search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு"

    நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி. இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப்படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும்.
    கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப் படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும். நாளடைவில் நிரந்தர நீரிழிவும் உண்டாகலாம். கருச்சிதைவும் நேரலாம். அது மட்டுமல்ல... குழந்தைகளுக்கும் பிரச்னைதான். அளவு மீறிய எடையோடு பிறப்பு, குறைப் பிரசவம், சுவாசப் பிரச்னைகள் உண்டாகக் கூடும். சில குழந்தைகளுக்கு தாழ்நிலை சர்க்கரை அல்லது டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

    * இந்திய வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.

    * சர்வதேச வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.

    எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.

    சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.

    எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.

    கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.

    பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
    செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.
    டீ அருந்தும் பெரும்பாலானோர் அதில் சர்க்கரை சேர்த்துத்தான் பருகுவார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    டீ குடிக்கும் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்சினையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்குக் குறைவில்லாமல், சர்க்கரை இல்லாமலே இருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஒரேயடியாகவோ அல்லது படிப்படியாகவோ டீயில் சர்க்கரையின் தேவையைக் குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    எனினும், தங்களது ஆய்வு முடிவுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    பொதுவாக சர்க்கரை கலந்து டீ குடிக்கும் 64 ஆண்களை ஒரு மாத காலத்துக்கு இதுதொடர்பான ஆய்வுக்கு லண்டன் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தினர்.

    ஒரு மாதகால ஆய்வுக்குப் பின்னர், டீயில் சர்க்கரையின் அளவைக் குறைத்த குழுவினர்கள், எவ்வித மாற்றமும் இன்றி டீயை தொடர்ந்து விரும்பிக் குடிப்பது தெரியவந்தது.

    அதாவது, ஆராய்ச்சியின் முடிவில், படிப்படியாக சர்க்கரையைக் குறைத்து பயிற்சி செய்த குழுவைச் சேர்ந்தவர்களில் 42 சதவீதத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை நிறுத்தினர். அதேபோன்று, ஒரேயடியாக சர்க்கரையை நிறுத்தி பயிற்சி செய்தவர்களில் 36 சதவீத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை கைவிட்டனர்.

    ஆச்சரியமளிக்கும் வகையில், தொடர்ந்து ஒருமாத காலம் டீயில் சர்க்கரை கலந்து குடித்து வந்தவர்களில் 6 சதவீதத்தினரும் அதை ஒதுக்கினர். இதேபோன்று மற்ற வகை பானங்களிலும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு மக்கள் முயற்சிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

    சரி, சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?

    காபி, டீ மட்டுமின்றி நாம் சாப்பிடும், அருந்தும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களிலும் சர்க்கரை மிகுந்து காணப்படுகிறது.

    சர்க்கரையைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பால், பழம், தேன் போன்றவற்றிலிருந்து இயல்பாகக் கிடைப்பது. மற்றொன்று, கரும்புச் சாறு போன்றவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரை.

    இதில் இரண்டாவது வகை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நீண்டகால அடிப்படையில் உடலின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஒருவரது உடலுக்குத் தேவையான சர்க்கரை இயல்பாகக் கிடைக்கும்போது, அது செரிக்கப்பட்டு தசைகள் மற்றும் மூளைக்குத் தேவையான சக்தியை அளித்து அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது. ஆனால், செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

    அதாவது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் உயர்ந்து, உடலுக்குச் சோர்வை உண்டாக்குவதுடன், எரிச்சலை ஏற்படுத்தி, மென்மேலும் சர்க்கரை கலந்த உணவு, பானத்தை உட்கொள்வதற்குத் தூண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரின் உடல் எடை அதிகரிப்பதுடன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் மூலம் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம்.
    நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு.

    தற்போதைய சூழலில் இரசாயனமில்லாத உணவுகளே கிடையாது. எல்லாவற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் நிறைந்திருக்கிறது. சுவைக்கு அடிமையாகி, நோய்களை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆலோசனைகள் இங்கே.

    நாள் ஒன்றில் மொத்தமாக மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளாமல், ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    முற்றிலுமாக மாவுச்சத்து மிகுந்த உணவை தவிர்த்திடாமல், மாவுச்சத்து குறைவாக உள்ள முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பார்லி, பால், சீஸ், சோயா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

    நார்ச்சத்துள்ள உணவு, ஜீரணத்தை தாமதப்படுத்துவதால், நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு இருக்காது. கேரட், பீன்ஸ், பார்லி, ப்ரோக்கோலி, பீட்ரூட், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மிகுதியாய் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது.

    செயற்கை இனிப்பூக்கிகளை பயன்படுத்தாமல், தேங்காய், வெல்லம் மற்றும் தேன் போன்று இயற்கையாகவே இனிப்பு நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இயற்கையாக கிடைப்பதாயினும், அளவாக பயன்படுத்துவதே சிறந்தது.

    அவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் கெனோலா எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

    சரியான இடைவெளியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முலைக்கட்டிய பயறுகள், தானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம்.

    கெட்சப், சாஸ் போன்ற உணவுகளில் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சர்க்கரை ஒளிந்திருக்கிறது. துரித உணவுகளை தவிர்ப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் கவனம் செலுத்தினாலே போதும் நோய்களை விரட்டி அடிக்கலாம்.
    நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கு சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்...

    சிறுநீரகப் பரிசோதனை

    வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து ‘ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.

    இரத்தப் பரிசோதனை முறைகள்ரேண்டம் இரத்த சர்க்கரை பரிசோதனை (Random Blood Sugar)இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் இரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

    முதன்முறையாக இதை செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் இரத்த சர்க்கரை பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.

    வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை பரிசோதனை (Fasting Blood Sugar)

    இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும்.இதில் இரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால் அது சரியான அளவுதான். அதுவே 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.

    சாப்பிட்ட பின் இரத்த சர்க்கரை பரிசோதனை (Post Prandial Blood Sugar)

    காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாக சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ளவேண்டும்.

    அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இதில் இரத்த சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால் சரியான அளவு.இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், Pre diabates. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நீரிழிவு உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம்.
    சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

    2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

    3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.



    4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

    5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

    6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

    7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
    சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது சிரமமாகும். காலில் புண் ஏற்படுவதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    சர்க்கரை நோய் தற்போது அதிவேகமாய் அதிகரித்து வருகிறது. தவறான உணவுப் பழக்கங்களும் உடல் உழைப்பில்லாததும் இதற்கான காரணங்களாகும். சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது சிரமமாகும். பல நேரங்களில் விரல்களையோ காலையோ இழக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

    ஏன் வருகின்றன?


    சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:

    1. நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை.

    2. இரத்தக்குழாயில் அடைப்பினால் கால் / விரல்களுக்கு இரத்த ஓட்டம் குறைவு.

    3. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருப்பது.

    4. சரியான காலணிகள் இல்லாதிருப்பது அல்லது காலணிகளே இல்லாமல் நடப்பது.

    எப்படி தடுப்பது?

    1. தினமும் கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    2. எப்போதும் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்மையான செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    3. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.

    4. சிறிய காயம், புண் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

    என்ன தீர்வு?

    * புண்கள் சிறியதாக, ஆழமின்றி இருந்தால் மருந்து கொண்டும், மருந்து வைத்து கட்டுப்போட்டு ஆற்றலாம்.

    * புண்கள் ஆழமாக இருந்தாலோ, ஆழத்தில் உள்ள எலும்பு, தசை நார் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

    * புண்கள் பெரிதாக இருந்தால் அவற்றை ஆற்ற பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படலாம்.

    * கருப்பாகி விட்ட விரல்களோ, பாதத்தின் பகுதிகளோ அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும்.

    P.S. மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி சென்டர்,
    பாளையங்கோட்டை
    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.
    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம்.

    காலை உறக்கத்தில் இருந்து எழுந்ததும் மரச்செக்கு நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்த பிறகு மூலிகை பற்பொடியால் பல் துலக்க வேண்டும். (பேஸ்ட் பிரஸை தவிர்த்தல் நல்லது). காலையில் உடல் சுத்தம் செய்த பிறகு முடிந்த அளவு நல்ல தண்ணீர் குடித்தல் முக்கியம்.

    நமது உடலில் 70 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் தண்ணீரின் தரத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு இல்லை. பில்டர், மினரல், ஆர்.ஓ. வாட்டர் என்ற, சுத்திகரிக்கப்பட்டது எனும் பெயரில் நாம் குடிக்கும் தண்ணீரின் நைட்ரஜன் திறன் எவ்வளவு என்று நாம் பார்த்து குடிக்க வேண்டும். நம் உடலில் உள்ள ரத்தம், நிணநீர் சுத்தமானதாக இருந்தால் உடலில் எந்த ஆரோக்கியக் குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீருடன் உண்ணும் உணவின் காரத்தன்மையிலும், அமிலத்தன்மையிலும்மிக அதிக கவனம் இருந்தால் சர்க்கரை குறைபாடு, அதிக எடை, மற்றும் பல உடல்சுக குறைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

    தரமற்ற சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள் ளோர்களுக்கு, காரத்தன்மை உள்ள உணவுகள் விவரம்:-

    காலை உணவு:

    நாட்டு மல்லி இலை, முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, புதினா, துளசி, வெற்றிலை, மாயிலை, கொய்யா இலை, மாதுளை இலை இவற்றுள் கிடைப்பதை கைப்பிடி எடுத்து கொள்வோம். இரண்டு நெல்லிக்காய், மஞ்சள் சிறிதளவு, மிளகு-5, லவங்கம்-2, ஏலக்காய்-2 இஞ்சி சிறிதளவு தோல் நீக்கியது, தேங்காய், இந்துப்பு சிறிதளவு, அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டாமல் குடிக்கலாம்.

    வாழைத்தண்டு, வெண்பூசணி, குண்டு சுரக்காய், கேரட், பீட்ரூட், நூக்குல், சவ்சவ் போன்ற இயற்கையாக விளைந்த காய்கறிகளிலும் மேலே கூறியுள்ள பொருட்களை சேர்த்து ஒரு டம்ளர் சாறு குடிக்கலாம்.

    உள்தோலுடன், மேல் தோல் மட்டும் நீக்கிய பப்பாளி, மாதுளை மற்றும் கொய்யாப் பழம் இவைகளுடன் பரங்கி விதை, வெள்ளரி விதை, சன் பிளவர் விதை, ஆளி விதை, சியாசீடு எனும் திருநீற்றுப் பச்சிலை விதை இவைகளையும் சிறிதளவு கலந்து பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைப் பருப்புகளையும் சிறிதளவு சேர்த்து, மிக மிக நன்றாக மென்று, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

    இவைகளை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள்!. மிக முக்கியம், மிக மிக நன்றாக மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். காலை 9 மணிக்கு முன்பே இவைகளை சாப்பிட வேண்டும். இன்சுலின் மற்றும் மருந்துகளில் இருந்து முற்றிலும் விடுபடவேண்டும் எனில் வேறு ஏதும் சாப்பிடாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவர்கள் கேழ்வரகு, கம்பு கூழ் சாப்பிடலாம்.

    இட்லி தோசை வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகள், தோலுடன் கூடிய இயற்கை உளுந்து, சிறுதானியங்கள், வெந்தயம் கலந்து, அரைத்த மாவுடன் சிறிதளவு திரிகடுகம், திரிபலா, மஞ்சள் கலந்து இட்லி தோசை (கல் தோசை மட்டும்) செய்து சாப்பிடலாம். மேலும் இதே மாவை மல்லி, புதினா கருவேப்பிலை சட்னிகளுடன் கலந்து இட்லி செய்தும், அதிகமாக சட்டினியும் குறைவாக மாவும் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். நன்றாக மென்று, மென்று சாப்பிடுவதும், ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதும், பசித்தால் மட்டுமே சாப்பிடுவதும் மிக மிக அவசியம். கடிகார முள் பார்த்து பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடுவதும், நடு இரவு நேரங்களில் சாப்பிடுவதும், பசித்தால் சரியான உணவு உண்ணாமல் இருப்பதும், நம் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகிவிடும்.



    மதிய வேளை உணவு:

    மிக நல்ல பலன்கள் தேவைப்படுபவர்கள், உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு, சுக்கு, மல்லி, கருஞ்சீரக காப்பி சிறிது அருந்திவிட்டு, தேவைக்கு ஏற்ப 400 முதல் 500கிராம் வரை பச்சை காய்கறிகள் சாலட் செய்து வயிறு நிறைய சாப்பிடலாம். உதாரணம், பீர்க்கங்காய், புடலங்காய் இரண்டையும் லேசாக மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதை மற்றும் நார் போன்ற பகுதிகளை நீக்கிவிட்டு, பூ போன்று சீவி (அல்லது) மிக மிக சிறிதாக நறுக்கி அத்துடன் தேங்காய் துருகியது, மிளகு தூள் சிறிது, முளைக்கட்டிய தானியங்கள் சிறிதளவு, அவல் சிறிதளவு, விதைகள், கொட்டை பருப்புகள் சிறிதளவு, குடமிளகாய், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு மல்லி, புதினா, கருவேப்பிலை தாளித்தோ, பச்சையாகவோ கலந்து சாப்பிடலாம்.

    இதேபோல் கேரட், பீட்ரூட், நூக்கல், சவ்சவ், வெள்ளரி, சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, போன்ற இயற்கையாக விளைந்த காய்களை, மேலே குறிப்பிட்டுள்ளது போல் திருகி, பூ போன்று எடுத்துக்கொண்டு, குறிப்பிட்டுள்ள மற்ற கலவைகளையும் கலந்து, வேக வைக்காமல் பச்சை சாலட் ஆக சாப்பிடுவோர்கள், மிக விரைவாக தரமற்ற சர்க்கரை பாதிப்பில் இருந்து குணமடையலாம்.

    மேலும் வெந்தயக்கீரை, பசலைக் கீரை முருங்கைக் கீரை, முள்ளங்கி கீரை பீட்ரூட் கீரை போன்ற கீரை வகைகளை (இயற்கையாக விளைந்ததுதானா என்பதை உறுதி செய்தபிறகு) சுத்தமாக தயார் செய்து வைத்துக் கொண்டு இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், ஓமம் சுத்தமான பெருங்காயம், கடுகு மற்றும் தேவையான மசாலாக்களை மரச்செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற (தங்கள் மூதாதையர் பயன்படுத்திய வகைகள்) இவற்றில் சிறிதளவு பாசிப் பருப்பும் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, நன்றாக கொதிக்கும்போது நெருப்பை அணைத்துவிட்டு, தயாராக இருக்கும் கீரைகளை கலந்து, கிண்டி மூடி வைத்து பிறகு கீரையை மட்டும் ஒரு கப் சாப்பிடுங்கள். இத்துடன் ஒரு சிறிய கப் சுண்டைக்காய் அல்லது பச்சை பட்டாணி பொறியல் சாப்பிடலாம்.

    மாலை நேர உணவு:

    மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் நெருஞ்சில், கீழாநெல்லி, மூக்கரட்டை, சிறுபீளை இவைகளை ஒரு சிறிய தேக்கரண்டியும், சுக்கு, மல்லி, காபி தூளும் கலந்து, தேநீர் செய்து குடிக்கலாம். இதை ஒரு மணிக்கும், மதியம் 3 மணிக்கு இடையிலும் குடிக்கலாம். கருப்பட்டி இயற்கை வெல்லத்தில் செய்த எள்ளுருண்டை, கடலை உருண்டை, பட்டாணி, பொட்டு கடலை, மூக்கு கடலை, முளை கட்டிய வேகவைக்காத தானியங்கள், அவல், பொரி போன்ற தின்பண்டங்களையும் சிறிதளவு சாப்பிடலாம்.

    கொய்யாப்பழம், வாழைப்பழம் (தோலுடன்) போன்ற நம்ம ஊர் பழ கலவைகளை செய்து, மாலை அல்லது இரவு 7 மணிக்கு முன்பாக சாப்பிடலாம். பாரம்பரிய சிகப்பு அரிசி வகைகளிலும், மூங்கில் அரிசி, கருப்பு கவுனி, காலா நமக், பெரிய மண்வாரி, மிளகு சம்பா போன்ற மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளிலும் கஞ்சி செய்து, இரவு 7 மணிக்கு முன்பாக பசித்தால் மட்டும் சிறிதளவு சாப்பிடலாம்.

    இரவு நன்றாக தூங்குவதற்கு சிறிதளவு கசகசா, தேங்காய், பேரிச்சை, அமுக்கரா போடி கலந்து நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றால் குழந்தையைப் போல தூங்கலாம்.

    அன்பர்களே இவைகள் எல்லாம் எனது அனுபவ உண்மைகள். பல நூற்றுக்கணக்கானோர் பயனடைந்துள்ளார்கள். நீங்களும் முழுமையாக முயற்சி செய்தால் அனுபவத்தில் உண்மையை உணர்வீர்கள்.

    மருந்துகளை தவிர்க்க

    இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் நான் கூறியுள்ளதுபோல் பச்சை காய்களும், கீரை சாறுகளும் சாப்பிட்டாலே பக்க விளைவுகளையும், அதிகளவு இன்சுலினையும் தவிர்க்கலாம். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஆவியில் பாதி வேகவைத்த காய்களும், கீரைகளும், சிறிதளவு அவல் உணவுகளும் எடுத்துக்கொண்டால் மருந்துகளை தவிர்க்கலாம். இன்சுலின் மருந்துகள் அனைத்தையும் முழுமையாக தவிர்க்க நினைப்பவர்கள் முழுமையாக அல்கலைன் (காரத்தன்மை) உணவு 80 சதவிகிதமும் அமிலத்தன்மை (அசிடிக்) உணவு 20 சதவிகிதமும் எடுத்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் ஒருவரையருவர் தொடர்புகொள்ளும்போதும், பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என கேட்ப்பதை சற்று மாற்றி, நிறைய பச்சை காய்கள், கீரைகள், பழங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டாலே நிறைய மாற்றம் ஏற்படும்.

    இவை அனைத்தையும் ஒரு நல்ல தகவல்களாக மட்டும் கருதி, இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைபெற்று, இதுபோன்ற உணவு மருத்துவத்தை கடைபிடிக்கவேண்டும்.

    கோதுமையை பற்றியும், பால் பொருள்களை பற்றியும் எழுதவே இல்லையே என நினைக்கிறீர்களோ?. ஆமாங்க அங்கதான் நிறைய ரகசியங்கள் உள்ளன. அடுத்த வாரம் பார்ப்போம்.
    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
    உங்களுக்கு இதுதான் சரியான உணவு முறை என்பதனை நன்கு தெரிந்துகொண்டு அதனை பின்பற்றுங்கள்.

    காலை வெய்யிலில் குறைந்தது 7 நிமிடமாவது நடங்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

    24 மணிநேரமும் ‘பிஸி’ என்ற வார்த்தை வேண்டாம். தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்காக ஓய்வாக மன மாறுதலாக எடுத்துக் கொள்வோம்.
    உடற்பயிற்சியோ, யோகாவோ புதிய பயிற்சி ஒன்றினை கற்றுக் கொள்வோமே.

    நல்ல திறமைதான். இருப்பினும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாது ‘நான் எடை அதிகம்’ எனக்கு எதுவும் திறமையாக செய்ய இயலாது’ போன்ற தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னம்பிக்கை உடையவராக மாறுவோம். மனஉளைச்சல் இன்றி இருப்போம்.

    தினமும் 20 நிமிட தியானம் நாம் பழகிவிட்டோமா! இல்லையெனில் பழகிக்கொள்வோம், எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நம் டென்ஷனை கட்டுப்படுத்தி இயல்பாய் செயல்படுவோம். சின்ன எடைதூக்கும் (2கி) பயிற்சியினை தகுந்த அறிவுரையோடு மேற்கொள்வோமா!

    வீட்டினை ஆரோக்கியமாய் வைக்க மேலும் ஒரு முயற்சியினை செய்வோம். மூங்கில் செடி, சோற்றுகற்றாழை செடி வளர்ப்போம்.

    நம்மை விடாதிருக்கும் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து உறுதியாய் முனைந்து வெளிவந்து விடுவோமே, (உ.ம்) அதிக காபி, மது, கடுமையான வார்த்தைகள்.
    வீட்டில் காய்கறிகள், பழம், பொருட்கள், சமைத்த உணவு வீணாவதினை தவிர்ப்போம்.

    வீட்டில் இருப்பவர்களை நன்கு கவனித்து தன்னை மெழுகுவர்த்தியாக மாற்றிக்கொள்வது தேவையற்றது. நம்மையும், நம் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்வோம்.

    உங்கள் நேரம் மற்றவர் முன்னேற்றத்திற்காக, உங்கள் அன்றாட முழு நேரத்தினையும் தானம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆகவே தன்னையும் காத்து, பிறருக்கும் உதவியாய் இருப்பவரே சரியான பாதையில் செல்பவர். நாம் சரியான பாதையில் செல்வோமே.

    எப்பொழுதும் செல்போனில் பேசுவதும், படிப்பதும் என இருப்பவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என கூறுகின்றனர். இந்த பழக்கம் நமக்கு வேண்டாமே.
    அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது.
    நீரிழிவு நோய் கட்டுப்பாடு குறித்து சென்னை எழும்பூர் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் அ. இராமச்சந்திரன் நீரிழிவுநோய் மருத்துவமனை சிகிச்சை குழுவினர் தெரிவித்ததாவது :

    ‘எவ்வகை உணவை நாம் உண்டாலும் கடைசியாக உடலில் அது கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் மூலம் சர்க்கரை சத்தாக மாற்றப்படுகிறது. அப்போது சுரக்கும் இன்சுலின் அளவு குறைவது அல்லது வீரியமாகச் செயல்படாமல் போவது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுவது நீரிழிவு குறைபாடு என்று குறிப்பிடப்படும்.

    இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் நீரிழிவு குறைபாடு வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இவ்வகை குறைபாடு உள்ளவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேர்மறை எண்ணங்களோடு செயல்பட்டு அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும்.

    அவ்வாறு கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலையில் தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளும். பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதயம் கண், நரம்புகள், சிறுநீரகம், கால் ஆகியவை சிக்கல்களுக்கு உள்ளாகலாம். அவற்றை தவிர்க்க வாழ்க்கை நடைமுறை மாற்றமே மிகச்சிறந்த வழியாகும். அதை ஒரு சிகிக்சை முறையாகவும் கருதலாம்.

    மேலும், அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு குறைபாடு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது. சர்க்கரை இனிப்பை தவிர்த்தல், எண்ணெய், கொழுப்புணவை தவிர்த்தல் நார்ச்சத்து உணவுகளை அதிகம் உண்ணுதல், கிழங்கு வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, மாடிமேல் ஏற லிப்டை எதிர்பார்க்காமல் படிக்கட்டுகளை பயன்படுத்துதல் ஆகியவை எப்போதும் நல்லது.

    மேலும், மன பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை இன்சுலின் நன்றாக சுரப்பதையும், செயல்படுவதையும் தடை செய்கின்றன. அதனால் அமைதியான வாழ்க்கைக்கு யோகா, தியானம் போன்றவை அவசியமானதாக உள்ளன.

    மேற்கண்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் நீரிழிவு குறைபாடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவதுடன், குடும்பத்தார் ஆலோசனைகளையும் கேட்டு ஆரோக்கியமான வழிகளில் நடந்துகொள்வதும் நல்லது.

    நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் நன்மைக்காக அவர்களது குடும்பத்தினர் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைப்பதுடன், சோம்பல் காரணமாக உடற்பயிற்சியை செய்யத் தவறும் பட்சத்தில் அதன் நன்மைகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். சுயக்கட்டுப்பாடு, குடும்பத்தாரின் ஆதரவு போன்றவை நீரிழிவு குறைபாட்டை கட்டுபாட்டில் வைக்க உதவி செய்வதுடன், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழ நிச்சயம் உதவும்..’

    இவ்வாறு நீரிழிவு நோய் சிகிச்சை குழுவினர் தெரிவித்தனர்.

    எழும்பூர் தொலைபேசி எண்: 044-28582003-05

    கிண்டி தொலைபேசி எண்: 044-22353729-32
    சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
    உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனினும் ஒருசில வகை காய்கறி, பழ வகைகளில் சர்க்கரை அளவும், ஸ்டார்ச் அளவும் அதிகம் இருக்கின்றன. அதனால் நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமின்றி தமக்கும் அத்தகைய பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பேர் காய்கறி, பழ வகைகளை சாப்பிட தயங்குகிறார்கள். சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

    * தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.

    * பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

    * கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.

    * தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

    * கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.

    * முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.

    * ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

    * நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.
    சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
    இன்சுலின் மருந்தை கண்டு பிடித்த டாக்டர் பேண்டிங் அவர்களது பிறந்தநாளை (நவம்பர் 14) நினைவு கூர்வோம்! இரண்டாவது வகை சர்க்கரை நோய் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. “எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை” என்று அலட்சியப்படுத்து வோருக்கு சில தகவல்கள்.

    நன்றாக இருந்த ஒரு மனிதர் திடீரென நெஞ்சு வலியால் துடிக்கிறார், அவரை அவசர மாக மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடுகிறார்கள், இப்போது நோய் எப்படி வந்தது என்று யோசிக்க நேரமில்லை.

    இப்போதைய தேவை உயிரை காப்பாற்ற உடனடி மருத்துவம், நோயாளி மட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவை. இது அன்றாட நிகழ்வாகும். மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு போன்றவை அவசர நிலைகள். தொடக்ககால காரணங்களை முன்னறிந்து பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை உருவெடுக்காமல் தடுக்கும் முறைகள், நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகும்.

    நீண்டகால நோய்களில் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் முதலிடம் வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட அவசரகால தாக்குதல்கள் ஒரே நாளில் வருவதில்லை. இவற்றிற்கான அடித்தளம் உடலில் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விடுகிறது.

    சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை தடுப்பதற்கான ஆலோசனைகளை கூறினால் அவர் செவிமடுப்பதில்லை. விளைவு குடும்பம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது. நலமுடன் இருக்கும்போது உடல்நலத்தை பற்றி சிந்தித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

    தொற்றுநோய்கள் குறித்து நம்மிடையே இருக்கும் விழிப் புணர்வு நீண்டகால நோய்கள் குறித்து இல்லை. சர்க்கரை நோய் உடலில் உள்ள ரத்தக் குழாய்களை பாதிப்பதால் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறையும் வரை நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் தெரிவதில்லை.

    மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பாதங்கள் இழப்பு போன்ற கடுமையான சோதனைகள் உருவாகின்றன. சர்க்கரை நோய்க்கு தொடக்க காலத்தில் அன்றாட வாழ்க் கையை பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. வேலைக்கு போக முடியாமை, கடுமைான சிரமங்கள், உயிருக்கு ஆபத்து என்பது போன்ற பிரச்சினைகள் தொடக்கத்தில் வருவ தில்லை.

    இதனால்தான் பலரும் சர்க்கரை நோயை தொடக்கத்தில் கட்டுப்படுத்த தவறி அபாய நிலைக்கு வந்து விடுகிறார்கள். உணவு கட்டுப்பாடு குறித்து எவ்வளவு அறிவுரை கூறினாலும் கண்டுகொள்வதில்லை. தவறான உணவு பழக்கம் மிக அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோய் கட்டுப்பாடு ஒரு சவாலாகவே ஆகிவிடுகிறது. எந்த பாதிப்பும் இன்றி இயல்வு நிலையில் இருக்கும்போது சர்க்கரை நோய் சிகிச்சையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

    இந்த தகவல்களை தெரிந்து கொண்டு கலங்க வேண்டும். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். தெளிவான உண்மைகளை புரிந்து கொள்ளுதல், முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், யோகா மற்றும் மறு பரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும்.

    டாக்டர் ஆர்.ராஜபால்

    சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.
    வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.
    இன்று (நவம்பர் 14-ந்தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.

    சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை உருவாக்கின. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் உலக சர்க்கரை நோய் நிறுவனமும், உலக சுகாதர நிறுவனமும் இந்த ஆண்டு “குடும்பமும் சர்க்கரை நோயும்” என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளது.

    நம் உடம்பில் பல தொழிற்சாலைகள் இரவு பகல் பாராமல் இயங்குகின்றன. இவை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் நாம் உண்ணும் உணவில் இருந்தே மாவுப் பொருட்கள் மூலமாக கிடைக்கின்றன இந்த மாவு பொருட்களின் சக்தி நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் அனுப்பும் வேலையை சரியாக செய்வது நம் உடம்பில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினே. இந்த இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலோ, அல்லது நம் உடம்பு அதை சரியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அல்லது அதற்கு எதிரான, சுரப்புகள் அதிகமாகி விட்டாலோ ஏற்படுவதுதான் சர்க்கரைநோய்.

    சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாபமும் அல்ல. இது நம் இயக்கத்தின் ஒரு மாறுபாடு நம்மோடுதான் இது இறுதிவரை இருக்கும் ஒரு நண்பனைப் போல நாம் நம் நண்பரிடத்தில் வெளிப்படையாக துரோகம் இழைக்காமல் பழகினால் மட்டும்தான். அவன் நமக்கு ஒத்துழைப்பான் அதுபோல்தான் சர்க்கரை நோயும் நாம் சரியாக கவனமுடன் இருந்தால் 100 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழலாம்.

    சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும் :முதல் வகை இன்சுலின் சுரக்காமலே அல்லது மிகக் குறைந்த அளவில் சுரந்து இருப்பதினால் வருவது. இரண்டாம் வகை நம் உடம்பு இந்த இன்சுலினுக்கு ஈடு கொடுக்காமலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ அல்லது இரண்டினாலேயே அல்லது அதற்கு எதிரான சுரப்புகளாலோ வருவது. இதில் நாம் எந்த வகை என்று அறிய வேண்டும். இதற்கு நமது பாரம்பரியமும் மிகமுக்கியமான காரணமாகும்.

    இப்போது அகில உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க வழக்கமே. அதுமட்டுமல்ல நாம் இப்போது, கலாசாரம், உணவு முறை கல்விமுறை இவற்றில் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் உதாரணத்திற்கு முதலாவதாக உணவில் இருக்கும் மாவுப் பொருள் கிடைப்பது நம் பகுதியில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை, ஆப்பிரிக்காவில் உருளைக்கிழங்கு மேலை நாடுகளில் ஓட்ஸ் என்று சொல்லலாம். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த நான்கையுமே எடுத்துக்கொள்கிறோம். அப்பொழுது நம் ரத்தத்தில், செல்களுக்கு அனுப்பியது போக அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் தங்கி விடுகிறது. நம் பகுதியில் கிடைக்கும் அரிசியை அளவோடு எடுத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது அடுத்ததாக மாவுப்பொருள் எடுத்துக்கொள்ளும் போது மென்று சாப்பிடகூடிய அளவில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் அப்போதுதான், நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து அரைப்படும் போது, இன்சுலின் சுரப்பதற்கு ஏதுவாய் இருக்கும்

    மூன்றாவதாக நம் உடல் உறுப்புகள் வேலை செய்தால்தான் செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அதிக அளவு குளுக்கோஸ் செல்களுக்கு தேவைப்படாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

    நான்காவதாக நம் உடம்பில் தொப்பை அதிகமாகிவிட்டால், நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது அதன் மூலமும் குளுக்கோஸ் ரத்தத்திலேயே தங்கிவிடும். ஐந்தாவதாக நாம் டென்ஷனாகவே தொடர்ந்து ஒய்வின்றி கண் விழித்தோ மூளைக்கு வேலை அதிகம் கொடுத்தால் இன்சுலினுக்கு எதிராக சுரப்புகள் அதிகமாகி இன்சுலினை அழித்து விடும் அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்.

    ஆறாவதாக தொற்று நோய் கிருமிகளாலோ கணையத்தில் தொற்று, கட்டி போன்றவை தோன்றினாலோ இன்சுலின் சுரப்பதற்கு பாதிப்பு ஏற்படும். அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும். மேலே கூறியவற்றில் நாம் எந்த வகையில் பொருந்துகிறோம் என்று மருத்துவர்கள் கணித்து அதற்குண்டான மருத்துவமுறைகளை அளிப்பார்கள் அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம். உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு,முறையான உடற்பயிற்சி மன அமைதி, சரியான உடல் எடை வருடாந்திர உடல் பரிசோதனை அவசியம்.வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.

    டாக்டர் எஸ். வீரபாண்டியன்,சர்க்கரை நோய் நிபுணர், செம்பனார்கோயில்.
    ×