search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசா"

    சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது.

    அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.

    டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 2024-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

    இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்குவதாக ஒப்பந்ததில் முடிவு செய்தனர்.

    நாசா

    விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளன. எனவே இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்...விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

    நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் பரப்பில் களிமண் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.
    செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம், கடந்த மே 12ஆம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டுள்ளது. 

    இதை செல்ஃபி படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. அது துளையிட்ட இடங்களில் களிமண் கனிமங்கள் அதிக அளவில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். அந்த வகையில், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கலாம். இதனை உறுதி செய்வதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது.
    சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சந்திரன் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.

    அவை சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதில் சந்திரனின் மேற்பரப்பு திராட்சை பழம் போன்று சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது.

    அதை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



    சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறினார்.
    செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார். #NASA #Mars
    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

    அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் முதலில் ஆய்வு நடத்தி வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில் நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செவ்வாய் கிரக திட்டம் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளோம். அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார்” என்று கூறினார்.

    இது தொடர்பான மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.

    இந்த 2 பெண்களில் ஒருவர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NASA #Mars
    சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. #Nasa
    வாஷிங்டன்:

    சந்திரனில் சீனா தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது. சந்திரனின் இருட்டு பகுதியில் ஆராய்ச்சி செய்ய ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் சந்திரனில் மீண்டும் தனது ஆய்வை தொடர ஆர்வமாக உள்ளது. அதை சீனாவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் சமீபத்தில் ‘நாசா’ நடத்தியது.



    அப்போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்கு முன்னோடியாக அடுத்த ஆண்டு அதாவது 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரனுக்கு ‘ரோபோ’வை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. #NASA
    பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள குறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்ளது. #NASA
    வாஷிங்டன்:

    விண்வெளியில் ஏராளமான குறுங்கோள்கள் (விண்கற்கள்) உள்ளன. அதில் பென்னு என்றழைக்கப்படும் குறுங்கோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரே’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது.

    பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்ட அந்த விண்கலம் பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது திறமைமிக்க நடவடிக்கை என அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரேட்டா தெரிவித்தார். இவர் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோளை உருவாக்கியவர்.

    ‘பென்னு’ குறுங்கோளின் சுற்றுப் பாதையில் இந்த செயற்கை கோள் நுழைந்தது வியக்கத்தக்க சாதனையாகும். இதற்காக தான் நாங்கள் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பணியாற்றினோம்.

    இதற்கு முன்பு எந்த ஒரு குறுங்கோளையும் மிக நெருக்கத்தில் அதாவது 1.75 கி.மீட்டர் நெருக்கத்தில் செயற்கை கோள்கள் சென்றடைந்ததில்லை. தற்போது முதன் முறையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒரு குறுங்கோளின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது.

    இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் ரோசட்டா விண்கலம் ‘காமட்-67’ என்ற குறுங்கோளை 7 கி.மீட்டர் தூர சுற்றுப்பாதையில் நெருங்கியது.

    பென்னு குறுங்கோள் மிகவும் குறைந்த புவியீர்ப்பு சக்தி கொண்டது. இருந்தும் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோள் மிக நெருக்கத்தில் சுற்றுப்பாதைக்குள் சென்றடைந்துள்ளது.

    பிப்ரவரி மாத மத்தியில் இன்னும் நெருங்கி பென்னு குறுங்கோளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் என எதிர்பர்க்கப்படுகிறது. #NASA
    நாசா அனுப்பி உள்ள இன்சைட் விண்கலம் இன்று செவ்வாய்க்கிரகத்தில் இறங்கும் நிகழ்வு, டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட திரை மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NASAInSight #MarsLanding
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. மே 5-ம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கிறது.

    இந்நிலையில், இன்சைட் விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இந்த நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


    செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா தகவல் தெரிவித்து உள்ளது.

    கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #NASAInSight #MarsLanding
    செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. #Mars #Oxygen #NASA
    வாஷிங்டன்:

    நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது.

    இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.



    கியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் தொடங்கியது. இது அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும்.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டு உள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. #Mars #Oxygen #NASA
    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து உள்ளது. #NASA
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி   உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

    சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    சர்வதேச விண்வெளி மையத்திற்கு  இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற  ரஷ்ய ராக்கெட் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது.



    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற   ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்  மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைந்து உள்ளனர்.  இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

    பூஸ்டர்  பிரச்சினை இருந்தது என்று டுவிட் செய்துள்ளது மற்றும் ராக்கெட் பூமி திரும்பும் என்றும் கூறி உள்ளது. #NASA
    நாசாவின் கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி ஆய்வுக்கலன் மூலம் பூமியைப் போன்ற இரண்டு உலகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. #NASA #AlienWorld
    வாஷிங்டன்:

    கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ்’ நட்சத்திர கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

    கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும், இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் மூலமாகவே இந்தக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரெட்டார்ஃப் நட்சத்திரத்திற்கு அருகில் இரண்டாவது வேற்றுலகம்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகம் பூமிக்கு ஒப்பிடக்கூடியது ஆனால் சற்று பெரியது என்றும், அதன் நட்சத்திரத்தைச் சுற்றி மிகக் குறைவான சுற்றுப்பாதைக் காலமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #NASA #AlienWorld
    சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் உள்ளதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
    வாஷிங்டன்:

    சந்திரனில் ஆய்வு நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ‘இஸ்ரோ’ நிறுவனம் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.

    அந்த விண்கலம் நடத்திய ஆய்வில் சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை கருப்பு நிறத்திலும், மிகவும் குளிராகவும் இருந்தது. எனவே இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.

    அது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் தென் துருவத்தில் பெரும்பாலான ஐஸ் படிமங்கள் மிகவும் கடினமான நிலையில் அடர்த்தியாக உள்ளன. அதே நேரத்தில் வடதுருவத்தில் உள்ள ஐஸ் படிமங்கள் பரந்து விரிந்த நிலையில் அடர்த்தியற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே சந்திரனில் சந்திராயன்-1 விண்கலம் கண்டுபிடித்தது ஐஸ் படிமங்கள்தான். ஆகவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
    சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பார்கர் சோலார் புரோப் செயற்கைக் கோளில் 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்றுள்ளது. #ParkerSolarProbe
    நியூயார்க்:

    சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் ‘பார்கர் சோலார் புரோப்’ எனப்படும் விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது.

    இந்த விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை மிக அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. ஒரு மணிநேரத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் மைல் கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது.

    இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள பார்கர் விண்கலத்தில் ஒரு ‘மெமரி கார்டு’ உள்ளது. அதில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த பெயர்களை பரிந்துரைக்க அறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது. #ParkerSolarProbe
    ×