search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    தேமுதிக நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், ‘உங்களைப் பார்த்ததே போதும், சீட் எதுவும் வேண்டாம் என்று’ கூறியதைக் கேட்ட விஜயகாந்த் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். #LSPolls #DMDK #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கட்சி அ.தி.மு.க பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ், தனித்தொகுதி என்றால் அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

    அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர்கள் கல்விச் சான்றிதழ் கொண்டு வந்திருந்தனர். உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பூத் என்ற கேள்வியும் நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளது.

    நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் அறைக்கு சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர்.

    அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, ‘நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த், கண் கலங்கியபடி சிரித்துள்ளார்.

    கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நேர்காணலின்போது இல்லை. அவர் நெல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள கோயிலில் சாமிதரிசனம் செய்ய சென்றிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணலின்போது விஜயகாந்தை சந்தித்து பேசியது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். #LSPolls #DMDK #Vijayakanth

    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும்.



    தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்துகிறார். அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் எந்தெந்த தொகுதிகள், எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

    தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் அறிவிப்பே இறுதியானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

    இதில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதி, பா.ம.க.வுக்கு-7, தே.மு.தி.க-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக்கட்சி-1, என்.ஆர்.காங்கிரசுக்கு-1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்று உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனாலும் தொகுதிகள் விவரத்தை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் நேர்காணல் நிகழ்ச்சி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



    இதில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    1. மத்திய சென்னை, 2, ஸ்ரீபெரும்புதூர், 3.ஆரணி, 4. அரக்கோணம், 5.சிதம்பரம், 6.தர்மபுரி, 7.திண்டுக்கல்.

    தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :-

    1. வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருதுநகர்.

    புதிய தமிழகம்- தென்காசி. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு 13-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMDK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. #LSPolls #DMDK
    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து சித்தளியில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தே.மு.தி.க.வை அழிக்க நினைப்பவர்கள் இந்த தேர்தலுடன் அழிந்து விடுவார்கள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க. குறித்து பேசியதால், தே.மு.தி.க.வின் திருஷ்டி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது தே.மு.தி.க. பாசிட்டிவ் எனர்ஜியாக வளர்ந்து வருகிறது.


    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக எழுமூரில் கட்சி கொடியினை ஏற்றிய விஜயபிரபாகரன், இந்த தேர்தலில் நாம் யார்? என்பதை விஜயகாந்த் வழியில் செயல்பட்டு நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #AIADMKDMDKalliance
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் தேமுதிகவை சேர்ந்த பொது செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர். #LSpoll #AIADMKBJPalliance  
    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள் குறித்த பிரேமலதா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #premalatha

    கோவை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் பலனில்லை என்ற பிரேமலதா விஜயகாந்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால், இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று தான் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். கூட்டணி அமைத்தால் ஒன்றிபோக வேண்டும். அப்போது தான் கூட்டணி வலுபெறும். கூட்டணி அமைத்தவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.


    கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தமிழக அரசை குறை கூறி தான் அரை சதவீத ஓட்டு வாங்குகின்றனர். கூட்டணி சேரவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் கூறும் பொய்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அரசு விழாக்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அது குற்றமா?. தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை தொடங்கி வைத்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது எத்தனை முறை பிரதமர் வந்து தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். அதுகுறித்து பொதுமக்களும், நீங்களும் சிந்திக்க வேண்டும்.

    தற்போதைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சரியான கூட்டணியா? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது வெட்கக் கேடான ஒன்று. பா.ஜனதா கட்சியை தி.மு.க. மதவாத கட்சி என்கிறார்கள். அவர்களுடன் மத்தியில் அங்கம் வகித்து 5 ஆண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது மதவாத கட்சி என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

    7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை முதல் கோவை வரை யார் ஆட்சியில் குண்டு வெடித்தது என்று ராகுல்காந்திக்கு இல.கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். #ilaganesan #rahulgandhi #pmmodi

    மதுரை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.

    இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.

    இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.

    நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் மு‌ஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi 

    அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக இன்று மாலைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.

    இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக  உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.

    தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

    அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani

    பாராளுமன்ற தேர்தலில் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலில் ஈடுபடும் தேமுதிகவை கொ.ம.தே.க செயலாளர் சாடியுள்ளார். #dmdk #kmdk #parliamentelection

    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில் தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கு அதிமுக- தேமுதிக இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதை நாம் அறிவோம்.

    ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வை பார்க்கும் போது தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத் தரகர்கள் செய்யும் வியாபார உத்தியை போல கூட்டணி பேரத்தை தேமுதிக- அதிமுக 2 கட்சிகளும் மாறி மாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.

    தேமுதிக தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதை கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளி காட்டியிருக்கிறது.

    அரசியல் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலை கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும்? தமிழக மக்களுக்கு போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா? இந்த 2 கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்கு தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியை கொடுக்க தயாராகி விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. 

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.  #dmdk #kmdk #parliamentelection

    கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லலாமே தவிர, அவர்கள் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது என்று சொல்லக்கூடாது. சட்டமன்றம்தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தருகிறது. அங்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து தந்தார். அந்த ஆட்சியை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் பாராட்டி சென்றார்.

    சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. வலிமையான மக்கள் இயக்கம். தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார்,அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கினார்.

    வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக மாறும் நிலை ஏற்படும்.

    ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை. துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர் நடந்த போது சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.


    மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. துரோகத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

    2014 தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஜெயலலிதா அப்போது தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. இரு முனை போட்டி நிலவுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    ×