search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97409"

    உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணிகள் உணவாக கொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிட்டால் நல்லது. அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.

    பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
    உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.
    முதல் குழந்தையை பெற்றேடுக்க போகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு எனும் சடங்கை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

    கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

    கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளும் இத்தகைய உடல் மாற்றங்களை கண்டு குழப்பம், பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநல பிரச்சனைகளும் ஏற்படும். இந்த நேரத்தில்  பெரும்பாலான கர்ப்பிணிகள் வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் உணர்வு காரணமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட்டு அவர்களை சிரமப்படுத்தும்.

    வளைகாப்பு வைபவம்

    கருவுற்ற ஏழாவது மாதத்தில் உறவினர்களும், நண்பர்களும் பெண்ணின் புகுந்த வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள். கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கணணாடி வளையல்களை அணிவித்து ஆரத்தி எடுத்து அட்சதை தூவுவார்கள்.

    கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும். சுற்றமும்-நட்பும் சூழ அந்த பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

    தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும் பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

    கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனை ஏழாவது மாதத்திற்குள் பெரும்பாலும் நின்று விடும். வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை, போன்ற சோறு வகைகளையும், இனிப்பு காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசை தீர சாப்பிடுவார்கள்.

    கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும். அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

    மேலும் ஏழாம் மாதத்தற்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதன் மூலம் கணவன் தன்னை பார்க்க வரும் நாளில் கூட அப்பெண் பாதுகாப்பாக நடந்து கொள்வதற்கு அந்த வளையல்களே காப்பாக அமையும்.

    ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் நம்மையும் நம் தாய் இப்படித்தான் தாங்கியிருப்பாள்? என்று நினைத்து தாயின் மீது அதிக பாசம் கொள்வார்கள். தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவே தான் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.
    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
    பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

    சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள். 19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது. இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும். கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன. டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.

    இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.

    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும். எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

    இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

    ‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.
    திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.
    படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து, ஓரளவு செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.

    வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

    20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.

    கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?

    பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, ​​கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.

    வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?

    20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.

    தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?

    குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார். மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கு ஹார்மோன்கள் தான் காரணம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும்.

    விலங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுறவு கொள்ளக் கூடியவை. ஆனால் மனிதர்கள் எல்லா நாள்களிலும் பாலுறவு கொள்ளும் திறன் பெற்று இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு கூடலாம் அல்லது குறையலாம். அதேபோல் கணவன் தனது மனைவியின் மேல் இருந்து பாலுறவு கொள்ள சிரமமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் கிருமிகள் அதிகம் இருக்கலாம். அதனால் பாலுறவின் போது கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகம்.



    உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

    இதன் காரணமாக கருப்பை நோய் தொற்று ஏற்படலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
    ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

    தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)

    மாதவிலக்கு காலத்தில்...

    மாதவிலக்கின் போது,

    கருப்பு உளுந்து
    கருங்குருவை அரிசி
    நல்லெண்ணெய்
    முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.

    மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

    பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.

    கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.

    ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.

    மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.



    சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.

    வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.

    உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

    ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்...

    பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.
    முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    புரோக்கோலியும் நல்ல உணவு.
    உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
    மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.
    மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்.
    வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.
    அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
    பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.
    ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.
    பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.

    கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    அம்மாவிற்கு எப்படி சில விஷயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள்,நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப் புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.

    * தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.

    * நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது  கிடையாது.ஆகையால் சிரித்துக்கொண்டே இருங்கள்!நம் அகம் நிறைந்தால்,கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சிதான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.

    * தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப்படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்துவிடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும்போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டதால், அதற்கு வயிற்றில்  இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்கமானால், இடம் மிகவும் குறைந்துவிடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.

    * குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகிவிடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய்விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள்.தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும்! அங்கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதேபோலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்துவிட்டு, இரவில் படுத்ததும் தூங்கிவிடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்!

    * குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது.அதே சமயம் மிகவும் பிடித்தமானது.அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும்.அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ, கடுமையான குரலில் சண்டையிட்டாலோ அது அச்சம் கொள்ளும்.குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது.அதனால் இயன்றவரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.

    * தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கிவிடும்.இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை.ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்ணும், தான் கருவுற்றிருக்கும் காலத்திலேயே எப்படி நாம் குழந்தை பிறந்த பின் சூழலைச் சமாளிப்பது, மேலும் தங்களது வேலைகளை எளிதாக்கிக் கொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்தினர்களுடன் வாழ துணைபுரியும் குறிப்புகளை பார்க்கலாம்.

    * சத்தான உணவு (Nutritious food)

    முதலில் உங்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிந்த வரை புரதம், உயிர்ச்சத்துகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்குப் பசித்தவுடன் சாப்பிட வேண்டும். இது உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.

    * போதுமான தூக்கம் (Enough sleep)

    உங்கள் குழந்தை மட்டும் போதுமான நேரம் தூங்கினால் பற்றாது. நீங்களும் தூங்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தையை நீங்கள் நன்றாக வளர்க்க முடியும். நீங்களும் ஆரோக்கியத்தோடும் நல்ல சிந்தனைகளோடும் அவனை/அவளை வளர்க்க முடியும். முடிந்த வரை உங்கள் குழந்தை தூங்கும் போதே நீங்கள் தூங்கி விடுங்கள். மற்ற வீட்டு வேலைகளை ஒத்தி வையுங்கள்.

    * உடற்பயிற்சி (Exercise)

    இது முக்கியமான ஒன்று. அநேக தாய்மார்கள், குழந்தை பிறந்தவுடன் தங்கள் உடல் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதில்லை. இதனால் அவர்களது உடல் எடை சராசரிக்கும் அதிகமாக ஆவதோடு, பல நோய்களும் காலப்போக்கில் ஏற்படுகின்றன. அதனால் முடிந்த வரை தினமும் 10 முதல் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

    * பெரிய வாழ்க்கை மாற்றங்களைத் தள்ளி வையுங்கள் (Postpone major changes in life)

    குழந்தை பிறந்தவுடன் அநேக தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய முயற்சி செய்வார்கள். குறிப்பாக வீடு மாறுவது, வேலை மாற்றம், இட மாற்றம், வெளி நாட்டிற்குக் குடி பெயருவது என்று மேலும் பல. ஆனால் நீங்கள் குழந்தை பிறந்தவுடன் அத்தகைய மாற்றங்கள் செய்ய முயலும் போது உங்கள் உடலும் மனமும் அதிக வேலைச் சுமையாலும் அதிக பொறுப்புகளாலும் சக்தி இழக்கின்றன. இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

    * மகிழ்ச்சியாக இருங்கள் (Be happy)

    ஒவ்வொரு பெண்ணும், குழந்தையைச் சுமக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது, அவள் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, குழந்தை, கணவன் மற்றும் தன்னையும் சரியாகக் கவனித்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

    * உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் (Prepare yourself)

    குழந்தை பிறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாய் மற்றும் பாட்டி உட்படப் பலரிடம் ஆலோசனை மற்றும் சில அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவை சமயத்தில் உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எளிதாக வேலையைச் சமாளித்து மகிழ்ச்சியாக வாழ உதவும்.

    * உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் (Hire a maid)

    அனைத்து வேலைகளையும் நீங்களே செய்ய முயற்சி செய்யாதீர்கள். குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு போதுமான ஓய்வு தேவை. அந்த ஓய்வுக் காலத்தில் உங்கள் தளர்ந்த எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் இழந்த சக்தியை மீண்டும் பெற்று உரிய ஆரோக்கியத்தை அடையும். அதனால் உங்களுக்கு உதவ ஒருவரை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    * போதுமான நீர் பருகுங்கள் (Drink enough water)

    நம்மில் பலர் நீர் அருந்துவதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் போதுமான நீரைப் பருகும் போது உங்கள் உடல் நல்ல சக்தி பெறும். உங்கள் மனமும் தெளிவு பெறும். இதனால் மன அழுத்தம் குறையும்.

    * யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் (Practice yoga and meditation)

    நீங்கள் தினமும் சில நிமிடங்கள் யோகா மற்றும் தியானம் செய்வதால் உங்கள் மன அழுத்தம் பெரிய அளவில் குறைந்து தெளிவான மனதோடும், சிந்தனையோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள். இதனால் நீங்கள் உறுதியாக மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

    * இசை (Music)


    மன அழுத்தத்தைக் குறைக்க இசை பெரிய பங்கு வகிக்கிறது. உங்களுக்குப் பிடித்த மற்றும் உங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் இசையை அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதோ அல்லது வீட்டு வேலை பார்க்கும்போதோ கேளுங்கள். உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். மேலும் உங்கள் குழந்தையும் அந்த இசையை இரசிக்கத் தொடங்கும். இது உங்கள் குழந்தையை நீங்கள் சமாதானப்படுத்த மற்றும் விரைவில் தூங்க வைக்க ஒரு எளிதான வழியாக இருக்கும்.

    இங்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இனி நீங்கள் தேவை இல்லாமல் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மருத்துவரை அணுகுவது என்று எதுவும் செய்யத் தேவை இல்லை. இந்த எளிய முறைகள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சூழல், உடல் நலம் மற்றும் மன நலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நீங்கள் உங்கள் குழந்தையோடு மகிழ்ச்சியான நேரத்தைக் கழிப்பதோடு உங்கள் கணவருக்கும் நல்ல நேரத்தை ஒதுக்க முடியும்.
    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)

    இந்த ஸ்கேன் மூலம் அல்ட்ராசவுண்ட் ஒலி, கருவில் உள்ள குழந்தை மீது பட்டு எதிரொலிக்கிறது. அந்த எதிரொலியைக் காணொளியாக மாற்றி, குழந்தையின் ஒரு இமேஜ் கிடைக்கிறது. குழந்தை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எதற்காக செய்ய வேண்டும்?

    குழந்தையின் இதயத் துடிப்பை தெரிந்துகொள்ள உதவும். கருவில் இருப்பது ஒரு குழந்தையா, இரட்டைக் குழந்தைகளா அல்லது எத்தனை குழந்தைகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். Ectopic Pregnancy எனப்படும், கருவிற்கு வெளியில் குழந்தை வளர்வது போன்ற பிரச்சனைகளைக் கண்டுபிடிக்கலாம். உடலுக்குள் ஏதேனும் ரத்த கசிவு ஏற்படுகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தை டவுன் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதித்து உள்ளதா என்பதைக் கண்டறியலாம். குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை எந்த இடத்தில், எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

    குழந்தையின் அனைத்து உறுப்புகளும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். வயிற்றில் உள்ள அமினியாடிக் திரவம் சரியான அளவில் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம். குழந்தை எப்போது பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். முக்கியமாக மூளை மற்றும் தண்டுவடம் குறைபாடுகளைக் கண்டறிய உதவும்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தைகளையோ தாய்மார்களையோ பாதிப்பதாக இதுவரை ஆதாரங்கள் இல்லை. ஸ்கேனின் போது சிறிய அளவிலான சூடு ஏற்படும். ஆனால், இது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

    ஒரு டிகிரிக்கும் குறைவான வெப்பமே இது உருவாகும். அதுவும் நம் திசுக்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை வெப்பம் நான்கு டிகிரிக்கு அதிகமானால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரியான இடங்களில் ஸ்கேன் செய்து கொண்டால், எந்தவித பயமும் இல்லை.

    அதிகமான இடங்களில் 2D ஸ்கேன்களே செய்யப்படுகின்றன. இதில், குறைந்த அளவிலான அல்ட்ராசவுண்ட் ஒலி, அதிகமான இடத்தில் பரவலாக சென்று எதிரொலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், குழந்தையைச் சுற்றி உள்ள நீரில் பெருவாரியான வெப்பம் தணிக்கப்படுகிறது. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    3D ஸ்கேன் என்பது சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதிலும், 2D ஸ்கேன் சற்று அதிக நேரம் எடுக்கப்பட்டு, முப்பரிமாண படமாகத் தெரிகிறது. எனவே இதுவும் பெரிய பாதிப்பில்லை. ஆனால், 4D ஸ்கேன் என்பதை முதல் ஐந்து மாதங்கள் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் கருத்து. காரணம், குழந்தை சிறியதாகவும், அதிகமான அசைவில்லாமலும் இருப்பதால், வெப்பம் உடனடியாகத் தாக்கக்கூடும்.

    மருத்துவர் பரிந்துரைக்காமல், தாங்களாகவே ஸ்கேன் செய்ய கூடாது. தேவையற்ற கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மீதும் குழந்தையின் மீதும் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

    டாப்லர் ஸ்கேன்களும் முடிந்தவரைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு ஆக்சிஜன் (மூச்சுக் காற்று) சரியாகச் செல்கிறதா என்றும், தொப்புள்கொடி வேலை செய்கிறதா என்றும் பார்க்கவே இவ்வகை ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாராளமாகச் செய்யலாம்.
    இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்தசோகை ஏற்படுகிறது. உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்தசோகை நோய்’ என்கிறார்கள்.

    * பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.

    * மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    * இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    * இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    * இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    * பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.

    * இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.

    * வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
    ×