புரிந்திருக்கிறது. அப்போது அவள், ‘ஒழுங்காக உடையை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டுங்கள்’ என்று கூறி இருக்கிறாள். உடனே அவரது சுபாவம் மாறியிருக்கிறது. அவளை மிரட்டியிருக்கிறார்.

    அவர் தன்னை மிரட்டியதை வீட்டில் சொன்னால், தான் வெகு நாட்களாக அவரிடமிருந்து விலை உயர்ந்த சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்ததையும் சொல்ல வேண்டியிருக்குமே என்று அவள் குழம்பி, அச்சமடைந்திருக்கிறாள். அதுவே அவள் கல்வியிலும், இயல்பான நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கிவிட்டது. உண்மை தெரிந்த பின்பு அவளது பெற்றோரே அதற்கு சரியான தீர்வை தேடிக்கொண்டார்கள்.

    (மூடிவைக்க வேண்டிய தனது உறுப்புகளை வெளியே காட்டுவதன் மூலம் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்பவர்கள் ‘எக்ஸிபிஷனிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பாலியல் மனநோய்க்கு எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) என்று பெயர். இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பது சிரமம். உடை விஷயத்தில் கவனம் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு, மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள். ‘வயதில் பெரியவர். தெரியாமல் ஏதோ நடந்துகொள்கிறார்’ என்று கருதாமல், தொடக்கத்திலே நாம் விழிப்படைந்து, ‘உடையை சரிசெய்யுங்கள்’ என்று சத்தமாக சொல்லவேண்டும். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் ‘இவர்களிடம் நமது கதை எடு படாது’ என்று கருதி ஒழுங்காக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்).

    ஊரில் மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்த அந்த நபருக்கு 30 வயது. கவுரவமான பதவியில் இருக்கிறார். திருமணமான புதிதில், நள்ளிரவில் மனைவி அசந்து தூங்கும் நேரத்தில் இவர் வெளியே கிளம்பிச்சென்றிருக்கிறார். பின்பு அதிகாலை நேரத்தில் திரும்பி வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அவள் கண்டுபிடித்து காரணம் கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் நள்ளிரவில் அடி உதை வாங்கி சட்டை எல்லாம் கிழிந்த நிலையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அப்போதுதான் அவரிடம் இருந்த ‘விசித்திர சுபாவம்’ மனைவிக்கு தெரிந் திருக்கிறது.



    அதாவது சிறுவயதில் இருந்தே அவர் வெளியூரில் உள்ள பிரபலமான கான்வென்ட் ஒன்றில் தங்கிப் படித்திருக்கிறார். அப்போது 15, 16 வயதுவாக்கில் இரவில் வெளியே சென்று, மாணவிகளின் விடுதி அறைகளுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் தோன்றியிருக்கிறது. அப்போதே சில நாட்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரி காலத்திலும் ஆஸ்டல் வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்து அதே விசித்திர பழக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் அந்த பழக்கம் தொடர்ந்திருக்கிறது. நள்ளிரவில் பக்கத்து வீடுகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.

    (இந்த விசித்திர மனோபாவத்திற்கு ‘வாய்யூரிஸம்’ (Voyeurism) என்று பெயர். இவர்கள் இரவு நேரங்களில் ஆக்டிவ்வாக செயல்படுவார்கள். காலை நேரங்களில் சோர்ந்துபோய் காணப்படுவார்கள். எதிர்பாலினத்தை சேர்ந்த இன்னொருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்த்தால்தான், இவர்களுக்கு திருப்தியும், தூக்கமும் வரும். இந்த இயல்பு இருப்பவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து இதில் இருந்து விடுபட முன்வரவேண்டும். இவர்களுக்கு மனநல சிகிச்சைகள் தேவைப்படும்)

    நெரிசல் மிகுந்த பஸ், ரெயில், திரு விழாக் கூட்டங்களில் பெண்களை குறிவைத்து, நீந்திச்செல்வதுபோல் சில ஆண்கள் முன்னும், பின்னுமாக நடப்பார்கள். உரசுவது, வருடுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள். மக்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் இப்படி நடமாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    (இத்தகைய மனோபாவ குறைபாடு ‘ப்ரோட்டரிஸம்’ (frotteurism) என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை பெண்களால் எளிதாக அடையாளம் காண இயலும். தங்களை அப்பாவிபோல் அடையாளங்காட்டிக்கொண்டு, எதேச்சையாக நடப்பதுபோல் தொடுவார்கள். முறைத்துப்பார்ப்பது, அதட்டுவது போன்ற செயல்பாடுகளை இவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்)

    பெண்களின் உள் ஆடைகளை மட்டும் திருடி சுகம் காண்பவர்களும் உண்டு. இத்தகைய விசித்திர சுபாவங்கள் கொண்டவர்கள் தவறு செய்பவர்களாகவே இருந்தாலும், இவர்கள் ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மனஊனம் கொண்டவர்கள். பிறப்பிலே அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களை இத்தகைய மனோபாவத்திற்கு மாற்றுகிறது. தேவையில்லாதவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதும், கேட்பதும்கூட அவர்களை இந்த நிலைக்கு மாற்றிவிடும். சிலர் சிறுவர்களாக இருக்கும்போது அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகி யிருப்பார்கள். தான் வளர்ந்து பெரியவர் ஆன பின்பு, தான் பாதிக்கப்பட்ட அதே வழியில் மற்றவர்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். தமது நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய விசித்திர சுபாவங்களுக்கு அடிமையாகிறவர்களும் உண்டு.

    பொதுவாக இத்தகைய விசித்திர குணாதிசயம் கொண்டவர்கள் சமூக பயம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாகவும், நான்கு பேர் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். பெண்களை நினைத்து அச்சப்படுவார்கள். அவர்களது முகத்திற்கு நேராக பார்த்து பேசும் தைரியம்கூட இருக்காது. பெண்கள் முறைத்துப் பார்த்தாலே அந்த பகுதியில் இருந்து நகர்ந்துவிடுவார்கள். திருமணமானவர்களாக இருந்தாலும், இவர்களது பாலியல் வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட விசித்திர குணம் கொண்டவர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.
    தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் அ‌திக நேர‌ம் ஆகு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்ததே. ஆனா‌ல் து‌ணியை‌த் தை‌க்க‌க் கொடு‌க்கவு‌ம் நேர‌ம் ஆ‌கிறது இ‌ப்போதெ‌ல்லா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் அ‌‌த்தனை மாட‌ல்க‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. எ‌ந்த மாட‌லி‌ல் சுடிதாரையோ, ஜா‌க்கெ‌ட்டையோ தை‌ப்பது எ‌ன்று முடிவெடு‌‌ப்பது எ‌ன்பது பெ‌ண்களு‌க்கு பெரு‌ம் ‌பிர‌ச்‌‌சினையா‌கிறது.

    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன. பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இ‌ல்லாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

    ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள். அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

    முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லாவற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.

    அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. பு‌திதாக வரு‌ம் மாட‌ல்களை‌த்தா‌ன் இளசுகளு‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தா‌ங்க‌ள் தவறாக தை‌த்து ‌விடு‌ம் பே‌ன்டினை‌க் கூட மாட‌ல் எ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ‌விடு‌கி‌ன்றன‌ர் தைய‌ல்கார‌ர்க‌ள்.

    தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சா‌பி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது. அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.

    கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.
    ×