search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95509"

    எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
    நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

    அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.

    இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறு ஆண்டுகள் பழமை வாழ்ந்தது ஆகும்.

    கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவிலை கிராம பொதுமக்கள் சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் ஸ்ரீகற்பக விநாயக ருக்கு கோபுரம் அமைத்தனர்.

    ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீநவ கிரக மூர்த்திகளையும் புதுப்பித்தனர். நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டப்பா, குட்டி சிவாச்சாரியார்கள் சுமந்த வண்ணம் கோவிலை வலம் வந்தனர்.

    காலை 8.30 மணியளவில் கோபுர கலசம், மூலவர், பரிவார மூர்த்திகள் நவகிரகம் உள்ளிட்ட வைகளுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் 48 நாட்கள் தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். ஸ்ரீசோலையம்மன்- குழந்தையம்மன் திருக்கோவிலில் திருவாச்சி திருவிழா இன்று மாலை துவங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன்கோவிலில் 23ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த வாழ்முனி நாயக்கர்- மீனாட்சி அம்மாள் தம்பதியரால் இக்கோவில் சிறிய அளவில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    அம்மனை வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியத்தினை அருளுவதாக நம்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் வாழ்முனி தம்பதியரின் பேரனும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பெரும் பொருட்செலவில் இந்த கோவிலை தற்போது புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று காலை 10.30 மணி அளவில் கோபுர கும்பாபிஷேகமும், 11 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா. பாண்டியராஜன் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்து உள்ளார்.

    திருப்பதி மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர். #tirupati #kumbabishekam #tirupatikumbabishekam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 11-ந் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.

    12-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.

    13-ந் தேதி 8 வகையான பொருட்களை இடித்து அர்ச்சகர்கள் அஷ்டபந்தனம் தயாரித்தனர். மேலும் மூலவர் சன்னதி, இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தங்க கொடிமரம் புனரமைக்கப்பட்டது.

    14-ந் தேதி அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. ஏழுமலையான் திருவடி மற்றும் பீடத்தின் இடைவெளியில் அஷ்டபந்தன பசை நிரப்பப்பட்டது. நேற்று சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், பூர்ணாஹூதியும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

    தலைமை தீட்சிதர் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.



    மூலவர் ஏழுமலையானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்த அதே நேரத்தில், வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, பாஷ்யகாருலவாரு, யோக நரசிம்மர், விஷ்வசேனர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் இருந்து ஜீவசக்தியை மீண்டும் மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பித்தனர். பிறகு, மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம், அட்சததாரோ பணம், பிரம்மா கோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இருந்தாலும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.

    இன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் சிறப்பு தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடக்கிறது. #tirupati #kumbabishekam #tirupatikumbabishekam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் அன்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே திருமலையில் உள்ள நான்கு மாடவீதிகள் உள்பட அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியின் 4-வது நாள் நிகழ்ச்சிகளாக நேற்று யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை மூலவர் வெங்கடாஜலபதி, வகுளமாதா தேவி, விமான வெங்கடேஸ்வரர், வரதராஜசாமி, கருடாழ்வார், யோகநரசிம்மர், பாஷிங்கார் மற்றும் பேடி ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கலச ஸ்நாபன திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. இரவு யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. இந்த மகா சாந்தி திருமஞ்சனம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.


    கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான இன்று (வியாழக்கிழமை) மகா கும்பாபிஷேகம் காலை 10.16 மணியில் இருந்து 12 மணிக்கிடையே நடக்கிறது. அப்போது கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் மூலவருக்கு நைவேத்தியம், அட்சத தாரோபணம், பிரம்மாகோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 
    திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு அஷ்டபந்தனம் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருப்பதி வெறிச்சோடியது. இதனால் உண்டியல் வருமானம் குறைந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஹோமங்கள் மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்து வருகின்றன. தங்கத் தர்ப்பை ஒன்றை தேவஸ்தானம் உருவாக்கியிருந்தது. அதன் மூலமாக மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் ஜீவசக்தி முழுவதும் 18 கும்பங்களுக்கு மாற்றப்பட்டது. அந்த 18 கும்பங்கள் யாக குண்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வேத விற்பன்னர்கள் சங்கசூரணம், கைரீகம், வெள்ளைகுக்கிலம், லக்கை, வெண்ணெய், திபுலசூரணம், சிவப்பு பஞ்சு, தேனைவைணம் ஆகிய 8 வகையான திரவியங்களால் அஷ்டபந்தன சூரணம் தயார் செய்து, மூலவர் வெங்கடாஜலபதியின் பத்ம பீடத்திலும், கோவிலில் உள்ள அனைத்துப் பரிவார மூர்த்திகளின் பீடத்திலும் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோவிலில் ராமுலவாரிமேடை பகுதியில் உள்ள கதவுகள் மூடப்பட்டன. கோவிலுக்குள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    கோவில் வளாகத்தில் யாகம் நடக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரையிலும் மொத்தம் 35 ஆயிரத்து 400 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.



    தேவஸ்தானத்தின் தொடர் கெடுபிடியால் திருப்பதிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் திருப்பதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. அலிபிரி-திருமலை இடையே பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது. தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தரிசன வரிசைகள், தங்கும் அறை வழங்கும் மையங்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடுகிறது.

    அன்னதான மையத்தில் மிக குறைவான பக்தர்கள் மட்டுமே இலவச உணவை சாப்பிடுகின்றனர். பக்தர்கள் அதிகம் வராததால் இலைகள் போடப்பட்டு, பக்தர்களுக்காக ஊழியர்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து பக்தர்களின் வருகை குறைந்ததால், உண்டியல் வருமானமும் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக உண்டியல் வருவாய் ரூ.3 கோடி இருக்கும்.

    தற்போது பக்தர்களின் வருகை குறைந்ததால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையனின் உண்டியல் வருமானம் ரூ.73 லட்சமாக குறைந்தது. 6,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    கும்பாபிஷேகத்திற்காக மூலவர் கருவறையிலும் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் தங்க கோபுரத்திலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்றும் நடக்க உள்ளது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் மராமத்து பணிகளை அர்ச்சகர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். மேலும் யாகசாலையில் உள்ள கும்பத்திற்கு தொடர்ந்து வேதபண்டிதர்கள் மற்றும் ரூத்விக்குகள் மூலமாகயாகம் நடைபெற்று வருகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்குரார்ப்பணத்துடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. அதையொட்டி விஸ்வசேனர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்திர முறைப்படி மகா கும்பாபிஷேக விழா 16-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. அதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    யாக சாலையில் வைதீக காரியகர்ம பூஜைகளை மேற்கொள்ள நேற்று வரை மொத்தம் 45 வேத விற்பன்னர்கள் திருமலைக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யாக சாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது. உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை, புதிதாக அமைக்கப்பட்ட யாக சாலையில் உள்ள ஹோம குண்டங்களில் அக்னி வளர்க்கப்பட்டு யாகம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து புண்ணியாவதனம், பஞ்சகாவ்யாராதனை, வாஸ்து ஹோமம், ரக்‌ஷாபந்தனம் ஆகியவை நடக்கின்றன. இரவு 9 மணியளவில் கோவிலில் உள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் சக்தியை 18 கும்பங்களில் ஆவாகனம் செய்யப்படுகிறது. அந்தக் கும்பங்களுக்கு தினமும் நித்யகைங்கர்யம் செய்யப்படுகிறது.

    நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்களில் 8 ரகமான திரவியங்களால் அஷ்டபந்தனம் தயார் செய்து மூலவரின் பத்ம பீடத்தில் வைக்கப்படுகிறது. 15-ந்தேதி (புதன்கிழமை) காலை கைங்கர்யம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, மதியம் 1 மணியளவில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு 14 கலசங்களுடன் மகா சாந்தி, திருமஞ்சனம் செய்யப்படுகிறது. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கலா வாகனம் என்ற பூஜை நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கும், தங்க விமான பிரகாரத்துக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆராதனை, நைவேத்தியம், பிரம்மஹோச பூஜைகள், அச்சதோரோபணம் ஆகியவை நடக்கின்றன.

    அன்று இரவு 8 மணியளவில் பெரிய சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 17-ந்தேதி வழக்கம்போல் அனைத்துத் தரிசன முறைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
    திருப்பதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப் பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி 6 நாளில் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மகாசம்ப்ரோசணம் எனப்படும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப்பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. யாக குண்டங்களில் பயன்படுத்துவதற்காக டன் கணக்கில் நெய் டின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் தெரிவித்துள்ளார்.

    6 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திருப்பதி கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாளை முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த நாட்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன முறையில் மட்டுமே சாமியை தரிசிக்க இயலும். தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.



    இந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோவிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தரிசன முறையில் தேவஸ்தானம் கொண்டு வந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11-ந்தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி, அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தள்ளிப்போனது.

    பின்னர், கோவில் நிர்வாகம் மற்றும் பக்த பிரமுகர் களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வருகிற டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடித்து 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நவராத்திரி மண்டபத்தில் ஒரு யாகசாலையும், கீழவாசல் சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் மற்றொரு யாகசாலையும் அமைக்கப்பட உள்ளது. நவராத்திரி மண்டபத்தில் அமைக்கப்படும் யாகசாலையில் டிசம்பர் 7-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 9-ந் தேதி காலை ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்கள் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமையும் யாகசாலையில் 10-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 12-ந் தேதி காலை பிரதான சன்னதிகளான பிரசன்ன விநாயகர், ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி விமானங் களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையின் அனுமதிபெற கோவில் நிர்வாகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை கோவில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
    திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கோவிலூர் நகரம். இங்கு 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மூலவர் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கிய படி அருள்பாலிக்கிறார். கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல் கோவிலில் ஒட்டிய தெருக்களின் நுழைவுவாயிலாக அமைய பெற்று இருப்பது இதன் தனி சிறப்பாகும்.

    மேலும் நடுநாட்டு திருப்பதி என்றும் இந்த கோவிலை அழைப்பாளர்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவரையம் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் மூலவர் சன்னிதிக்கு திருப்பணிகள் நடைபெற்று ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் ராஜகோபுரம், லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    அதன்படி, விழா கடந்த 7-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம், பூர்ணாகுதியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந்தேதி காலையில் கும்ப ஆராதனம், சுதர்சன யாகமும், மாலையில் பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடந்தது. பின்னர் 9-ந்தேதி காலையில் வாஸ்து ஆராதனம், யாகசாலை அலங்காரம், கும்ப ஸ்தாபனமும், மாலையில் கும்ப அலங்காரம், பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், சாற்றுமுறையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ததுத்த யாகமும் நடந்தது. அதை தொடர்ந்து 7 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் புறப்பாடு நடைபெற்றது.

    9.10 மணிக்கு ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கிழக்கு ராஜகோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்கிற பக்தி கோஷங்களை விண்ணை முட்டும் அளவில் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். இதை தொடர்ந்து கோபுரத்துக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் 10.10 மணிக்கு லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    10.30 மணிக்கு மேல் 12 மணிவரை அட்சத ஆசிர்வாதமும், தீர்த்த பிரசாதங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு சர்வ தரிசனமும் நடைபெற்றது. இரவு ஸ்ரீஆண்டாள்நாச்சியார் சமேச ஸ்ரீதேகளச பெருமாள் பெரிய சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் அரசு துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி உ.வே.தி.ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் விழாக்குழுவினர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

    மேலும் கும்பாபிஷேகத்தை காணவந்த பக்தர்களுக்கு நகரில் ஆங்காங்கே பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், மோர் ஆகியனவும் வழங்கினர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மற்றும் சுகாதார வசதிகளை செய்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கும்பாபிஷேகம் முடிவடைந்தவுடன் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்து உள்ளே சென்றனர். இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நெரிசலை சரி செய்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
    திருப்பதி :

    அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.



    இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், “ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தனர். பிரம்மோற்சவ நாட்களில் அவர்கள் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் அருகில் தனி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். 
    ×