search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.
    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.

    கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

    திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

    துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

    கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

    இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

    மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.

    12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

    கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

    திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

    துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

    கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

    மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

    சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

    2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

    ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

    அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

    கல்பங்களின் விவரம் :

    1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.

    கடகம் ராமசாமி
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
    கல்கி:

    புராணங்களின் கூற்றுப்படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் இந்த கல்கி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை கலியுகத்தின் இறுதியில், தீய எண்ணங்களும், தீய சக்திகளும் மக்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் போது, அதை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் அவதாரம் என்று கூறப்பட்டிருக்கிறது. வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடன் கல்கியாக விஷ்ணு தோன்றுவார். கல்கி அவதாரம் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் போது, கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    காளிதாசர் :

    சமஸ்கிருத இலக்கியங்களில் சிறந்து விளங்கிய புலவர், காளிதாசர் ஆவார். இவர் நாடக கவிதை நடையில் எழுதிய ‘குமாரசம்பவம்’ என்னும் நூல் காவிய கவிதை களைக் கொண்டது. இந்த நூல் சிவ- சக்தி அருளால் உருவான குமரன் பிறப்பின் வரலாற்றைப் பற்றி விளக்குகிறது. இது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இது தவிர ரகுவம்சத்தில் பிறந்த ராமனின் வரலாற்றையும், அவர் அயோத்தியின் அரசராக இருந்த கதையையும் நூலாக்கியுள்ளார். ‘மேகதூது’ என்னும் கற்பனை படைப்பில், காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள், மேகங்களை தூது அனுப்புவதாக கூறியிருக்கும் நயம் சிறப்பு வாய்ந்ததாகும். ‘அபிங்ஜனசகுந்தலா’, ‘மாலவிகாக்னிமித்ரா’, ‘விக்ரமோர்வசியா’ போன்றவை இவரின் மேலும் சிறந்த படைப்புகள். பேரரசர் விக்ரமாதித்யாவின் அரசவையை அலங்கரித்த புலவர்களில் ஒருவர் காளிதாசர் என்று சொல்லப்படுகிறது.

    காலிங்கன் :

    கடலில் வசித்து வந்த காலிங்கன் என்ற ஐந்து தலை நாகம், கருடனுக்கு பயந்து யமுனை நதியில் தஞ்சம் அடைந்தது. காலிங்கன் கொடிய விஷம் கொண்ட நாகம் என்பதால், அதன் மூச்சுக் காற்றுபட்டு, யமுனை நதி முழுவதும் விஷமாகிப் போனது. இதனால் நதியில் தண்ணீர் அருந்தும் ஜீவராசிகள் மடிந்தன. யமுனை நதியின் கரையோரத்தில் இருந்த பசுமையான மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் கருகிப் போயின.

    பிருந்தாவன மக்கள் இதனால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். பாலகனாக இருந்த கிருஷ்ணர், இதனையெல்லாம் அறிந்து யமுனை நதிக்குள் சென்று காலிங்கனுடன் போரிட்டு அடக்கி, அதன் தலைகள் மீது நடனம் புரிந்தார். பின்னர் காலிங்கனை கடலுக்குச் செல்லும்படி கூறினார். கருடனுக்கு பயந்த காலிங்கனிடம், “என்னுடைய காலடி தடம் உன் தலையில் இருப்பதால் கருடனால் உனக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். இதையடுத்து காலிங்கன் யமுனை நதியில் இருந்து கடலுக்கு சென்றது.

    கயிலாயம் :

    சைவ சமயத்தின் இறைவனாக இருக்கும் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் வாசம் செய்வதாக நம்பப்படும் இடம் கயிலாயம் எனப்படும் கயிலை மலை. இது இமய மலையில் வடக்கு பகுதியில் உள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இந்துக்களின் புனித தலங்களில் முதன்மையானதாக கயிலாயம் போற்றப்படுகிறது. ஆன்மாக்கள் மனித உடலை விட்டு பிரிந்ததும் சென்றடையும் இடம் கயிலாயம் என்றும் சொல்வார்கள். பகீரதன் என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்கள் நன்மை அடைவதற்காக, கங்கையை பூமிக்கு வரவழைக்க சிவபெருமானை வணங்கினான். அதன் மூலம் சிவபெருமான் கங்கையை பூமிக்கு வரவழைத்துக் கொடுத்தார்.

    14 மனுவந்தரங்கள் :

    1.சுவயம்பு, 2.சுவாரோசிஷம், 3.உத்தமம், 4.தாமசம், 5.ரைவதம், 6.சாக்சூசம், 7.வைவசுவதம், 8.சாவர்ணி, 9.தக்ச சாவர்ணி, 10.பிரம்ம சாவர்ணி, 11.தர்ம சாவர்ணி, 12.ருத்திர சாவர்ணி, 13.ரவுசிய தேவ சாவர்ணி, 14.இந்திர சாவர்ணி ஆகியவையாகும்.
    முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.
    முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.

    திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.

    திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

    இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகார தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

    திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒலிக்கப்படும் மணிஓசைக்கு பிறகே, வீரபாண்டிய கட்டபொம்மன் உணவருந்துவார் என்று ஒரு செய்தி உண்டு. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தற்போது ராஜகோபுரத்தின் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

    சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில், இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

    திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

    வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.

    சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

    மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

    நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

    அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

    நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.

    பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

    ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

    காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.
    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
    “சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்
    இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச
    அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
    மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”

    -திருஞானசம்பந்தர்

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

    இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

    பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.

    ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

    திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
    கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார்.

    இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர். 
    யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.


    மிக்கானை மறையாய் விரிந்த விளக்க என்னுள்
    புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
    தக்கானைக் கடிகைத்தடங் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து ய்ந்து போனேனே!

    -- திருமங்கையாழ்வார்

    கார்த்திகை பிறந்து விட்டாலே அய்யப்ப சரண கோஷமும், தீப திருவிழா கோலாகலமும் நிறைந்து இருக்கும். இத்தகைய சிறப்பான கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதமும் நிகழ்கிறது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மட்டுமே இந்த “கண் திறப்பு” நடக்கிறது.

    நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதத்தை நேரில் கண்டு, பலன் பெற விரும்பும் பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் சோளிங்கர். இங்கு யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.

    எனவே சோளிங்கர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை கார்த்திகை மாதத்தில் என்றாவது ஒருநாள் சென்று வழிபட்டால் அரிய பலன்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலில் சோளிங்கர் திருத்தலம் பற்றிய சிறப்புகளை காணலாம்....

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.  எந்த நூற்றாண்டில் இந்த தலமும், கோவிலும் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை என்றாலும் 6-வது நூற்றாண்டில் ஏற்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் கருதப்படுகிறது.

    சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள். சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. சென்றால் பெரியமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீயோக நரசிம்மர் வீற்றிருக்கும் மலை அடிவாரத்தை நாம் அடையலாம். இங்குள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ‘கடிகாசலம்‘ என்னும் பெயரும் உண்டு. அதாவது ‘கடிகா+அசலம்‘ என்று பொருள்படும்.

    ‘கடிகா’ என்றால் ஒரு கால அளவு அல்லது நாழிகை என்று அர்த்தம். ‘அசலம்’ என்றால் மலை என்று பொருள். வாமதேவர், பிரகலாதன், சப்தரிஷிகள் ஆகியோர் நினைத்தவுடன் யோக நரசிம்மர் இம்மலையில் நாழிகைப் பொழுதில் காட்சி அளித்து அவர்களை ஆட்கொண்டார். மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, பய பக்தியுடன் நமஸ்காரம் செய்து எங்களை நல்லபடி ஏற்றி விட வேண்டும் என வேண்டிக் கொண்டு முதலில் பெரிய மலையில் ஏறத் தொடங்க வேண்டும். பெரிய மலை திரும்பிய திசையெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.

    நாம் பெரிய மலையில் ஏறி சன்னிதானத்தை அடையும் வரை வழியில் ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு கூட்டங்கள் நம்மை முன்னும் பின்னும் தொடர்ந்து வரும். கையில் பை, கேரி பேக் எடுத்துச் செல்ல முடியாது. பழ வகைகள் போன்றவை இருக்கும் என்று நினைத்து குரங்குகள் அவற்றை பிடுங்கிக் கொள்ளும். எனவே கவனமாக செல்ல வேண்டும்.

    1305 படிகளைக் கடந்து மலை மீதுள்ள கோவிலை அடைந்ததும் அங்குள்ள குழாயில் கை, கால்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். மலைக்குன்றில் உட்புறம் சிறிய குகை போன்ற அமைப்பில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சதுர் புஜங்களுடன் இருப்பதை காணலாம். அதில் இரண்டு கைகளை திருவடி முட்டில் வைத்த வண்ணம் யோகபட்டத்தை கட்டிக் கொண்டு ‘யோக நரசிம்மனாய்’, ‘சாந்த சொரூபியாய்’ லட்சுமி நரசிம்மன் நமக்கு தரிசனம் அளிக்கிறார்.

    அவரது தரிசனம் நமக்குப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகும். அதனால்தான் ஸ்ரீயோக நரசிம்மரை ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் தம் தீந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பாடி, மனம் உருகி மங்களா சாசனம் செய்துள்ளனர். மூலவருக்கு மலைமேல் ஒவ்வொரு சுவாமி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமையன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.



    108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை. இங்கு தாயாருக்கு ‘அமிர்தவல்லி’ என்று பெயர். வலது திருக்கரத்தால் அமிர்தம் போன்ற அனுகிரகத்தை அளித்துக் கொண்டு நான்கு புஜங்களுடன், இரண்டு திருவடிகளையும் மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அப்போதுதான் மலர்ந்த செந்தாமரை போன்ற மந்தகாச முகச்சிரிப்புடன் தாயாரின் தரிசனம் இருக்கிறது.

    பெரிய மலையில் தரிசனம் செய்து முடித்த பிறகு கீழ்இறங்கி 2 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கும் சின்ன மலைக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் ‘கொண்டபாளையம்‘ என அழைக்கப்படுகிறது. ஸ்ரீஆஞ்சநேயரை தியானம் செய்து கொண்டே சிறிய மலையில் உள்ள 405 படிகள் ஏறிக் கோவிலை அடைலாம். என்ன ஆச்சரியம். தெய்வீகமான சூழ்நிலையில் அமைதியான கோவிலாக ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தெப்ப உற்சவம் நடக்கும் வற்றாத ‘சக்கரைக்குளம்’ என்றும் அனுமத்புஷ்கரணி என்றும் அழைக்கப்படும் திருக்குளத்தில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு மேற்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

    மற்ற இடங்களில் நாம் தரிசிக்கும் ஆஞ்சநேயர் போலில்லாமல் ‘சிறிய திருவடி’ என அழைக்கப்படுபவர் தனது இரு திருவடிகளையும் மடக்கி யோக பட்டத்தில் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு, அந்த இரு கைகளும் நம்மைக் கை காட்டி ‘வாருங்கள்’ என்று அழைக்கும் திருக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இங்கு ஆஞ்சநேயருக்கும் எம்பெருமானுக்கே உரித்தான சதுர்புஜம் (நான்கு கைகள்) உள்ளன. இரு கைகளில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்குமாக அருள் பாலிக்கிறார்.

    அந்த சங்கும், சக்கரமும் பக்தர்களை பாதுகாப்பதற்காக ஸ்ரீயோக நரசிம்மரால் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டதாம். அதனாலேயே இங்கு அனுமனை ‘திருவடி’ என அழைப்பதில்லை. மகாவிஷ்ணு சொரூபமாகவே நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சங்கு, சக்ர ரூபியாக ஸ்ரீயோக ஆஞ்சநேயன் தரிசனம் நமது தேசத்தில் எங்குமே இல்லை.

    ஸ்ரீஅனுமனை வழிபட்ட பிறகு வெளியே வந்து புஷ்கரணிக் கரையில் தரிசனம் தரும் ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசங்கநாதரையும் வணங்க வேண்டும். எல்லா கோவில்களிலேயும் ஸ்ரீராமனை உத்தேசித்து அனுமன் சன்னதி இருக்கும். இங்கு ஸ்ரீயோக ஆஞ்சநேயரை உத்தேசித்து ஸ்ரீராமபிரான் வந்து தரிசனம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆஞ்சநேயருக்குத் தனியாகவே பிரசாதங்கள், நிவேதனம் செய்யப்படுகிறது.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும். இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு- முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர். விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன் கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.
    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும். பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.'
    நரசிம்மர் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.
    தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் நரசிம்மர். இரணியனைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்டு தூணிலிருந்து வெளியே வந்தவர். இரணியனைக் கொல்வதற்காகவே அவதரித்ததால் கோபமே உருவான இந்த மூர்த்தி, பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார்.

    உக்ர நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று பல மூர்த்தங்களில் இவருடைய தோற்றங்கள் உள்ளன. என்றாலும் பக்தர்கள் வணங்கிப் பரவசப்படுவது சாந்த சொரூபமாய் விளங்கும் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆகியோரைத்தான்.

    மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல் நரசிம்மர் நினைத்தவுடன் பலனைக் கொடுக்கக் கூடியவர். பக்திக்கு வசப்பட்டு பிரத்தியட்சமாய் வரக்கூடியவர். தான் வணங்கும் ஆதிசங்கரரை அழைத்துச் சென்ற கபாலீசனை, அவருடைய சிஷ்யன் மீது ஆரோகணித்து அடித்துக்கொன்றதைப் போல் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

    கண்கண்ட தெய்வமாக விளங்கும் நரசிம்மர் சோளிங்கரில் யோக நரசிம்மராகவே எழுந்தருளி இருக்கிறார். சப்த ரிஷிகள் நரசிம்மரை தரிசனம் செய்ய விரும்பி இம்மலையில் தவம் செய்ய ஒரு நாழிகை நேரத்திற்குள் தரிசனம் கிடைத்ததால் அகமகிழ்ந்து கடிகாசலம் என்று இத்தலத்திற்கு பெயர் சூட்டினார்கள்.
    ‘அக்காரக்கனி’ என்பது மூலவருக்கு தமிழ்ப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள், பைத்தியம், சித்தப்பிரமை கொண்டவர்கள், ஏவல், பில்லி சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் சிலநாள் தங்கி இருந்தால் சகல உபாதைகளும் நீங்கி, நன்மை பெறுவதாக நம்பிக்கை யோடு சொல்கிறார்கள்.

    குறை தீர்த்து வைக்கும் குன்றுப் பெருமாள்கள் இருவரையும் தரிசித்தால் மட்டுமே பலன் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதிகாலையில் அடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடிப் பெரிய மலை மீது ஏறி, நரசிம்மனை தரிசித்து விட்டு இறங்கி வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு சிறிய மலை ஏறி யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒரே நாளில் தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்.

    பெரியமலை சற்று செங்குத்தானது. நடக்க இயலாதவர்களையும் நோயாளி களையும் டோலிகள் மூலம் தூக்கிச் செல்ல வசதி இருக்கிறது. அடிவாரத்தில் குளக்கரையில் கருடாரூட வரதராஜரின் சந்நிதி இருக்கிறது. இந்தக் கோவிலில் மூலவர் இல்லை. உற்சவர் மட்டுமே இருக்கிறார். இக்கோவிலை உச்சிகால வேளையில் மட்டும்தான் திறக்கிறார்கள். ‘தொட்டாச் சாரியார்’ என்ற தன் பக்தருக்கு பகவான் காஞ்சி வரதராஜப் பெருமாளாகக் கருடசேவை தந்தருளியதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

    இந்த உற்சவ மூர்த்திக்குப் பக்தவத்சலர் என்றுபெயர். இவருடைய சந்நிதிக்குப் பின்புறம் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. அதில் ஆண்டாள், ஆழ்வார்கள், எறும்பியப்பா, தொட்டாச்சார்யார் முதலியவர் களுக்குத் தனி சந்நிதிகளும் உள்ளன.

    108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

    2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

    3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

    4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.

    5. உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

    6. பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

    7. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

    8. ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.

    9.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும்.

    10. வேலூர்-திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    11.காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்.

    12. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி.

    13. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது.

    14. சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

    15. ஸ்ரீநரசிம்மர் ‘உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லட்சுமியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் சோளிங்கர் யோக நரசிம்மரை ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்றும் பூசனைச் செய்கிறார்கள்.

    16. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

    17. ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

    18. மலைக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்சலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

    19. ஒப்பற்ற திவ்யதேசமான சோளிங்கர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    20. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.

    21. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

    22. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.

    23. புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    24. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


    25. இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

    26. கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

    27. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

    28. சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம்.

    29. சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

    30. தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.

    31. பெருமாளுக்கு ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோவில்களில் மொட்டை போடுவது. சில கோவில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    32.பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.

    33. இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

    34. திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

    35. வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானது கடிகாசலம்.

    36. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் காணப்படும் இத்திவ்விய தேசம் பற்றிய வரலாறுகள் யாவும் இனிய எளிய தமிழ் நடையில் கூறப்பட்டுள்ளன.

    37. வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம்.

    38. தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

    39. மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கடிகேசனை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    40. பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் எத்தொல்லையும் ஏற்படாது. அதில் நீராடும் புண்ணியவான்களைக் கண்டு அஞ்சி அவை விலகியே நிற்கும்.

    41.சோளிங்கர் தலத்தில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜை கள் நடத்தப்படுகிறது.

    42. இத்தலத்தில் நரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    43.கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.

    44. சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாரம்பரியமாக பூஜை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சோளிங்கர் தலத்து தலைமை அர்ச்சகராக ஸ்ரீதர் பட்டாச்சார்யா பூஜை செய்து வருகிறார்.

    45. சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

    46 கோவிலின் விமானம் சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் ஆகும்.

    47. கோயில்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

    48. பெரிய மலையில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு வெள்ளிதோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனமும், கார்த்திகை மாதத்தில் உற்சவமும் நடைபெறுகின்றது.

    49. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

    50. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் சோளிங்கர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக சென்றால் எளிதான பயணமாக இருக்கும்.
    வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் குருபலம் அவசியம். குரு பலம் என்றால் என்ன? குரு பகவான் யார்? அவரால் ஏற்படும் நற்பலன்கள் எப்படி வேலை செய்யும்? என்று பார்க்கலாம்.
    மனித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளில் நவக்கிரகங்களின் பங்கு அளப்பரியது. நவக்கிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது. கிரகங்களின் பெயர்ச்சியில் குரு, ராகு-கேது, சனிப்பெயர்ச்சிக்கு எல்லோரும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் குருப்பெயர்ச்சி என்றால் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். பொதுவாக திருமணத்திற்கு என்று அல்ல, வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் குருபலம் அவசியம்.

    குரு பலம் என்றால் என்ன? குரு பகவான் யார்? அவரால் ஏற்படும் நற்பலன்கள் எப்படி வேலை செய்யும்? என்று பார்க்கலாம்.

    குரு பகவான், நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகம் ஆவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல், குரு பகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே, வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தன காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான், மங்கள காரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக் கிறார். இறை வழிபாட்டிற்கும், ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

    ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மத குருமார்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள், சாந்தமான சுபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெறுதல் ஆகிய அனைத்திற்கும் காரகனாக இருப்பவர் குரு.

    ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சி களால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.

    தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.

    குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.

    பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. ‘குரு நின்ற இடம் பாழ்’ என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.

    கெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடை யோகம் ஆகியவை, குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள் ஆகும்.

    குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    2-ல் குரு வரும் போது, குடும்பத்திற்கு நலம் பயக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குழந்தை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நிகழ்த்தி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

    5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

    7-ல் குரு வரும் போது, திருமணம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

    9-ல் குரு வரும் போது தந்தை, மூத்தவர்களுக்கு நலம் சேரும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். வெளி மாநில, வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு யோகம், தந்தை வழி முன்னோர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

    11-ல் குரு வரும் போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் தன லாபம், பாலிசி முதிர்வு, சொத்துக்கள் கிடைக்கும்.

    மேலும் குருவுக்கு 1, 5, 9 பார்வை பலம் உண்டு. ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் கூட கோச்சாரத்தில் 2, 5, 7, 9, 11-ம் பாவத்துடன் சம்பந்தம் பெறும் போதும், 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவத்தையும், அந்த பாவத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார்.

    கோச்சாரத்தில் குரு, சூரியனை பார்க்கும் போது ஆன்மபலம், ஆத்ம சுத்தி கிடைக்கும். அரசு உத்தியோகம், கவுரவ பதவிகள், அரச பதவிகளும் கிடைக்கச் செய்வார்.

    சந்திரனை பார்க்கும் போது, தாய், தாய் வழி உறவினர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாமியாருடன் நல்லிணக்கம் ஏற்படும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய் தீரும்.

    செவ்வாயை பார்க்கும் போது, நிலம், புதிய வீடு, வாகன யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து விற்பனையாகும். ரத்தம் தொடர்பான நோய் நீங்கும். மத்திய அரசு வேலை, மத்திய அரசின் சன்மானம் கிடைக்கும்.

    புதனை பார்க்கும் போது, வெளியில் சொல்ல முடியாத.. மறைமுகமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். சுமாராக படிக்கும் பிள்ளைகள் கூட நல்ல பெயரெடுக்கும் பிள்ளையாக மாறும்.

    குருவை பார்க்கும் போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பீர்கள்.

    சுக்ரனை குரு பார்த்தால் நகை வாங்கலாம். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்பீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

    சனியை பார்த்தால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

    ராகுவை பார்த்தால் அதிர்ஷ்டம் தொடர்பான பண வரவு கிடைக்கும்.

    கேதுவை பார்த்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்திகர்கள் கூட ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள்.

    இப்படி மனித வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் குரு பலத்தினால் தான் நடத்தி தரப்படுகிறது என்பதால், ஒருவரது ஜாதகத்தில் குருவின் பங்கு அளப்பரியது.

    ஜனன ஜாதகத்தாலும், கோச்சாரத்தாலும், குரு பலம் குறைவாலும் அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது.
    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது. நரசிம்மருக்கு தீபாரதணை காட்டி தீர்த்தம் தந்த பிறகு அர்ச்சகர் பக்தர்களின் முகத்தில் சிறப்பு தீர்த்தம் ஒன்றை தெளிப்பார். நரசிம்மரின் காலடியில் பெரிய தாம்பள தட்டுகளில் உள்ள பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தையே பக்தர்கள் முகத்தில் தெளித்து சிறப்பு செய்கிறார்கள். 2 அல்லது 3 தடவை முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

    நரசிம்மரின் பரிபூரண அருள் பெற்றுள்ள அந்த தீர்த்தத்தை கையாலோ அல்லது துணியோலோ துடைக்ககூடாது. புதிதாக சோளிங்கர் ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு இந்த குறிப்பை அர்ச்சகர்கள் சொல்லி விடுகிறார்கள். எனவே அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை யாரும் துடைப்பதில்லை.

    புனிதமான இந்த தீர்த்தம் முகத்தில் பட்ட மறு வினாடியே பக்தர்கள் முகம்‘பளிச்’ சென புத்துணர்ச்சி பெற்று விடுகிறது. கண்திருஷ்டி, பீடை, பில்லி, சூனியம் எது இருந்தாலும் தீர்த்தம் பெற்ற மனுவினாடியே அவையெல்லாம் பஞ்சாக பறந்தோடி ஓடி விடுகின்றன.

    1350 படிக்கட்டுகள் ஏறி வந்த களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. எனவே பெரிய மலைக்கு சென்று ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை வழிபட்டதும் அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை பெறத் தவறாதீர்கள்.
    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர் - கிருதசி தம்பதியரின் மகனான துரோணர் பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.
    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான்.

    இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

    இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.
    ×