என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96529"
சென்னை:
விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கிய தே.மு.தி.க. இதுவரை 5 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
தமிழக அரசியலில் மிக குறுகிய காலத்தில் 10 சதவீத வாக்கு வங்கிகளை பெற்ற கட்சி என்ற சிறப்பு தே.மு.தி.க.வுக்கு உண்டு. தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாறி மாறி வெற்றி-தோல்வியை கொடுத்துள்ளன.
இதன் காரணமாக தே.மு. தி.க. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதமும் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருந்தது. ஆனால் அதன் பிறகு 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தே.மு. தி.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போனது.
குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே இருந்த தொண்டர்களில் பாதி பேர்தான் வாக்களித்தனர். தற்போது அந்த கட்சிக்கு 3 முதல் 5 சதவீத வாக்குகளே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டாலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அது இருப்பதாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக தே.மு.தி.க. தலைவர்களுடன் பேசி வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று முதலில் காய்களை நகர்த்தியது பா.ஜனதா தலைவர்கள்தான். எனவே டெல்லி பா.ஜனதா தலைவர்களிடம் தே.மு.தி.க. பேச்சு நடத்தியது. ஆனால் அதில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.
இதையடுத்து தே.மு.தி.க.வை வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அ.தி. மு.க. ஈடுபட்டது. ஆனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை தே.மு.தி.க. கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி உருவானது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதனால் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே 40 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. வின் நிலைப்பாட்டில் மாற்றம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தே.மு.தி.க. எந்த அணியில் சேரும் என்பது நேற்று இரவு வரை மதில்மேல் பூனையாக இருந்தது. ஆனால் இன்று காலை இது குறித்து சில தெளிவான தகவல்கள் தெரியவந்தன.
தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டபோது அவர் மாறுபட்ட தகவலை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை நாங்கள் தீர்மானித்து விட்டோம். இனி எங்கள் அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை” என்றார்.
தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் சிலர் இதுபற்றி கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டோம். டி.டி.வி.தினகரன் பக்கம் போகும் பேச்சுக்கே இடமில்லை. எங்களது பலம் எங்களுக்கு தெரியும். விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம்” என்றனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர்களுடன் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவும் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேசியது. இன்று காலையிலும் அந்த பேச்சு வார்த்தை நீடித்தது.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதிகள் எண்ணிக்கை மட்டுமே இழுபறியாக இல்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்தப்படி உள்ளது. அதுபோல பா.ஜனதா தரப்பில் இருந்தும் சில உறுதி மொழிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் வரும் பட்சத்தில் தாங்கள் விரும்பும் தொகுதிகளை கண்டிப்பாக தந்தே தீர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். எனவே பேச்சு வார்த்தை ஓரிரு தினங்கள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
இரு தரப்பினரும் விட்டு கொடுத்தால்தான் அ.தி.மு.க. அணியில் சுமூகமாக தே.மு.தி.க. இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க- தே.மு.தி.க. இடையே எப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்பது இழுபறியாகவே உள்ளது.
2 நாளில் இதில் என்ன முடிவு ஏற்படும் என்பது தெரிந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp
நாகர்கோவில்:
தமிழக அரசியலில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி பரபரப்பை கிளப்புபவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஆதரித்தார். அவர், கட்சி தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி அரசியல் அரங்கில் இருந்து வெளியேறினார்.
இனி இலக்கிய மேடையில் மட்டுமே பேசுவேன் என்று கூறி வந்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்தார். இது அவர் மீண்டும் அரசியல் மேடையில் பேசுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் பிரசார மேடைகளில் வலம் வர தயாராகி வருகிறார்.
வைகோ மற்றும் தி.மு.க. கூட்டணியை புகழ்ந்து பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத், மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க- பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து விட்டன. இந்த தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறுமா?
பதில்:- இப்போது நடக்கும் தேர்தல் இக்கூட்டணியின் அஸ்தமனமாக அமையும். இனி இவர்கள் வெற்றி பெற போவதில்லை.
கே:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அ.தி.மு.க. நிற்கும் தொகுதிகளே 21-க்கும் கீழ் வந்து விடும்போல் இருக்கிறதே?
ப:- அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே இதை கருதுகிறேன். அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கவுரவத்தை விட்டுக் கொடுத்து விட்டது.
ஜெயலலிதா, திறமையாக ஆட்சி செய்தார். கட்சியை வழி நடத்தினார். இப்போது சுரண்டி, சுரண்டி கொள்ளை அடிக்கும் நிலையே காணப்படுகிறது.
கே:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்துள்ளதே?
ப:- பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புது வாக்காளர்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.
இந்த கூட்டணிக்கு தேர்தலில் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ராமதாசின் மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெறவே அவர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது ஆசை நிறைவேறாது.
கே:- அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார்களா?
ப:- தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் சேரவே வாய்ப்புள்ளது. இங்கு சேர்ந்தால்தான் நலம் பயக்கும்.
கே:- நடிகர் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும்?
ப:- கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தலில் தொகுதிக்கு 500 வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. கமல்ஹாசன் அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவர், இப்படி தனக்குதானே சுவரில் போய் முட்டிக் கொள்வதன் மூலம் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
திராவிடம் பற்றி கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதை அலட்சியப்படுத்த வேண்டியது திராவிடத்தின் கடமை.
கே:- ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் கூறி இருக்கிறாரே?
ப:- ரஜினியின் படங்கள் வெளிவரும் போது அவர், அரசியல் கருத்துக்கள் பேசுவார். சீன் போடுவார். படம் வெளியாகும். அது வெற்றி பெறும். அதன் பிறகு அவரும் அமைதியாகி விடுவார். அரசியல் பேச்சும் காணாமல் போய் விடும்.
ரஜினி தன்னை குழப்பி, ரசிகர்களையும் மட்டுமின்றி தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.
கே:- மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமையுமா? மோடி பிரதமராக வாய்ப்புள்ளதா?
ப:- பாரதீய ஜனதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வட இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 3 முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா, அம்மாநில மக்களால் அகற்றப்பட்டு விட்டது.
இதுபோல சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை.
கே:- பாரதீய ஜனதா வெற்றி பெறாவிட்டால் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?
ப:- இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சய வெற்றி பெறும். பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்பார்.
கே:- இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்கள் காங்கிரசார் என்ற பழிச்சொல் இருக்கும்போது தமிழகத்தில் அவர்களை ஆதரிக்க முன் வருவது ஏன்?
ப:- இலங்கை தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தை மறக்க முடிய வில்லை என்பது உண்மைதான். அந்த பழியை துடைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ராகுல்காந்தி இதற்கு பிரயாசித்தம் தேடுவார் என்று நம்புகிறேன்.
கே:- தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறும் நீங்கள், அவர்களை ஆதரித்து இந்த தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா?
ப:- தி.மு.க. பொது மேடைகளில் எனக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.
பாரதீய ஜனதா கட்சியை எதிர்ப்பதே எனது பிரதான இலக்கு. அ.தி.மு.க. எனது முதல் எதிரி, முக்கிய எதிரி பா.ம.க. இப்போது இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்திருப்பதால் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.
கே:- டி.டி.வி. தினகரன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக கூறி இருக்கிறாரே?
ப:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை 2 ஆக பிளப்பார். அதை தவிர வேறு எதையும் அவரால் சாதிக்க முடியாது. இந்த தேர்தலில் சந்திக்கும் வீழ்ச்சிக்கு பின்னர் அவரால் எழுந்து நிற்கவே முடியாது.
கே:- 21 தொகுதி இடைத்தேர்தல் நிலை என்னவாகும்?
ப:- 21 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார்.
ப:- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. இது வைகோவால் வந்தது. எனவேதான் அவரை பாராட்டினேன். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல், பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிய முதல் தலைவராக வைகோ என் கண்ணுக்கு தெரிகிறார்.
எனவேதான் தமிழர்கள் அவருக்கு விழா எடுக்க கடமைப்பட்டு இருக்கிறார்கள் என்று கருத்து பதிவிட்டேன். இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko #parliamentelection
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. பக்கம் எல்லாம் வெட்டு குத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.
தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.
எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.
தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.
28-ந் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழ் நாட்டில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று அரசியல் பேசுவதற்காக அவரை சந்திக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உடல் நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்.
தற்போது அமெரிக்காவில் அவர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் நல்லமுறையில் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். #MKStalin #Vijayakanth
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசினார்.
இந்த சூழ்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், விஜயகாந்திடம் நலம் விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
எனினும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருக்கும் நிலையில், விஜயகாந்தை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாக தகவல் வெளியானது. அதிமுக தரப்பில் விஜயகாந்துக்கு 5 தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. இதை தேமுதிக ஏற்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திடீரென சாலிகிராமம் சென்று, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MKStalin #Vijayakanth #StalinMeetVijayakanth
விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே உரிய முடிவை கேப்டன் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.
தே.மு.தி.க. வின் நிலைப்பாடு பற்றிய முழு விவரமும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #DMDK #PremalathaVijayakanth
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது.
நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது என்னை சந்தித்து நலம் விசாரித்த முதல் நபர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Vijayakanth #Rajinikanth
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். இதன்பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
விஜயகாந்தை அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து விஜயகாந்துக்கு 3 முதல் 4 இடங்கள் வரை கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜயகாந்த் தரப்பில் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த் அவரை சந்தித்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ரஜினி, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். எனினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தற்போது விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார். அவரை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் இன்று விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் இப்போது கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக களம் இறங்கி உள்ளார். அதனால் அவர் விஜயகாந்தை கூட்டணிக்கு சேர அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #DMDK #Vijayakanth #Rajinikanth
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளனர்.
அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன். நாட்டின் நலன் கருதி விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை நான் கூட்டணியாகவே பார்க்கிறேன்.
தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இது பற்றி கட்சியின் தலைமை பேசி முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வர இருக்கிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இதையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். #ponradhakrishnan #bjp #admk #dmdk #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்