search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
    • சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும்.

    ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

    மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

    இத்தகைய சிறப்புடைய மூன்றாம் பிறை சந்திர தரிசன தினமாக இன்று (வியாழக்கிழமை) தினம் அமைந்துள்ளது. இந்த மூன்றாம் பிறை சந்திர தரிசனம் தொடர்பாக ஒரு வரலாறு உள்ளது.

    ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து கேலி செய்தான்.

    இதனால் கோபம் அடைந்த விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக ஈசன் துணையுடன் தன் பழைய அழகை பெற்றான்.

    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

    சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12-ம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

    சந்திரனோடு சர்ப்பக் கிரகம் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவ ர்கள் சந்திர வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

    ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். அன்று மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.

    சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும். கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும். நாளை வரும் பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எனவே சிவனை தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெற நாளை மறக்காமல் சந்திர தரிசனம் செய்யுங்கள்.

    இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.

    சூரியனிடமும் சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெறுவது போன்றதாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார்.

    சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள். எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள். ஆயுள் அதி கரிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

    சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

    மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

    • ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
    • அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள்.

    ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முதலாக வருவது வசந்தம் என்னும் ருது. ருதூநாம் குஸுமாகர: ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். வசந்த ருது ஆரம்பமாகும் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் 9 ராத்திரிகள் அம்பிகை ஆராதிக்க சிறந்த காலம்.

    இதையே வசந்த நவராத்திரி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1) தேவி நவராத்திரி, 2) வாராகி நவராத்திரி, 3) சரந் நவராத்திரி, 4) சியாமளா நவராத்திரி என்பதாக மொத்தம் நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்பது ஸ்ரீவித்யா சாஸ்திரம்.

    அவற்றில் நாம் ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் ஸ்ரீ வித்யா மார்கத்தில் ஈடுபட்டு சத்குரு மூலம் மந்திர உபதேசம்- தீட்சை பெற்று நவாவரணம் போன்ற விசேஷ பூஜைகளைச் செய்பவர்கள் இந்த 4 நவராத்திரிகளையுமே அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். சைத்ர மாதம் சுக்ல பட்ச பிரதமையான இன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாட்களிலும் தினசரி தேவியை விசேஷமாகப் பூஜைகள் செய்து ஸ்தோத்ர பாராயணம் செய்து கன்னிகா பூஜை கள் செய்து கொண்டாடலாம். மேலும் நவாவரண பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், சப்த சதீ பாராயணம், சுவாசிநீ பூஜை, சண்டீ ஹோமம் போன்றவற்றால் அம்மனை ஆராதிக்கலாம்.

    திருப்பாவாடை கல்யாண உற்சவம்

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் தேவஸ்தானத்தின் 36-ம் ஆண்டு பங்குனி ரேவதி திருமஞ்சன திருப்பாவாடை கல்யாணம் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு- 9442313789.

    • பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது.
    • சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி.

    மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

    மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள்.

    பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்!

    அரங்கனை விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதுமட்டுமா? அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கியதும் இந்த பங்குனியில்தான் என்கிறது ஸ்தல புராணம்.

    சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும்.

    பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்!

    • இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும்.
    • இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும்.

    திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த திதி தினத்தை பிரதோஷ தினம் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் வரும். பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும்.

    இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும். இன்று பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்துக்கு மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம் என்று பெயர். இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும். ஆயுளை நீட்டிக்கும்.

    இன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும். நோயால் அவதிப்படுபவர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மாலையில் பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும்.

    கடன் தொல்லைகள் நீங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய வழிபாடுகள் மூலம் சூரியனின் அருளையும் பெற முடியும்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து

    பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.

    பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவர் என்பது ஐதீகம். நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    • முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது.
    • ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    ஒரு வேளையோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ, அவரவர்களின் சக்திக்கு ஏற்ப உணவு, நீர் உட்கொள்ளாமல் இருப்பதை 'உபவாசம்' என்பார்கள். ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது. இப்படி உபவாசம் இருப்பதில் 27 வகையான உபவாசம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.

    * உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதனை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள்.

    * தேன் அல்லது இளநீர். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

    * பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * கடுமையான விரதங்களுக்கு, 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து, நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை நாட்கள் வரையான விரதத்தில், தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு, வளர்பிறையில் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்க வேண்டும். மீண்டும் தேய்பிறையில ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் வில்வ இலையையும், நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

    * முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

    * மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை இல்லாத உணவுகளை சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    இந்த உபவாசங்களில், எது உங்கள் உடல்நலத்திற்கும், சூழலுக்கும் தகுந்ததோ, அந்த உபவாசத்தைத் தேர்வு செய்து விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல், நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

    • இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்', 'காமாட்சி விரதம்' என்றும் அழைப்பார்கள்.
    • இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

    இன்று (புதன்கிழமை) பெண்கள் காரடையான் நோன்பு இருக்க வேண்டிய தினமாகும். காமாட்சி அம்மனுக்குதான் பெண்கள் காரடையான் நோன்பு இருப்பர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொள்வார்கள். சாவித்திரி விரதம், கவுரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு உள்ளிட்ட பல பெயர்களால் காரடை யான் நோன்பை குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.

    இந்த நோன்பை பற்றி சொன்னாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவுக்கு வரும். இளவரசி சாவித்திரி, அண்டை தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளில் சத்யவானின் பெற்றோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. உடல் நலம் மட்டுமில்லாமல், அவர்களின் தேசத்தையும் இழந்துவிட்டார்கள். இதனால் காட்டில் தன் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தாள்.

    அப்போது சீக்கிரமே தன் கணவரும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொண்டாள். தன் கணவர் உயிரை காப்பாற்ற காமாட்சி அம்மனை நினைந்து மனமுருகி விரதம் இருந்தாள் சாவித்திரி. காட்டில் கிடைத்த பொருள்களால் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபட்டு வந்தாள். சத்யவான் உயிரிழக்கும் நாள் நெருங்கியது. அன்றும் சாவித்திரி வழிபாடு செய்தாள். எம தர்மராஜா சத்யவானின் உயிரை எடுத்துவிட்டு புறப்பட்டார். அவரை தடுத்து கணவரின் உயிரை திருப்பித் தர எமனிடம் மண்டியிட்டு மன்றாடினாள்.

    சாவித்திரி இப்படி மன்றாடியது எமனை திடுக்கிட செய்தது. தான் ஒரு சாதாரண மானிட பெண் கண்ணுக்கு எப்படி தெரிகிறோம்? என எமன் குழம்பினார். இந்த பெண் தெய்வசக்தி படைத்தவளோ என எண்ணி, அவளுக்கு பதில் உரைத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் வந்தது. எமன் சத்யவானின் உயிரை கையில் கொண்டு எமலோகம் சென்றார். உடன் சாவித்திரி துரத்தி சென்றாள். ஒரு மானிட பெண் தன் பூத உடலுடன் எமலோகம் வந்ததை கண்டு மீண்டும் எமன் அதிசயித்து போனார்.

    ஆனாலும் சத்யவானின் உயிரை கொடுக்க மாட்டேன் என எமன் பிடிவாதம் செய்தார். ஆனால் சாவித்திரி மனம் தளரவில்லை. அப்போது சத்யவானின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என எமன் கேட்க, சாவித்திரி, 'பதிவிரதை நான். எனக்கு புத்திரப்பாக்கியம் வேண்டும். மாமனார், மாமியாருக்கு பார்வைத்திறன், எங்கள் தேசம் மீண்டும் எங்களுக்கே வேண்டும்' என பல வரங்களை சாவித்திரி கேட்டாள்.

    அனைத்தையும் தருவதாக கூறி நகர்ந்த எமனை மீண்டும் சாவித்திரி தடுக்க, எமன் குழப்பமடைந்தார். பாதி வரம் தான் தந்ததாக சாவித்திரி கூற, அப்போது தான் எமனுக்கு நினைவுக்கு வருகிறது சாவித்திரி பதிவிரதை என்று சொல்லி புத்திரபாக்கியம் கேட்டது. கணவனின் உயிரை மீட்டு கொண்டு வர சாவித்திரி கேட்ட வரம் அவளின் மதிநுட்பத்தின் சான்று. அவளுக்கு எமனிடன் போய் பேச துணிவு கொடுத்தது தெய்வசக்தி. இதை வியந்த எமன் சத்யவானின் உயிரை திரும்ப கொடுத்தார். கணவரின் உயிரை எமனிடம் போராடி சாவித்திரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறார்கள்.

    மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) காரடையான் நோன்பு வருகிறது. நாளை காலை 6.29 மணி முதல் 6.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெண்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்கவேண்டும். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமண மாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பு இருப்பார்கள்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் வையுங்கள். அவர்களுக்கு பூச்சூட்டி வழிபட வேண்டும். காலை முதலாகவே நோன்பை உபவாசம் இருந்து தொடங்குவது நல்லது.

    நம் வீட்டில் உள்ள அம்பாள் படத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். காமாட்சி விருத்தம் பாடவேண்டும். மஞ்சள் சரடில் 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூ வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை அம்பாள் படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர் அக்கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை கணவர் வெளியூரில் இருந்தாலோ, விரதம் இருப்பவர் திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் இருக்கும் மூத்தோரிடம் ஆசி பெற்று அந்த கயிரை கழுத்திலோ, கையிலோ நீங்களே கட்டிக் கொள்ளலாம்.

    நாளை காரடையான் நோன்பு சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக்கொள்ள அதிகாலை 5.10 மணி முதல் 6.10 மணி நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நோன்பு சரடு கட்டிக் கொண்டால் பெண்கள் நினைத்தது நடக்கும்.

    அப்போது பெண்கள், "தேவியே, மஞ்சளுடன் கூடிய இந்த நோன்பு கயிற்றை நான் கட்டிக்கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்" என்று வேண்டி கொள்ள வேண்டும்.

    விசேஷமான இந்த நாளில் தாலி சரடும் கூட மாற்றிக் கொள்ளலாம். இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 3 நாட்கள் அணிந்து விட்டும் கழற்றி விடலாம்.

    கார அடை, இனிப்பு அடை ஆகியவை அம்மனுக்கு படைக்கலாம். உருகாத வெண்ணைய்யை காமாட்சி அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    • மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.
    • உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன.

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்று, இக்கோவிலில் சுதையினாலான சுயம்புவடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து, இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு ஆகும்.

    அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால், அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சன் யாகத்துக்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

    மும்மூர்த்திகளை நோக்கியும், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இந்த விரதம் கடைபிடிக்கப்படும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    • இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும்
    • அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    பக்தர்களுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதத்தை இன்று முதல் தொடங்கினார்.

    சமயபுரம் மாரியம்மன், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், தன்னை நாடிவரும் பக்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறவும் இந்த விரதம் மேற்கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த விரதத்தின் போது அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், கரும்புசாறு, இளநீர் ஆகியவை நைவேத்தியமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பக்தர்களுக்காக விரதம் மேற்கொள்ளும் போது அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து சாத்துவது வழக்கம்.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

    அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.

    மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்று கள் உள்ளது. தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது.

    இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக் காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும்.

    • மதிக்குள் மதியாகி, மதியில் ஒளி கொடுத்தவள் அம்பிகை பராசக்தி.
    • சாவித்திரியானவள், அம்பிகைக்குத் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் செய்த நோன்பு இது.

    சாவித்திரி என்னும் பெண்ணின் கதை நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோமா?

    மத்ர தேசத்து மன்னர் அச்வபதி. இவருடைய மனைவி மாலதி (மாளவி என்றும் சொல்வதுண்டு). மிகச் சிறந்த தர்மவான்களாகத் திகழ்ந்த இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. சாவித்திரி என்னும் பிரம்மவித்யா தேவியை வழிபட்டால், மகப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கையில், இருவருமே சாவித்திரி ஆராதனை செய்தனர். அச்வபதிக்குக் காட்சி கொடுத்த சாவித்திரி மாதா, 'அரசே, தாங்களோ மகன் வேண்டுமென்று யாசிக்கிறீர்கள்; தங்கள் மனைவியோ, பெண் குழந்தை வேண்டுமென்று பூஜிக்கிறாள். இருவரின் ஆசையும் நிறைவேறும்' என்று கூறிவிட்டுச் சென்றாள். சில நாட்களிலேயே மாலதி கருவுற, குறித்த பருவத்தில் பெண் குழந்தையும் பிறந்தது.

    பேரழகு வடிவமாகத் திகழ்ந்த மகளுக்கு சாவித்திரி மாதாவின் பெயரையே சூட்டினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சாவித்திரி வளர்ந்தாள். கல்வி வேள்விகளில் சிறந்தவளாக, புலமை மிக்கவளாக, அறச் சிந்தை கொண்டவளாக, அப்பழுக்கு சொல்லமுடியாத இளவரசியாக வளர்ந்தாள். தூய்மையும் பேரழகும் பேராற்றலும் வாய்ந்த இவளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் வந்தது. இவளை நெருங்கவோ அணுகவோ அரசர்களும் இளவரசர்களும் தயங்கினர். இவளின் அறிவாற்றலே அனைவரையும் அணுகவிடாமல் தடுத்தது. மகளின் திருமணத்திற்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்த தந்தை, மகளின் திறமைமீது நம்பிக்கை வைத்து, இவளையே மாப்பிள்ளை தேடிக் கொள்ளவும் சொல்லிவிட்டார். தோழிமார்களுடன் அவ்வப்போது கானகப் பகுதிகளுக்குச் செல்லும் வழக்கம் உடைய சாவித்திரி, காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவனைக் கண்டாள்; காதல் கொண்டாள்.

    அவனையே மணப்பதாகத் தந்தையிடம் தெரிவித்தாள். அந்த இளைஞன் யார் என்பதை அறியச் செய்தபோது, மகிழ்ச்சியுடன் கூடிய அதிர்ச்சிதான் அச்வபதிக்குக் காத்திருந்தது. சாளுவ நாட்டு அரசர் தியுமத்சேனரின் மகன் தான் அந்த இளைஞன்; சத்தியவான் என்று பெயர். பகைவர்களின் வஞ்சத்தால் நாட்டைவிட்டு விரட்டப்பட்டு, இடையில் கண் பார்வையும் இழந்துவிட்ட பெற்றோர்களைப் பராமரித்துக் கொண்டு கானகத்தில் வசித்தவன்.

    நல்லவன்; பெற்றோரைப் பாதுகாக்கும் அறிவினன்; ஆடம்பரங்கள் இல்லாத அடக்க சீலன் – இவற்றையெல்லாம் அறிந்துகொண்ட அச்வபதியும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

    திரிலோக சஞ்சாரியான நாரதர், திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மத்ர நாட்டை அடைந்தார். எல்லோரையும் ஆசீர்வதித்தவர், அச்வபதியைத் தனிமையில் அழைத்தார். எந்த நாளில் சாவித்திரியைத் தேர்ந்தெடுத்தாளோ, அந்த நாளிலிருந்து சரியாக ஓராண்டில் மறையக்கூடிய விதியைச் சத்தியவான் கொண்டிருக்கிறான் என்னும் உண்மையைத் தெரிவித்தார். விதி வலிதாயிற்றே!

    அச்வபதியும் மாலதியும் கலங்க, சாவித்திரியோ தன்னுடைய முடிவில் உறுதியாக நின்றாள். திருமணமான மறுநாள்; தந்தையின் ராஜபோகத்தில் திளைக்காமல், கணவனோடும் மாமனார்-மாமியாரோடும் கானகம் சென்றாள் சாவித்திரி. கானக வாழ்க்கையைக் களிப்போடு ஏற்றாள்.

    காலச் சக்கரம் சுழன்றது. சத்தியவானின் விதி முடிகிற தறுவாய் நெருங்கியது. கடைசி மூன்று நாட்கள், உண்ணாமல் உபவாசமிருந்து, உறங்காமலும் அம்பிகையை வழிபட்டு நோன்பு நோற்றாள். காரணத்தைக் கணவனிடமும் கூறவில்லை. ஏதோ விரதம் என்பதாக மட்டுமே சொன்னாள்.

    குறித்த நாளும் வந்தது. சத்தியவான் மரம் வெட்டுவதற்காகப் புறப்பட்டான். ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு, சாவித்திரி தானும் உடன் சென்றாள். மரம் வெட்டிக் கொண்டிருந்த சத்தியவான், திடுமென்று கீழே சரிய, மடியில் தாங்கினாள். பாசக் கயிற்றோடு யமன் வருவதைக் கண்டவள், சத்தியவான் உயிரை இழுத்துக் கொண்டு யமன் நடந்த போது, தானும் உடன் நடந்தாள். யாரென்று யமன் வினவ, ஏழடி உடன் நடந்துவிட்டதால், தான் யமனுக்கு நண்பர் ஆகிவிட்டதாக உணர்த்தி, உரையாடலைத் தொடங்கினாள்.

    தன்னுடைய வாக்குச் சாதுர்யத்தால், யமனிடமே உபதேசம் கேட்டாள். அம்பிகையைத் துதித்துக் கொண்டே உரையாடலில் ஈடுபட்டவள், தன்னுடைய வாக்கு வன்மையால், மூன்று வரங்களையும் சம்பாதித்துக் கொண்டாள். முதல் வரத்தால், மாமனாருக்குக் கண் பார்வையையும் இழந்த நாட்டின் மீட்சியையும் பெற்றாள். இரண்டாவது வரத்தால், தன்னுடைய தந்தைக்கு நூறு புதல்வர்களைப் பெற்றாள். கடைசி வரத்தால், தனக்கு நூறு மகன்களைக் கேட்டாள். யமன் விழித்துக் கொண்டான். இந்த வரம், சத்தியவானின் உயிரைக் கொடுத்துவிடும் என்பதால் தயங்கினான். இருந்தாலும் புத்திசாலிப் பெண்ணின் பொறுமைக்கும் திறமைக்கும் தலை வணங்கி, வரத்தை மாற்றிக் கேட்கச் சொன்னான். சற்றே யோசித்தாள். அம்பிகையை தியானித்தாள். தியுமத்சேனரின் வம்சாவளி, சத்தியவான் வழியாகத் தொடரவேண்டும் என்று வேண்டினாள்.

    'தந்தேன்' என்ற யமன், வார்த்தைகள் வெளியே விழுந்த பின்னர்தான், தான் வெல்லப்பட்டுவிட்டதை உணர்ந்தான். வெட்கப்பட்டான். இருந்தாலும் வாக்கு கொடுத்தது கொடுத்ததுதானே! விதியை சாவித்திரி மதியால் வென்றாள். மதிக்குள் மதியாகி, மதியில் ஒளி கொடுத்தவள் அம்பிகை பராசக்தி.

    சத்தியவானைக் கைகளைப் பற்றிக் கொண்டு சாவித்திரி ஆசிரமம் திரும்பியபோது, பகைவர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள், பெண்ணொருத்தி வந்து அவர்களை விரட்டினாள் (அம்பிகைதான், வேறு யார்?) என்னும் தகவல்களோடு அமைச்சர்களும் வந்தனர்.

    மூன்று நாட்கள் உபவாசம் இருந்திருந்த சாவித்திரி, கார் அரிசியின் மாவை எடுத்து, வெல்லமும் காராமணியும் கலந்து, சின்னச் சின்ன அடைகளாகத் தட்டி, வெந்தெடுத்து, அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்தாள். கார் அரிசி அடை என்பதால், இதற்குக் காரடையான் நோன்பு என்னும் பெயரும் தோன்றியது. வெல்லத்திற்கு மாற்றாக, உப்பு கலந்து உப்படையும் செய்வதுண்டு.

    பங்குனி மாதப் பிறப்பன்று, மாதம் பிறக்கிற தருணத்தில் (அதாவது, மாசியும் பங்குனியும் தொட்டுக் கொள்கிற தருணத்தில்), இந்த நோன்பைக் கடைப்பிடிப்பது வழக்கம். சூரியனுடைய கதிர்கள், பங்குனி மாதத்தில், மீன ராசியில் சஞ்சரிக்கின்றன.

    எனவே, இந்த மாதத்திற்கே மீன மாசம் என்றும் பெயருண்டு. மீனத்திற்குள் பிரவேசிக்கிற தருணம், மீன சங்கராந்தி. சாவித்திரியானவள், அம்பிகைக்குத் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் செய்த நோன்பு இது. மீன சங்கராந்தி நேரத்தில், அம்பிகையை வழிபட்டு, காரடையும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து, பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்துகொள்வார்கள். அம்பிகையின் அருளால் மாங்கல்யம் நிலைக்கும் என்பதே இதன் பொருள். உருகாத வெண்ணெயும் காரடையும் நான் தந்தேன்; ஒரு நாளும் என் கணவனை விட்டுப் பிரியாதிருக்க வரம் தா என்று அன்னையிடம் பிரார்த்திப்பார்கள்.

    அம்பிகையின் அருளால், விதியை மதியால் மாற்றியவள் இல்லையா சாவித்திரி? சாவித்திரியை மையமாக வைத்து, இவள் பெயரிலேயே நெடுங்காப்பியம் ஒன்றை மகான் அரவிந்தர் இயற்றினார். வேத சுழற்சியே சாவித்திரியின் வரலாறு என்னும் கொள்கையில், அடையாள வரைபடம் ஒன்றையும் அரவிந்தர் கொடுத்துள்ளார்.

    ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உயரிய, தூய ஆன்மாவே சத்தியவான். நிரந்தர சத்தியமான இறைமையின் அதிதேவதை சாவித்திரி.

    தூய்மையும் ஒளிர்மையும் கொண்ட ஆன்மா (சத்தியவான்), தெரியாமலும் புரியாமலும் இருளுக்குள்ளும் அறியாமைக் காட்டுக்குள்ளும் சிக்கிவிடுகிறது. காணவேண்டியவற்றைக் காண மறந்து (அல்லது மறுத்து அல்லது மறுக்கும்படி வற்புறுத்தப்பட்டு), வெற்று மினுமினுப்புகளின் வஞ்சத்திற்கு உட்பட்டு, முறையான பார்வையைத் தொலைத்து (பார்வை இழந்த தியுமத்சேனர்), அறியாமைக் கானகத்தில் அலைந்து திரிகிறது. மனக் குதிரையைக் கட்டுப்படுத்தி, தியானம் உள்ளிட்ட ஆன்ம முயற்சிகள் வழியாக ஜீவசக்தியை ஒருமுகப்படுத்தினால் (அச்வபதி; அச்வம்=குதிரை), ஒளிப்பிழப்பின் வடிவாக அம்பிகையே ஆவிர்பவிப்பாள். இவளின் கையைப் பற்றிக் கொண்டு ஆன்மா பயணப்படும்போது, ஆன்மாவைத் தீமையிலிருந்து மேலேற்றி, மரணக் குழியிலிருந்து காப்பாற்றி, தன்னுடனேயே நிலைப்படுத்திக் கொள்வாள்.

    சாவித்திரியின் வரலாற்றை மானுடப் பெண்ணின் கதையாக மகாபாரதம் விவரித்தாலும், அம்பாளின் பேரருளால் சாதித்தவளாகவே ஸ்ரீ தேவி பாகவதம் காட்டுகிறது. அம்பாளை எவ்வாறு வழிபடவேண்டும் என்பதும் சாவித்திரியின் வரலாற்றில் உண்டு.

    காயேன மனசா வாசா யத் பாபம் குரதே நா:

    தத் வத் ஸ்மரண மாத்ரேண பச்மிபூதம் பவிஷ்யதி

    ஆமாம், காயத்தாலும் (உடலால்), மனத்தாலும் (மனசு), வாக்காலும் (வாசா) செய்த பாவங்கள் அனைத்தையும், தன்னை வழிபட்டால், பஸ்மம் ஆக்கிவிடுவாள் அம்பிகை.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    • 9 சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும்.

    மாசிமாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணியகாலத்தில் வரும் இந்த மாசி மாதத்தில் செய்யும் நோன்புகள், வழிபாடுகள் எல்லாம் பலமடங்கு பலன்களை அருளும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரதங்களைக் கடைப்பிடித்தால, ஆண்டுமுழுவதும் விரதங்களை கடைப்பிடித்த நற்பலன் கிடைக்கும். அப்படி இந்த மாதத்தின் இறுதியில் நமக்கு வாய்த்திருக்கிறது, சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

    சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.

    இன்று அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.

    வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

    ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

    • இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும்.
    • சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.

    மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர். கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. இப்படி பூரண சந்திரன் அமையும் நாளே மாசி மாத பவுர்ணமி.

    மாசி மக பௌர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. அன்றைய தினத்தில் மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் மேற்கொள்வதை போன்றே மாசி மாத பௌர்ணமி தினத்தன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும்.

    மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம்.

    இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும். மேலும் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டுள்ளவர்கள் மாசி பௌர்ணமி கிரிவல வழிபாட்டால் அதிகப் பலன்களை பெறுவார்கள். கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்பை பெற்று இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும். அதிகளவு கடன் வாங்கி அதை திருப்பிப் செலுத்த முடியாமல் திணறுபவர்கள் மாசி பௌர்ணமி கிரிவலம் சென்று சிவனை வழிபடுவதன் மூலம் விரைவில் தீரும்.

    மாசி மாதம் வரும் பௌர்ணமியில் விரதம் இருந்து அம்பிகையைத் துதித்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகி ஓடிவிடும். இன்பம் நிலைத்திருக்கும். இந்நாளில் சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைத்து ஈசனையும் வழிபடுவது மேலும் சிறப்பானது. சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.

    ×