search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு இடம் பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தடைந்து ஆறு ஆண்டு காலம் நிறைவு பெற்றிருந்தது. அப்போது, யூதர்களைத் தவிர ஏனைய மதீனாவாசிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தார்கள்.

    இந்த சமாதான சூழ்நிலையில் நபிகள் பெருமானாருக்கு மக்கா நகரின் நினைவும், இறை இல்லமான கஅபாவை காண வேண்டும் என்ற ஆவலும் மேலோங்கி நின்றது. இதையடுத்து மக்காவிற்கு ‘உம்ரா’ செய்ய முடிவு செய்தார். நபிகளாருடன் சேர்ந்து மக்கா செல்ல அவரது தோழர்களும் ஆயத்தமானார்கள்.

    முதன்மையான நபித்தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோருடன் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நபிகள் நாதருடன் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.

    அரேபிய குரைஷியர்கள் இந்த செய்தியை அறிந்தனர். நபிகள் தலைமையில் வரும் கூட்டம் போர் செய்யும் எண்ணத்தில் வரவில்லை என்றாலும், அவர்களை மக்கா நகருக்குள் அனுமதித்தால் அது நமக்கு பின்னடைவைத் தரும். இங்கிருக்கும் பாதி சொந்தங்கள் அவர்களோடு சென்று விடுவார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.

    இதன் அடிப்படையில் பேச்சாற்றல் மிக்க ஸஹது இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி சமாதான உடன்படிக்கை செய்ய திட்டமிட்டனர்.

    ஸஹது இப்னு அம்ர், ஹூதைபிய்யா என்ற இடத்தில் நபிகளாரையும், அவரது கூட்டத்தையும் சந்தித்தார். இதற்கு மேல் தொடர்ந்து செல்ல நபிகளாரின் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்று தடுத்தார். போர் புரிய வரவில்லை, கஅபாவை காணவே வருகிறோம் என்று நபிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இதை ஏற்க ஸஹது இப்னு அம்ர் மறுத்தார்.

    இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. உடன்படிக்கையின் அத்தனை விதிகளையும் நானே சொல்வேன் என்று ஸஹது இப்னு அம்ர் அடம் பிடித்ததையும் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒப்புக்கொண்டார்கள். ஹூதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தானது.

    சமாதான உடன்படிக்கையின் அத்தனை ஷரத்துகளுமே மக்கா குரைஷியருக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. உமர் (ரலி) போன்ற வேகம் மிகுந்த சஹாபாக்கள், ‘நாமோ தலைசிறந்த வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் இந்த உடன்படிக்கையோ நமக்கு முழுவதும் பாதகமாக உள்ளது. இதனை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆணையிடுங்கள். ஸஹது இப்னு அம்ரின் தலையை கொய்து மக்காவை கைப்பற்றுவோம். உம்ரா செய்வோம்’ என்று சூளுரைத்தார்கள்.

    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அவர்களை அமைதிப்படுத்தினார்கள். “மக்காவில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள். இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நாளை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவலாம். அவர்களை இழக்க நான் தயாரில்லை. மேலும் ரத்தம் சிந்தி மக்காவை வெற்றி கொள்ள என் மனம் மறுக்கிறது” என்றார்கள்.

    சஹாபா பெருமக்கள் உள் மனதில் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அறிந்த அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

    “(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்”. (திருக்குர்ஆன் 48:1)

    ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் மக்காவில் இருந்த சொந்தங்களும் பந்தங்களும், போரில்லாத சமாதான காலத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர். சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகமாயின. மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பலரும் ஏகத்துவ கொள்கையை முழுமையாக அறிந்து இஸ்லாத்தை தழுவினர். மக்கத்து குரைஷிகளின் பலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    உடன்படிக்கையின் காலக்கெடுவும் முடிவடைந்தது. மீண்டும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ‘உம்ரா’ செய்ய எண்ணினார்கள். இப்போது நபித்தோழர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரமாக பெருகி இருந்தது. ஒட்டகங்கள், குதிரைகள் மீது பயணித்தும், நடந்தும் அந்த பெருங்கூட்டம் மக்காவை நோக்கி புறப்பட்டது. நபிகளாரின் இந்த பெரும்படை வருவதை அறிந்து எதிரிகள் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர்.

    அண்ணலாரின் பேரணி அமைதியாய் மக்கா நகரில் நுழைந்தது. ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை, போர் முரசு கொட்டப்படவில்லை. அகிம்சையாய் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.

    ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது இறக்கிய வசனத்தின் மூலம் உறுதி செய்த வெற்றியை அல்லாஹ் அருளினான். மேலும் இதற்கு நன்றி செலுத்தும்படியும் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:

    “(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்” (திருக்குர்ஆன் 48:2)

    இப்படி ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,

    அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,

    (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 110:1-3)

    மக்காவில் நுழைந்ததும் கஅபாவில் உள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டு கஅபா சுத்தம் செய்யப்பட்டது.

    பிலால் (ரலி) அவர்களை அழைத்து கஅபாவின் மேல் ஏறி “பாங்கு” சொல்லி அனைவரையும் தொழுகைக்காக அழைப்பு விடுக்குமாறு சொன்னார்கள்.

    அடுத்து மக்கத்துவாசிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. யார் யார் என்னென்ன தீமைகளை முஸ்லிம்களுக்கு செய்திருந்தாலும் அனைவரும் இன்று முதல் மன்னிக்கப்பட்டு விட்டனர் என்ற முதல் அறிவிப்பு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

    குரைஷியர் தலைவர் அபூசுபியானும் அவன் மனைவி ஹிந்தா, ஹம்ஸா (அலை) அவர்களை கொலை செய்த வம்சி மற்றும் அங்கு அடைக்கலமாய் இருந்த அனைவரும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்து அண்ணலார் கரம் பற்றி பாவமன்னிப்பு பெற்று இஸ்லாத்தைத் தழுவினர். அன்று நபிகள் நாதர் சொன்னார்களே, நாளை இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உண்மையானது.

    அடுத்து கஅபாவின் சாவியை யாரிடம் ஒப்படைப்பது என்ற பெரும் கேள்வி எழுந்தது. நபி பெருமானார் (ஸல்) கஅபாவை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் போது, ‘கஅபாவின் சாவியைக் கொடுங்கள். நான் இரண்டு ரக்காத் தொழுது விட்டு செல்கிறேன்’ என்று கேட்டபோது, ஆணவமாய் மறுத்த உஸ்மா பின் தல்ஹாவை அழைத்து அவர் கையில் சாவியை ஒப்படைத்து, ‘உலகம் உள்ளளவும் இவரது சந்ததியினரே கஅபாவின் சாவியை வைத்திருப்பார்கள்’ என்று நன்மாராயம் சொன்னார்கள். இதன் மூலம் அவரின் சந்ததி, உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்ற முன்னறிவிப்பையும் சொன்னார்கள். இன்று வரை அந்த குடும்பத்தினரிடமே அந்த சாவி உள்ளது என்பது நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்துகிறது.

    அன்று ஏற்றப்பட்ட ஏகத்துவ கொள்கைக்கொடி இன்று வரை பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. வெற்றியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    - மு. முஹம்மது யூசுப். உடன்குடி.
    இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும்.
    நமது தேசத்தின் அடையாளங்களில் நமது குடும்பமும் ஒன்று. இதர நாடுகளில் பெரும்பாலும் குடும்பம் என்பது சிதைந்து போன நிலையில் தான் இருக்கிறது. அதிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன்... என்பதெல்லாம் தமிழகத்தின் தாரக மந்திரச் சொற்கள்.

    இஸ்லாமிய மார்க்கமும், குடும்பம் என்பது என்ன, குடும்பத்துடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபி மொழிகள் மூலமும் தௌிவாக தெரிவிக்கின்றன.

    ‘மனிதர்களே, உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்)- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

    ‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)

    ஒரு மனிதன் குடும்பம் என்ற வளையத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது. நாம் குடும்பத்தைப் பாதுகாத்தால் நமது குடும்பம் நிச்சயம் நம்மை பாதுகாக்கும்.

    இதனால் தான் நீங்கள் உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், உங்கள் உறவுகளை துண்டிக்காதீர்கள். உங்கள் உறவுகளை ஆதரியுங்கள், உங்களது ஆயுள் அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான சகல வாழ்வாதாரங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் சொல்லி, நமது உறவுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

    குடும்பம் தான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கிறது. நல்லொழுக்கங்களை கற்றுத்தருகிறது. உறவுகளை மதிக்கச்சொல்கிறது, ஒற்றுமையோடு வாழ வழிகாட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழக் கற்றுக்கொடுக்கிறது என ஏகப்பட்ட நன்மைகள் ஒரு குடும்பத்தில் உண்டு.

    “ஒருவர் செலவு செய்யும் தொகைகளிலேயே ஆக மிகச் சிறந்தது அவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதே ஆகும்” என்பது நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம்)

    “ஒருவர் தமது குடும்பத்திற்காக செலவு செய்யும் போது இறைவனின் திருப்தியை நாடி செலவு செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செலவும் அது அவருக்கு தர்மமாக ஆகும்” என்பது மற்றொரு நபிமொழியாகும். (நூல்: புகாரி).

    இந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது என்ன..? செல்வம் அது சேர்த்து வைக்கப்படுவதற்கல்ல. அது செலவு செய்யப்படுவதற்குத்தான். அதுவும் அவரவர் தமது குடும்பங்களுக்காக செலவு செய்வது தான் சிறந்தது.

    அதற்கு இரண்டு விதமான நன்மைகள் உண்டு. ஒன்று குடும்பத்தை கவனித்த நன்மை. மற்றொன்று தர்மம் செய்த நன்மை. இதுதவிர ஒருவன் தன் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றால் அது ஒரு பாவச்செயல். அந்தப் பாவம் ஒன்றே போதும் அவனை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவதற்கு.

    குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும். குடும்பம் என்பது கதவும், ஜன்னலும் கொண்ட வெறும் வீடல்ல. அன்பும், இரக்கமும், பாசமும் கொண்ட ஒரு பெரும்கூடு’ என்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    எத்தனையோ வகை மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி அவர்களது குடும்பம் தான். இதனால் தான் “உங்கள் பிள்ளைகளுக்கு உங்களது குடும்பப் பாரம்பரியத்தை கற்றுக்கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.

    உறவு என்பது ஒரு தனிப்பிரிவல்ல. அது ஒரு உயிரின் குடும்ப இணைப்பு. உறவற்ற குடும்பம் உயிரற்ற உடலைப் போன்றது. எனவே நமது குடும்பம் நம்மைப் போலவே உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். “படைப்பினங்கள் யாவும் ஒரே குடும்பம்” என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைக்கத்தக்கது.

    இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழும் போது தான் அந்த வாழ்க்கை நிச்சயம் அர்த்தமுள்ளதாய் அமையும்.

    என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’, என்ற ஓரிறைக்கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். அதையே மக்களிடமும் வலியுறுத்தினார்கள். இதில் இருந்த உண்மையையும், அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர்.

    இதை அரபு தேசத்தில் உள்ள குரைஷி இன மக்கள் எதிர்த்தனர். அதோடு நபிகளாருக்கு எதிராக போர் தொடுத்தனர். பத்ர், உஹது ஆகிய இரு போர்களில் குரைஷிகள் தோல்வியைத் தழுவினார்கள். ஆனாலும் அவர்களின் வெறி தணியவில்லை.

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில், நபிகளுக்கு எதிராக இருக்கின்ற யூதர்களுடன் அரபுத்தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். அனைவரும் ஒன்று திரண்டு பெரும்படையுடன் மதினாவை தாக்கி அழிப்பதுடன், நபிகளாரை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.

    இந்த செய்தி ஒற்றர்கள் மூலமாக நபி பெருமானாருக்கு தெரிய வந்தது. நபிகளார் தமது தோழர்களை அழைத்து, இந்த இக்கட்டான தருணத்தில் நாம் எப்படி போர்த்தந்திரங்களை வடிவமைத்து கொள்வது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, பாரசீக நாட்டைச் சேர்ந்த நபித்தோழர், சல்மான் பாரிஸ் (ரலி) இவ்வாறு கூறினார்:

    “மதினாவில் நாம் எண்ணிக்கையில் குறைவாக உள்ளோம். அதன் எல்லைகளும் பாதுகாப்பற்ற நிலையில் விரிந்து உள்ளது. ஒரு சிறு இடைவெளியின் மூலம் கூட மதினாவில் எதிரிகளால் ஊடுருவி விட முடியும். நாம் மதினாவையும் அங்கு இருக்கும் பெண்கள், பெரியவர்களையும் பாதுகாக்க வேண்டும். எதிரிகளை எதிர்த்து போரிடவும் வேண்டும். எனவே முதலில் மதினாவை பாதுகாத்து கொண்டு பின்பு போர் புரியலாம். இது போன்ற சமயங்களில் பாரசீகத்தில் நகரைச் சுற்றி பெரும் அகழிகளைத் தோண்டி விடுவோம். அதனால் எதிரிகள் நகரை நெருங்கி வருவதை தடை செய்து விடுவோம். பின்னர் சற்று தொலைவில் இருந்து அம்பெய்து போரிடுவோம். வாள் வீரர்களை விட அம்பெய்தும் வீரர்களைத் தான் அதிகம் இங்கே பயன்படுத்த வேண்டும். எனவே மதினாவைச்சுற்றி அகழி தோண்ட வேண்டும். அதிக ஆழமும் அகலமும் கொண்டதாக அது அமைய வேண்டும். அப்போது தான் எதிரிகளை கட்டுப்படுத்த முடியும்”.

    இவ்வாறு அவர் ஆலோசனை சொன்னார்.

    அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். எதிரிகள் மதினா வருவதற்குள் அகழி தோண்ட முடிவு செய்தனர்.

    அது கடும் கோடை காலம். நபித்தோழர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். காலையில் வந்து அகழி தோண்ட ஆரம்பித்தால் மாலை வரை அந்த பணியைச் செய்தனர். பசிக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. தங்கள் வீட்டில் இருந்து உணவு எதுவும் கொண்டு வர முடியாத வறுமை நிலை. இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டனர்.

    நபிகள் நாயகம் இந்தப்பணியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள். பலர் பசியின் காரணமாக ஒட்டிய வயிற்றில் கற் களைக் கட்டி, முதுகை நிமிர்த்தி வேலை செய்தார்கள்.

    அப்போது ஒரு தோழர், நபிகளிடம் தன் வயிற்றுப் பசியைச் சொல்லி, அதை சமாளிக்க தன் வயிற்றில் கற்களை கட்டி இருப்பதை காட்டினார். அப்போது, அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தன் வயிற்றில் இரண்டு கற்களை கட்டி இருப்பதை அந்த தோழரிடம் காட்டினார்கள்.

    இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்” (திருக்குர்ஆன் 33:11).

    நபிகளார் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்ட தோழர்கள் கூட்டத்தில் சிலர் நம்பிக்கையின்றியும் இருந்தனர். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

    “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சதி செய்வதற்காகவே, ‘வெற்றி நமக்கே கிடைக்கும் என்று வாக்களித்தார்கள்’ என்று எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருந்ததோ, அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதை நினைத்துப் பாருங்கள்” (திருக்குர்ஆன் 33:12).

    இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் அகழி தோண்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். குதிரைகள் தாண்ட முடியாத அளவு அகலமும், குழிக்குள் குதிரைகள் விழுந்தால் எழுந்து வர முடியாத அளவு ஆழமும், 27 ஆயிரம் அடி நீளமும் கொண்ட அகழி மதினாவைச் சுற்றித் தோண்டப்பட்டது. சிறிய இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாய் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது.

    இந்த பணியின் போது நபிகள் நாயகம் இரண்டு அதிசயங்கள் நடத்திக்காட்டினார்கள். நபிகளார் பல நாட்கள் உணவருந்த வில்லை என்பதை அறிந்த அர்க்கம் (ரலி) என்ற தோழர், தன் வீட்டில் இருந்த சிறிதளவு உணவை கொண்டுவந்து கொடுத்தார்கள். இறைவன் திருப்பெயரை உச்சரித்து அந்த உணவை தன் கைகளால் கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு தோழருக்கும் நபிகளார் கொடுத் தார்கள். அத்தனை தோழர்களுக்கும் வயிறு நிரம்பும் அளவுக்கு அந்த உணவு இருந்தது.

    இரண்டாவதாக, அகழி தோண்டும் போது யாராலும் உடைக்க முடியாத பெரும் பாறை தடையாக இருந்தது. அப்போது, தனி ஒருவராக அதை சம்மட்டியால் மூன்று முறை அடித்து உடைத்தார்கள். முதல் அடியின் போது, ‘ரோம் பேரரசை நாம் கைப்பற்றுவோம்’, இரண்டாவது அடியின்போது, ‘பாரசீகத்தை கைப்பற்றுவோம்’, மூன்றாவது அடியில் ‘சிரியாவை கைப்பற்றுவோம்’ என்று நபிகளார் முன்னறிவிப்பு செய்தார்கள்.

    அன்றைய சூழ்நிலையில், பெரும் வல்லரசாக திகழ்ந்த அந்த நகரங்களை பலவீனமான நமது படை வெல்லுமா? என்று பலர் சந்தேகித்த போதும், பின்னாளில் கலிபா உமர் ஹத்தாப் (ரலி) காலத்தில் இந்த மூன்று நாடுகளும் வென்றெடுக்கப்பட்டன, நபிகளாரின் வாக்கும் உண்மையானது.

    அகழி போர் ஆரம்பம் ஆனது. அபுசுபியான் தலைமையில் யூதர்களும், அத்தனை அரபு குல கோத்திரங்களும் இணைந்த 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட கூட்டு படை மக்கா நகரில் இருந்து புறப்பட்டது. அவர்களை எதிர்க்க நபிகளாரின் தலைமையில் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறிய படை மதினாவில் திரண்டது.

    மதினத்து எல்லையை அடைந்ததும் அரபு படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆழமான, அகலமான அகழிகளைப் பார்த்ததும் திகைத்து நின்றனர். மதினத்து எல்லையைக் கூட அவர்கள் நெருங்க முடியவில்லை. துணிந்து நெருங்கினாலும் நபிகளார் தலைமையில் உள்ள படைகள் எய்த அம்பு மழையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

    இருந்தாலும் மதினத்துப் படையை பலவீனப்படுத்தும் வகையில் அரேபியர்கள் முற்றுகையை மாதக் கணக்கில் தொடர்ந்தனர். பசியினால் ஏற்பட்ட சோர்வு, போர் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை மதினத்து படையினர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அப்போது இறைவன் இந்த திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்:

    “எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகிய முன்மாதிரி உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் அவரைப் பின்பற்றி நடந்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்” (திருக்குர்ஆன் 33:21)

    யுத்தம் பல நாட்கள் தொடர்ந்தது. எதிரிப்படைகளிடம் உணவுப் பொருள் தீர்ந்தது. அவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது அல்லாஹ்வின் சோதனையும் இறங்கியது.

    பெரும் புயல் காற்றும், மழையும் அவர்களது கூடாரங்களை அழித்து புரட்டிப் போட்டது. காற்று பலமாக வீசியதால், போர் வீரர்கள் நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தனர். திரும்பிச் செல்வதை தவிர வழியில்லை என்ற நிலை உருவானது. அதேநேரத்தில், நபிகளாரின் தலைமையிலான படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரபு படை தோற்று சிதறி ஓடியது. நபிகளார் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.

    அந்த நிலைமையை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:

    “நம்பிக்கையாளர்களே, உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது எதிரிகளின் படைகள் அணி அணியாக வந்த சமயத்தில் புயல் காற்றையும், உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். அச்சமயம் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்” (33:9).

    அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது.
    இறைவன், மனிதர்களின் நலனுக்காக பல மகத்தான மனிதர்களை உலகில் தோன்றச் செய்துள்ளான். அவர்களில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் அடைந்த இடம் மிகவும் உயர்வானது, எவராலும் எட்டிப் பிடிக்க முடியாதது.

    சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வருகையானது உலகை நன்மையின் பக்கம் புரட்டிப் போடப்பட்டது. தீய செயல்கள் அழிந்து நன்மைகள் பெருகியது. மக்களும் நேர்வழி பெற்றனர்.

    நபிகள் நாயகம் அவர்கள் குழந்தையாக, தாயின் வயிற்றில் இருந்த போது தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள். பிறந்த பின்னர், தனது 6-வது வயதில் தாய் ஆமீனாவையும் இழந்து நின்றார்கள். பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த நபிகளாரின் இதயம், இறைவனின் நினைவின் மீது என்றும் நிலைத்து நின்றது.

    அன்றைய மக்கள், வணக்க வழிபாடு செய்வதில் இன ரீதியாக பல்வேறு பிரிவினர்களாக பிரிந்து கிடந்தார்கள். பொய், களவு, புறம்பேசுவது, ஜோசியம் பார்ப்பது. அவ்வப்போது கலகம் விளைவிப்பது, விபச்சாரம், மதுப்பழக்கம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது போன்ற எண்ணற்ற மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

    ஓர் இறைக்கொள்கை மூலம் அந்த மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை நேர்வழியின்பால் நபிகள் நாயகம் (ஸல்) மீட்டெடுத்தார்கள். எதிர்ப்பாளர்களின் சொல்லடிகளுக்கும், கல்லடிகளுக்கும் மத்தியில் இறைவனின் துணை கொண்டு வெற்றி பெற்றார்கள்.

    ஆண்டான் அடிமை, மேலோன், கீழோன், வலியவன், எளியவன் கருப்பானவன், வெளுப்பானவன் என எவராய் இருப்பினும் அனைவரும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவத்தை உலகில் நபிகளார் செயல்படுத்தி காட்டினார்கள்.

    இறையச்சம் ஒன்றே மனித உயர்வுக்கான உரைகல் என்று கூறிய அண்ணலார், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவது கூடாது என்றார்கள்.

    அற்ப உலக ஆசாபாசம் என்ற மன அழுக்கை மனித இதயங்களில் இருந்து துடைத்து எறிந்து, மனிதர்களை ஒழுக்கமுடையவராக மாற்றிக் காட்டினார்கள்.

    இத்தகைய தூய கொள்கையுடைய இஸ்லாம் மார்க்கத்தை அழித்திட நினைத்து, போர் புரிய துணிந்தவர்களை, இறையருளால், எதிர்த்து போராடி வெற்றி கண்டார்கள்.

    இவர்களுக்கு இறைவன் ஏற்படுத்தித் தந்த வரலாற்று பதிவை போன்று வேறு எவருக்கும் வரலாற்று பதிவுகளை உலகில் காணமுடியாது.

    ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களது வாழ்வு முறைகள் யாவும் திறந்த புத்தகமாகவும், தெளிவான சான்றுகளுடன் பிரகாசம் நிறைந்ததாகவே விளங்குகின்றது.

    இவர்களது எதிரிகள் கூட இவரது நற்குணத்தினால் பின் நாட்களில் நபிகளாரின் உயிர் நண்பர்களாக மாறினார்கள்.

    உலகை செதுக்கி செப்பனிடுவதற்காக, இவர்கள் ஏற்றுக் கொண்ட சுமைகளும், தியாகங்களும் ஏராளம். இவர்களது வாழ்வு என்பது உலகில் கடைசியாக பிறக்கப்போகும் மனிதனுக்கும் நேர்வழி காட்டத்தக்க பொதுத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றது.

    அனாதைகளை ஆதரிப்பது, நிர்கதியானவர்களுக்கு உதவி புரிவது, தன்னிடம் கொடுத்து வைக்கப்படும் பிறரது பொருட்களை பாதுகாத்து அதனை உரியவரிடம் ஒப்படைப்பது, இன்முகத்துடனும், நட்புடனும் அனைவரிடமும் பழகுவது, பிறர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்வது, பொது அமைதிக்காகவும், நன்மைக்காகவும் அயராது பாடுபடுவது போன்ற மகத்தான நற்குணங்கள் தான் நபிகளாரை மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடிக்கச் செய்தது.

    எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. ‘இறைவனே இவர்களுக்கு அனைத்தையும் கற்பித்துக்கொடுத்தான்’ என்பதற்கு இந்த உயர் பண்புகளே சான்றாக இருக்கிறது.

    ‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே, (நபியே) நீர் எழுந்து நின்று (மனிதர்களை தீமையில் விழுந்துவிடாமல்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ (74:1,2) என்ற இறைவசனம் எப்போது இறங்கியதோ அந்நாளிலிருந்து 23 ஆண்டுகள், மனித குல மேன்மைக்காக நபிகளார் ஆற்றிய இறைசேவையை மனித உள்ளம் படைத்த யாரும் மறக்கவே முடியாது. இறுதி நாள் வரை அவர்கள் மக்கள் மனங்களில் நிலைத்து நின்று நேர்வழி காட்டுவார்கள்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.
    அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டதால், ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் மண்ணுலகில் தனித்தனி இடத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டதால், அரபு மண்ணில் ஒன்றாய் இணைந்தனர். மனித வாழ்வின் நியதியில் இல்லறத்தை நல்லறமாய் கொண்டு வாழ்ந்தனர். உயிரினம் ஒன்றுமே இல்லாத சூனியமான உலகில் முதன் முதலில் மனித கரு உருப்பெற்றது.

    அல்லாஹ்வின் நியதிப்படி உயிரினங்கள் அனைத்தும், ஆதியில் ஜோடி ஜோடிகளாகவே படைக்கப்பட்டனர். ஆதம் (அலை) அவர்களுக்கு முதல் பிள்ளைகள் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர். அதற்கு அடுத்து பிறந்த பிள்ளைகளும் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர்.

    முதலில் பிறந்த ஆண் ‘காபீல்’ என்றும், இரண்டாவதாக பிறந்த ஆண் ‘ஹாபீல்’ என்றும் பெயர் சூட்டப்பட்டனர். காபீலுடன் பிறந்த பெண் அழகில் சிறந்தவர், ஹாபீலுடன் பிறந்தவர் அழகில் சற்று குறைந்தவர். காபீல் விவசாயம் செய்து வந்தார். ஹாபீல் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழில் செய்தார்.

    இறைவனின் நியதிப்படி, முதல் கருவில் உருவான ஆணிற்கு இரண்டாவது கருவில் உருவான பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும். அதுபோன்று, இரண்டாவது கருவில் உருவானவர் முதல் கருவில் உருவான பெண்ணை மணமுடிக்க வேண்டும்.

    இந்த நியதிக்கு இடைஞ்சல் செய்ய சைத்தான் திட்டமிட்டான்.

    காபீலை அணுகி அவரது மனதை கெடுத்து, தன்னுடன் பிறந்த அழகிய பெண் இக்யுலிமா என்பவரையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்குமாறு மாற்றி விட்டான். ஆனால் அவரது தம்பியோ சைத்தானின் ஊசலாட்டத்திற்கு அடிபணியாமல் இறைவனின் எந்த முடிவிற்கும் தான் தயார் என்பதாகச் சொன்னார்.

    இந்த செய்தி ஆதம் (அலை) அவர்களுக்கு எட்டியது. இருவரையும் அழைத்து விசாரித்தார். காபீல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஆதம் (அலை) இதுகுறித்து தன் மகன்களிடம் கூறியதாவது:-

    ‘யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதி. இதற்கு மாற்றம் செய்ய நீங்கள் நினைத்தால், இதற்கு இறைவனே தீர்ப்பு வழங்கட்டும். நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்தமான காணிக்கையை மலையின் மீது வைத்து விடுங்கள். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதனை பொசுக்கி விடும். யார் காணிக்கையை நெருப்பு பொசுக்குகிறதோ அவரது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதவேண்டும். மேலும், அவரது விருப்பம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்டு காபீல், ஹாபீல் இருவரும் தங்களுக்குரிய காணிக்கையை தயார் செய்தார்கள். காபீல் தன் விளைநிலத்தில் உள்ள வேண்டாத பொருட்களை ஒன்று திரட்டி அவனது காணிக்கையாக கொண்டு வைத்தான். ஹாபீல் தன் மந்தையில் உள்ள அழகுள்ள, நல்ல கொழுத்த ஆட்டை காணிக்கை ஆக்கினான்.

    வானில் இருந்து வந்த நெருப்பு ஹாபீலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நபியே! ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இருமகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. இருவரும் குர்பானி (பலி) கொடுத்த போது, அவ்விருவரில் ஒருத்தருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த காபீல், ஹாபீலை நோக்கி ‘நான் உன்னைக் கொன்று விடுவேன்’ என்றார். அதற்கு பதிலளித்த ஹாபீல், ‘இதில் என்ன தவறிருக்கிறது, அல்லாஹ் குர்பானியை ஏற்றுக்கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர்களிடமிருந்து தான்’ என்றார்”. (திருக்குர்ஆன் 5:27)

    “நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினால், அந்நேரத்திலும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” (திருக்குர்ஆன் 5:28).

    “இதன் பின்னரும் அவர் தன் சகோதரரை வெட்டும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே அவர் அவரை வெட்டி விட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்” (திருக்குர்ஆன் 5:30)

    உலகின் முதல் கொலை நிகழ்ந்து விட்டது. காபீலுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் வரை நம் முன் பேசிக் கொண்டிருந்த தம்பி ஹாபீல் எதுவும் பேசாமல், எந்த அசைவும் இல்லாமல் அப்படியே கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். இது என்ன நிலை, இதன் பின் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். இது தான் இறப்பு என்ற நிலையா? என்று புரியாதவராக அங்கேயே அமர்ந்திருந்தார்.

    எல்லாம் அறிந்தவன் அல்லாஹ். அவன் திட்டப்படியே காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது, இறைவன் கட்டளைப்படி இரண்டு காகங்கள் அந்த இடத்திற்கு வந்தன. இரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டதில் ஒரு காகம் இறந்து விட்டது. காபீல் அதனை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹாபீலுக்கு நேர்ந்த கதி ஒரு காகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    சண்டையில் வென்ற காகம் தன் அலகால் பூமியை கொத்திக் கொத்தி தோண்டியது. அந்த பள்ளத்தில் இறந்த காகத்தை போட்டு மீண்டும் மண்ணால் மூடியது. தன் சகோதரன் ஹாபீலின் பிணத்தை எப்படி புதைக்க வேண்டும் என்பதை காபீலுக்கு தெரியப்படுத்த இறைவன் செய்த ஏற்பாடு இது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “பின்னர் தன் சகோதரர் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காகப் பூமியை தோண்டிற்று” (திருக்குர்ஆன் 5:31).

    பெண்ணாசையின் காரணமாகத்தான் உலகில் முதல் கொலைக்குற்றம் நிகழ்ந்தது. தன்னை விட தன் தம்பிக்கு அழகான மனைவி அமைந்து விடக்கூடாது என்ற பொறாமையும் அதோடு சேர்ந்து கொண்டது. சைத்தானின் தூண்டுதலால் கெட்ட எண்ணம் மேலோங்கியது. இந்த மூன்று குணங்கள் தான் முதல் பாவத்திற்கு காரணமாய் அமைந்தன. இன்றும் பெரும்பாலான பாவங்களுக்கு அவை தான் காரணமாக உள்ளன.

    எனவே நம்முடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பி, பொறாமை என்ற தீய குணத்தை அறவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணாசையில் வீழ்ந்து தன் கண்ணியத்தையும், அந்தஸ்த்தையும் பாழ்படுத்தாமல் வாழ முயன்றால் நிச்சயமாக நம் முயற்சிக்கு இறைவனின் அருள் கிட்டும்.

    “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.

    எனவே, தீய எண்ணங்களை களைந்து நல்ல வாழ்க்கைக்கு முயற்சி செய்தால், இறைவன் அருளால் வெற்றி பெறலாம்.
    நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
    இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.

    இது பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை’. (51:56)

    கட்டாயக் கடமை என்பதாலும், தொழாதவர்களுக்கு இறைவன் தருவதாகச் சொல்லியுள்ள தண்டனைகளுக்குப் பயந்தும், தொழுவதால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்காகவும் நம்மில் பெரும்பாலானோர் தொழக்கூடியவர்களாகவே இருக்கிறோம். தொழுகையைப் பொறுத்தவரை, எந்த ஒரு வேளையையும் விடாமல் தொழுவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழுவது, கவனம் சிதறாமல் தொழுவது ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியமானவை.

    அளவிட முடியாத வேகத்தில், இறக்கைகள் இல்லாமலேயே பறக்கும் மனதை கடிவாளம் கொண்டு அடக்குவதுதான் நமக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து வைத்திருக்கும் சைத்தான் நம்முடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி, நம் தொழுகையை வீணாக்குவதற்கு பெரும் முயற்சி செய்வான். ஆனால் நம் மனக் கட்டுப்பாட்டினால், சைத்தானை வெற்றி கொள்ள முடியும்.

    ‘தொழுகையின் போது அல்லாஹ்வின் முன் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்’ (2:238) என்ற திருக்குர்ஆன் வசனத்தை நினைவில் கொள்ள வேண்டும். பெயருக்குத் தொழுவதால் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வதுடன், அப்படிப்பட்ட தொழுகையால் நமக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொண்டு கவனம் சிதறாமல் தொழ வேண்டும்.

    ‘கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்றும், அப்படிப்பட்டவர்கள் பிறருக்கு காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள்’ (107:4,5,6) என்றும் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

    பள்ளிவாசல் தவிர்த்து பிற இடங்களை தொழுகை நடத்தும் போது, சிரிப்பும், பேச்சுமாக இருக்கும் இடத்தை தொழுகைக்குத் தேர்வு செய்யக்கூடாது. இன்னும், தனிமையில் இறைவனிடம் கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. மற்றவர்கள் பார்க்கும்படியாக தொழும் பொழுது பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே கூடுமான வரை சப்தம் இல்லாத, ஒதுக்குப்புறமான இடமாக இருப்பது நல்லது.

    தொழுகையில் நாம் ஒரே நிலையில் இருப்பதில்லை. தொழ ஆரம்பிக்கும் முன் இறைவனைத் தவிர மற்ற சிந்தனைகளை ஒதுக்கி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். ‘என் இறைவனுக்கு முன் நிற்கிறேன், அவன் முன் அடி பணியப்போகிறேன்’ என்ற எண்ணத்தைக் கொண்டு மனதை நிரப்ப வேண்டும்.

    தலை குனிந்து, பார்வை கீழ் நோக்க வேண்டும். ஒரு திசையில் மட்டுமே பார்க்கும் படியாக கண்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், ‘எதையும் கேட்காதே’ என்று செவிகளைக் கட்டுப்படுத்த முடியாது. செவிகள் திறந்தே இருக்கும். இருந்தாலும், தொழுகையில் ஓத வேண்டியவற்றை மனதிற்குள் ஓதாமல் மென்மையான குரலில் நமக்கு மட்டும் கேட்கும் வகையில் ஓதும்பொழுது செவிப்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    நம்மைப் படைத்த இறைவன் மீது அளவு கடந்த அன்பு, பணிவு, மரியாதை, நன்றியுணர்வு, அவனின் மீதான மிகுந்த அச்சம் ஆகிய அனைத்தையும் ஒருசேர மனதில் நிரப்புவது பயிற்சியின் மூலம் சாத்தியமே. எந்த இடத்தில் நின்று தொழுதாலும், இறையில்லமான காபதுல்லாவில் நாம் நின்று தொழுவதாக நினைத்துக் கொள்வது தொழுகையில் நம்முடைய நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

    முதல் நிலையில் இரு கைகளையும் உயர்த்துகிறோம். மனிதர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில், ‘என்னிடம் ஒன்றுமில்லை, நான் நிராயுதபாணி, நான் சரணடைகிறேன்’ என்று இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நிற்பதை நாம் பார்த்திருப்போம். இது அந்த மாதிரியான நிலை.

    ‘என் இறைவா, நான் உன் அடிமை, என்னால் ஆகக்கூடியதென்று எதுவும் இல்லை, நான் உன்னிடமே சரணடைகிறேன், என்னை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலை இதுதான்.

    பின்னர் இரண்டாவது நிலை மாறுகிறது. இரு கைகளையும் நெஞ்சிற்கு கீழே கட்டுகிறோம். நம் நெஞ்சத்தை இறைவனோடு பிணைக்கும் நிலை இது. தன்னைப் படைத்து, பரிபாலிக்கும், இவ்வுலகத்தின் அதிபதி, ஆசான் முன் கை கட்டி நிற்கும் ஒரு அடியானின் நிலை இது. பின்னர் திருக்குர்ஆன் வசனங்களை முறைப்படி ஓத ஆரம்பிக்கிறோம்.

    அடுத்த நிலை உடல் வளைத்து, குனிந்து, முழங்கால்களைப் பிடித்தபடி நிற்கும் நிலை. இறைவனுக்கு முன் நம் பணிவை இன்னும் அதிகமாகக் காட்டுவதுடன், ‘அவனைத் தவிர வேறு எவர் முன்னும் தலை குனிந்து நிற்க மாட்டேன்’ என்றும் கூறும் நிலை இது.

    அடுத்த நிலை, எண் சாண் உடலை குறுக்கி, சிரம் பணிந்து வணங்கும் நிலை. நம்மைப் படைத்த இறைவனின் காலடியில் விழுந்து கிடைக்கும் ஒரு தூசியைப் போல் நம்மை எண்ணிக் கொள்ள வேண்டும்.

    இந்நிலையில் அடியானுக்கு இறைவனின் நெருக்கம் கிடைக்கிறது. அத்துடன் இந்நிலையில் இருக்கும் ஒரு அடியானின் படித்தரம் சுவனத்தில் உயர்த்தப்படுவதாகவும், அவரின் ஏட்டில் இருந்து ஒரு பாவம் அழிக்கப்படுவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    கண்களில் ஈரம் கசிய, நம்முடைய இறைவனுக்கு முற்றிலும் பணியும் நிலை இது. ‘உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை, உன்னைத் தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேன், நீயே, நீ மட்டுமே எனக்குப் போதுமானவன்’ என்று மனம் உருகி நிற்கும் இந்த நிலை மிகவும் உன்னதமானது.

    பின்னர் தலை குனிந்த வண்ணம் அமரும் நிலை. ஒரு விதமான நிம்மதி மனதில் நிறைந்திருக்கும் நிலை. நம்முடைய எல்லாக் காரியங்களையும் நமக்கு பொறுப்பேற்றுக் கொண்டவனிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதால் ஏற்படும் நிம்மதி அது. அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறோம். தொழுகையை முடிக்கும் முன்பாக அமர்ந்திருக்கும் நிலையில் வலது, இடது தோள்களை நோக்கி தலையைத் திருப்பி நம்முடைய நன்மை, தீமைகளை ஏட்டில் பதிவு செய்யும், வானவர்களுக்கு ஸலாம் கூறி தொழுகையை முடிக்கிறோம்.

    உடனே எழுந்திருக்காமல் கைகளை உயர்த்தி நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு நம்முடைய தேவைகளைக் கேட்டு, திக்ரு (நினைவு கூருதல்) செய்து தொழுகையை நிறைவு செய்கிறோம்.தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும், அரபியில் வசனங்களை ஓதினாலும், அவற்றின் பொருளை அவரவர் தாய்மொழியில் புரிந்து ஓதுவதால், ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நம்மால் தொழ முடியும்.

    ஆனால் நம்முடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட்ட தொழுகையா என்பதை இறைவனே மிக அறிந்தவன். நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இன்னும் அவனின் கட்டளைபடியும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழி முறைப்படியும் தொழுவதற்கு அறிவையும், வழிகாட்டுதலையும் வல்ல இறைவன் நமக்குத் தந்தருள்வானாக, ஆமின்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை-84.
    கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.
    முதல் பாவத்தின் பரிகாரம்

    அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர் களைப் படைத்து, அவர்களை எல்லாப் படைப்பினங்களையும் விட உயர்ந்த தன்மையுடையவராக உருவாக்கி, சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கச் செய்தான்.

    ஆதம் (அலை) உயிர் பெற்று கண் விழித்து பார்த்த போது, அவர்கள் அருகில் ஒரு உருவம் வெண்மையான ஒளிப்பிழம்பாய் நிற்பதை கண்ணுற்றார்கள்.

    “என் இறைவனே! இது என்ன ஒளிரும் வெண்மையில் ஒரு உருவம்” என்று வினவிய போது, ‘இது தான் உங்கள் சந்ததியில் சில ஆயிரம் காலங்கள் கடந்து தோன்றப் போகின்ற தாவூது நபிகள். அவர் அறுபது ஆண்டுகள் உலகில் உயிர் வாழ்வார்’ என்று அல்லாஹ் பதில் சொன்னான்.

    ஆதம் நபிகள் அல்லாஹ்வை நோக்கி, “எனக்கு ஆயிரம் ஆண்டுகளை ஆயுளைத் தந்த என் இறைவனே, என்னுடைய வயதில் நாற்பது ஆண்டுகளை தாவூது நபிகளுக்கு கொடுத்து அவர்களை நூறு ஆண்டுகள் வாழச்செய் ரஹ்மானே” என்று வேண்டிக்கொண்டார்.

    அல்லாஹ்வும் மனம் மகிழ்ந்தவனாக, “சரி அப் படியே ஆகட்டும்” என்றான்.

    ஆதம் நபி முதன் முதலாக செய்த நன்மையான காரியம் ‘தர்மம்’ என்ற கொடைத்தன்மை ஆகும். தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தன்னுடைய ஆயுளில் இருந்து தர்மம் செய்தார்கள்.

    ஒரு மனிதன் தர்மம் என்ற நல்லறத்தை செய் வதற்கு எதுவுமே தடையில்லை. தன்னிடம் எது இருக்கின்றதோ அதைக்கொண்டு தர்மம் செய்யலாம். பொருளாக இல்லை என்றால் தன்னிடம் உள்ள அறிவு, ஞானம் இவற்றை எல்லாம் கொண்டு தர்மம் செய்ய வேண்டும் என்கின்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது.

    இறைவனின் மாபெரும் கருணையால், ஆதம் நபிகள் சொர்க்கத்தில் சிறந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள். இதனால், அவர்கள் மீது பொறாமை கொண்டான் இப்லீஸ். அல்லாஹ் தடை செய்திருந்த கனியை ஆதம் நபிகளை புசிக்கச் செய்ய சதி ஆலோசனை செய்தான்.

    அதை திருக்குர்ஆன் (7:20) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “தவறான எண்ணத்தை அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து; அவர்களை நோக்கி, ‘அந்த கனியைப் புசித்தால் நீங்கள் இருவரும் வானவர்களாகவோ, அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகி விடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறியதுடன், ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருது கிறேன்’ என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்து, அவர்களை மயக்கி, அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான்”.

    ஆதம் நபியின் எண்ணங்கள் தூய்மையாக இருந்த போதிலும், அவரை வழிகெடுத்து பாவத்தில் வீழ்ந்து விடும்படி செய்து விட்டான், சைத்தான்.

    இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு பதிவு செய்கின்றான்:

    “முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை”. (திருக்குர்ஆன் 20:115)

    “எனினும் இப்லீஸாகிய சைத்தான் அதை காரணமாக வைத்து அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து சொர்க்கத்திலிருந்தும், அவர்கள் இருந்த மேலான நிலையிலிருந்தும் அவர்களை வெளியேறும் படி செய்து விட்டான்” (திருக்குர்ஆன் 2:36).

    சைத்தானின் சூழ்ச்சியால் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அந்த கனியைப் புசிக்கவே, அதுவரை அவர்களைக் காத்து நின்ற புனித தன்மை அவர்களை விட்டு விலகியது.

    “அவ்விருவரும் அந்த மரத்தின் பழத்தை சுவைக்கவே அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன், ‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக சைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்கு கூறவில்லையா’ என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:22).

    இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து முதல் பாவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அதற்கான தண்டனை என்று எதுவும் தரப்படவில்லை. இருந்தாலும் அதனை ஆழமாக சிந்திக்கும் போது தண்டனைக்கெல்லாம் சிகரமாய் அமையக் கூடிய மானபங்கம் என்ற பெரும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். உயிரினும் பெரிது மானம். அதற்கு அங்கே ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்க பகுதியை மறைத்துக் கொள்வதற்கு இலை தழைகளை தேடி ஓடுகிறார்கள். மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வையும் மேலோங்கச் செய்கின்றான்.

    திருக்குர்ஆனின் மற்றொரு இடத்திலே கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் போது, “கணவன்-மனைவிக்கு ஆடை, மனைவி-கணவனுக்கு ஆடை” என்பதாக குறிப்பிடுக்கின்றான். அதாவது, ‘ஒருவர் மானத்தை ஒருவர் கட்டிக் காத்து வாழ வேண்டும்’ என்று கட்டளையிடுகின்றான்.

    அல்லாஹ்வின் கட்டளைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதம் (அலை) மாறு செய்து விட்டார். அதனால் சொர்க்கத்தில் வாழும் அந்தஸ்த்தையும் இழந்து விட்டார்.

    இந்தியாவும் இலங்கையும் ஒன்றாய் இணைந் திருந்த நிலப்பரப்பில் ஆதம் (அலை) இறக்கி விடப்பட்டார். அவர் இறங்கிய மலை “ஆதம் பாவா மலை” என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    அது போன்று ஹவ்வா (அலை) சவுதி அரேபியா நாட்டில் ஜித்தாவில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்பட்டார். எத்தனையோ ஆண்டுகள் இருவரும் கஷ்டங்கள் பல அனுபவித்து ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கடைசியில் மக்கா நகரில் அரபாவில் “ஜபலே ரஹ்மத்” எனும் மலைக்குன்றில் ஒன்றிணைந்தார்கள். அதன் பின் அவர்களின் உலக வாழ்க்கை ஆரம்பம் ஆனது.

    அவர்கள் ஒருவரை ஒருவர் தேடி அலைந்த கால கட்டத்தில் தங்கள் தவறை நினைத்து வருந்தி பாவமன்னிப்பு கேட்டு வந்தார்கள் என்பதையும் அல்லாஹ் தெளிவு பெற கூறுகின்றான்.

    “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்” என்று பிரார்த்தித்து கூறினார். (திருக்குர்ஆன் 7:23)

    அது போன்று தான் நம் வாழ்க்கையிலும் பாவம் செய்யும் எண்ணம் இல்லை என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் அல்லது பாவம் நடைபெறும் இடம் என தெரிந்தும், அது போன்ற இடங்களுக்கு சிலரின் வற்புறுத்தலால் செல்லும் போது, நாமும் பாவ வலையில் சிக்கிக்கொள்கிறோம். இதை அறிந்து அவற்றை தவிர்த்து வாழ வேண்டும்.

    கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.

    பாவங்கள் செய்வது மனித இயல்பு. பாவங்களை எண்ணி மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அது எத்தனை பெரிய பாவமாயிருந்தாலும், இணை வைத்தலைத் தவிர்த்து விபச்சாரம், கொலை போன்ற பாவங்களையும் மன்னிக்கின்றேன் என்கிறான் அல்லாஹ்.

    இந்த வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம் இதுவே.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.
    மழையின்மைக்கு மனிதன் கூறும் காரணங்களாவன: ஓசோனில் ஓட்டை... வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல். மழை பொழியாமல் இருப்பதற்கு இன்றைய விஞ்ஞானமும் இவ்வாறு பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்.

    ஆயினும், இஸ்லாம் இன்னொரு கோணத்தில் இதனைப் பார்க்கிறது.

    ஆம், மனிதன் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை பெய்யாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம் என்று இஸ்லாம் கூறுகின்றது.

    நல்லவன் ஒருவன் இந்தப் பூமியில் வாழ்கின்றான் என்றால் அவனால் சக மனிதன் நலம்பெறுவதுடன், ஏனைய உயிரினங்களும் நலம் பெறுகின்றன. அதேநேரம் தீயவன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவனால் பாதிப்படைவது சக மனிதன் மட்டு மல்ல.. மாறாக, அவன் வாழும்பகுதி, கால்நடைகள், ஏன் மரங்கள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

    ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக்கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது நபிகளார் (ஸல்), (இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள், “இறைத்தூதர் தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.

    நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையில் இருந்தும் நிம்மதிபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன” என்று சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம்)

    தீயவன் ஒருவன் உலகில் உயிர் வாழ்கின்றான் என்றால் அவன் தீயவனாக இருப்பதன் பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. மாறாக, அவன் வாழும் பகுதியில் இருக்கும் கால்நடைகள், மரம் செடிகொடிகள்கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும்போது அவனது பாவத்தின் காரணத்தால் மழை தடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதேவேளை, உலகிய ரீதியாகப் பார்க்கும்போது மழைக்குக் காரணமாக அமையும் மரம் செடி கொடிகளை அவன் அழிக்கின்றான் என்பது இந்த நபி மொழியின் இன்னொரு கோணம் ஆகும். எனவேதான், ‘கெட்டவன் இறக்கும்போது படைப்பினங்கள் அனைத்தும் நிம்மதி பெறுகின்றன’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ஆக, மனிதர்கள் செய்யும் தவறுக்கு இயற்கையையும், இறை வனையும் குறை கூறுவது முறையற்ற செயல். வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டே, ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்று வெற்றுக்கூச்சல் போடுவதால் என்ன பயன்? பசுமை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு பசுமைவழிச் சாலைகள் அமைப்பதால் மழை நீர் தடுக்கப்படும் என்பதை ஏன் உணருவதில்லை.

    ‘விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர் துளி’ என்பது சாத்தியமாக வேண்டும் என்றால் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால்.. மரங்களை அழிப்பவர்கள் இயற்கைச் சீற்றத்தால் அழிவதற்குள் இறைவனின் சீற்றத்தால் அழிவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

    “விண் இன்று பொய்ப்பின்விரிநீர் வியன் உலகத்து

    உள்நின்று உடற்றும் பசி”

    என்ற வள்ளுவன் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

    ஆம், மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.

    வான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைச்சல் இருக்காது. அதனால் பஞ்சமும், பசியும் உலகத்தை வருத்தும் என்பது இதன் பொருள்.

    மரங்கள் அழிக்கப்படுவதன் மூலம் விண்ணின் மழைத்துளி தடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தனது பாவச்செயல்களாலும் மழையை மனிதன் வரவிடாமல் தடுக்கின்றான். ஆகவே இறைவனின் கோபப்பார்வை அவர்கள் மீது இறங்குகிறது.

    தத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

    “மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

    இவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? சுயநலம் கொண்ட தங்களது மோசமான செயல்களால் மழையைத் தடுத்தார்கள். நதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். தண்ணீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஆகவே வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் அவர்களை அழித்தான்.

    அதேவேளை மீண்டும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் இறைவனே கற்றுத்தருகின்றான். ஆம், செய்த செயல்கள் தவறுதான் என்று தெரிந்துவிட்டால் பாவ மீட்சி செய்யுங்கள். செய்த பிழையைத் திருத்துங்கள். தொடர் மழையைப்பெறலாம் என்றும் இறைவன் கூறுகின்றான்.

    “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்” (71:10-12)

    தமிழகமெங்கும் பள்ளிவாசல்களில் பரவலாக மழைத்தொழுகையும், பிரார்த்தனைகளும் நடைபெறுவதை நாம் கவனித் திருக்கலாம். நல்ல விஷயம்தான். அதேவேளை இறைவன் கூறும் இந்த அழகிய உபதேசத்தையும் கொஞ்சம் கவனத்தில் இருத்தினால், மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் போதுமான அளவுக்கு மழை கிடைக்கலாம் (இறைவன் நாடினால்).

    ஆக, பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.

    இதில் இன்னொரு நகைமுரண் என்னவென்றல்.. மழலையர் பள்ளிக்கூடங்களில் இருந்தே நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் பால பாடம், “மழையே.. மழையே தூரப்போ” என்ற ஆங்கிலப் பாடல். பின் எங்கிருந்து மழை வரும்..?

    குழந்தைகளின் பிரார்த்தனைகளைத்தானே இறைவன் வேகமாக அங்கீகரிப்பான்.. இல்லையா..?

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.

    முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை களிமண்ணால் இறைவன் படைத்தான். அடுத்து, அல்லாஹ் தன் ‘ரூஹானியத்தை’ (உயிர் மூச்சை) ஊதினான். தலையில் ஊதப்பட்ட உயிர் மூச்சுக்காற்று உடல் முழுதும் பரவி நாசித்துவாரத்தின் வழியாக வெளியானது. உயிர் பெறும் அந்த தருணத்தில், மூக்கின் வழியாக மூச்சு வெளியான போது ஆதம் (அலை) அவர்கள் தும்மினார்கள்.

    தும்மிய மறுகணமே ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று அவர்கள் சொன்னார்கள். முதல் மனிதனின் முதல் வார்த்தை ‘எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே’ என்பதாகவே ஆரம்பம் ஆனது.

    அதனைச்செவியுற்ற அல்லாஹ் மனம் மகிழ்ந்தவனாக, “இர்ஹ்முக்க வ ரப்புக்க”, உங்கள் இறைவனின் அருட்கொடை உங்களுக்கு கிடைக்கட்டுமாக” என்று வாழ்த்துச் சொன்னான்.

    ஆதம் (அலை) அவர்களைப் படைப்பதற்கு முன்பாகவே, தன்னுடைய மலக்கு(வானவர்)களை ஒன்று திரட்டி, ‘மலக்கு, ஜின் என்ற இரண்டு படைப்புகளோடு மனிதன் என்ற இன்னுமொரு படைப்பையும் படைக்கப் போகிறேன்’ என்று அல்லாஹ் சொன்னான்.

    அப்போது மலக்குகள் எல்லாம், “எங்கள் இறைவனே! நாங்களோ பரிசுத்தமானவர்களாக இருக்கின்றோம். எந்நேரமும் உன் புகழைப் போற்றியவர்களாக உள்ளோம். எங்களைத் தவிர்த்து உலகில் சண்டை செய்து ரத்தம் சிந்தக்கூடியவர் களையா நீ படைக்க நாடுகிறாய்?” என்று கேட்டனர்.

    “மலக்குகளே! நான் அறிந்தவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லி அவர்களுக்கு இறைவன் பதில் கூறினான்.

    அதன்பின், ஆதம் (அலை) அவர்களுக்கு உலகின் படைப்புகள் அத்தனையையும் சொல்லித்தந்தான். தொடர்ந்து, உலகப் பொருட்களை மலக்குகளிடம் காட்டி, ‘இதன் பெயர்களைக் கூறுங்கள்’ என்று சொன்ன போது “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு அறிவித்து தந்ததைத் தவிர்த்து நாங்கள் வேறு எதையும் அறிய மாட்டோம்” என்றார்கள்.

    ஆனால் ஆதம் (அலை) அவர்களோ எல்லாவற்றின் பெயரையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சொன்னார்கள். இதனால் அல்லாஹ் மலக்குகளை விட மனிதர்களை அந்தஸ்த்தில் உயர்த்தி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாது:-

    “நிச்சயமாக நான் உங்களைப் படைக்க கருதி, உங்களை அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘ஆதமிற்கு சிரம் பணியுங்கள்’ என்று கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தார்கள், அவன் பணியவில்லை” (திருக்குர்ஆன் 7:11).

    மனிதன் மீது கொண்ட அபரிமிதமான அன்பின் காரணத்தால் மற்றைய படைப் பினங்களை மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தான். அதனால் அவன் சபிக்கப்பட்ட சைத்தானாக சொர்க்கத்திலிருந்து வெளியில் வீசி எறியப்பட்டான்.

    இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:-

    “ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி, ‘நான் உனக்கு கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணியாதிருக்கும் படி உன்னைத் தடைசெய்தது எது?’ என்று கேட்க, அதற்கு இப்லீஸ், ‘நான் அவரை விட மேலானவன், ஏனென்றால் நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது’ என்று இறுமாப்புடன் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:12)

    சொர்க்கத்தில் எத்தனை இன்பங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரு எல்லையை எட்டிவிட்ட பிறகு தனிமை என்ற கொடுமை வாட்டுவதை ஆதம் (அலை) அவர்கள் உணர்ந்தார். இதை அறிந்த அல்லாஹ், அவருக்கு தக்க துணை ஒன்றைப் படைக்க நாடினான்.

    ஒரு நாள் ஆதம் (அலை) அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அவரது விலா எலும்பை முறித்து “ஹவ்வா” என்ற பெண்ணைப் படைத்தான்.

    ஆதம் நபி கண்விழித்து பார்த்த போது, அவர் முன்பு அழகிய வடிவில் ஒரு உருவம் நிற்பதை கண்டார்கள். அந்த உருவத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    பின்னர் அந்த உருவத்திடம், ‘நீங்கள் யார்?’ என்று ஆதம் (அலை) வினவிய போது, ‘நான் தான் ஹவ்வா, உங்களுக்கு துணையாக நான் படைக்கப்பட்டுள்ளேன்’ என்றார்.

    எத்தனை இன்பங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், ஒரு மனிதனின் தனிமையைப் போக்கவும், அவன் மனதிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும், இன்பத்தையும் தரக்கூடியவர் மனைவி என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    இதுபற்றி இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்: “நாம் ஆதமிற்கு துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி, ‘ஆதமே, நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியவற்றை தாராளமாக புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் உங்களுக்கு தீங்கிழைத்து கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம்.

    இறைவனின் கட்டளைப்படி ஆதம் (அலை) அவர்களும் அந்த மரத்தின் அருகில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்து கொண்டார்கள். ஆனால் இப்லீஸ் என்ற சைத்தான் இதைக்கெடுக்க முடிவுசெய்தான்.

    தான் பெற்றிருந்த உயர்ந்த பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டு இழி நிலைக்கு ஆளாக்கிய ஆதம் மீது சினம் கொண்டான். அவரையும், அவரது புனித தன்மையையும், எப்படியாவது கெடுத்து அவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தான். அவன் ஏற்கனவே இறைவனிடம் இதுகுறித்து அனுமதியைப் பெற்றிருந்தான். திருக்குர்ஆன் அதை இவ்வாறு விவரிக்கின்றது.

    “இப்லீஸாகிய அவன் இறந்தவர்களை எழுப்பும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு”என்று கேட்டான். அதற்கு இறைவன், நிச்சயமாகவே நீ அவ்வாறே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறினான்.

    “அதற்கு இப்லீஸ் இறைவனை நோக்கி, நீ என்னைப் பங்கப்படுத்தியதால் ஆதமுடைய சந்ததிகளாகிய அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது தடை செய்ய வழிமறித்து அதில் உட்கார்ந்து கொள்வேன்” என்றான். (திருக்குர்ஆன் 7:14-16).

    இப்படி கூறிய இப்லீஸ், ஆதமை வழிகெடுக்க திட்டமிட்டான். எந்த மரத்தின் அருகே செல்லக்கூடாது என்று இறைவன் கட்டளையிட்டு இருந்தானோ, அதை பயன்படுத்தி, அவர்களை கெடுக்க முடிவு செய்தான். இதுதொடர்பாக, அவர்கள் மனதில் ஆசையை விதைக்க எண்ணி, அதில் வெற்றியும் பெற்றான்.
    உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.
    அருள்மறையாம் திருக்குர்ஆனில் ‘அல் அஃராஃப்’ (சிகரங்கள்) என்ற அத்தியாயத்தில் சில வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு வசனத்தில் ‘பல் ஆம் இப்னு பாஊர்’ என்ற அறிஞரைப்பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    இறையச்சம், தீவிரமான வணக்க வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் இறைவனின் அருளைப்பெறும் ஒருவர், தனது நேர்வழியில் இருந்து தவறினால் என்ன ஆகும் என்று இந்த வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதுபற்றி இந்த வாரம் காண்போம்....

    கொடுங்கோல் அரசன் பிரவுன், மூஸா நபிகளையும், அவரது கூட்டத்தாரையும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்தினான். அல்லாஹ்வின் வல்லமையால் பிரவுனும், அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். அதன்பின்னர் மூஸா நபியின் தலைமையில் மக்கள் அமைதியாய் வாழ்ந்திருந்த காலம் அது.

    அப்போது எகிப்தை சுற்றியிருந்த மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மூஸா நபிகள் கொண்டு வந்த தவ்ராத் வேதத்தையும், ஏக இறைவன் அல்லாஹ் மட்டுமே என்ற கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதோடு மூஸா நபிகளை பின்தொடர்ந்த மக்களுக்கும் தொல்லைகள் கொடுத்தனர்.

    அந்த மக்களின் அட்டூழியத்தை அடக்குவதற்காக அவர்கள் மேல் போர் தொடுக்க வேண்டும் என்ற கட்டளையை மூஸா நபிக்கு இறைவன் பிறப்பித்தான். இதன்படி முதலில் அவர் மிஸ்ரு என்ற நாட்டின் மீது படையெடுத்துச்சென்று போர் புரிந்து வெற்றி கொண்டார். அடுத்து, மூஸா நபிகள் போர் தொடுக்க திட்டமிட்ட நாடுகளில் ஒன்று ‘கன்ஆன்’.

    மூஸா நபிகள் தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தால் தன்னை சிறை பிடிப்பதோடு, தன் நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார் என்று அந்த நாட்டு மன்னன் பயந்தான்.

    இதையடுத்து கன்ஆன் நாட்டு மன்னன் சதி ஆலோசனை செய்தான். அவன் மந்திரிகளை அழைத்துப்பேசினான். அப்போது மந்திரிகள், தங்கள் ஊரில் வசிக்கும் பல்ஆம் இப்னு பஊரா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

    வேதத்தை தெளிவு பெற கற்றறிந்த மார்க்க மேதையாகவும், வழிபாடுகளை தவறாது நிறைவேற்றும் பக்திமானாகவும் பல்ஆம் விளங்கினார். இவரது பக்தியை மெச்சிய அல்லாஹ், அவருக்கு ‘இஸ்முல் அஹ்லம்’ என்ற உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தான்.

    இதன்மூலம், தனக்கு எது தேவை என்றாலும் அதைத்தருமாறு இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தால் போதும், உடனே அவருக்கு அது கிடைத்துவிடும். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்து தான் இஸ்முல் அஹ்லம் என்பது.

    பல்ஆம் இதை பயன்படுத்தி இறைவனிடம் தனது தேவை மட்டுமின்றி பிற மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். இவரது ஆற்றலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த ஊரைச் சுற்றி வாழும் மக்கள் அவரை சந்திக்க திரண்டு வந்தனர். பலர் அங்கேயே தங்கியிருந்து அவரிடம் மார்க்க கல்வியும் கற்று வந்தனர். அந்த அளவிற்கு சிறந்த அறிஞராக அந்தஸ்த்தோடு வாழ்ந்து வந்தார்.

    இத்தனை சிறப்பு மிக்க அவரைப்பற்றி மந்திரிகள், மன்னனிடம் எடுத்துக்கூறினார்கள். மேலும், இஸ்முல் அஹ்லம் என்ற சிறப்புத்தன்மை பல்ஆம்மிடம் உள்ளது. இதனால், மூஸா நபிக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் சொல்ல வேண்டும். அதை ஏற்று அவர் பிரார்த்தனை செய்தால் தான் மூஸா நபியின் படைகளிடம் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்று மந்திரிகள் மன்னனிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மன்னனும் மந்திரிகளும் அறிஞர் பல் ஆம் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம், ‘மூஸா நபி மூலம் தன் ஆட்சிக்கு வர இருக்கிற ஆபத்தை எடுத்துச் சொன்னார்கள். இந்த ஆபத்திலிருந்து கன்ஆன் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மூஸா நபிக்கு எதிராக நீங்கள் இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

    ஆனால், பல்ஆம் இதை ஏற்க மறுத்து இவ்வாறு கூறினார்:

    “மூஸா நபி அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி. அவர் தந்தது தான் தவ்ராத் வேதம். அதனை ஓதி செயல்படுத்தி வந்ததால் தான் எனக்கு இஸ்முல் அஹ்லம் என்ற சக்தியே இறைவனால் கொடுக்கப்பட்டது. அப்படி இருக்க நான் எப்படி ஒரு நபிக்கு எதிராக துஆச் செய்ய முடியும். மேலும் அது எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். எல்லோருக்கும் நன்மை செய்கின்ற நல்ல துஆக்கள் தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். ஜின்கள், சைத்தான் போன்று கெட்ட விஷயங்களில் என்னை ஈடு படுத்திக் கொள்ளவோ, கெடுதல், சூனியம் செய்யவோ மாட்டேன் என்று மறுத்துவிட்டார்”.

    மன்னனும் அவரை தன் வழிக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே குறுக்கு வழியில் அவரை வீழ்த்த திட்டமிட்டனர்.

    பல்ஆம் சிறந்த ஞானியாக இருந்த போதிலும் தனது அழகான மனைவி மீது அவருக்கு மோகம் அதிகமாக இருந்தது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான் மன்னன். இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து தனது திட்டத்தை விவரித்தான். அந்தப்பெண்ணுக்கு, அவர் விரும்பிய அத்தனை பரிசுப் பொருட்களையும் அளவில்லாமல் கொடுத்து ‘பல்ஆமை, மூஸா நபிக்கு எதிராக துஆச் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.

    அந்தப்பெண்ணும், பரிசுப்பொருட்களுக்கு மயங்கி, தன் கணவனின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் உறுதியை குலைத்தாள், மனதை கலைத்தாள். பெண்ணாசையில் மதிமயங்கிய பல்ஆம், மூஸா நபிகளுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய முன்வந்தார்.

    நல்ல செயலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு சக்தியை தவறாக பயன்படுத்த முன்வந்ததால் அது இறைவனுக்கு கோபம் மூட்டியது. உடனே பல்ஆம்முக்கு அளித்த சிறப்புத்தன்மையை அவரிடம் இருந்து இறைவன் அகற்றினான்.

    அது மட்டுமல்லாமல், மூஸா நபிக்கு எதிராக பிரார்த்தனை செய்ய ஒப்புக்கொண்ட அவரது நாக்கு மிக நீளமாக வளர்ந்தது. நாயின் நாக்கு எப்படி நீளமாக வெளியே தொங்கிக்கொண்டு இருக்குமோ, அப்படி அவரது நாக்கு வாய்க்கு வெளியே தொங்கியது. இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

    “(நபியே!) நீங்கள் அவர்களுக்கு (“பல்ஆம் இப்னு பாஊர்” என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக்காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் (பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, சைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்”. (திருக்குர்ஆன் 7:175)

    ‘நாம் எண்ணியிருந்தால் நம் அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் சரீர இச்சையை பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது’ (திருக்குர் ஆன் 7:176).

    இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கோடிட்டு காட்டுவது என்னவென்றால், மார்க்க அறிவில் சிறந்தவர்களும், மேதைகளும் கூட உலக இன்பங்களில் குறிப்பாக மண்ணாசை, பெண்ணாசை போன்றவற்றில் சிக்கி தங்கள் கவனத்தை சிதறடித்தால் நிச்சயமாக அது அவர்களுக்கு வழிகேடாகவே அமையும். தங்களுடைய சிறப்பு தன்மையை, ஞானத்தை, காத்துக்கொள்ள வேண்டும் என்றால் சிற்றின்பம் என்ற சிந்தனையைக் களைந்து மிக கவனத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றிகரமான வாழ்க்கை இவ்வுலகிலும், மறுவுலகிலும் கிடைக்கும்.

    உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.
    உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.
    இஸ்லாம் கூறும் நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். சக மனிதர்கள் நம் உறவினர்களாக இருக்கலாம் அல்லது அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம் செய்பவர்களாகவோ, அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    ‘உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை, மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றதும், ‘உங்களில் நற்குணமுடையவரே’ என்று அருளினார்கள்.

    ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது’ என்றும் பெருமான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    பிறருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, இன்முகத்துடன் இருப்பது, அடுத்தவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பது, கோபம் வரும் பொழுது அதை அடக்குதல் என்று நற்குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    ‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    ‘ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு, அறிவுரை வழங்கும் பொழுது, உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு, இவையே நற்குணங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ‘இன்னும் இரவெல்லாம் நின்று வணங்குபவர்களுக்கும், பகலெல்லாம் நோன்பு வைத்து வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்து இப்படிப்பட்ட அழகிய நற்குணங்களைப் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்’ என்றும் மொழிந்துள்ளார்கள்.

    ‘எந்தக் காரணமாக இருந்தாலும் மற்றவர்களுடனான நம் உறவைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது’ என்பதை இறைவன் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள்.

    இன்று எத்தனையோ பேர் பெரிதாக எந்தக் காரணமும் இன்றி உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்ட பிணக்கு காரணமாக, அவர்களைப் பிரிந்து வாழ்வது மிகவும் வருத்தம் தரும் விஷயமாகும். இன்னும் உடன்பிறப்புகளிடம் சண்டை போட்டு எதிர் எதிரே சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள் போன்று பொது இடங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நடந்து கொள்கிறார்கள்.

    ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ‘ஸலாம்’ கூட சொல்வதில்லை. ‘தான்’ என்னும் அகங்காரம் மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இதற்குக் காரணம்.

    நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள், இரவில் மக்கள் உறங்கும்பொழுது நீங்கள் எழுந்து தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார்கள்.

    உறவினர்களுள் வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் எங்கே நம்மிடம் பண உதவி கேட்டு விடுவார்களோ என்று எண்ணி ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை மிகவும் மோசமானது. விருந்து, உபசாரங்களில் கூட வறிய நிலையில் உள்ள உறவினர்களைத் தவிர்த்து, செல்வ நிலையில் உள்ள உறவினர்கள் அழைக்கப்படும் வழக்கத்தைக் காண்கிறோம்.

    நற்குணம் உடையவர்களே, சக மனிதர்களை பாரபட்சமின்றி நடத்துவர். செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் வறுமையில் வாடும் உறவினர்களுக்கு, தொழில் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்குவதற்கு உதவி செய்தால் அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்து தங்களைப் போன்றவர்களுக்கும் உதவும் நிலை ஏற்படும்.

    நம்முடன் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரிபவர்களுடன், அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி வாதம் செய்வது அல்லது தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    அது போலவே மற்றவர்கள் பேசும் பொழுது ஆர்வத்துடன் கவனிப்பதுடன், அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் ஆமோதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் வாதம் செய்வதால் நம்முடன் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். நம்முடன் பேசுவதையே குறைத்தும் கொள்ளலாம்.

    அவ்வாறு இல்லாமல், பிற மனிதர்களுடனான நட்பை நாம் மேம்படுத்திக் கொள்வதால், நம்மை நாடி வரும் மனிதர்களின் முகத்தில் மலர்ச்சியும், நிம்மதியும் தெரியும். கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வையும் சக மனிதர்களை நம்மை விட்டும் விலக்கி விடும்.

    நம்முடைய அருகாமை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் விதத்தில் நம்முடைய நடைமுறைகளை மாற்றுதல், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மைகளை அள்ளித் தரும். சக மனிதர்களிடம் நம்முடைய இனிமையான வார்த்தைகள் நரகத்தை விட்டும் நம்மைப் பாதுகாக்கும். இன்னும் நல்ல வார்த்தைகள் தர்மம் செய்வதற்கு சமம்.

    ‘அண்டை வீட்டினர் பசியோடு இருக்கும் பொழுது யார் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறாரோ அவர் இறை நம்பிக்கை உடையவராக இருக்க மாட்டார் என்றும், அண்டை வீட்டினரை நிம்மதியற்று இருக்கச் செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    அதுபோலவே உங்களுடன் பயணம் செய்பவர்களுடன் அன்புடன் உரையாடுங்கள், உணவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.

    இப்படிப்பட்ட பண்புகள் சக மனிதர்களை உங்களின் பக்கம் ஈர்க்கும். அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு பெறுவதால் உங்களின் மீதும் அவர்கள் அன்பு கொள்வார்கள். இதனால் மற்ற மக்களுடனான சகோதரத்துவமும், உறவும் பலப்படும். இன்ஷா அல்லாஹ் இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்பொழுது நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84
    நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.
    நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும். இதையே திருக்குர்ஆன் (28:77) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’.

    வாழ்க்கையில் நாம் செய்யும் எந்த ஒரு சிறிய உபகாரத்தையும், சாதாரணமாக எடை போடாமல் பெரும் நன்மை தரும் காரியமாக புரிந்து கொண்டு, முடிந்தளவு உபகாரம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரமாவது செய்யாமலிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    ‘உபகாரம் என்றால் என்ன?’

    உபகாரம் என்பது நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மையைச் செய்தல். நன்மையான காரியங்கள் அனைத்தும் உபகாரமே.

    உபகாரம் இரு வகைப்படும். அதில் ஒன்று, ‘நமக்கு நாமே செய்யும் உபகாரம்’. நம் சொல், செயல் மற்றும் வணக்க வழிபாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள் இவைகளை நல்லவிதமாக செயல்படுத்துதல். மேலும் நம் உயிர்க்கும், உடலுக்கும் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் மிகச்சரியாகச் செய்தல்.

    அடுத்தது, ‘நாம் பிறருக்குச் செய்யும் உபகாரம்’. நாம் பிறர் நலன்களை பேணி, பிறரிடம் நல்லவிதமாக நடந்து கொள்வதும், அவர்களுக்கு செய்யவேண்டிய நன்மையான அனைத்து காரியங்களை செய்வதும் ஆகும்.

    உபகாரங்கள் எவை?

    உபகாரம் என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கியது. பொருளால் மட்டும்தான் உபகாரம் செய்ய முடியும் என்பதில்லை. பாதை தெரியாதவருக்கு சரியான பாதையைக் காட்டுவது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது, நன்மையை ஏவி தீமையை தடுப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பிறரின் இன்ப துன்பங்களிலும், லாப நஷ்டங்களிலும் பங்கு கொள்வது.

    பசித்தவனின் பசியை போக்குவது, தாகித்தவனின் தாகத்தை தீர்ப்பது, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவிப்பது, கடனாளியின் கடனை தள்ளுபடி செய்வது, அல்லது கடனின் தவணையை நீட்டுவது, பெற்றோருக்கும், ஊனமுற்றோருக்கும் உதவி செய்வது, வயதானவர்களுக்கு ஒத்தாசை செய்வது, சிறியவர்களிடம் இரக்கம் காட்டுவது, எதிரியை மன்னிப்பது, இன்னும் இதுபோன்ற நன்மையான காரியங்கள் அனைத்தும் விலை மதிக்க முடியாத உபகாரங்களாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:-

    ‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவைகளை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்கள் வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: திர்மிதி)

    பெற்றோருக்கு செய்யும் உபகாரம்

    ‘பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்’ என்பது திருக்குர்ஆன் (2:83) கட்டளையாகும்.

    ‘மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பயணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்’ என்றும் திருக்குர்ஆன் (4:36) குறிப்பிடுகிறது.

    ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, மனித நேயம். பிள்ளைகள் பெற்றோருக்கும், செல்வந்தர்கள் ஏழைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், கணவன்-மனைவிக்கும், மனைவி-கணவனுக்கும், உபகாரம் செய்து வாழவேண்டும்.

    உபகாரம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு, இவைகள் யாவும் தடை கற்களாக இருக்கக்கூடாது. மனிதநேயம் அடிப்படையில் தெரிந்தவர், தெரியாதவர், அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர், நண்பன், எதிரி, அண்ணன், தம்பி இப்படி பாகுபாடில்லாமல் உபகாரம் செய்து வாழவேண்டும்.

    அநியாயம் செய்தவனுக்கும் உபகாரம் செய்

    ‘உனக்கு அநியாயம் செய்தவனுக்கும் உதவி செய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து ஹூதைபா (ரலி) அறிவிப்பதாவது:-

    “நீங்கள் மற்றவர்களின் நடைமுறையைப் பார்த்து அவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். ‘மக்கள் நமக்கு நல்லது செய்தால், நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். மக்கள் நமக்கு அநியாயம் செய்தால், நாமும் அவர்களுக்கு அநியாயம் செய்வோம்’ என்று சொல்லாதீர்கள். மக்கள் உங்களுக்கு நல்லது செய்தால், நீங்களும் நல்லது செய்வது, மக்கள் தவறான முறையில் நடந்து கொண்டாலும், நீங்கள் அநியாயம் செய்வதில்லை என்ற குணத்தின் மீது உங்களை நீங்களே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: திர்மிதி)

    உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்ட போதும், நபிகளாரை இறை மறுப்பாளர்கள் காயப்படுத்திய போதும், அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி தோழர்களில் ஒருவர் நபிகளாரிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது நபிகளார் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: ‘இறைவா, என் சமுதாயத்தை மன்னித்து விடு. அவர்கள் அறியாத மக்கள்’.

    அநியாயக்காரர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உபகாரம் செய்தது வரலாற்றில் தங்க எழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    உபகாரம் செய்தவனுக்கு பதில் உபகாரம் செய்

    ‘நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (திருக்குர்ஆன் : 55:60)

    நமக்கு உபகாரம் செய்தவனுக்கு நாமும் பதில் உபகாரம் செய்வது மிக நன்று.

    ஒரு நாள் உமர் பின் அப்துல் அஜீஸ் தன் பணிப்பெண்ணிடம் ‘விசிறி எடுத்து வீசு நான் தூங்கப் போகிறேன்’ என்றார். அவள் வீசியதும் உமர்பின் அப்துல் அஜீஸ் தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுக்கும் தூக்கம் வரவே அவளும் தூங்கிவிட்டாள்.

    உமர் பின் அப்துல் அஜீஸ் விழித்த பொழுது தனது பணிப்பெண் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டார். வெப்பம் அதிகமாக இருந்ததால் அருகில் கிடந்த விசிறியை எடுத்து அந்தப்பெண்ணுக்கு வீசினார். தன் மீது திடீரென்று காற்று வீசுவதை உணர்ந்த பணிப்பெண் விழித்த பொழுது, எஜமானர் தனக்கு வீசிக் கொண்டிருந்ததை கண்டதும் பயத்தில் நடுங்கினாள்.

    உடனே உமர்பின் அப்துல் அஜீஸ் ‘நீயும் என்னைப் போன்ற மனித இனம் தான். என்னை தாக்கியது போன்றே உன்னையும் வெப்பம் தாக்கியது. எனவே நீ எனக்கு வீசியது போன்றே நானும் உனக்கு வீச பிரியப்பட்டேன்’ என்றார்.

    இங்கே பணிப்பெண்ணுக்கு உபகாரம் செய்வதற்கு எஜமான் என்ற பதவி தடையாக அமையவில்லை. எனவே முதலாளிக்கு தொழிலாளி உழைத்துக் கொடுத்து உபகாரம் செய்வது போல, முதலாளியும் தொழிலாளியின் நலன்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டு உபகாரம் புரிய வேண்டும். முதலாளி தொழிலாளி என்ற வித்தியாசம் பெயரளவில் தான் இருக்கவேண்டுமே தவிர மனதளவில் இருக்கக்கூடாது.

    ‘உபகாரம் செய்ததை சொல்லிக்காட்டாதே’

    ‘நம்பிக்கையாளர்களே, இறைவனின் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும், உங்கள் தர்மங்களை பாழாக்கிவிடாதீர்கள்’ (திருக்குர்ஆன் 2:264)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:

    ‘மூன்று மனிதர்களிடம் இறைவன் பேசவும் மாட்டான், இன்னும் இறுதிநாளில் அவன் அவர்களை கருணையுடன் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு (திருக்குர்ஆன் 3:77) என்ற வசனத்தை நபி (ஸல்) மூன்று முறை ஓதினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே, நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?’ என அபூதர் (ரலி) கேட்டார்கள். ‘தமது கீழ் ஆடையைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்து விட்டுச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்:முஸ்லிம்)

    அன்பர்களே, நண்பர்களே, உபகாரம் செய்து, அதை சொல்லிக்காட்டி, செய்த உபகாரத்தை பாழ்படுத்துவதை விட்டுவிட்டு, உபகாரமே செய்யாமல் இருங்கள். அல்லது உபகாரம் செய்துவிட்டு சொல்லிக்காட்டாமல் யாரையும் புண்படுத்தாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    ×