search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.
    திருக்குர்ஆனில் மொத்தம் 25 நபிமார்களின் திருப்பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் நபி இப்ராகிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) போன்ற நபிமார்களின் பெயர்கள் பல முறை இடம் பெற்றுள்ளது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயர் 4 முறை இடம் பெற்றுள்ளது.

    அதுபோல நபிகளாருக்கு ஆயிரமாயிரம் உயிர்த்தோழர்கள் (சஹாபாக்கள்) இருந்த போதிலும், அவர்களில் ‘ஸைத்’ என்ற ஒரு நபித்தோழரின் பெயர் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவாகி உள்ளது.

    அத்தகைய சிறப்பு மிக்க நபித்தோழர் ஸைத் குறித்த வரலாற்று பின்னணியை பார்ப்போம்.

    பாரம்பரியமிக்க கல்ப் குலத்தை சார்ந்த ஹாரிதாவின் மகன் ஸைத். அவரது தாய் புகழ்பெற்ற வள்ளலான ஹாதிம் தாயின் பரம்பரையை சார்ந்தவர்.

    ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாயி என்ற கிராமத்திற்கு தனது தாயாருடன் ஸைத் சென்றிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கும்பல் குதிரையில் வந்து அக்கிராமத்தை சூறையாடியது.

    அப்போது அக்கொள்ளையர்கள் ஆண்கள் பலரையும் சிறைபிடித்து சென்றார்கள். அவர்களில் இளைஞரான ஸைதும் கைதாகி இருந்தார். பின்னர் கைதிகளாக பிடிபட்டவர்களை எல்லாம் உக்காஸ் என்ற அரேபிய சந்தையில் அடிமைகளாக விற்று விட்டார்கள்.

    அந்த சந்தைக்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகனான ஹிஷாம் என்பவர் சென்று சில அடிமைகளை விலைக்கு வாங்கினார். அதில் ஸைதும் ஒருவராய் வாங்கப்பட்டு இருந்தார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்திருந்த காலகட்டம் அது. மணமகளாக இருந்த கதீஜா அவர்கள் தனது மருமகனான ஹிஷாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

    அது சமயம் ஹிஷாம் சில அடிமைகளை கதீஜா (ரலி) அவர்களிடம் காட்டி, அவர்களில் ஒருவரை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டார். கதீஜா (ரலி) அவர்கள், அந்த அடிமைகளில் ஸைதையே தேர்வு செய்தார்கள்.

    அச்சமயம் பராகா என்ற அடிமைப்பெண் நபிகளாருக்கு பணிவிடை செய்துவந்தார். ஆனால் அவரை நபிகளார் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சுதந்திரமாக செல்ல அனுமதித்து இருந்தார்.

    எனவே, கதீஜா (ரலி) அவர்கள் தனது கணவருக்கு உதவியாக இருக்க, ஸைதை அனுப்பினார்கள்.

    நபிகளார், ஸைதிடம் அன்பாகவும், பரிவாகவும் ஒரு தந்தையை போன்றே நடந்து கொண்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல ஸைத் நபிகளாரின் உற்ற நேசராகவே மாறிப்போனார்.

    இந்த நிலையில் ஸைதை அவரது பெற்றோர்கள் தேடிஅலைந்தனர். எவ்வளவோ அலைந்து திரிந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

    கஅபாவின் புனித யாத்திரை காலம் தொடங்கியபோது, கல்ப் குலத்தவர்கள் பலரையும் மக்காவின் வீதிகளில் நடமாடுவதை ஸைது கண்டார்.

    ஸைத் அவர்களை அணுகி தான் மக்காவில் இருப்பதை தனது பெற்றோரிடம் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்:

    ‘எனது குடும்பம் எனக்காக துயரப்படுவதை நான் நன்கறிவேன். இறைவனின் அருள் நிறைந்த தலங்களில் (மக்காவில்), புனிதமானதோர் (நபிகளாரின்) இல்லம் தான் எனது உறைவிடமாகும். உயர் குலங்களில் அனைத்திலும் உயர்ந்த இடத்தில் நான் உறைந்திருக்கின்றேன். என்னை தேடி அலைவதினால் ஒட்டகங்களை களைப்படையச் செய்யாதீர்கள். எனக்கெனச் சுமந்த துயரங்களை எல்லாம் உடனே விட்டு விடுங்கள்’.

    இவ்வாறு தன்பெற்றோரிடம் கூறுமாறு ஸைத் தகவல் அனுப்பினார்.

    இச்செய்தி கிடைத்தவுடன் ஸைதின் தந்தையான ஹாரிதா தனது தம்பியை உடன் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு விரைந்து சென்றார்.

    மக்காவை வந்தடைந்ததும் அவர் நபிகளாரை நேரில் சந்தித்தார். தனது மகன் ஸைதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென வேண்டியதோடு, அதற்கு ஈட்டுத்தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக நபிகளார் முன் பணிவுடன் கூறி நின்றார்.

    ஸைத் யாருடன் இருக்க வேண்டும் என்பதை ஸைதே முடிவு செய்யட்டும் என்றார்கள் நபிகளார்.

    ‘ஸைத், உங்களோடு வர சம்மதித்தால், எனக்கு எந்த ஈட்டு தொகையும் தராமல் தாராளமாக உங்களது மகனை நீங்கள் அழைத்துச்செல்லலாம். ஆனால் அவர் என்னுடன் இருக்க விரும்பினால், என்னை தேர்வு செய்யும் எவரையும் நான் நிராகரித்து நிற்பவன் அல்ல’ என்று நபிகளார் உறுதியுடன் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஸைத் அங்கு வந்தார்.

    அவரை அழைத்த நபிகளார், ‘ஸைதே இவர்களை உமக்கு தெரியுமா?’ எனக்கேட்டார்கள்.

    ‘ஆம்’ என்ற ஸைத், ‘ஒருவர் தனது தந்தை, மற்றவர் தனது சிறிய தந்தை’ என்று கூறினார்.

    ‘இவர்கள் உம்மை மீட்டு உமது ஊருக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள். உமது விருப்பப்படி நீர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நபிகளார், முடிவெடுக்கும் பொறுப்பை ஸைதின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள்.

    ஸைத் அதற்கு மிக நிதானமாகவே பதில் கூறினார்.

    ‘அண்ணலே, உலகில் உங்களுக்கு பகரமாக வேறு எவரையும் நான் தேர்வு செய்ய மாட்டேன்’ என்றார்

    இதைக் கேட்ட அவரது தந்தை ஹாரிதா இடி விழுந்ததை போல திகைத்து நின்றார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய நபிகளார் ஹாரிதாவையும் அவரது தம்பியையும், புனித தலமான கஅபாவிற்கு அழைத்துச்சென்றார்கள்.

    மக்களை எல்லாம் சப்தமாக அழைத்து ஒன்றுகூட்டி, ஸைதின் கையை பிடித்துக்கொண்டு, ‘இன்று முதல் ஸைத் எனது மகனாவார், நான் அவரது தந்தை’ என பிரகடனம் செய்தார்கள்.

    இது ஸைதின் தந்தைக்கும், அவரது தம்பிக்கும் மிகுந்த ஆறுதலை தந்தது.

    தனது மகன், அருள் நிறைந்த அன்பாளரான நபிகளாரிடம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் கருதப்படுவதை கண்டு மன நிறைவோடு தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    நபிகளாரை, ஸைத் தனது பெற்றோர்களை விடவும், தன்னைவிடவும் பெரிதும் நேசித்தமையும், நபிகளாரை ஸைத் அளவு கடந்த பிரியத்தோடு தேர்வு செய்து கொண்டமையும் அவருக்கு மிக அரியதோர் வாய்பை ஏற்படுத்தி தந்தது எனலாம்.

    திருக்குர்ஆனில் அவரது பெயர் 33-வது அத்தியாயம் 37-வது திருவசனத்தில் இடம் பெற்றுள்ளது.

    நபிகளாரும் ஸைதும் தந்தை மகன் என்ற பலமான நேசமும் பாசமும் கொண்டவர்களாக இருந்த போதிலும், உலகில் வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற சொந்த மகனைப் போன்று ஆக முடியாது என்பதை வலியுறுத்தி இறைவன் தன் வசனத்தை குர்ஆனில் இவ்வாறு இறக்கி வைத்தான்:

    ‘(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 33:40).

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.
    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைத்தூதர்களான நபிகளை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    நபிமார்கள் என்றால் யார்?

    நபிமார்கள் என்பவர்கள் மனிதர்களில் புனிதர்கள், மாமனிதர்கள்.

    இவர்களுக்கு இறைவனிடம் இருந்து இறைச்செய்திகள் அறிவிக்கப்படுகிறது. அவற்றை, அவர்கள் நன்றாக விளங்கி, அதில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சமுதாயத்தவர்களுக்கு போதிப் பவர்கள்.

    இவர்கள் சீரிய சிந்தனையாளர்கள், புரட்சியா ளர்கள். சமூக சீர் திருத்த கருத்துக்களை விதைத்து, சமூக முன்னேற்றத்திற்கு அயராது அல்லும் பகலும் பாடுபடக்கூடியவர்கள். சமூக தீமைகளுக்கு எதிராக போராடுபவர்கள், சமூகக்கொடுமைகளை துணிவுடன் அகற்றியவர்கள்.

    மக்களை, சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்கள், அசத்தியத்தை தயங்காமல் எதிர்ப்பவர்கள். இறைவனை அடைய எளியமுறையில் இறைக்கோட்பாடுகளை இனிமையாக பேசுபவர்கள். நல்லதை ஏவுபவர்கள், தீயதை தடுப்பவர்கள். சமூக ஒற்றுமைக்காக உழைத்தவர்கள். இறைவழியிலும், நேரான பாதையிலும் மக்களை அழைத்து நல்வழி காட்டுபவர்கள்.

    அவர்கள் அன்பானவர்கள்; அழகானவர்கள்; பண்பாளர்கள்; வாய்மையாளர்கள்; மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்; பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்; இறை நேசர்கள்; சமூக சேவகர்கள். இப்படி பன்முகத்தன்மை வாய்ந்தவர்கள் தான் நபிமார்கள்.

    இவர்களையும், இவர்கள் கொண்டு வந்ததையும், செய்து வந்ததையும், சொல்லி வந்ததையும், அங்கீ கரித்து வந்ததையும் நம்பிக்கை கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    நபி-ரசூல்

    நபிமார்கள், ரசூல்மார்கள் இடையே சிறிய வேறுபாடு உள்ளது. ரசூல் என்பவருக்கு தூதுத்துவம், நபித்துவம் ஆகிய இரண்டு தன்மைகளும் உண்டு.

    நபி என்பவருக்கு நபித்துவம் மட்டுமே இருக்கும். அதாவது, மார்க்கத்தின் புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு இறைச்செய்தி இறக்கப்பட்டு, அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் இறைத்தூதர் எனப்படுவார். இவருக்கு தனிவேதமோ, சிறிய ஏடுகளோ வழங்கப்பட்டாலும், வழங்கப்படவில்லையானாலும் சரியே.

    நபி என்பவருக்கு புதிய சட்டங்களைக் கொண்டு, வேத செய்தி இறக்கப்படாது. அவருக்கு முன்பு வந்த இறைத்தூதரின் சட்டங்களையே பின்பற்றி பிரச்சாரம் செய்பவராக இருப்பார்.

    நபிமார்களை நம்புவதில் நான்கு விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அவற்றை விரிவாக காண்போம்...

    1) இறைவன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பி வைத்தான். ஒரே இறைவனை மட்டுமே வணங்கிட அவர் தம் மக்களை அழைப்பார்; இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துப் பேசுவார். இறைச் செய்திகளிலிருந்து எதையும் மறைக்காமல், மாற்றாமல் உள்ளதை உள்ள படியே தெரிவிப்பார். அவற்றிலிருந்து தங்களது விருப்பப்படி ஒரு எழுத்தை கூட கூடுதலாகவோ, குறைவாகவோ கூறமாட்டார்.

    ‘தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர் களுக்கு வேறு எதுவும் உள்ளதா?’ (திருக்குர்ஆன் 16:35)

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக, அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’ (திருக்குர்ஆன் 14:4).

    இறைத்தூதர்களின் அழைப்புப்பணி, முதல் தூதரிடமிருந்து அவர்களின் இறுதித்தூதர் வரை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையின் மீதே ஒன்றுபட்டிருந்தது.

    அனைத்து வகையான வணக்கங்களையும், இறைவனுக்கு மட்டுமே ஆற்றிடவேண்டும். அவற்றில் பிறரை கூட்டுச் சேர்க்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் உரக்கச் சொன்னார்கள்.

    ‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள், என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை’. (திருக்குர்ஆன் 21:25)

    ‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய (இறைத்) தூதர்களிடம் கேட்பீராக’. (திருக்குர்ஆன் 43:45)

    தூதர்களிடையே வணக்க வழிபாடு முறைகள் மாறுபட்டிருக்கலாம். அவரவர் மார்க்கச் சட்டத்தின்படி ஆகுமானவைகள், கூடாதவைகள், கடமைகள் போன்ற விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு மாறுபட நேரிடலாம். எனினும், ஓரிறைக் கொள்கையில் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாகத்தான் இருந்தார்கள்.

    ‘உங்களில் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். இறைவன் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை)’. (திருக்குர்ஆன் 5:48)

    2) யாரின் பெயரை நாம் அறிந்திருக்கிறோமோ அவரையும், யாரின் பெயரை நாம் அறியவில்லையோ அவரையும், பெயர் இல்லாமல் எவர் குறிப்பிடப்படுகிறாரோ அவரையும் நம்புவது முஸ்லிம்கள் மீது கடமை.

    ‘உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. இறைவனின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டுவருவது எந்தத் தூதருக்கும் இல்லை’. (திருக்குர்ஆன் 40:78)

    ‘(முகம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர் களின் வரலாற்றை உமக்குக் கூறவில்லை’. (திருக்குர்ஆன் 4:164)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரி வித்ததாக அபூதர் (ரலி) கூறுவது:

    “அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் ஆவர். அவர்களில் முன்னூற்றி பதினைந்து பேர் ரசூல் (இறைத்தூதர்)கள் ஆவர்’ என்று கூறினார்கள்”. (நூல்:அஹ்மது, மிஷ்காத்)

    இவர்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றவர்கள் 25 நபிமார்கள். அவர்கள் பெயர் வருமாறு:-

    ஆதம் (அலை), நூஹ் (அலை), இத்ரீஸ் (அலை), இப்ராகிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுப் (அலை), லூத் (அலை), ஷீத் (அலை), ஸாலிஹ் (அலை), சுஅய்ப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), தாவூத் (அலை),

    சுலைமான் (அலை), அய்யூப் (அலை), துல்கிப்லு (அலை), யூனுஸ் (அலை), இல்யாஸ் (அலை), அல்யஸஉ (அலை), ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்).

    இவர்களில், ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராகிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்) ஆகியோர் உறுதிமிக்க தூதர்கள் எனும் சிறப்புப்பெயரை பெற்றவர்கள்.

    3) இறைத்தூதர்களிடம் இருந்து வந்த சரியான தகவல்களையும் நம்ப வேண்டும். மேலும் முகம்மது (ஸல்) அவர்களையும் நம்பி, அவர் காட்டிய வழியிலும் செயல்பட வேண்டும்.

    ‘(முகம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 4:65)

    4) முகம்மது (ஸல்) அவர்களை இறை வனின் இறுதித்தூதராகவும் நம்பவேண்டும்.

    இதுகுறித்தும் திருக்குர்ஆன் இவ் வாறு ஆணித்தரமாக அறிவிக்கிறது:

    ‘முகம்மது, உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக இறைவனின் தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்’. (திருக்குர்ஆன் 33:40)

    ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்ள மதீனாவில்) அலி (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப் பிரதிநிதியாக) நியமித்தார்கள். அப்போது அலி (ரலி) ‘குழந்தைகளையும், பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில், என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி).

    மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் இறைத் தூதர்களான நபிமார்களை நம்பவேண்டும். இறை வனால் அருளப்பட்டது என்று அவர்கள் கூறிய தகவல்களையும் நம்பி அவர்களை பின்பற்றவேண்டும்.

    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிமாக ஆவார். 
    சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
    இன்று நம்மில் பலர், ‘சோதனை என்பது எனக்கு மட்டும்தான் நடக்கிறது’ என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அது உண்மை தானா?

    சோதனை என்பது இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதே சமயத்தில் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிபவர்கள் சொற்பமானவர்களே.

    சிலருக்கு சோதனை ஏற்பட்டுவிட்டால் அப்படியே இடிந்து போய்விடுகிறார்கள். அனைத்தும் கை மீறி போய்விட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவற்றையே நினைத்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    நாம் செய்யவிருக்கும் சாதனைகள், சோதனை என்ற கற்பனையால் முடங்கி போய்விடக்கூடாது, முட்டுக்கட்டையாக மாறிவிடக்கூடாது.

    கரப்பான் பூச்சியைப் பாருங்கள், அந்தப் பூச்சி தலைகீழாக புரண்டுவிட்டால் என்ன செய்யும்? முதலில் கால்களை அடித்து திரும்ப முயற்சிக்கும். முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வாறே கால்களை அடிக்கும். அப்போதும் திரும்பவில்லையென்றால் அவ்வளவு தான் என்று விட்டுவிடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எப்படியாவது எழுந்துவிடும்.

    மனிதனும் அவ்வாறுதான் முயல வேண்டும். முடியவில்லை என்பதற்காக மூலையில் அமர்ந்து விடக்கூடாது.

    சோதனையை சாதனையாக மாற்று

    சோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைத்தவர் தான் மிகப்பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். இவருக்கு இளமைப்பருவத்திலேயே உடலில் உள்ள கையும், காலும் செயல் இழந்துவிட்டது. இவரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிய போது, மருத்துவரிடத்தில் இவர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?

    “இதனால் என் மூளைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா?”

    அதற்கு மருத்துவர்கள், “இதனால் உங்கள் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறியவுடன், தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல் மகிழ்ந்தார்.

    பின்னர் அவருடைய உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்தது. ஆனாலும், இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட செயலுக்கு நகர்ந்து, இந்த உலகமே போற்றும் விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்துள்ளார். அவர் சோதனைகளை வெறும் சோதனையாக மட்டும்தான் பார்த்தாரே தவிர, அதனால் மன தளரவும் இல்லை, அவற்றை தனது முன்னேற்றத்திற்கு தடையாக, பாரமாக பார்க்கவும் இல்லை.

    சோதனை என்றால் என்ன? என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    சோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பு.

    ஆம், சோதனையின் போதுதான் ஒரு மனிதன் அதனை சமாளிப்பதற்கு சக்தி பெறுகின்றானா? அல்லது துவண்டு விடுகின்றானா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    அவ்வாறுதான் நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும். அதில் ஏற்படும் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

    பெரும்பெரும் வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், அதில் எந்தவொரு கஷ்டமும் இருக்கக்கூடாது என்றால், அது உழைப்பின்றி ஊதியம் பெற முயற்சிப்பதைப் போன்றாகும்.

    திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “மனிதனுக்கு தான் முயற்சி செய்ததை தவிர வேறெதுவும் இல்லை” (53:39)

    அவ்வாறென்றால், ஒவ்வொரு மனிதனும் உறுதிபட மனதில் நிலைநிறுத்த வேண்டிய விஷயம் என்ன?

    ‘நமது செயலுக்கான பலன் இன்னொரு மனிதனுக்கு கிடைக்காது. நான் எதனைச் சிரமம் எடுத்துச் செய்கின்றேனோ அதன் பலனும் எனக்குத்தான், சிரமம் எடுக்காமல் செய்கின்றேனோ அதற்கான விளைவும் எனக்குத்தான்’.

    நிலைகுலையாமையுடன் இரு

    உலக விவகாரங்களில் ஈடுபடும்போது மட்டும்தான் சோதனைகள் வரும் என்பதில்லை. மாறாக இறை உவப்பையும், மறுமை வெற்றியையும் பெற்றுத்தரக்கூடிய இறைப்பணியை செய்யும் போதும் சோதனைகள் மலைபோல் குவியும்.

    ஏனென்றால், ‘நிலைகுலையாமையுடன் இறைப்பணியைத் தொடர்ந்து செய்கிறோமா; அல்லது நிராசையடைந்து அதனை விட்டு விடுகிறோமா?’ என்பதை இறைவன் சோதிப்பான்.

    இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடங்கி நபித்தோழர்கள், இமாம்கள், பெரும் பெரும் ஆளுமைகள் அனைவரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அவற்றைக்கண்டு அவர்கள் அஞ்சவுமில்லை, தங்களது இறைப்பணியிலிருந்து சிறிதளவேனும் தடம் புரளவுமில்லை.

    ஓர் இறைநம்பிக்கையாளனுக்கும். இறைநம்பிக்கை அற்றவனுக்குமான வேறுபாடு இங்குதான் வெளிப்படும்.

    ‘எனது இறைவன் என்னைச் சோதிக்கின்றான். எனது பொறுமையை பரிசோதிக்கின்றான்’ என்று எண்ணி ஓர் இறைநம்பிக்கையாளன் அனைத்தையும் சகித்துக்கொள்வான்.

    அதேசமயம் நம்பிக்கையில்லாதவன் அரற்றுவான், அலறுவான். பின்னர் நமக்கெதுக்கு வம்பு என்று செய்துகொண்டிருந்த நல்ல செயல்களை விட்டுவிடுவான்.

    நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைப்பணியைச் செய்து வந்த நேரத்தில் மக்காவாசிகள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்ல தாக்குதலையும் மேற்கொண்டனர்.

    அவை அனைத்தையும் பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். பின்னர் தாயிப் நகரில் இறைச்செய்தியை எடுத்துச்சொல்லும் போதும்கூட. கல்லாலும், கடும் சொல்லாலும் பெருமானாருக்கு பெரும் சோதனைகளைக் கொடுத்தனர்.

    எந்தளவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றால்... உடலில் இருந்து வழிந்தோடிய ரத்தம் உறைந்து காலோடு காலாக ஒட்டிக்கொண்டது. நபியவர்களின் செருப்பை காலை விட்டும் கழற்ற முடியவில்லை.

    அப்போதும் கூட நபி (ஸல்) அவர்கள், ‘போதும்... இவ்வளவு துயரங்களைத் தாண்டி இந்த அழைப்புப்பணி செய்ய வேண்டுமா?’ என்று நினைக்கவில்லை. மாறாக, தாயிபிலிருந்து திரும்பி வரும் சமயத்தில் கூட ஒரு மனிதரை சத்திய மார்க்கத்தை ஏற்கச்செய்தார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு இறைப்பணியில் நிலைகுலையாமல் இருந்திருப்பார்கள்.

    முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க சோதனைகளாகவே நிறைந்திருந்தது. பெருமானார் (ஸல்) தமக்கு வந்த சோதனைகள் அனைத்திலும் நிலை குலையாமல் நின்றார்கள், வெற்றி பெற்றார்கள். இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய செய்திகள் பேசப்படுகிறது.

    அதேபோலத்தான் நபித்தோழர்கள் வாழ்விலும் சோதனைகள் வந்திருக்கின்றன. பெருமானார் (ஸல்) மரணமடைந்த பிறகு மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்றார்கள்.

    அப்போது கலிபாவாக பொறுப்பில் இருந்தவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தான்.

    அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அரபுகள் சொன்னார்கள்: “அபூபக்கரே, வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். மரணம் வரை நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே இறைவனை வணங்குங்கள்”.

    இவ்வளவும் நடந்த பின்னரும், அபூபக்கர் (ரலி) அவர்கள் மனம் தளரவில்லை. அந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சிறந்த இஸ்லாமிய ஆட்சியை தந்தார்கள். காரணம், பொறுப்பின் மீது கொண்ட கடமை உணர்வு.

    எனவே, நாமும் சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

    எஸ். முகமது அலி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
    திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவேதங்களை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    இறைநம்பிக்கையில் அடுத்த கட்டம் இறைவேதங்களை நம்புவது. இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதங்களையும், சுஹுபுகள் எனும் சிறிய ஏடுகளையும் உண்மை என உளமாற நம்ப வேண்டும்.

    பிரதான இறைவேதங்கள் என்று வரும்போது முக்கியமான நான்கு வேதங்களை குறிப்பிடலாம். அவை வருமாறு:-

    தவ்ராத்:இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளினான். மேலும் அவருக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அளித்தான்.

    சபூர்:இது யூனானி எனும் கிரேக்க மொழியில் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கினான்.

    இன்ஜீல்:இது ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறைவன் இறக்கிவைத்தான்.

    திருக்குர்ஆன்:இது அரபி மொழியில் முகம்மது (ஸல்) அவர் களுக்கு இறைவன் அருளினான். இந்த வேதம் படிப்படியாக 23 ஆண்டுகள் அருளப்பட்டது.

    இதைத்தவிர முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும், ஷீது (அலை) அவர்களுக்கு ஐம்பது ஏடு களையும், இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு முப்பது ஏடுகளையும், இப்ராகிம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அருளினான்.

    மேற்கூறப்பட்ட நான்கு இறைவேதங்களும், 110 ஏடுகளும் இறைவனின் திருவசனங்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன்’ என்று கூறுவீராக’. (42:15)

    ‘தவ்ராத்தையும் நாம் அருளினோம், அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது’. (5:44)

    ‘நபிமார்களில் சிலரைவிட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் (வேதத்தை) கொடுத்தோம்’. (17:55)

    ‘தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீல் வேதத்தையும் வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது’. (5:46)

    ‘இன்ஜீலுக்குரியோர் அதில் இறைவன் அருளியதின் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும்’. (5:47)

    ‘உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை (திருக்குர்ஆனை) தன் அடியார் (முகம்மது (ஸல்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்’. (25:1)

    ‘(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை, (திருக்குர்ஆனை படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்’.

    ‘இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நன்மை-தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் புர்கான் (எனும் குர்ஆனையும்) இறக்கிவைத்தான். ஆகவே, எவர் இறைவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்’. (3:3,4)

    இறைவேதங்களான நான்கு வேதங்களும் வெவ்வேறு வகையான காலகட்டங்களில் வெவ்வேறு நபிமார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டது. முந்தைய வேதத்தை, பின் இறக்கியருளப்பட்ட வேதம் உண்மைப்படுத்துகிறது; அதை பாதுகாக்கவும் செய்கிறது.

    நான்கு வேதங்களும் மக்களை நல்வழிப்படுத்தவே இறங்கியது. அவை மக்களுக்கு பலவிதமான வகையில் ஒளிவீசும் நேர்வழி காட்டுபவைகளாகவே அமைந்தன.

    இறுதியாக வந்த இறைவேதமாகிய திருக்குர்ஆனும், இறுதித்தூதராக அனுப்பப்பட்ட முகம்மது (ஸல்) அவர்களும் முந்தைய வேதங்களையும், முந்தைய நபிமார்களையும் ஏற்று, மெய்ப்படுத்தினார்கள்.

    ‘உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதற்காகவும், அதை பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே இறைவன் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக’. (5:48)

    ‘(முஹம்மதே) நேர்வழி நோக்கி அழைப்பீராக, உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு’. (42:15)

    ‘எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே, இறைவனை அஞ்சுங்கள், எனக்குக் கட்டுப்படுங்கள் என்றும் கூறினார்’. (3:50)

    ‘இது (திருக்குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’. (3:138)

    மேலும், வேதம் அருளப்பட்ட நபிமார்களும் தங்களுக்கு இறங்கிய வேதத்தை நம்பவேண்டும். இறைநம்பிக்கையாளர்களும் அனைத்து வேதங்களையும், ஏடுகளையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    ‘நம்பிக்கை கொண்டாரே, இறைவனையும், அவனது தூதரையும், தமது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்’. (4:136)

    ‘இத்தூதர் (முகம்மது) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். இறை நம்பிக்கை கொண்டோரும் இதை நம்பினார்கள். ஒவ்வொருவரும் இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பினார்கள்’. (2:285)

    நான்கு இறைவேதங்களும் நான்கு சமுதாயத்தினருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அகில உலக மக்களுக்கும் உரித்தானது. உலக மக்கள் அனைவருக்கும் நேரான பாதையை காட்டி, அவர்களை நேர்வழிப்படுத்தக்கூடியது.

    இறுதியாக இறங்கிய திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.

    இன்று வரை அன்று இறங்கியது போன்றே திருக்குர் ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்ற முடியாது. மாற்றத்திற்கு உட்படாதது. இதில் சந்தேகம் என்பதே கிடையாது.

    இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆராயலாம், பின்பற்றலாம். இது உங்கள் உரிமை. இது உங்கள் வேதம். 

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும். அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கைகள் குறித்த இந்த தொடரில் கடந்த வாரம் இறைநம்பிக்கையின் 70-க்கும் அதிகமான கிளைகள் குறித்தும், அவை எவை என்பது குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக முதல் நம்பிக்கையான இறைவனை நம்புவது குறித்து இந்த வாரம் பார்க்கலாம்.

    இறைநம்பிக்கையின் வேர் என்பது, முதலில் படைத்த இறைவனை நம்புவது, அவனை உளமாற ஏற்பது.

    இறைவன் தனித்தவன், அவனுக்கு ஈடு-இணை எதுவும் கிடையாது. அவன் தனது பண்பு களிலும், செயல்களிலும் பிறரைச் சாராதவன். அவனுக்கு தாய்-தந்தை, மனைவி-மக்கள், உற்றார்-உறவினர், பங்காளி-கூட்டாளி போன்ற எந்த உறவுமுறைகளும் கிடையாது.

    இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங் களையும் படைத்து இயக்கும் சக்தி பெற்றவன் இறைவன். உணவு, குடிநீர், உறக்கம், மறதி, அழுகை, சிரிப்பு, நோய், பலவீனம், இயலாமை, சந்தேகம் போன்ற எந்த அம்சங்களும் அவனுக்குக் கிடையாது.

    அனைத்தும் அறிந்தவன்

    இறைவன் தனக்கே உரித்தான பாணியில் பார்த்தல், கேட்டல், அறிதல், பேசுதல், ஆக்கல், அழித்தல், கொடுத்தல், எடுத்தல், உதவுதல், ஆளுமை செய்தல், அடக்கி ஆளுதல், சீராக இயக்குதல் போன்ற பண்புகளைக் கொண்டு, படைப்பினங்களை தன் சுய விருப்பப்படி ஆளுமை செலுத்துகின்றான்.

    அவன் படைப்பினங்களின் நிறை-குறைகளை அறிந்தவன். அவற்றின் அசைவுகளை உன்னிப்பாக உற்று நோக்குபவன். அவற்றின் சப்தங்களையும், உள் உணர்வு களையும் நுண்ணறிபவன்.

    அவன் இறையாண்மை மிக்கவன்; உயர்ந்தபட்சத் தன்னிறைவு கொண்டவன். இத்தகைய இறைவனின் பண்பிலக்கணங்களை திருக்குர்ஆன் நான்கே வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நபியே, (அல்லாஹ்) ‘இறைவன் ஒருவன்’ என கூறுவீராக. அவன் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவுமில்லை, (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமே இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)

    இறைவனை நம்பி வழிபடுவதற்கு இடைத்தரகர் அவசியமில்லை. கட்டணங்களும், காணிக்கைகளும் தேவையில்லை.

    இறைவன் தேவையற்றவனாக இருப்பதால் அவனை ஏன் தொழவேண்டும்? அவனுக்காக ஏன் நோன்பிருக்க வேண்டும்? என்ற நியாயமான கேள்வி தோன்றலாம்.

    தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளை யிடுவது, அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல, அதை நிறைவேற்றுவதால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைக்காகவே.

    சிறந்த நிர்வாகி

    ‘இறைவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவனோ நித்திய ஜீவன்; (அனைத்தையும்) நிர்வகிக்கும் நிலையானவன்.’ (திருக்குர்ஆன் 3:2)

    இறைவன் தனது வாழ்வில் எவரையும் சார்ந்திராதவன்; இறப்பு என்பதே இல்லாதவன்; இல்லாமை என்பது முன்னும், பின்னும் இல்லாதவன். அவன் ஒரு நிலையான நிர்வாகி. மற்ற எவருக்கும் இத்தகைய பண்புகள் பொருந்தாது. இப்படிப்பட்ட இறைவனை மக்கள் அனைவரும் நம்புவது அவசியம்.

    மேற்கூறப்பட்ட பண்பிலக்கணங்களை குறைக்காமல், சிதைக்காமல் இறைவனை நம்புபவர்கள் இறை விசுவாசிகளாக கருதப்படுவர். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை நம்புங்கள்’. (திருக்குர்ஆன் 4:136)

    ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஜக்காத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), புகாரி)

    இறைநம்பிக்கையை பலப்படுத்தும் பத்து அம்ச திட்டங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வருகிறது. அவை வருமாறு:-

    1) இறைவனின் திருநாமங்களை அறிவது: ‘இறைவனுக்கு தொண்ணூற்றொன்பது திருப் பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன்மீது நம்பிக்கை வைத்து, அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    2) இறை வசனங்களை ஆராய்வது: ‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில், இறைவனைப் பற்றி கூறப்பட்டால், அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால், அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (திருக்குர்ஆன் 8:2)

    3) முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வது.

    4) முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டின் உயிர் நாடியான இறை தியானத்தை அதிகப்படுத்துவதும், இறைவனிடம் பிரார்த்தனையை அதிகப்படுத்துவதும் ஆகும்.

    5) படைப்பை சிந்திப்பதும், ஆன்மாவை அகக்கண் கொண்டு நோக்குவதும் இறை நம்பிக்கையை பலப்படுத்தும்.

    6) மார்க்கத்தின் அழகிய செயல்களை அறிந்து செயல்படுவது.

    7) இறைவணக்கத்தில் நல்ல நிலையை அடைந்து, படைப்பினங்களுக்கு உபகாரம் செய்வது.

    8) இறைவனை நோக்கி அழைப்பது.

    9) இறைநம்பிக்கைக்கு எதிரானவற்றை செய்வதிலிருந்து மனதை கட்டுப்படுத்துவது.

    10) உலகின் உண்மையான அந்தரங்கத்தை உணர்ந்து, மறு உலக வாழ்வை தேர்வு செய்வது.

    இப்படிப்பட்ட அம்சங்களை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால், அவர்களின் இறை நம்பிக்கை மென்மேலும் விரிவடையும், பலப்படும்.

    இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும்.

    இறைநம்பிக்கை வாழ்க்கையின் இன்றியமையாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.
    இன்றைய சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகர். பாலைவன நகரமான அங்கு குளிர்ச்சியூட்டும் நிலவாய் வந்துதித்தவர்கள் தான் நமது நபிகள் நாயகமான முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

    அந்தக்காலத்து மக்கா நகர் மக்கள் கல்வியறிவு இல்லாத நாடோடிகள். சிலவேளை கடலோடிகள். நல்லொழுக்கம், நல்ல பழக்கம் என்பதெல்லாம் அவர்கள் அறவே கேள்விப்படாத ஒன்று. கூடவே இறைவனுக்கு இணையாக சிலை வணக்கமும், இடை விடாத குடிப்பழக்கமும் அவர்களிடம் இருந்தது.

    இந்நிலையில் தான் அந்நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் பிறந்தார் அவர். இதுவரை அகிலத்தில் எங்குமே, யாருக்குமே சூட்டப்படாத ஒரு பேரற்புதமான பெயரை அப்பாலகனுக்கு அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் சூட்டினார். அது தான் “முஹம்மது” என்ற முத்தான பெயர். இதற்கு புகழப்பட்டவர், புகழுக்குரியவர், புகழப்படுபவர் என முக்காலத்திற்கும் பொருந்தும்படியான முழுமையான முப்பொருளுண்டு.

    பிறக்கும் போதே தந்தையை இழந்தவர். பிறந்தபின் தாயை இழந்தவர். ஆனாலும் ஒழுக்கக் கேடுகள் மட்டுமே குடியிருந்த அவ்வூரில் ‘அல்அமீன்’ (நம்பிக்கைக்குரியவர்), ‘அஸ்ஸாதிக்’ (உண்மைக்குரியவர்) என்று அனைவராலும் அன்போடு அவர் போற்றப்பட்டார்.

    அவரது வாலிபப்பருவம் சற்றும் வழிதவறிச் செல்லவில்லை. அந்த வாலிப வயதில் “ஹில்புல் புளூல்” என்ற வாலிபர் சங்கத்தை ஏற்படுத்தி அவர் பொதுசேவை செய்து வந்தார். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவது, வறுமையில் வாடுவோருக்கு உதவிசெய்வது, துன்பப்படுவோரின் துன்பங்களை களைவது... என அச்சங்கத்தின் மூலம் நல்ல பல காரியங்களை செவ்வனே செய்து வந்தார்கள்.

    மக்கத்துச் செல்வச் சீமாட்டி கதீஜா அம்மையாரின் வணிகப் பொருட்களை சிரியா தேசத்திற்கு கொண்டு சென்று மிகச்சரியாக விற்றுக்கொண்டு வர மிகத் தகுதியானவர் இந்த முகம்மது தான் என அவரது இருபதாம் வயதில் இனிதே தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவ்வாறே அப்பயணத்தின் இறுதியில் இருமடங்கு லாபத்தை பேரதிகமாய் பெற்றுத்தந்தவர். நிறைவாக 40 வயது விதவைப்பெண் கதீஜாவையே தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்.

    நபியவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்த போது அவருக்கு ‘வஹீ’ எனும் இறையறிவிப்பு ஏக இறைவனான அல்லாஹ்விடம் இருந்து வரத்தொடங்கிற்று.

    அந்த வசனம்: ‘ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு’ (திருக்குர்ஆன் 96:1).

    அன்று தொடங்கி இருபத்து மூன்று வருடகால வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப சுமார் 6600 இறை வசனங்கள் இறக்கியருளப் பெற்றன. இந்த இறைவசனங்களின் தொகுப்பு தான் ‘திருக்குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும், சட்டங்களும், திட்டங்களும் பரிபூரணமாகவே இருக்கின்றன.

    நபிகளாரின் சொல், செயல், உடை, நடை, பாவனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்திலும் நபிகளார் அழகான, அற்புதமான ஒழுங்கு முறையை கடைப்பிடித்தார்கள்.

    இதனால் தான் நபிகளாரைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: ‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:21)

    திருக்குர்ஆன் தெளிவானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானதும் கூட. அதைப்போன்றே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது; அறிவுப்பூர்வமானது. மேலும் அது ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.

    ஒருமுறை நபிகளார் ஒரு சபைக்கு வந்திருந்த போது பரட்டைத்தலையுடன் ஒருவர் இருந்ததையும், இன்னொருவர்அழுக்கடைந்த ஆடையுடன் இருந்ததையும் பார்த்து ‘ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? அவற்றை நன்கு கவனிக்க வேண்டாமா?’ என்று கடிந்து கொண்டார்கள்.

    “ஆள்பாதி ஆடைபாதி” என்பது நாம் நன்கறிந்ந அனுபவமொழி. இந்த ஆடை விஷயத்தில் அண்ணலார் எப்படி தமக்கென ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றறிய முடிகிறது. இப்படிப்பட்ட ஓர் அழகியலைத்தான் நாம் ஆளுமைப்பண்பு என்கிறோம்.

    அதனால் தான் நபித்தோழர் ஒருவரின் தலைமுடி கலைந்திருந்த போது “அதை அவர் ஏன் சரிசெய்யக் கூடாது? அவரது தலையில் ஏதும் (காயம் போன்றவை) ஏற்பட்டிருக்கிறதா?” என்றும் விசாரிக்கிறார்கள் என்றால் நபிகளாரின் ‘கூர்பார்வை’ எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.

    இன்னொரு தோழரிடம், அவரது ஆடை ஏன் அழுக்காக, அசிங்கமாக இருக்கிறது. அதை அவர் (தண்ணீரில்) அலசி இருக்க வேண்டாமா? என்றும் கூறினார்கள் நபியவர்கள்.

    ‘அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான்’ என்ற நபிமொழி நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடிய ஒன்றா? அழகை யார்தான் வெறுப்பார்கள்? மற்றவர்களிடம், மற்றவைகளிடம் அதீத அழகை எதிர்பார்க்கிற நாம், நம்மை மட்டும் அலங்கரித்துக்கொள்ளாதது ஏன்?

    அது ஒரு ஆளுமை, அதை நாம் தான் நமக்குள் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அது நமக்குத் தான் சிரமம். இதற்கும் கூட நபிகளார் அழகிய முன்மாதிரியாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார்கள் என்றால் அது மிகுந்த கவனத்திற்குரியது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    இறைநம்பிக்கையை, வெறும் ஆன்மிகமாக இஸ்லாம் சுருக்கி விடவில்லை. அதுபோல, ஆன்மிகம் மட்டுமே இறைநம்பிக்கை என்று கட்டுப்படுத்தவில்லை.

    ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான, அனைத்து அடிப்படையான சமூக செயல்திட்டங்களை அமைத்துக் கொடுத்து, இதுதான் இறை நம்பிக்கை என்று கூறுகிறது.

    உரிமைகள்-கடமைகள்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை சுயநலம் தாண்டி, சமூக நலனிலும் அக்கறை கொண்டு, பிறருக்கு ஆற்றவேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் எடுத்துக்காட்டி விளக்குகிறது.

    தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    புனிதமான குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் கோடிட்டு காட்டி அதை பசுமையாக்குவதற்கு உரிய பசுமை வழியை காட்டுகிறது.

    சமூக பொருளாதாரத்தை அக்கறையுடன் பேசுகிறது. அண்டை அயலாளரின் உரிமைகளை விசாலமாக விசாரிக்கிறது. சமூக அரசியலில் ஆர்வம் கொண்டு, நீதியான, நியாயமான ஆட்சி மக்களுக்கு கிடைத்திட பரிந்துரை செய்கிறது.

    பொருளாதாரம்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை, பொருளியலின் உயர்ந்த கோட்பாடுகளை உரக்கப் பேசுகிறது. பொருளாதாரம் ஒரே இடத்தில் குவியாமல் இருக்க, அதை பரவலாக்க, ஜகாத், ஸதகா, அழகிய கடன் போன்றவை குறித்து பேசுகிறது. இதன்மூலம் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் பொருளாதார நலத்திட்டங்களை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறது.

    சமூக சேவையின் அவசியத்தையும், சமூக சீர்திருத்தத்தின் பாடத்தையும் சமர்ப்பிக்கிறது. இறைவனுடன் தொடர்பில் இருக்க ஆன்மிகம், சுயகாரியங்களில் சுயமரியாதை, சமூகத்துடன் இணக்கமாக செயல்படுதல், மக்களாட்சிக்கு உகந்த அரசியல் அமைப்பு என பலதரப்பட்ட சமூக நலனையும் இறைநம்பிக்கை வலியுறுத்துகிறது.

    70-க்கும் மேற்பட்ட கிளைகள்

    ‘இறைநம்பிக்கை’ என்ற ஒற்றைச்சொல் எப்படி இத்தனை அம்சங்களையும் வலியுறுத்தும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

    ‘இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இறைநம்பிக்கை மூன்று வகைப்படும். அவை: 1) உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை, 2) நாவு சார்ந்த இறைநம்பிக்கை, 3) உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இந்த மூன்று அம்சங்களும் பல்வேறு கிளைகள் கொண்டவை.

    உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை

    முதலில் சொல்லப்படும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையில் 24 கிளைகள் உள்ளன. அவை:

    1) இறைவனை நம்புவது, 2) வானவர்களை நம்புவது, 3) இறை வேதங்களை நம்புவது, 4) இறைத்தூதர்களை நம்புவது, 5) விதியை நம்புவது, 6) மறு உலகை நம்புவது, 7) இறைவனை நேசிப்பது, 8) இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, அல்லது வெறுப்பது, 9) முகம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், மதிப்பதும், 10) முகம்மது நபி (ஸல்) வழியைப் பின்பற்றுவது,

    11) மனத்தூய்மை, 12) பாவ மன்னிப்புக் கோருவது, 13) இறையச்சம், 14) இறையருளை நம்புவது, 15) நன்றி பாராட்டுவது, 16) வாக்கை காப்பாற்றுவது, 17) பொறுமையை கடைப்பிடிப்பது, 18) விதியின் வினையை ஏற்பது, 19) இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது, 20) இரக்க குணம்,

    21) பணிவு, 22) தற்பெருமையை கைவிடுவது, 23) பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுதல், 24) கோபத்தை அடக்குவது.

    இவை அனைத்தும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் ஆகும்.

    நாவு சார்ந்த இறைநம்பிக்கை

    அடுத்து குறிப்பிடப்படும், நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் 8 கிளைகள் உள்ளன. அவை வருமாறு:-

    1) ‘லாயிலாஹா இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் ஆவார்) எனும் வார்த்தையை நாவினால் மொழிந்து, உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்பது, 2) திருக்குர்ஆனை ஓதுவது, 3) கல்வி கற்பது, 4) கல்வியை கற்றுக்கொடுப்பது, 5) பிரார்த்தனை புரிவது, 6) இறைவனை தியானிப்பது, 7) வீண் பேச்சுகளை தவிர்ப்பது, 8) ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது.

    உடல் சார்ந்த இறைநம்பிக்கை

    உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் 38 ஆகும். அவை வருமாறு:-

    1) சுத்தமாக இருப்பது, 2) மறைவிடங்களை மறைப்பது, 3) தொழுவது, 4) ஜகாத் (ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் கடமையான ஏழை வரி) செலுத்துவது, 5) அடிமைகளை விடுதலை செய்வது, 6) உபரியான தர்மம் கொடுப்பது, 7) புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது, 8) புனித உம்ரா (ஹஜ் அல்லாத காலங்களில்) பயணம் மேற்கொள்வது, 9) நோன்பு நோற்பது, 10) புனித கஅபாவை வலம் வருவது,

    11) இக்திகாப் (இறை இல்லத்தில் தங்கி) இருப்பது, 12) புனித லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைத் தேடி அடைவது, 13) இறை நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் (ஊர் துறந்து) செல்வது, 14) நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது, 15) சத்தியங்களில் நேர்மையாக இருப்பது, 16) குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது, 17) திருமணம் முடிப்பது, 18) குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது, 19) பெற்றோருக்கு நன்மை புரிவது, 20) குழந்தைகளை அழகிய முறையில் வளர்ப்பது,

    21) உறவுகளுடன் உறவாடுவது. 22) எஜமானர்கள், அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது, 23) நீதமான ஆட்சி அமைப்பது, 24) சமூக உறவை பசுமையாக்குவது, 25) பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது, 26) சமாதானம் பேசுவது, 27) நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவிபுரிவது, 28) குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது, 29) அறப்போர் புரிவது, 30) நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பிச்செலுத்துவது,

    31) கடனை திருப்பி அடைப்பது, 32) அண்டை அயலாளரிடம் அன்புடன் நடப்பது, 33) நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது, 34) ‘ஸலாம்’ எனும் முகமனுக்கு பதில் கூறுவது, 35) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) கூறும் பொழுது, அருகில் இருப்பவர், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு கிருபை புரியட்டும்) என அவருக்கு பதில் கூறுவது, 36) பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது, 37) வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது, 38) நடைபாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவது.

    இவ்வாறு, இஸ்லாமிய இறைநம்பிக்கை அனைத்து மக்களுக்கும் பயன்தரும் பாதையை நோக்கி பயணிக்கிறது. அதில் இருக்கும் இனிமையான வாழ்க்கைத்தத்துவங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதோடு, நிம்மதியான, இறைவழியிலான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிகாட்டுகிறது.

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது மனித வாழ்வின் தன்னம்பிக்கை தூண் ஆகும். அந்த தூண்கள் பலமிக்கதாக அமைந்தால் தான், வாழ்க்கை என்ற கட்டிடம் வலுவாக இருக்கும். அந்த இறைநம்பிக்கைகள் குறித்த தகவல்களை இந்த தொடரில் இனி நாம் தொடர்ந்து காண்போம்.
    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu
    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


    அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.



    குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu

    திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)
    உலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தன்மை வாய்ந்ததாகவே வாழ்ந்து மறைகின்றன. இதில் மனிதன் மட்டும் நிகரில்லாத தனித்துவம் பெற்றவனாக விளங்குகிறான்.

    வானவர்கள் என்ற மலக்குகள் தன்னிச்சையாக எதுவும் செயல்பட முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட இறை ஏவலை மட்டுமே அவர்களால் செயல்படுத்த முடியும்.

    ஜின் இனத்தை சார்ந்த எதிர்மறை சிந்தனையாளன் ஆன சைத்தான், பாவம் செய்வதற்கான தன்மை மட்டுமே கொடுக்கப்பட்டவனாக இருக்கின்றான்.

    ஆனால். மனிதனுக்கோ நல்லதையும் கெட்டதையும் அறிந்து, அவ்விரண்டையும் செயல்படுத்திடும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘(மனித) ஆத்மாவின் மீதும் அதனை செவ்வையாக (ஒழுங்குப்படுத்தி) அமைத்த இறைவன் மீதும் சத்தியமாக, அதற்கு (மனித ஆத்மாவிற்கு அதன்) தீமையையும், அதனுடைய நன்மையையும் இறைவன் உணர்த்தினான். (91:7-8)

    ‘(முதல் மனிதனான) ஆதமுக்கு (ஒவ்வொன்றின்) பெயர்களையும் அவன் கற்றுக்கொடுத்தான்’. (2:31)

    இறைவனிடம் கற்றுக்கொண்ட ஆதி மனிதனான ஆதம் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதன் குணத்திற்கு ஏற்ப பெயர் வைத்து அழைக்க இறைவனின் அருளாலேயே தெரிந்து கொண்டார்கள்.

    தனது மானத்தை (பிறப்பிடத்தை) மறைத்துக்கொள்ளும் பண்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான குணமாகும். ஆடைகள் இல்லாத அந்த ஆரம்ப காலத்தில் கூட மனிதர்கள் இலை தழைகளை இடுப்பில் ஆடையாக கட்டிக்கொண்டார்கள். இதுபோன்று மானத்தை மறைத்துக்கொள்ளும் பண்பாடு என்பது வேறு எந்த ஒரு உயிரினங்களிடமும் காணப்படவில்லை.

    அதைப்போல நெருப்பை கண்டு உயிரினங்கள் அனைத்தும் பயந்து ஓடின. ஆனால் மனிதன் மட்டுமே அந்த நெருப்பை பக்குவமாக தன்வசப்படுத்திக் கொண்டான். நெருப்பின் பயன்பாடு மனிதனின் அன்றாட வாழ்வில் புழக்கத்திற்கு வந்த பிறகு தான், மனிதனின் வாழ்வு மற்றவைகளை விட மிக உச்சத்திற்கு சென்றது.

    இதுபோன்ற நுட்பமான அறிவை இறைவன் மனிதனுக்கு உணர்த்தியதால் தான் எல்லாக் கலைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றவனாகத் திகழ்கின்றான். மனிதன் தனது வாழ்வியல் நெறிமுறைகளை செழுமைப்படுத்தி சீராக வாழ்ந்திட, நபிமார்களின் வாயிலாக இறைவன் வேதங்களை மனிதர்களுக்கு பரிசாக அளித்தான்.

    இறைவன் மனிதனை மனிதனாகவே தான் படைத்துள்ளான். இன்னும் அம்மனிதர்களிடமிருந்தே அவனது சந்ததிகளையும் இறைவன் பெருகச் செய்துள்ளான். மனிதப் பிறப்பின் உண்மை நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்திக்கூறுகிறது:

    ‘இறைவன் வானவர்களை நோக்கி, எனது பிரதிநிதியை (ஆதம் என்ற மனிதரை) பூமியில் நான் உண்டாக்கப் போகிறேன் (என்றான்)’. (2:30)

    இங்கே ஆதம் என்ற மனிதரே மனித இனத்தின் தொடக்கமானவராக உள்ளார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    மனித அறிவு என்பது அவன் தோன்றிய காலம் முதற்கொண்டே சேகரமாகி தொடர்ந்து பயணப்பட்டு வரும் ஒன்றாகும். அவ்வாறு கிடைத்த அறிவை பாதுகாக்கவும் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தரவும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து ஏட்டு வடிவில் நிலைபெறச் செய்யவும் மனிதனால் மட்டுமே முடியும் என்பதை திருமறை வசனம் இவ்வாறு கூறுகின்றது:

    ‘அவன் (இறைவன்) எத்தகையவன் என்றால் எழுதுகோலைக் கொண்டு (மனிதனுக்கு) அவன் கற்றுக்கொடுத்தான். மனிதன் அவன் அறியாதவற்றையும் (எல்லாம்) இறைவன் (அவனுக்கு) கற்றுக்கொடுத்தான்’. (96:4-5)

    இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இந்த தொடர்பு தான் அவனை மற்ற எல்லா உயிர்களையும் விட மிக மேலானவனாக மாற்றியுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.

    மேற்கண்ட இறைவசனத்தில் எழுதுகோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு எழுதுகோல் என்பது மனித மனங்களில் இறையருளால் உண்டாகும் எண்ண உதிப்பையே குறிப்பதாக உள்ளது.

    அந்த உதிப்பை கொண்டு தான் மனிதன் உலகில் எழுதுகோலை கண்டுபிடித்தான். அந்த எழுதுகோல் தான் மெஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்ந்து உலகில் எழுதிக்கொண்டே இருக்கிறது.

    அறிவை சேமித்து வைக்கும் சாதனமாக எழுதுகோல் உள்ளது. அவ்வாறு மனிதன் தான் உணர்ந்ததை பிறருக்கு கற்றுத்தரவும், பிறர் கற்றுத்தருவதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.

    எனவே மனிதனின் அறிவுக்களஞ்சியத்தில் மாபெரும் ஆயுதமாய் விளங்குவது எழுதுகோலே ஆகும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனக்கு கிடைத்த அனுபவ அறிவை மற்றவைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவைகள் அல்ல.

    எல்லா உயிரினங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு வகையான சப்தங்களையோ அல்லது சமிக்ைஞகளையோ வேண்டுமானால் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமே தவிர மனிதனை போன்று பேசவோ, எழுதவோ, சிரிக்கவோ, அழவோ, ரசிக்கவோ, ஒருபோதும் முடியாது.

    மனிதன் அழகிய முறையில். படைக்கப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)

    இறைவன் தந்த அறிவை கொண்டு மனிதன் நல்லதை நாடும் போது அவன் உயர்வுக்கு மேல் உயர்வை பெற்றுவிடுகிறான். அதனை வீணடித்து கீழான சுகபோகத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மனிதர்களில் கீழானவர்களிலும் கீழானவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் நமக்குசொல்லிக் காட்டுகிறது.

    எனவே மனித குலம் அவர்கள் அறியாததை எல்லாம் கற்றுத்தந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் வாழ்வதே சிறந்த நன்றிக்கடனாக அமையும்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி.
    நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல். அடுத்தவருடைய அனைத்துக் குறைகளையும் பூதக்கண்ணாடி வைத்து உற்று நோக்கத்தொடங்கினால் அவ்வளவுதான்... காரியம் கெட்டுவிடும். பின்னர் நாமும் நிம்மதியுடன் இருக்க மாட்டோம், அடுத்தவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம்.

    அதிலும் குறிப்பாக, யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, யாரிடமிருந்து அதிக நன்மைகளை நாம் எதிர்பார்க்கின்றோமோ, அவரிடமிருந்து நிகழும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இதுவும் நபிவழியே. ஆயினும் நம்மில் அனேகமானவர்கள் மறந்துவிட்ட நபிவழி.

    சிலர் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளைக் காணும்போதெல்லாம் அவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் நமது நெஞ்சம் பெருமூச்சு விடும். அல்லது கோபத்தால் மூக்கு விடைத்து நெஞ்சாங்கூடு ஏறி இறங்கும். இந்த உலகிலேயே ஒரு தவறும் செய்யாதவர் நாம் மட்டுமே என்பது போன்று எண்ணத் தோன்றும்.

    “ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. ஆயினும் தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்பவர்களே” என்ற நபிமொழி ஏனோ அந்த வேளையில் மறந்து போய்விடும்.

    மார்க்கத் தீர்ப்பு கேட்பதற்காக ஹாதம் என்ற அறிஞரிடம் ஒருவர் வந்தார். வந்தவர் தனது பிரச்சினையைக் கூறிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது உடலில் இருந்து காற்று வெளியேறியது. வந்தவருக்கோ பெரும் சங்கடமாகப் போய்விட்டது.

    உடனே அறிஞர் ஹாதம், “உமது பிரச்சினையை சப்தமாகக் கூறும். எனக்கு எதுவுமே கேட்கவில்லை” என்று கூறி தமக்கு செவிப்புலன் சற்று குறைவு என்பது போன்று காதுகளுக்கு அருகே கை வைத்து கூறினார். வந்தவர் பெரும் நிம்மதி அடைந்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் தாம் வந்த விஷயத்தைக் கூறினார். (மதாரிஜுஸ் ஸாலிகீன்)

    இந்தப் பண்பு கணவன்- மனைவிக்கு இடையேதான் அதிகம் இருக்கவேண்டும். அன்பைத் தேடும் இணை, தமது துணையிடமிருந்து வெளிப்படும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும்போதுதான் முழுமையான அன்பு கிடைக்கும்.

    அபுத்தர்தா (ரலி) தமது மனைவியிடம் கூறுகின்றார்: “கண்ணே, நான் கோபமுற்று இருப்பதாக நீ கண்டால் உடனே என்னை பொருந்திக்கொள். நீ கோபம் கொண்டிருப்பதாக கண்டால் நானும் உன்னைப்பொருந்திக்கொள்வேன். இல்லையென்றால், நமக்கிடையே அன்பு நிலைபெறாது”.

    அடுத்தவர் மீது கொண்ட கெட்ட எண்ணத்தின் காரணத்தால் சிலரை நாம் வெறுக்கின்றோம். அதனால் நமது சந்திப்புகளும் குறைந்துவிட்டன. சிறுசிறு குறைகளை பூதகரமாக மாற்றிய காரணத்தால் நமது ரத்த பந்த உறவுகளைக்கூட நாம் துண்டித்துவிட்டோம்.

    வாழ்வு தெளிந்த நீரோடை போன்று செல்ல வேண்டுமென்றால், கண்ணால் காணும் அனைத்துக்கும் விளக்கம் தேடமுனையக் கூடாது. காதால் கேட்கும் அனைத்தையும் தீர விசாரிக்க முற்படக் கூடாது. எதிர்படும் அனைத்துக்கும் விடை காண முயலக் கூடாது.

    அனைத்தையும் காதால் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒரு புன்முறுவலுடன் தேவையற்றதைக் கடந்துவிட வேண்டும். பின்னர் மறந்துவிடவேண்டும். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல.

    வெண்பனி போல் உள்ளம் தூய்மையாக இருப்பது குறையல்ல. சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மடமையல்ல. அடுத்தவரை மன்னிப்பது பலவீனமல்ல. மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல. மாறாக இவை அனைத்தும் நற்பயிற்சியே.

    உணவில் உப்பு குறைந்துவிட்டதா.. தேநீரில் சர்க்கரை குறைந்துவிட்டதா.. வருவதாகச் சொன்னவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையா.. மனைவி குடிதண்ணீர் கொண்டுவர நேரமாகிவிட்டதா.. வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டதா.. பரவாயில்லை, விட்டுப்பிடிக்கலாம். இவையெல்லாம் கொலைக் குற்றம் ஒன்றும் இல்லையே.

    சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தியதால் பிரிந்த நட்பு வட்டங்கள்தான் எத்தனை. விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் தான் எத்தனை. தொடர்பு அறுந்த குடும்பங்கள்தான் எத்தனை. நசிந்துபோன வியாபாரங்கள், நலிவடைந்த நல்ல உறவுகள் தான் எத்தனை, எத்தனை. யோசித்துப் பார்த்தால் பின்னணியில் சின்ன சின்னக் குறைகளே இருந்திருக்கும்.

    ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு பேச) உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, ‘அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றைக் கொடுங்கள்’ என்றார்கள்.

    நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள். (புகாரி)

    ஆஹ்.. யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்..? இருக்கும் இடம் தெரியாமல் தொலைத்து விடுவேன்.. என்றெல்லாம் வானுக்கும் பூமிக்கும் நபி (ஸல்) அவர்கள் குதிக்கவில்லை.

    ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் யாரும் யாரைக் குறித்த புகாரையும் என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், தெளிவான வெள்ளை உள்ளத்துடனேயே உங்களில் இருந்து ஒவ்வொருவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன்”.

    ஈஸா (அலை) அவர்கள் ஒருமுறை தமது தோழர்களிடம் கேட்டார்கள்:

    “உங்கள் சகோதரர் தூங்கிக்கொண்டிருக்கும்போது காற்றடித்து ஆடை விலகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”.

    அவர்கள் கூறினார்கள்: “அவருடைய ஆடையை நாங்கள் சரிசெய்வோம்”.

    ஈஸா (அலை) கூறினார்கள்: “அவ்வாறு நீங்கள் செய்வதில்லையே. மாறாக நீங்கள் மேலும் அவருடைய ஆடையைத் திறக்கும் முயற்சியில் அல்லவா ஈடுபடுகின்றீர்கள்”.

    தோழர்கள்: “யார்தான் அப்படிச் செய்வார்?”

    ஈஸா (அலை) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தமது சகோதரனிடமிருந்து ஏதேனும் ஒரு வார்த்தையை செவிமடுக்கின்றார். பின்னர் அதில் சில வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்த்து மக்களிடையே பரப்புகின்றார். ஆடையை விலக்குவதைவிட மோசமான செயல் அல்லவா இது”.

    தளபதி சலாஹுத்தீ அய்யூபி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இன்ன சபையில் இன்ன மனிதர் உங்களை ஏசுகின்றார்” என்று கூறினார். அதற்கு தளபதி கூறினார்: “அந்த சகோதரர் என் மீது அம்பு எய்தார். அது என் மீது படவில்லை. ஆனால் நீர் அதனைச் சுமந்து வந்து என் இதயத்தில் குத்திவிட்டீரே”.

    நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

    சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பவரையே, சுற்றி இருப்பவர்கள் நேசிப்பார்கள். அவருடனேயே எப்போதும் இருக்க விரும்புவார்கள். அவர்களால் அவர் நேசிக்கப்படுவார். அதனால் அவரும் நிம்மதியடைந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார். இந்தக் கொஞ்சநாள் வாழ்வில் இதுதானே நமக்குத் தேவை.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
    இஸ்லாத்தில் பெற்றோருக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த மரியாதை இறைவனுக்கு அடுத்தபடியான இடத்தைப்பெறுகிறது. இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தில் வைத்து அழகு பார்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பெற்றோரே. இறைவனுக்கு அடுத்து நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளது நமது பெற்றோருக்கே.

    இறைவணக்கத்திற்கு பிறகு சிறந்ததொரு வணக்கம், பெற்றோருக்கு செய்யும் உப காரமே ஆகும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விரு வருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).

    இந்த வசனத்தில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய வணக்கத்தையும், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உபகாரத்தையும் இறைவன் ஒரே நேர்கோட்டில் வைத்து பாவிக்கிறான். பெற்றோருக்குச் செய்யும் உபகாரமும் இறைவனுக்கு பிரியமானது என்பது இதனால் புலப்படுகிறது.

    பெற்றோருக்குச் செய்யும் உபகாரம் என்ன?

    இருவரோ, இருவரில் ஒருவரோ முதுமை அடைந்து விட்டால், அவ்விருவரின் செயல்களில் சில தடுமாற்றங்கள் நிகழும். அவர்கள் குழந்தையைப் போன்று மாறிவிடுகிறார்கள். கேட்பதில், பார்ப்பதில், பேசுவதில், நடப்பதில் என அனைத்திலும் பாதிப்புகள் வருகிறது. ஒட்டு மொத்தத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்களும் ஒருவிதத்தில் குழந்தைகளே.

    சிறுநீர் கழிப்பதிலிருந்து நோய் பீடிக்கப்படுவது வரைக்கும் குழந்தைகளின் விஷயத்தில் அக்கறையுடன் கவனிக்கிறோம். குழந்தைகளை ‘சீ’ என்றோ, ‘சனியனே’ என்றோ திட்டுவது கிடையாது. தாயின் சேலையில் சிறுநீர் கழித்ததற்குத் தண்டனையாக எந்தக் குழந்தையும் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படுவது கிடையாது.

    வயது முதிர்ந்த பெற்றோருக்கு இதே நிலைமை ஏற்படும்போது மட்டும் ஏன் ‘சீ’ என்று சொல்கின்றோம்? வீட்டை விட்டு முதியோர் இல்லத்திற்கு ஏன் அனுப்புகிறோம்?, மரியாதைக்குறைவான வார்த்தையை ஏன் பிரயோகிக்கிறோம்?, ஏன் பணிவில்லாமல் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறோம்?, ஏன் அவர்களை சபிக்கிறோம்?

    இன்று அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளைக்கு நமக்கு ஏற்படாதா?

    வயதான பெற்றோருக்குச் செய்யும் பேருபகாரம் அவர்களை வா, போ, சீ என்று கூறக்கூடாது. அவர்களை சுமையாக நினைத்து வீட்டை விட்டு துரத்தக்கூடாது. மரியாதையான வார்த்தையில் பேசி, அன்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம், பணிவடக்கத்துடன் அவர்களிடம் நடக்க வேண்டும்.

    நாம் குழந்தையாக இருந்தபொழுது நமது தேவை குறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தது போல், முதுமையான பருவத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதுகுறித்து இறைவனிடம் நாமும் பிரார்த்திக்க வேண்டும்.

    குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பலவீனமான பருவநிலைகள். அது பிறரைச் சார்ந்துள்ள பருவமாகும். குழந்தைகளுக்கு பெற்றோரின் தயவும், முதுமை அடைந்த பெற்றோருக்கு குழந்தைகளின் அரவணைப்பும் அவசியம் தேவை.

    ‘பலவீனமான நிலையில் உங்களை இறைவன் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்’. (திருக்குர்ஆன் 30:54)

    ‘நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்கு கிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா’? (திருக்குர்ஆன் 36:68)

    இறைவன் விதித்த வணக்க வழிபாடுகளில் சிறந்ததும், முதன்மையானதும் தொழுகையே ஆகும். அத்தகைய தொழுகைக்குப் பிறகு சிறந்த செயல் பெற்றோருக்குச் செய்யும் நன்மையான காரியங்கள் ஆகும்.

    இதுகுறித்து நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுவதாவது:-

    “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறை வனுக்கு மிகவும் பிடித்தமான செயல் எது?’ என கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றார்கள்’. பிறகு ‘எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். பிறகு ‘எது?’ என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    வணக்க வழிபாடுகளின் மூலமாக இறை நெருக்கத்தை அடைய விரும்புவோர், அதை பெற்றோருக்கு நன்மை புரிவதின் வழியாக அடைந்து கொள்ளட்டும்.

    மேலும், தமது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புவோர் பெற்றோருக்கு நன்மை புரியட்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘உமக்குத் தாய்-தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘அவ்வாறாயின் நீங்கள் திரும்பிச்சென்று அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    நமக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து, அல்லது விபத்து, சோதனை அனைத்தும் நம்மை அணுகாமல் இருக்க, அல்லது ஏற்பட்டுவிட்ட சோதனைகளிலிருந்து விடுபட சிறந்த வழி பெற்றோருக்கு நன்மை புரிவதே. அந்த நன்மையை வைத்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது நாம் நினைத்தது, அல்லது கேட்டது இதுவும் நன்மை சார்ந்து இருக்குமானால் இறைவனும் அதை ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பான்.

    வயது முதிர்ந்த பெற்றோரை குழந்தை களாகத் தான் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போன்று தான் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.
    எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். ‘பொய் ஒரு குற்றமே அல்ல’ எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

    ஆட்சியாளர் முதல் அடிமட்டக் குடி மகன் வரை, நாடாளும் தலைவர் முதல் நடைபாதை வியாபாரி வரை, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பொய் நீக்கமற நிறைந்து நிற்கிறது.

    ‘பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது’ என்பதெல்லாம் பொய்யான தகவல் என்பது போன்றும், இதுபோன்ற சொலவடைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் காலம் தள்ள முடியாது என்பது போன்றும் சமூகம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது.

    பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. திரைக்காவிய நாயகர்கள் பொய் சொல்கின்றனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பொய் சொல்கின்றனர். அதிகாரத்தை அடைய விரும்புகின்றவர்களும் பொய் சொல்கின்றனர்.

    புன்னகையிலும் பொய் ஒளிந்திருக்கிறது, கண்ணீரிலும் பொய் கலந்திருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. பொய்சூழ் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உண்மை மகத்தானது என்பதைக்கூட பொய்யாகவே கூறிக்கொண்டிருக்கின்றோம்.

    உண்மை என்பது தந்திரமோ மந்திரமோ அல்ல, அதுதான் வாழ்வின் ஆதாரம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த ஆதாரம் தான் ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை. இந்த இறைநம்பிக்கை எவ்வளவு தூரம் மனதில் வலுவாக உள்ளதோ அவ்வளவு தூரம் ஒருவர் உண்மை பேசுவார். நம்பிக்கையின் சதவீதத்தைப் பொறுத்து வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் அவ்வளவுதான்.

    உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.

    ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பலராலும் கடைப்பிடிக்க முடியாமல் போன வாசகம் என்றும் இதனைக்கூறலாம்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ என்று அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். இதைப் போன்றே பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்படுவார்”. (புகாரி, முஸ்லிம்)

    ‘இதயங்களின் மருத்துவர்’ என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்.

    ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.

    அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாகத் திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டுமே அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)

    உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதனைத் தூக்க முயற்சித்தது, முடியவில்லை. மீண்டும் தன் படைகளைக் கூட்டிவரச் சென்றது.

    முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கித் திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம் முறையும் அது தனது படையை அழைத்துவரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.

    அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்.. அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களைத் துண்டித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்துத் துண்டு துண்டாக உடைத்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கை சேதப்பட்டிருக்கும். ஆயினும் காலம் கடந்துவிட்டது.

    உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர் களைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.

    அவர் சொன்னார்: “அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பானாக, மீண்டும் இவ்வாறு செய்யாதே. பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன். பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்பு களின் உணர்வில் கலந்துள்ளது”.

    எறும்புகளுக்குத் தெரிகிறது பொய் சொல்வது கொலைக்குற்றம் போன்ற பெரும் பாவம் என்று. ஆயினும் மனிதர்கள்..? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

    நல்லவேளை எறும்பின் குணம் மனிதர் களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால்.. நம்மில் அனேகமானவர்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்.

    ‘தப்பித்தோம்’ என்று தற்போது வேண்டுமென்றால் கூறிக்கொள்ளலாம். ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கின்றதே.. பொய்யர்களின் நிலை அங்கு என்னவாகுமோ.. யார் அறிவார்..?

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    ×