search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98212"

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.
    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதில் பட்டுப்புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. சாதாரண உடையில் வருபவர்கள் கூட பட்டுச்சேலை உடுத்தி வந்தால் தனி மிடுக்குடன் தோற்றமளிப்பார்கள். தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது. ஜவுளி கடைகளில் திருபுவனம் பட்டுப்புடவைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதற்கு காரணம், அதன் விசிறி மடிப்பு. அதுவே திருபுவனம் பட்டுக்கு கூடுதல் பெருமையும் சேர்க்கிறது. தற்போது திருபுவனம் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

    திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.

    சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.


    இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.

    பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
    இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

    இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

    தோத்தி சல்வார்:-
    பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

    பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

    பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.



    ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

    பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

    ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

    தெலுங்கானா மாநிலத்தில் 3 ரூபாய்க்கு விற்ற புடவையை வாங்க வந்த பெண்களுக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். #warangal #sarees #shoppingmall
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

    இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதல் அந்த கடையில் பெண்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே காலை 8 மணிக்கு துணிக்கடை திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற பெண்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.

    பெண்கள் ஒருவருக் கொருவர் அடிதடியிலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அந்த துணிக்கடையை போலீசார் மூடினர். இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். #warangal #sarees #shoppingmall
    போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.
    இக்கத் நெசவு என்பது பழங்காலம் முதல் இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள கலைநயம் கொண்ட வடிவமைப்பு. இந்த நெசவின் மூலம் கிடைக்கும் வண்ண டிசைன் லேசாக அலைந்தது போன்ற வடிவத்தில் அழகிய வண்ணக் கலவைகளில் வித்தியாசமாக காட்சியளிக்கும். போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.

    இக்கத் நெய்யப்படும் முறை

    இக்கத் நெசவு முறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்டதாகும். துணியை நெய்துவிட்டு வர்ணம் தேய்க்கும் வழக்கமான முறையில் இது நெய்யப்படுவது இல்லை. அதேபோல் நூல்கண்டுகளை முழுமையாக வர்ணம் தோய்த்து இரண்டு பல வர்ண நூல்களை கொண்டு நெய்யும் முறையிலும் இது நெய்யப்படுவது இல்லை. நூல்கண்டுகளில் டிசைன்களின் வர்ணங்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சாயம் தோய்க்கப்படுகிறது. இப்படி டிசைனிற்கு ஏற்ப சாயம் தோய்க்கப்பட்டு நூல் கண்டுகள் தோய்க்கப்பட்டு காய வைக்கப்பட்ட பின் தறியில் கோர்க்கப்பட்டு நெய்யப்படுகிறது. துணியை நெய்து முடிக்கும்போதுதான் அந்த டிசைனே வெளிப்படும். நூலை பாவு மற்றும் குறுக்கிழையில் சரியாக பொருத்துவதும் நிறங்களை அதற்கான இடங்களில் துல்லியமாக வைப்பதும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதில் சிறுபிழை ஏற்பட்டால் டிசைன் சரியாக வராது.



    இக்கத் நெய்தலின் வகைகள்

    பாவு நூலில் மட்டும் சாயம் பூசப்பட்டு, குறுக்கிழை ஒரே நிறத்தில் இருக்கும் படியாக வைத்து நெய்வது ஒரு வகையாகும். இதன் டிசைன் அதிகமாக அலைந்ததுபோல், வர்ணங்கள் சற்று மங்கலாகவும் தோற்றமளிக்கும். பாவு மற்றும் குறுக்கிழை இரண்டிலுமே ஆங்காங்கு வர்ணசாயம் தோய்த்து, காயவைத்து பின் நெய்யப்படும் புடவை இரட்டை இக்கத் நெய்தல் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் நெய்யப்படும் வடிவங்கள் நிறுத்தமாகவும், நிறங்கள் சற்றே அடர்த்தியாகவும் இருக்கும். போச்சம்பள்ளி மற்றும் புட்டபக்கா புடவைகளில் இந்த வகை இக்கத் நெய்தல் தான் பயன்படுத்தப்படுகிறது.

    பாவு ஒரே நிறத்தில் வைத்துக்கொண்டு குறுக்கிழையை மட்டும் இக்கத் முறையில் சாயம் தோய்த்து நெய்யப்படும் ஒரு வகையும் உண்டு. இது சற்றே கடினமாக இருக்கும். குறுக்கிழையில் உள்ள சாய வேறுபாடே டிசைனை நிர்ணயம் செய்கிறது. எனவே அவ்வப்போது தறியை சரிசெய்து டிசைனை கொண்டு வரவேண்டும்.

    புடவை வாங்கினோம், அழகாய் இருக்கிறது, உடுத்திக் கொண்டோம் என்றில்லாமல் இம்மாதிரி கைத்தறியில் உள்ள மனித உழைப்பையும், ரசனையையும், தொழில்நுட்ப அறிவையும் உணர்ந்து கொள்ளும்போது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிறது. 
    ×