search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96096"

    வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார். #LSPolls #Rangaswamy
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி கட்சியின் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தொகுதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நாராயணசாமி போட்டியிடுகிறார். டாக்டருக்கு படித்த சிறுவயது இளைஞர்.

    டாக்டர் நாராயணசாமி

    ஒரு இளைஞரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்ற பெருமையை நாம் பெற முடியும். இவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வு ஏற்படும். வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இளைஞர் என்பதால் வேட்பாளர் நாராயணசாமிக்கு சோர்வு ஏற்படாது. நீண்டநாட்கள் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றுவார். நிறைய அனுபவத்தையும், நல்ல அனுபவத்தையும் அவர் பெறுவார்.

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய புதுவை வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் அறிவிக்கப்படுவார் என ரங்கசாமி தெரிவித்தார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி இழந்துள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? என எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். யார்-யார் எப்படி? என தெரியும். அனைவரையும் புதுவை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்று ரங்கசாமி தெரிவித்தார். #LSPolls #Rangaswamy

    புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ரங்கசாமி நாளை அறிவிக்கிறார். #rangasamy #parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.

    அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ரங்கசாமி பேசியுள்ளார். #rangasamy #anbalagan
    புதுச்சேரி:

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை ரங்கசாமி சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க .தலைமை அலுவலகத்திற்கு ரங்கசாமி இன்று காலை வந்தார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். 

    கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் அ.தி.மு.க. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் அமைந்திருக்க வேண்டும். தகவல் தொடர்பில் சிறிய இடைவெளி ஏற்பட்டதால்தான்  ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 

    பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாம் கூடுதலான ஓட்டுக்களை பெறவேண்டும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த சந்திப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #rangasamy #anbalagan
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி அமருவார் என்று அன்பழகன் எம்எல்ஏ பேசியுள்ளார்.
    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட யாரும் முன் வரவில்லை. 

    வேட்பாளர் கிடைக்காத காரணத்தால் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியின் மகனை போட்டியிட கோரி காங்கிரசார் முட்டி போட்டு காத்திருக்கின்றனர். வேட்பாளர் கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி தடுமாறுகிறது. 

    எங்களிடம் கேட்டால் நாங்கள் வேட்பாளர் தர தயாராக உள்ளோம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி அமருவார். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை ரங்கசாமி சந்தித்து பேசினார். #rangasamy #ramadoss #parliamentelection

    புதுச்சேரி:

    அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. சென்னை அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இதற்காக கையெழுத்திடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் நாராயணசாமி நிறுத்தப்படுகிறார்.

    இதையொட்டி முதல் கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் மதியம் 12.30 மணியளவில் ரங்கசாமி சந்தித்தார்.

    அப்போது என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக புதுவையில் பாமக சார்பில் பிரசாரம் செய்ய வேண்டும். புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்களை என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம், தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை பாமக நிறுவனர் ராமதாசிடம் இவர்தான் வேட்பாளர் என அறிமுகம் செய்து வைத்தார். அப்போது டாக்டர் நாராயணசாமி பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் ஆசி பெற்றார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. ரங்கசாமியுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், செயலாளர் ஜெயபால் ஆகியோர் உடன் சென்றனர். #rangasamy #ramadoss #parliamentelection

    ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பேடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரோட்டிலேயே உணவு சாப்பிட்டு இரவு சாலையிலேயே தூங்குகிறார்கள்.

    போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



    கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பேடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.

    எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #GovernorKiranbedi
    பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி அறிவித்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #parliamentelection #nrcongress #rangasamy

    புதுச்சேரி:

    தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அ.தி.மு.கவின் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. புதுவையை பொறுத்தவரை தமிழகத்தில் அமையும் கூட்டணியே இங்கேயும் தொடரும்.

    இதன்படி புதுவையிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதே நேரத்தில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுவையில் மாநில கட்சியாக திகழ்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது.

    அந்த கட்சியின் வேட்பாளர்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

    இதனால் காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகும் அ.தி.மு..க, பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் பேச்சு உள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று உறுதி செய்தார்.

    கட்சியின் ஆண்டு விழாவையொட்டி நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார்.

    அதோடு புதுவை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார். வழக்கமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பொறுத்தவரை அதிரடியாக எந்த முடிவையும் அறிவிக்க மாட்டார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இறுதிவரை யாருடன் கூட்டணி என்று சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் வேட்பாளர் யார்? என்றே தெரியவந்தது.

    தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் வேட்புமனு தாக்கலுக்கு நெருக்கத்தில்தான் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சியினரே எதிர்பார்த்தனர்.

    ஆனால், இதற்கு நேர் எதிராக கட்சியின் ஆண்டு விழாவில் உறுதிபட பாராளு மன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என உறுதிபூண்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார். #bjp #admk #nrcongress #parliamentelection

    புதுச்சேரி:

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது.

    அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சியடையவும் உதவியாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். உள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். மாணவர், இளைஞர், மீனவர், முதியோர், தொழிலாளர், அரசு ஊழியர், வர்த்தகர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றினோம். இதன்மூலம் புதுவை மாநிலமே பெரும் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரங்கசாமி அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார்?

    பதில்: தகுந்த நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்வோம். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார்.

    கே: பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா?

    ப: நாங்கள் கூட்டணியில்தான் உள்ளோம். கடந்த கால கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    கே: அ.தி.மு.க., பா.ஜனதாவோடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இல்லையே?

    ப: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலிலேயே அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்தோம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்தோம், பிரச்சாரமும் செய்தோம்.

    கே: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப: சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை நாங்கள் பாராட்டினோம். பல நல்ல வளர்ச்சி திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.

    கே: புதுவை முதல்-அமைச்சர் கவர்னரோடு மோதல்போக்கை கடைபிடிக்கிறாரே?

    ப: கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவர் முதல்- அமைச்சர். அவர் மத்திய மந்திரியாக இருந்த போதே கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை பட்டியலிட்டு சொல்லியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் யாருக்கு என்ன அதிகாரம்? என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடமை உள்ளது. அதைவிடுத்து கவர்னரோடு மோதல் போக்கில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை. முடிந்துள்ள 2½ ஆண்டு கால ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் புதுவையில் கொண்டுவரப்படவில்லை. நடைமுறையில் இருந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை. பொதுப்பணித்துறை மூலமாக தார்சாலை போடும் பணியாவது நடக்கிறதா?

    கே: புதுவை முதல்- அமைச்சர் உங்களை மோடியின் தம்பி என கூறியுள்ளாரே?

    ப: மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் மோடியின் தம்பி என்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    கே: பொங்கல் பரிசு, தீபாவளி பரிசு எதையும் புதுவை அரசு தரவில்லையே?

    ப: மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையை செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

    கே: காங்கிரஸ் அரசின் குறைகள் பற்றி நீங்கள் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

    ப: சட்டமன்றத்தில் நாங்கள் பேசியுள்ளோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அரசின் குறைகளை நிறைய தெரிவித்துள்ளனர். நாளிதழ்களிலும் அரசின் குறைகளை கூறியுள்ளனர். சமீபத்தில்கூட சட்ட ஒழுங்கை பற்றி கூறியுள்ளனர். பாராளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இதையெல்லாம் எடுத்துக்கூறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #bjp #admk #nrcongress #parliamentelection

    வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாராயணசாமி, ரங்கசாமி பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். 

    முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, என்.எஸ்.ஜே. ஜெபால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ராஜாங்கம், பா.ம.க. செயலாளர் தன்ராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர்கழக தலைவர் வீரமணி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, புதியநீதிகட்சி தலைவர் பொன்னுரங்கம், முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
    ×