search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும் என்றும், விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். #LokSabhaElections2019 #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார்.

    இதன் பின்னரே பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தது. நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே கூட்டணி முடிவானது. 4 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    கூட்டணி இறுதியானவுடன் பிரேமலதா அளித்த பேட்டியில், விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கூறி இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னரும் அவர் இதே கருத்தை கூறி இருந்தார். இருப்பினும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு செல்வதற்கான எந்த அறிகுறிகளும் தேர்தல் களத்தில் காணப்படவில்லை.

    இந்த நிலையில் விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் விஜயகாந்த் அளித்துள்ள முதல் பேட்டி இதுவாகும்.

    அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி இதுவென்று கூறியுள்ளார். விஜயகாந்த் பேட்டி வருமாறு:-

    கேள்வி:- வணக்கம் கேப்டன். எப்படி இருக்கிறீர்கள்.

    பதில்:- நல்லா இருக்கேன் சார்.

    ப:- உடல்நிலையெல்லாம் நன்றாக இருக்கிறது.

    கே:- அமெரிக்கா சென்று வந்தபிறகு உடல்நிலையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?

    கே:- தமிழக மக்கள் அனைவருமே நீங்கள் பிரசாரத்துக்கு எப்போது வருவீர்கள்? என்ன பேசப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்?

    ப:- கூடிய விரைவில் வருவேன். அங்க வந்து பேசுவேன்.

    கே:- தொடர்ச்சியாக பிரசாரம் செய்வீர்களா?

    ப:- டாக்டர் அட்வைஸ்படி தான் அதுபற்றி சொல்ல முடியும்.

    கே:- அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி எப்படி இருக்கிறது? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- அ.தி.மு.க. கூட்டணி தான் ஜெயிக்கும். தி.மு.க. கூட்டணி தோற்கும்.

    கே:- தி.மு.க. கூட்டணி தோற்கும் என்று ஏன் சொல்கிறீர்கள்?

    ப:- தி.மு.க. தில்லுமுல்லு கட்சி.

    கே:- அ.தி.மு.க - தி.மு.க. கூட்டணிக்கு இடையேயான போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கிற போட்டி. தர்மம்தான் ஜெயிக்கும். தர்மம்தான் ஜெயிக்கும் (2 முறை சொல்கிறார்).



    கே:- பிரதமர் மோடியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- நல்லவர். வல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

    கே:- தே.மு.தி.க. தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    ப:- நன்றாக உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Vijayakanth

    காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

    ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

    அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இக்கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலினும், மற்ற கட்சிகளும் பயந்துவிட்டன.

    இக்கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. பெண்களின் நலன் காக்க இக்கூட்டணி பாடுபடும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு இந்த கூட்டணி தடுக்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவிடாமல் எங்களை தடுக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயன்று தோற்றுப்போய் விட்டன. துரோகிகளின் புகலிடம் தி.மு.க.

    தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த வெற்றிக்கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுபோல தேர்தல் முடிவு நமது வெற்றியை நிரூபிக்கும்.


    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பதவியேற்றவுடன் முதல் வேலையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாடுபடுவோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன்காக்க, ஏழை தொழிலாளர்களின் நலன்காக்க அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். துளசியின் வாசம்கூட மாறலாம். ஆனால் தவசியின் வாக்கு மாறாது.

    விலைவாசியை குறைப்போம். தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.2ஆயிரம் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தேடிவரும். எங்கள் வெற்றிக்கூட்டணிக்கு எதிரே உள்ளவர்கள் 2ஜி ஊழல் போன்றவற்றை செய்தவர்கள். 2011-ல் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என இங்கு முதன்முதலாக குற்றம் சாட்டுகிறேன். அதன் பிறகு இறைவனாக பார்த்து இப்போது எங்களை இணைத்து வைத்துள்ளார். இந்த கூட்டணி இனி தொடரும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் மோதல் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பேசினார். #LokSabhaElections2019 #Premalatha
    விருதுநகர்:

    விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில் மாட்டியிருப்பது எம்.ஜிஆர்., ஜானகி அம்மாள் உள்ள படம்தான். எங்கள் திருமணம் மதுரையில் நடந்ததை தொடர்ந்து சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்த ஜானகிஅம்மாள் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தார். அதை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். அதே போன்று ஜானகிஅம்மாள் விஜயகாந்திடம் யார் யாரோ வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டியதை பெற்றுச்செல்கிறார்கள், நீ வந்தால் என்ன என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனையும், உலகம் சுற்றும் வாலிபனில் பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் கொடுத்தார். அதையும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சை கேட்டால் மன அழுத்தம் மறந்து போய்விடும். அவர் பேசும்போது 2011-ல் அமைந்த அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணி என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். பின்னர் ஏன் பிரிந்தீர்கள் என கேட்கலாம். நம்கட்சியில் இருந்த 3 துரோகிகளை தூண்டிவிட்டு விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் கோபம் வரச்செய்து மோதல் ஏற்படுத்தினார்கள் அதன் காரணமாக பிரியும் நிலை ஏற்பட்டது.



    ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் படங்களில்தான் நடிக்கதெரியுமே தவிர அரசியலில் நடிக்கத் தெரியாது. ஜெயலலிதா திறமையான பெண்மணி. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் பேசிக்கொண்டிருந்தோம்.

    அதைத்தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் எங்களை சந்திக்க வரும்போது குறிப்பிட்டோம்.

    தற்போது அமைந்துள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். நாளை நமதே 40-ம் நமதே. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இனி வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் உறுதியாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து விஜயகாந்த் சாப்பிடக்கூடியவர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Premalatha
    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். #vijayakanth #admk #Jayavardhan

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேமலதா விஜயகாந்த்தும் ஜெயவர்தன் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்சென்னை தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.

    விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மூலம் வெள்ளத் தடுப்புபணிகள், உயர் கோபுர மின் விளக்கு, கழிப்பறை மற்றும் பயணியர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை மேம்படுத்தும் விதமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்துதல், தெரு மின் விளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது.

    சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் கழிவுநீர் அடைப்பு அகற்றும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.51.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    தொகுதி மக்களுக்காக அயராது பாடுபட்டு வரும் என்னை இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். #vijayakanth #admk #Jayavardhan

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். #LSPolls #DMDK #DMDKCandidates
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி நிறைவடைந்ததும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பாளர்களை அறிவித்தார்.



    அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக செயலாளருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால், கவுதம சிகாமணியை எதிர்த்து சுதீஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.  #LSPolls #DMDK #DMDKCandidates
    அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். #ParliamentElections #VijayakanthEPS
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்ச்செண்டு கொடுத்தும் நலம் விசாரித்தார் முதல்வர்.



    உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர்  ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElections #VijayakanthEPS

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்றும் ஆனால் பேச மாட்டார் என்றும் சுதீஷ் தெரிவித்தார். #DMDK #Vijayakanth #LKSudhish
    சென்னை:

    தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது.

    நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.

    இதற்கிடையே பா.ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கூட்டணி அமைத்த வி‌ஷயத்தில் எங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். கட்சியின் நலன் கருதியே நாங்கள் முடிவுகளை எடுத்துள்ளோம். கூட்டணி பேசியபோது சில வி‌ஷயங்கள் நடந்தது. என்றாலும் பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்பதை உறுதிப்படுத்தினேன்.



    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

    இந்த கூட்டணியில் முதலில் நாங்கள் பா.ஜனதா தலைவர்களுடன் பேசினோம். பிறகுதான் அ.தி.மு.க. வுடன் பேசத்தொடங்கினோம். இதனால் தான் கூட்டணியில் சில முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

    தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது.

    அடுத்த தேர்தல் பற்றி இப்போதே உறுதிபட கூற இயலாது. கூட்டணி மாறலாம். மாறாமலும் போகலாம். கேப்டனை முதல்-அமைச்சராக்கவே தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அந்த இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    சில பிரச்சனைகள் அடிப்படையில் நாங்கள் முன்பு மோடி அரசை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மோடி அரசின் நல்ல கொள்கைகளை மனம் திறந்து பாராட்டியுள்ளோம்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் எங்களுக்குரிய தொகுதிகளை (வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்) மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளோம்.

    2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டது. எனவே இந்த தடவை 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம்.

    ஆனால் பிப்ரவரி 20-ந் தேதியே பா.ம.க. மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்து விட்டது. இது எங்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது.2014-ம் ஆண்டு ஒரே நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒப்பந்தம் செய்ததைபோல இந்த தடவையும் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அது நடக்காமல் போய் விட்டது.

    எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதற்கிடையே கேப்டன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவரது அறிவுரையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டது.

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வி‌ஷயத்தில் தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.

    தி.முக.விடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது.

    விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்வார். ஆனால் பேசமாட்டார்.

    அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.

    கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு சுதீஷ் கூறினார். #DMDK #Vijayakanth #LKSudhish
    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். #Vijayakanth #Ramadoss #AnbumaniRamadoss
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று காலை 11.15 மணிக்கு வந்தனர்.

    அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வந்திருந்தார்கள்.

    காரை விட்டு இறங்கி நின்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் வந்தனர்.

    அவர்களை விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் வாசலுக்கு வந்து அழைத்து சென்றார். விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா தொகுதி பங்கீட்டு குழுவினர் டாக்டர் இளங்கோவன், மோகன் ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும் இந்த சந்திப்பின் போது இருந்தனர்.

    டாக்டர் ராமதாஸ், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் டாக்டர் ராமதாஸ் வெளியே வந்தார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். பா.ம.க.- தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதிகளை பிரிப்பதில் இழுபறி ஏற்படுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் பற்றி பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் பிரேமலதா சுதீசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். #Vijayakanth #Ramadoss #AnbumaniRamadoss
    தேமுதிக நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், ‘உங்களைப் பார்த்ததே போதும், சீட் எதுவும் வேண்டாம் என்று’ கூறியதைக் கேட்ட விஜயகாந்த் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். #LSPolls #DMDK #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கட்சி அ.தி.மு.க பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ், தனித்தொகுதி என்றால் அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

    அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர்கள் கல்விச் சான்றிதழ் கொண்டு வந்திருந்தனர். உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பூத் என்ற கேள்வியும் நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளது.

    நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் அறைக்கு சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர்.

    அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, ‘நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த், கண் கலங்கியபடி சிரித்துள்ளார்.

    கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நேர்காணலின்போது இல்லை. அவர் நெல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள கோயிலில் சாமிதரிசனம் செய்ய சென்றிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணலின்போது விஜயகாந்தை சந்தித்து பேசியது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். #LSPolls #DMDK #Vijayakanth

    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும்.



    தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்துகிறார். அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் எந்தெந்த தொகுதிகள், எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் அறிவிப்பே இறுதியானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு 13-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMDK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. #LSPolls #DMDK
    ×