search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97441"

    • தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம்.
    • நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

    நீண்ட, பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இத்தகைய கூந்தலைக்கொண்ட பெண்கள், அதை முறையாக பராமரிப்பது முக்கியம். அதற்காக பயன்படுத்தும் ஷாம்பு முதல் சீப்பு வரை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

    * நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும்போது முடி உடையக்கூடும். அதற்கு பதிலாக 'பிரஷ்' போன்ற அமைப்புடைய சீப்பை உபயோகித்து முடி உடையாமல், சேதம் அடையாமல் காக்கலாம்.

    * இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது. தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

    * நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.

    * நீளமான தலைமுடி மென்மையாக இருக்கும். அது கடினமான துணிகளுடன் உராயும் பொழுது சேதமடையும். இதைத் தவிர்க்க 'சாட்டின்' போன்ற மென்மையான துணியால் ஆன தலையணை உறையை உபயோகிப்பது நன்று.

    * முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.

    * அனைத்து வகையான தலைமுடியிலும் வெடிப்பு ஏற்படுவது இயல்பானது. ஆகையால், அவ்வப்போது கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். இதனால் முடி சேதமடைவதைத் தடுக்க முடியும்.

    * தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம். இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்துங்கள். கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.

    * நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மையானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள். ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது. மேலும், தலைமுடியில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற 'மைக்ரோ பைபர்' டவல்களை உபயோகிக்கலாம்.

    • கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
    • கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

    இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.

    கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

    உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

    கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.

    • சில பழக்கவழக்கங்களை மாற்றினால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    • முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இதை கடைபிடிக்கலாம்.

    வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து மனிதர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு அங்குலம் வரை முடி வளரும். அதனால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம்.

    அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:

    ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.

    நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.

    கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

    • வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும்.
    • கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையத்திற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.

    மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

    சுருக்கம் மற்றும் வறட்சி: வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும். இரவில், இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும்.வால்நட் எண்ணெய்யைக் குளிக்கும் தண்ணீரில் சிறிது சேர்த்துக் குளித்து வந்தால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளுடன் ஏற்படும் அழற்சி பிரச்சினை தீரும்.

    சருமத் தொற்று மற்றும் கருவளையம்: வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம். பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

    அரிப்பு மற்றும் பொடுகு: குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    முடி வளர்ச்சி: வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும். இதுதவிர, புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வால்நட் எண்ணெய்யில் இருக்கும் சத்துக்களுக்கு உண்டு. தினமும் வால்நட்டை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

    • ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது.
    • உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

    தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. 'அனாஜன்' என்பது வளரும் பருவம்.

    ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது 'காட்டாஜன்' என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப்பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும்.

    மூன்றாவது பருவம் 'டீலாஜன்'. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச்சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சி பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

    வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன், இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தன்னை புதுப்பித்து கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான், என்கிறார்கள் மருத்துவ துறையினர்.

    • பப்பாளி மாஸ்க்கை போட்டால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.
    • பப்பாளி பேக் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

    நோய்களைத் தீர்க்க, கூந்தல் பிரச்சனைகளை நீக்க, சரும பராமரிப்பு என பல்வேறு வகைகளில் பப்பாளி நமக்கு பயன்படுகிறது. இனி சரும பராமரிப்பிற்கு பப்பாளியைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

    பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் (Beta carotin) ஆகியவை நிறைந்துள்ளன. எனவே பப்பாளி பழத்தின் சிறுதுண்டை நன்கு மசித்து, அதனுடன் தயிர் சேர்ந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெண் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும்.

    பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.

    பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

    இதேபோல் நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் (Citric Acid) முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் அளிக்கும்.

    மசித்த பப்பாளியுடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider Vinegar) மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் ஹேர் பேக்காக (Hair pack) போடவும். ஆப்பிள் சைடர் வினிகர், ஸ்கேல்ப்பின் (Scalp) பிஎச் (pH) அளவை சமன் செய்து, பொடுகுத் தொல்லையைப் போக்குகிறது. தேங்காய் எண்ணெய் பொடுகால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க உதவுகிறது.

    பப்பாளி, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டக் கலவையை கூந்தலின் ஸ்கேல்ப்பில் மாஸ்க்காகப் போடவும். இந்த மாஸ்க், கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

    • தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு.
    • முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன.

    முடி அழகு முக்கால் அழகு என கிராமப்புறங்களில் கூற கேட்டிருப்போம். நம்மில் பலருக்கும் முடி கொட்டுவது, வழுக்கை ஏற்படுவது ஆகியவை தீராத பிரச்சனையாக இருக்கும்.

    இது பலரிடம் மனதளவில் பாதிப்பு கூட ஏற்படுத்தி விடும். இதற்காக, வழுக்கை உள்ளவர்கள் புத்திசாலி என கூறி தங்களை தாங்களே சமரசப்படுத்தி கொள்வதும் உண்டு. இதற்கு தீர்வு காண பல்வேறு சிகிச்சை முறைகளை தேடி போவதும் நடக்கும்.

    ஆனால், முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. போதிய ஊட்டச்சத்து இன்மை, வைட்டமின் குறைவு உள்ளிட்டவை பொதுவான காரணிகளாக உள்ளன. இவற்றை நல்ல சத்துள்ள ஆகாரங்களை உண்டு தீர்வு காணலாம். சிலருக்கு முன்னோரின் மரபணு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் பாதிப்பு ஏற்படுவதுண்டு.

    தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு. ஆனால், அதிக அழுத்தம் கொடுப்பது தேவையில்லை. நாளடைவில், முடியின் வேர்க்கால்களின் பலம் குறைந்து கொட்ட தொடங்கி விடும்.

    நம்மில் பலர் வாசனைக்காகவும், தலைமுடியின் பிசுபிசுப்பு தன்மை போக வேண்டும் என்பதற்காகவும் ஷாம்பூ, கண்டிசனர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். எனினும், இவற்றில் சேர்மபொருட்களாக கலக்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை கூட ஏற்படுத்தி விடும்.

    இது தெரியாமல், அவற்றை பயன்படுத்துவதும் காலப்போக்கில் முடியின் பலவீனத்திற்கு வழிவகுத்து விடும். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். முடி கொட்டுவதற்கு நிக் கோயெட்ஜீ என்ற நபர் அவருக்கு தெரிந்த தீர்வு ஒன்றை டிக்-டாக்கில் வெளியிட்டு உள்ளார்.

    அதற்கு முன் அவருக்கு உள்ள பிரச்சனை என்னவெனில், படிக்கும் காலத்தில் சக மாணவர்களுடன் வகுப்புக்கு போகும்போது, தன்னுடன் கூடுதலாக சட்டை ஒன்றை எடுத்து செல்வார்.

    ஏனெனில், முதல் பாடவேளை முடிந்தவுடன், அவரது உடைகள் முழுவதும் முடியால் நிரம்பி இருக்கும் என அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவருக்கு தலைமுடி கொட்டியுள்ளது.

    அவர் ஒவ்வொரு நாளும் ஷாம்பூ, கண்டிசனர் என மாறி, மாறி உபயோகித்து வந்துள்ளார். அவற்றில் உள்ள அனைத்து ரசாயன பொருட்களும் சேர்ந்து முடி உதிர்தலை ஏற்படுத்தி மோசமடைய செய்து உள்ளது என நினைத்துள்ளார்.

    அதனால், ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இனிமேல் தலைக்கு குளிக்க கூடாது என்பதே அந்த முடிவு. இதற்காக 6 ஆண்டுகளாக ஷாம்பூ, கண்டிசனர்கள் என எதனையும் அவர் பயன்படுத்தவில்லை. தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் எதனையும் அவர் உபயோகிக்கவில்லை.

    இதுபற்றி நிக் கூறும்போது, ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய முடி பலம் அடைந்து உள்ளது. நன்றாக தலை முழுவதும் முடி அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது என கூறியுள்ளார்.

    இதற்கு பெயர் no poo movement என்றும் இதற்காக #nopoomovement என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனை பின்பற்றும் நபர்களும் பெருகி வருகின்றனர். அவர்கள் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் அனைத்தும் போலியானவை என நம்புகின்றனர். சமீப காலங்களாக இந்த டிரெண்டானது பெருகி வருகிறது. ஷாம்பூ பாட்டில்கள் மற்றும் ரசாயன பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு எந்தளவுக்கு ஏற்படுகிறது என மக்கள் அறிய தொடங்கி உள்ளனர் என அவர் கூறுகிறார்.

    எனினும், மக்கள் தலைமுடியை அலசாமல் விட்டு விடுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நமது பணம் சேமிக்கப்படுகிறது. நம்முடைய தலைமுடி ஆரோக்கியமுடனேயே இருக்கிறது என்ற எண்ணம் ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகின்றன.

    நிக் அளித்துள்ள விளக்கத்தில், உங்களது தலைமுடியை அலசாமல் விட்டு விட்டால், அது எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பு ஏற்பட்டு விடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது 2 அல்லது 3 வாரங்களுக்கே நீடிக்கும்.

    அதற்கு பின்னர், உங்களுடைய இயற்கை எண்ணெய் வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், அனைத்து ரசாயனங்களும் வெளியேறி, உங்களுடைய தலைமுடி முற்றிலும் வளம்பெற்று விடும். அதற்கு பின்னர் அதனை அலச வேண்டிய அவசியமும் இல்லை. என்ன இந்த முயற்சியை நீங்களும் செய்து பார்க்க விரும்புகிறீர்களா? என அதில் அவர் கேட்டுள்ளார்.

    • கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் சிறந்த தீர்வாக உள்ளது.
    • இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

    இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    முதல் முறை:

    கருஞ்சீரகம் – 100 கிராம்,

    வெந்தயம் – 100 கிராம்,

    தேங்காய் எண்ணெய் – 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

    பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

    மற்றொரு முறை:

    கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,

    வெந்தயம் - 2 டீஸ்பூன்,

    கற்றாழை ஜெல் - 1 கப்,

    தேங்காய் எண்ணெய் - 1 கப்

    எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும்.

    அடுப்பில், வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.

    இதை, வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு, அடர்த்தியாக முடி வளரும்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான்.
    தரமற்ற அழகு சாதன பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.

    முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான்.

    பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்த சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

    மேலும் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம், என்றும் கூறுகிறார்கள்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்கும்போது உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.
    ×